Skip to main content

மழைக்காலப் பொழுதில் எனக்கு வந்த மயக்கிய சந்திப்பு - பத்தி.




இன்று பின்னேரம் அலுத்துக்களைத்து வீடு திரும்புகின்றேன் . சாப்பிட்டு விட்டு கணனியின் முன்னால் நித்திரை தியக்கத்துடன் இருக்கின்றேன் . எனது கைத்தொலைப்பேசி ஒலிக்கின்றது.அடிப்பவரின் பெயர் இல்லை. யாராய் இருக்கும் என்று ஒருவித எரிச்சலுடன் கைத்தொலைபேசியை எடுக்கின்றேன் . மறுமுனையில் கொழுவன் குரல் கேட்டது . "அண்ணை உங்களோடை ஒருத்தர் பேசப்போகின்றாராம் " என்று தொலைபேசி மாற்றப்பட்டது. மீண்டும் மறுமுனையில் , " வணக்கம் கோ !! நான் சயந்தன் பேசிறன் . நான் இப்ப லாச்சப்பலில் நிக்கிறன் . உங்களை நான் ஒருக்கால் கட்டாயம் சந்திக்க வேணும் ". என்ற கோரிக்கையுடன் சயந்தன் நின்றார் . எனக்கு களைப்பாக இருந்தாலும் சயந்தனை முகம் முறிக்க மனம் வரவில்லை . நான் இன்னும் அரை மணியில் அங்கு இருப்பதாக சொல்லி விட்டு புகையிரத நிலையம் நோக்கி சென்றேன் .

பாரிஸ் செல்ல வேண்டிய புகையிரதம் பாரிசை நோக்கி விரைந்து கொண்டிருந்தது . இடையில் எனது கைத்தொலைபேசி திரையில் சோபாசக்தியின் பெயர் தெரிந்தது. திரையை தொட்டு விட்டு " சொல்லுங்கோ " என்றேன் . " அண்ணை நான் சாயந்தன்ரை செக்குத்தடி பேசிறன் (கிழிஞ்சுது போ ) . சயந்தன்ரை பாதுகாப்பு பிரச்னைக்காக இப்ப நாங்கள் லாச்சப்பலிலை இருந்து மார்க்கடே பொசினியர் க்கு இடத்தை மாத்திறம் . நீங்கள் அங்கை வாங்கோ " என்று சொல்லி கைத்தொலைபேசி தொடர்பை துண்டித்தது . அஹா இவர் வேறயா ?? " கோமகா கவனமா இருந்துக்கோ " என்று உள் மனம் மின்னி மின்னி பேசியது . நான் கார் டு நோர்ட் புகையிரத நிலையத்தில் இறங்கி மார்க்கடே பொசினியருக்கு மெட்றோ எடுத்தேன் . நான்கு நிமிடத்தில் மார்க்கடே பொசினியர் மெட்றோவில் இறங்கி வெளியே வந்தேன் . ஒரு காலத்தில் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த இடம் , ஆட்சி மாறி கறுப்பர்களின் கைக்கு போய்விட்டிருந்தது . மெட்றோ வாசலில் ஹாண்ட் பாக்குகளுடன் அம்மணிகள் " சவா செரி " என்றார்கள் . அஹா முழுவியளமே திறமாய் இருக்கே என்று நினைத்தவாறே சோ அன்னா பா வன்னா சொன்ன கபே பாரை நோக்கி நடந்தேன். அங்கு ஒரு சிறிய பட்டாளமே இருந்தது. சயந்தன் , சோபா சக்தி , ஸ்டெல்லா சகுந்தலா ( மானிடவியலாளர் பேராசிரியர் அமெரிக்கா ) , கொழுவன் , மைக்கல் என்ற சதாபிரவணன் , ஆக்காட்டி பிரபா என்று நான் எதிர்பாராத கோஸ்டிகள் எல்லோரும் இருந்தார்கள் . என்னை கண்டதில் சயந்தனுக்கு பெரிய புழுகம் . மைக்கேலையும் பிரபாவையும் கொழுவனின் கவிதைவெளியீட்டு விழாவில் சந்தித்தாலும் இப்பொழுதே அதிகம் பேச முடிந்ததது. நான் போகும் பொழுது 2 சிங்க லாகர்கள் சயந்தன் சோபாவுக்கு முன்னால் வீற்றிருந்தன. எனக்கும் லாகர்களுக்கும் எட்டிலை வியாழன் . நான் இதை கண்டதும் உள்ளுக்குள் கலவரப்பட்டு போனேன் . எனக்கு ஒரு பிளேன் டீ சீனி இல்லாமல் எடுத்தேன் . பலதரப்பட்ட கதைகள் பம்பலாக போய்க்கொண்டிருந்த பொழுது , இந்தப்பக்கம் லாகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருந்ததது . இப்பொழுது சிங்கத்தின் துணையால் சிங்கம் சிலிர்க்கத் தொடக்கி விட்டது . சூடான விவாதங்கள் சுழன்றடித்தன . அதில் எனது தலையும் உருண்டது . அதிக சத்தம் எனக்கு தலையிடியை கொண்டுவந்ததது . மெதுவாக வெளியில் இறங்கி சிகரட்டை பற்றவைத்தேன் . நான் மீண்டும் திரும்பிய பொழுது " தென்கிழக்கு சீமையிலே " வடக்கு தெற்காக கிழிந்து கொண்டிருந்ததது . முதலில் குற்றவாளி கூண்டில் இருந்த எனது இடம் இப்பொழுது சயந்தனுக்கு மாறியிருந்தது . நேரம் பம்பலாகப் போய் இரவு 9 மணியாகி விட்டிருந்தது. புதிதாக நான்கு ஐந்து பேர்கள் ஜோதியில் ஐக்கியமாக வந்திருந்தார்கள். இடையில் கணவாய் பொரியல் டேஸ்டுக்கு வந்தது . நானும் இவர்களை கிளப்பி ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தேன். நன்றாக இருட்டி விட்டது. இந்த இடம் வில்லங்கமான இடம். இரவு பத்தரையாகி விட்டிருந்தது. லாகர்களின் எண்ணிக்கை கூடியதே இவர்கள் கிளம்புவதாக இல்லை . நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எல்லோரிடமும் விடை பெற்றேன். வீட்டிற்கு வர மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்ததது. பறப்பின் மத்தியிலும் இப்படியான சந்திப்புகளே எங்களை உயிர்ப்பிக்கின்றன .





June 10, 2014

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...