Skip to main content

மழைக்காலப் பொழுதில் எனக்கு வந்த மயக்கிய சந்திப்பு - பத்தி.




இன்று பின்னேரம் அலுத்துக்களைத்து வீடு திரும்புகின்றேன் . சாப்பிட்டு விட்டு கணனியின் முன்னால் நித்திரை தியக்கத்துடன் இருக்கின்றேன் . எனது கைத்தொலைப்பேசி ஒலிக்கின்றது.அடிப்பவரின் பெயர் இல்லை. யாராய் இருக்கும் என்று ஒருவித எரிச்சலுடன் கைத்தொலைபேசியை எடுக்கின்றேன் . மறுமுனையில் கொழுவன் குரல் கேட்டது . "அண்ணை உங்களோடை ஒருத்தர் பேசப்போகின்றாராம் " என்று தொலைபேசி மாற்றப்பட்டது. மீண்டும் மறுமுனையில் , " வணக்கம் கோ !! நான் சயந்தன் பேசிறன் . நான் இப்ப லாச்சப்பலில் நிக்கிறன் . உங்களை நான் ஒருக்கால் கட்டாயம் சந்திக்க வேணும் ". என்ற கோரிக்கையுடன் சயந்தன் நின்றார் . எனக்கு களைப்பாக இருந்தாலும் சயந்தனை முகம் முறிக்க மனம் வரவில்லை . நான் இன்னும் அரை மணியில் அங்கு இருப்பதாக சொல்லி விட்டு புகையிரத நிலையம் நோக்கி சென்றேன் .

பாரிஸ் செல்ல வேண்டிய புகையிரதம் பாரிசை நோக்கி விரைந்து கொண்டிருந்தது . இடையில் எனது கைத்தொலைபேசி திரையில் சோபாசக்தியின் பெயர் தெரிந்தது. திரையை தொட்டு விட்டு " சொல்லுங்கோ " என்றேன் . " அண்ணை நான் சாயந்தன்ரை செக்குத்தடி பேசிறன் (கிழிஞ்சுது போ ) . சயந்தன்ரை பாதுகாப்பு பிரச்னைக்காக இப்ப நாங்கள் லாச்சப்பலிலை இருந்து மார்க்கடே பொசினியர் க்கு இடத்தை மாத்திறம் . நீங்கள் அங்கை வாங்கோ " என்று சொல்லி கைத்தொலைபேசி தொடர்பை துண்டித்தது . அஹா இவர் வேறயா ?? " கோமகா கவனமா இருந்துக்கோ " என்று உள் மனம் மின்னி மின்னி பேசியது . நான் கார் டு நோர்ட் புகையிரத நிலையத்தில் இறங்கி மார்க்கடே பொசினியருக்கு மெட்றோ எடுத்தேன் . நான்கு நிமிடத்தில் மார்க்கடே பொசினியர் மெட்றோவில் இறங்கி வெளியே வந்தேன் . ஒரு காலத்தில் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த இடம் , ஆட்சி மாறி கறுப்பர்களின் கைக்கு போய்விட்டிருந்தது . மெட்றோ வாசலில் ஹாண்ட் பாக்குகளுடன் அம்மணிகள் " சவா செரி " என்றார்கள் . அஹா முழுவியளமே திறமாய் இருக்கே என்று நினைத்தவாறே சோ அன்னா பா வன்னா சொன்ன கபே பாரை நோக்கி நடந்தேன். அங்கு ஒரு சிறிய பட்டாளமே இருந்தது. சயந்தன் , சோபா சக்தி , ஸ்டெல்லா சகுந்தலா ( மானிடவியலாளர் பேராசிரியர் அமெரிக்கா ) , கொழுவன் , மைக்கல் என்ற சதாபிரவணன் , ஆக்காட்டி பிரபா என்று நான் எதிர்பாராத கோஸ்டிகள் எல்லோரும் இருந்தார்கள் . என்னை கண்டதில் சயந்தனுக்கு பெரிய புழுகம் . மைக்கேலையும் பிரபாவையும் கொழுவனின் கவிதைவெளியீட்டு விழாவில் சந்தித்தாலும் இப்பொழுதே அதிகம் பேச முடிந்ததது. நான் போகும் பொழுது 2 சிங்க லாகர்கள் சயந்தன் சோபாவுக்கு முன்னால் வீற்றிருந்தன. எனக்கும் லாகர்களுக்கும் எட்டிலை வியாழன் . நான் இதை கண்டதும் உள்ளுக்குள் கலவரப்பட்டு போனேன் . எனக்கு ஒரு பிளேன் டீ சீனி இல்லாமல் எடுத்தேன் . பலதரப்பட்ட கதைகள் பம்பலாக போய்க்கொண்டிருந்த பொழுது , இந்தப்பக்கம் லாகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருந்ததது . இப்பொழுது சிங்கத்தின் துணையால் சிங்கம் சிலிர்க்கத் தொடக்கி விட்டது . சூடான விவாதங்கள் சுழன்றடித்தன . அதில் எனது தலையும் உருண்டது . அதிக சத்தம் எனக்கு தலையிடியை கொண்டுவந்ததது . மெதுவாக வெளியில் இறங்கி சிகரட்டை பற்றவைத்தேன் . நான் மீண்டும் திரும்பிய பொழுது " தென்கிழக்கு சீமையிலே " வடக்கு தெற்காக கிழிந்து கொண்டிருந்ததது . முதலில் குற்றவாளி கூண்டில் இருந்த எனது இடம் இப்பொழுது சயந்தனுக்கு மாறியிருந்தது . நேரம் பம்பலாகப் போய் இரவு 9 மணியாகி விட்டிருந்தது. புதிதாக நான்கு ஐந்து பேர்கள் ஜோதியில் ஐக்கியமாக வந்திருந்தார்கள். இடையில் கணவாய் பொரியல் டேஸ்டுக்கு வந்தது . நானும் இவர்களை கிளப்பி ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தேன். நன்றாக இருட்டி விட்டது. இந்த இடம் வில்லங்கமான இடம். இரவு பத்தரையாகி விட்டிருந்தது. லாகர்களின் எண்ணிக்கை கூடியதே இவர்கள் கிளம்புவதாக இல்லை . நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எல்லோரிடமும் விடை பெற்றேன். வீட்டிற்கு வர மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்ததது. பறப்பின் மத்தியிலும் இப்படியான சந்திப்புகளே எங்களை உயிர்ப்பிக்கின்றன .





June 10, 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...