Skip to main content

மனமே மலர்க – பாகம் 04.




குறையொன்றும் உண்டோ?

இருட்டு அறை. அதன் ஒரு மூலையில் வெள்ளைத்திரை. எதிரே இருபது பேர் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். எல்லோருடைய கவனமும் அந்தத் திரையில் குவிந்திருந்தது.

சிறிது நேரத்தில் படம் தொடங்கியது. சினிமா இல்லை. நாடக பாணியில் காட்சிகளைக் கொண்ட ஆவணப் படம். சில நிமிடங்கள் கழித்து முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் நெளிந்தாள்.

‘என்னா படம் காட்டறானுங்க? ஒரு பாட்டு உண்டா, ஃபைட்டு உண்டா, காமெடி உண்டா, செம போர்!’ என்றாள்.

‘ப்ச், சும்மாயிரு.’ அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் கிசுகிசுத்தாள். ‘உனக்குப் பிடிக்கலைன்னா எழுந்து வெளியே போயிடு, மத்தவங்களைத் தொந்தரவு பண்ணாதே!’

அதற்குள் பின்னாலிருந்து யாரோ கத்தினார்கள்.

‘சைலன்ஸ்!’

‘இந்த குப்பைப் படத்தை எப்படிய்யா பொறுமையா உட்கார்ந்து பார்க்கறீங்க?’

‘படம் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம்கூட ஆகலை. அதுக்குள்ள நீங்களா முடிவுக்கு வந்துட்டீங்களா? கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பாருங்கப்பா!’

‘ஆமா, இவரு பெரிய ஷங்கரு. அட்வைஸ் பண்ண வந்துட்டார். போவியா?’

மறுநிமிடம் அங்கே பலத்த அடிதடி. ஒரு பெண் பாக்கெட்டிலிருந்த கத்தியை உருவிக்கொண்டு இன்னொருத்திமீது பாய்ந்து குத்த ஆரம்பித்தாள். ரத்தத்தைப் பார்த்து மற்றவர்கள் அலற, உடனடியாகப் படம் நிறுத்தப்பட்டது. கடைசியில் போலீஸ் வந்தபிறகுதான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

காவல்துறையினர் காயம் பட்ட பெண்ணுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். குத்திய பெண்ணைக் கைது செய்தார்கள். விசாரணை ஆரம்பமானது.

‘இங்கே என்னப்பா படம் காட்டினீங்க? எதுக்கு?’

’நாங்கல்லாம் ஒரு ட்ரெய்னிங்குக்கு வந்திருந்தோம் சார். அது தொடர்பான வீடியோதான் இது!’

‘என்ன ட்ரெய்னிங்?’

’கோபத்தை அடக்கறதுக்கான Anger Management ட்ரெய்னிங் சார்’ என்றாள் அந்தப் பெண். போலீஸ்காரர்கள் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டார்கள்.

இது கற்பனைக் கதை அல்ல. இரண்டு வாரம் முன்பாக அமெரிக்காவில் நிஜமாக நடந்த விஷயம்.

’யாருக்காகவும் நாம் வீண் வேஷம் போடவேண்டியதில்லை’ என்கிறது ஜென். நம்முடைய முதுகில் இருக்கும் அழுக்கை நாமே பார்க்கத் தவறினால், அல்லது நல்ல சட்டை போட்டு அதை மறைத்துக்கொண்டுவிட்டால் அதனால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அடுத்தவர்களுக்காகக் குறைகளைத் திருத்திக்கொள்வதுபோல் நடிப்பதற்கும் நாமே உணர்ந்து திருந்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாதவரை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துகொண்டிருக்கும்போதுகூட, நம் மனம் வாசலில் கிடக்கும் செருப்பைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கும்!

0000000000000000000000000000000000000

இரும்பு ஏன் அழுதது?

உலோகங்களில் உயர்ந்ததான தங்கத்திற்கு உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு இடத்தில் யாரோ பெருமூச்சு விட்டு அழும் குரல் கேட்டது. யார் அழுகிறார் என்று பார்க்கும் நோக்கத்துடன் அழுகுரல் வந்த திசையை நோக்கிச் சென்றது. அங்கே கொல்லனுடைய உலைக்களம் இருந்தது. அங்கு இரும்புத் துண்டு ஒன்றை சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தார்கள். வேதனை தாங்க முடியாமல் அந்த இரும்புத் துண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தது. அதை அன்புடன் பார்த்த தங்கம்,

“ இரும்பே அனைத்து உலோகங்களும் உன்னைப் போல் அடிபடப் பிறந்தவைகள்தான். இப்படி அழுது புலம்புவதால் என்ன பயன்? நானும் உன்னைப் போல் அடி வாங்குகிறேன். எனவே வேதனையைப் பொறுத்துக் கொள். அழாமல் இருக்கப் பழகிக் கொள்” என்றது.

அதைக் கேட்ட இரும்பு,

“தங்கமே, உனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு, எனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு. நீ பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். என்னால் அப்படி இருக்க முடியாது” என்றது.

உடனே தங்கம் “நானும் உன்னைப் போல்தான் அடி வாங்குகிறேன். இருவர் தண்டனையும் வேறு என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டது.

“தங்கமே, உன்னை, உன்னைப் போன்ற தங்கமா அடித்துத்து துன்புறுத்துகிறது? நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் துன்புறுத்தும் போது தாங்கிக் கொள்ளலாம். என் நிலையைப் பார். என்னைப் போன்று இன்னொரு இரும்பு அல்லவா என்னைத் துன்புறுத்துகிறது. இதை என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?” என்றபடி மீண்டும் கண்ணீர்விட்டது.

00000000000000000000000000000000000

கற்றுக் கொடுக்கும் திறனை விட...

ஒரு ஆசிரமத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு தியானம், யோகா கற்றுக் கொடுத்தார். அவர் சாத்திரங்களைக் கற்றுக் கொடுத்து மாணவர்களை மிகவும் வல்லவராக்கினார். எனவே அவரது குருகுலத்தில் படிப்பதற்கு நிறைய போட்டி இருந்தது. அங்கு மன்னர், அமைச்சர், செல்வந்தர்கள் என வசதி படைத்தவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த குருகுலத்தில் முனிவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரே ஒரு ஏழை மாணவன் மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

அந்தக் குருகுலத்தில் முனிவர், அந்த ஏழை மாணவனை கடைசி வரிசையில் உட்கார வைத்தார். அவனுக்கு பல வேலைகளைக் கொடுப்பார். மிகவும் உதாசீனப்படுத்துவார்.

தேவலோக இந்திரன் ஒரு நாள் அந்த குருகுலத்தைப் பார்வையிட வந்தான். முனிவர் தன் குருகுலத்தை இந்திரன் பார்வையிட வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்திரன் அவருக்கு ஒரு பெட்டியைக் கொடுத்தான்.

“சுவாமி! இதில் சில பொருட்கள் இருக்கின்றன. இதை ஒன்றாகப் பொருத்தினால், ஒரு அரிய பொருள் உங்களுக்கு கிடைக்கும்,'' என சொல்லி அவரிடம் அதைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

முனிவர் அந்தப் பெட்டியை அவசர அவசரமாகப் பிரித்தார். ஏதோ விலை உயர்ந்த பொருள் இருக்குமென நினைத்தார். பெட்டியில் இருந்த பாகங்களை ஒன்று சேர்க்க முயற்சித்தார். அவரால் ஒன்று சேர்க்க முடியவில்லை அந்தப் பெட்டியை அப்படியே போட்டுவிட்டு வெளியில் சென்று விட்டார். திரும்ப வந்து போது, ஒரு தங்கக்கலசத்தில் அமுதம் இருப்பதைப் பார்த்தார்.

“யார் இதைப் பொருத்தியது?” என்றார்.

“நான் தான்” என்றான் அந்த ஏழைச்சீடன்.

“நான் மிகவும் கஷ்டப்பட்டும் இதைச் சேர்க்க முடியவில்லை. நீ எப்படி சேர்த்தாய்?” என்றார் முனிவர்.

அவன் அப்பாவியாக, “சுவாமி! பிறருக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தக் கூடிய திறனும் இருக்க வேண்டும்” என்றான். முனிவருக்கு வெட்கமாகப் போய் விட்டது.

00000000000000000000000000000000000000000

மனிதனும் விலங்கும்

மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக் காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று,

''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,'

'இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்றார்.

புலி விலங்குகளை அடித்துக் கொல்லும் கொடிய மிருகம்தான்.ஆனால் அது பசித்தால் மட்டுமே தேவைக்கேற்ப விலங்குகளைக் கொல்லும்.பசி தீர்ந்தால் அது சாதுவாகிவிடும்.மனித இனம் மட்டும் தான் காரணம் ஏதுமின்றி பிற மனிதர்களைக் கொல்லும் குணமுடையது..ஒரு அணுகுண்டைப் போட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லுவான்.ஹிட்லர் போன்ற மனிதர்கள் தான் இனத்தின் பேரால் பல லட்சம் மனிதரைத் தீர்த்துக் கட்ட இயலும்.

ஒரு உணவு விடுதிக்கு திடீரென ஒரு சிங்கமும் முயலும் சேர்ந்து வந்தன.அனைவரும் அரண்டு போய் நின்றபோது விடுதி மேலாளர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முயலிடம் சென்று,

''நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?உங்கள் நண்பர் என்ன சாப்பிட விரும்புகிறார்?''என்று கேட்க முயல் சிரித்துக் கொண்டே சொன்னது,

''இங்கு நான் மட்டும் தான் சாப்பிட வந்தேன்.என் நண்பர் பசியுடன் இருந்தால் நான் உடன் வந்திருக்க முடியுமா?நானே உணவாகியிருப்பேனே!''என்று சொன்னதாம்.

0000000000000000000000000000000000000

தெளிவு

அவர் ஒரு அரசியல்வாதி.ஊரில் பெரிய மனிதன்.எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.அவரும் சில பிரார்த்தனைகளையும்.பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார்.சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன்,

''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.உடனே குரு,

''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.

அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.

''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?''என்று கேட்க,குருவும்,

''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,''என்றார்.

''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார்.அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார்.பத்து நிமிடம் ஆயிற்று.கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று,

''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?''என்று கேட்டார்.

வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?''என்று குரு கேட்க அவர் சொன்னார்,

''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள்.நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்''

உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார்,

''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

000000000000000000000000000000000000

நாய்வால்

ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.இதை நீண்ட நேரம் கைவைத்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.முதல் நாய் சொன்னது,

''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன்.அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார்.அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,''

இரண்டாவது நாய் சொன்னது,

''அன்பு நண்பனே,நானும் அந்த மகானைப் பார்த்தபோது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார்.நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன்.ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது.அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''

நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது.நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால்,மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.

0000000000000000000000000000000000000

மூன்று முறை

எப்போதும் தேவையானவை எல்லாம் உன் மனதிற்கு எதிரானவை. எனவே மனமானது எந்த ஒரு உண்மையையும் உன்னுள் நுழைய அனுமதிக்கப் பயப்படுகிறது. அது அந்த உண்மையைத் தட்டிக் கழிக்க ஆயிரத்தொரு காரணங்களைக் கண்டு பிடிக்கிறது. ஏனெனில் உண்மை உனது மனத்தைக் கலைத்துவிடும். அதனால் மனதிற்கு ஆதரவானதை மட்டுமே அது அனுமதிக்கிறது. மேலும் மனமே ஒரு குப்பை. அதனால் அது குப்பையைத்தான் சேகரிக்கும். அதையும் மகிழ்வோடு சேகரிக்கும்.

புத்தர் எதையும் மூன்று முறை கூறுவது வழக்கம் . காரணம் கேட்டபோது அவர் சொன்னார்

''முதல் முறை நீங்கள் கேட்பதே கிடையாது. இரண்டாம் முறை ஏதாவது ஒரு பகுதியைத்தான் கேட்பீர்கள். மூன்றாம் முறைதான் நான் கூறுவதை சரியாகக் கேட்கிறீர்கள் . முதல் முறை சொல்லும்போது நீங்கள் உட்கருத்தை உணர முடியாது. இரண்டாம் முறை,உணர்ந்தாலும் சரியான முறையில் கருத்தை உணர மாட்டீர்கள். மூன்றாம் முறை நான் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.''

ஏதாவது ஒன்று தேவையற்றது என்று நீ கண்டு கொண்ட கணமே அதன் மீது உன் கவனத்தை செலுத்தாதே. அதை விட்டு விலகிச் சென்றுவிடு. பொய்யைப் பொய் என்று கண்டு கொள்வதே மெய்யை மெய் என்று கண்டு கொள்வதற்கான ஆரம்பம்.

00000000000000000000000000000000000000000

தடை

ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன் குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,

''பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..

குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.''

0000000000000000000000000000000000

மூன்று தலைகள்!

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது. ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார். அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார். ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது. ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர். மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம்,

“சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது. புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள். மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

000000000000000000000000000000000

தேவையும் ஆசையும்

நமக்குத் தேவைகள் என்பவை வெகு சிலவே. அவை எளிமையானவை. உங்களுக்கு என்ன தேவை? உணவு, நீர், உறைவிடம், உங்களை காதலிக்க ஒருவர்,அவரை விரும்ப நீங்கள். இவைதானே உங்களது தேவைகள். இந்தத் தேவைகளுக்கெல்லாம் மதங்கள் எதிரிகள். யாரையும் காதலிக்காதே, பிரம்மச்சாரியாக இரு என்கிறது மதம்.

தேவைக்கு உணவை உண்ணாதே,விரதம் இரு என்கிறது மதம்.தங்க ஒரு வீடு தேவை, ஆனால் எதிலும் பற்றில்லாமல் சந்நியாசியாகி நாடோடியாகசுற்றித் திரி என்கிறது மதம். நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறீர்கள் .

அதிலிருந்து மீள அந்த மதவாதிகளிடம் தஞ்சம் புகுகிறீர்கள்.மொத்தத்தில் அவர்கள் சொல்வதெல்லாம் நீங்கள் அவர்களை நம்பி இருப்பதற்காக உருவாக்கப் பட்டவை.

ஆசை என்பது என்ன?உங்களை காதலிக்க தேவை ஒரு பெண். கிளியோபாத்ராதான் வேண்டும் என்பது ஆசை..

தங்க இடம் வேண்டுவது தேவை.அரண்மனை வேண்டும் என்பது ஆசை. உன்ன உணவு வேண்டும் என்பது தேவை. ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்பது ஆசை. தேவைகள் எளிதில் அடையக் கூடியவை. ஆசைகள் அடைய முடியாதவை. உங்களுடைய எளிமையான தேவைகள் நிறைவேறினாலே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். புத்தருக்கே இந்த தேவைகள் உண்டு.

உங்களது ஆசைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறையுங்கள். ஆசைகள் செயற்கையானவை. தேவைகள் இயற்கையானவை. அதனால் உங்கள் தேவைகளைக் குறைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றுங்கள்.

00000000000000000000000000000000

எதிர்பார்ப்பது தவறா?

மன்னன் ஒருவன் முனிவரிடம், கேட்டான், ''கீதையிலே, 'கடமையை செய், பலனை எதிர்பாராதே,' என்று கூறப்பட்டுள்ளது.நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டியது என் கடமை. அதனை மக்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது தவறா?''

முனிவர் அதற்கு,

'உன் கேள்விக்கு பதில் சொல்ல நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்,''என்றார்.

மன்னனும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தான். சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. அதை ரசித்து அவன் சாப்பிட்டான். ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார்,

''இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?''

மன்னன் சொன்னான்,

''நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. இதை சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று தலைமை சமையல்காரராக நியமிக்கப் போகிறேன்,''

முனிவர் சொன்னார்,''சுவையாக சமைக்க வேண்டியது ஒரு சமையல்காரரின் கடமை. இந்த சமையல்காரன் தன் கடமையை செய்தான். இப்போது அவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது. கடமையை சரியாக செய்தவனுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக தேடி வரும்.''

ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு. ஆசைக்கு அளவில்லை. பலனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால் நம்மால் அந்த செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது. சரியாக செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

0000000000000000000000000000000000000000

மகத்தான மனிதர்கள்.

இயேசு,கிருஷ்ணன் போன்ற மகத்தான மனிதர்கள் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள். அமைதிப் புரட்சி நடத்தி வரும் அவர்களை நாம் அறியவில்லை. அவ்வளவுதான். ராமர், கிருஷ்ணர் போன்ற வாழ்ந்து முடிந்தவர்களைப் பற்றி சொல்லும்போது சுவாரஸ்யத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மிகைப் படுத்தி சொல்லலாம். கிருஷ்ணன் மலையைத் தூக்கினார், இயேசு கடலைப் பிளந்தார் என்றால் நாம் ரசிக்கிறோம். பிரமிக்க எதுவும் இல்லையெனில் நம்மிடையே ஆர்வம் வருவதில்லை.

நம்முள் ஒருவராக இருப்பவரை நாம் கடவுளாக ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. தங்களை ஆர்ப்பாட்டமாக அறிவித்துக் கொள்பவர்களைத்தான் நாம் கவனிக்கிறோம். பிரமிப்பு ஏற்பட்டால்தான் மரியாதையே வருகிறது. சாதாரணர்களாக வாழ்ந்து சப்தம் இல்லாமல் மாற்றம் நிகழ்த்துபவர்களை நாம் மதிப்பதில்லை. ராமன், இயேசு இவர்கள் வாழ்ந்தபோது கூட வெகு சிலர்தான் அவர்களுடைய உண்மையான மதிப்பை அறிந்திருந்தார்கள். மற்றவர்கள் அன்று அவர்களை ஏற்கத் தயாராயில்லை.

ராமனைக் காட்டுக்கு விரட்டி அடித்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். நபிகள் மீது கல்லெறிந்தார்கள். அவர்கள் மற்றவர்களிலிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டவர்கள், அற்புதமானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு சண்டை போடுவதன் மூலம் தான் கடவுளின் மதிப்பை நிலை நாட்ட முடியும் என்றல்லவா இன்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள, பக்குவமான புத்திசாலித்தனமும் ஆழமான விழிப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. அல்லாவிடில் நடமாடும் சில மகத்தான மனிதர்களை நாம் அடையாளம் காண முடியாது தவற விட்டு விடுவோம்.

0000000000000000000000000000000000000

கல்லெறிந்தவனுக்கு பழமா?

ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப்

பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான் அக்கல் துறவியின்

தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.

துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப்

பிடித்துத் தாக்கத் துவங்கினர். அதைக் கண்துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்

கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து

அவனிடம் கொடுத்தார். அவன் தயங்கினான்.

"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து,

"ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.

துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.

000000000000000000000000000000000000000

விடுதலை

விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்? வானம் விரிந்து கிடக்கும்போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்? பதில் சிரமமானது அல்ல. கூண்டு பாதுகாப்பானது. அது, மழை , காற்று, வெயில், பகைவர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை. ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது. அடிமைத்தனம் ஒரு வியாபாரம். நீ உன் விடுதலையை விற்று விட்டாய். வேறு யாரோ, உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நீ இழந்தது உன் சுதந்திரத்தை. நீ உன் சிறகுகளை, நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்துவிட்டாய்.

கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் நீ இறந்தவன். நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்துவிட்டாய். உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாதபோதும் நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான். நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய். கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது. நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய். கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது. ஆனால் நீ விடுதலை, விடுதலை என்று கத்துகிறாய். இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.

நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை, சோம்பலை விட்டு வெளியேறுங்கள் . ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான். ஒரு பயணியாக, வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள். வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள். அது உல்லாசமாக, சிரிப்பாக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டும். பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும். நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள் அதில் வாழ்வீர்கள். உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள் அதை அறிந்திருப்பீர்கள். கடவுளை வணங்க மாட்டீர்கள் . இருப்பு முழுவதும் எங்கெல்லாம் வாழ்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் அவனைக் கண்டு கொள்வீர்கள்.

000000000000000000000000000000000000

பொறாமை

பொறாமை என்பது என்ன? அது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தலேயாகும். நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடத்தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம். ஒப்பிடுவது ஒரு முட்டாள் தனமான செயல். ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒப்பிட முடியாதவர்கள். நீ எப்போதும் நீதான்.உன்னைப்போல யாரும் இல்லை. நீயும் யாரையும் போல இருக்கத் தேவையில்லை. கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார் . நகல்களை அல்ல.

பக்கத்து வீட்டைப் பார்த்தால் மிகப் பெரிய விஷயங்கள் நடப்பது போல நமக்குத் தெரியும். புல் பச்சையாகத் தெரியும். நமது வீட்டு ரோஜாவை விட அடுத்த வீட்டு ரோஜா அழகாகத் தெரியும். உன்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும். இதே கதைதான் மற்றவர்களுக்கும். அவர்களும் தங்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அவர்களுக்கு உன் வீட்டுப் புல் பச்சையாய்த் தெரியும். அவர்கள் நீ நல்ல மனைவியை அடைந்ததாக நினைக்கலாம். நீயோ அவளைப் பார்த்து சலித்துப் போயிருப்பாய்.

ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டு நரகத்தை உருவாக்கி விடுகிறோம். கீழ்த்தரமானவர்கள் ஆகி விடுகிறோம். எல்லோரும் துன்பப்பட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லோரும் எல்லாவற்றையும் இழந்தால் நல்லது என்று நினைக்கிறோம். எல்லோரும் வெற்றி பெற்றால் நமக்கு கசக்கிறது.

நீ உனது உள் பக்கத்தை அறிவாய். ஆனால் அடுத்தவர்களின் வெளிப் பக்கத்தை மட்டுமே அறிவாய். அதுதான் பொறாமையை உருவாக்குகிறது. யாரும் உன்னுடைய உட்புறத்தில் எப்படிப்பட்டவன் என்பதை அறிவதில்லை. நீ உனது உட்புறத்தில் வெறுமையை, மதிப்பில்லாத தன்மையை உணர்கிறாய் . அதேபோல்தான் மற்றவர்களும் வெளியில் பார்த்தால் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனால் அவர்களது சிரிப்பு போலியாக இருக்கும். ஆனால் அது போலியானது என்று உன்னால் எப்படி கண்டு கொள்ள முடியும் ? ஒரு வேளை , அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால் நீ வெளியில் மட்டும் சிரிப்பது போலியானது என்பதை நிச்சயமாக உணர்வாய். ஏனெனில் உனது உள்ளத்தில் நீ மகிழ்ச்சியுடன் இல்லை. எல்லோரும் வெளித்தோற்றத்தை அழகாக, பகட்டாக ஆனால் எமாற்றிபவையாகக் கொண்டுள்ளனர்.

000000000000000000000000000000

நினைத்தது கிடைத்ததா?

ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டிய அவனுக்குப் பணக்கரனாக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. கூடவே பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு ஏற்பட்டது.

பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான். ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப்படாமல் கிடந்ததைப் பார்த்தான்.

அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனக் கருதியதால் அந்த நிலம் குறித்து விசாரித்தான். நில உரிமையாளரைத் தேடிச் சென்றான். நில உரிமையாளரிடம், அந்த நிலத்தைத் தனக்கு விலைக்குத் தரும்படி கோரினான். நில உரிமையாளர் அவனிடம், “நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை இலவசமாகவே நீ எடுத்துக் கொள்”, எனக் கூறினார். இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில், கற்பனையில் மிதந்தான்.

மறுநாள் காலையில், அந்த இளைஞன் ஓடி எவ்வளவு நிலத்தை அடையப் போகிறான் என்பதைக் காண அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

நில உரிமையாளர் குரல் கொடுத்தவுடன் இளைஞன் ஓடத் தொடங்கினான். தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருந்தான்.

உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான். சூரியன் மறைவதற்குள் ஓடியவன் வந்துவிடுவான, இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனைக் கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணறியப்டி கீழே விழுந்தான் விழுந்த சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.

இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்கு, கடைசியில் கிடைத்தது அவனை புதைப்பதற்கான ஆறு அடி நிலம்மட்டுமே.



February 25, 2013

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம