Skip to main content

என்ரை தீபாவளி.





சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் நல்லாய் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசணத்தாலை பேசும் . எங்களுக்கு அந்த நேரத்திலை உதெல்லாம் காதிக்கை ஏறாது . 

அடுத்தநாள் விடியப்பறமே அம்மா எங்களை எழுப்பாமல் எழும்பீடுவம் . நல்லபிள்ளையளாய் உமிக்கரி எடுத்துக் கொண்டுபோய் , அண்டைக்கெண்டு பாத்து தேய் தேய் எண்டு தேய்ப்பம் . அம்மாச்சி அண்டைக்கெண்டு எங்களுக்கு வில்லியாய் நிக்கும் . சுடவைச்ச நல்லெண்ணையை தலையிலை வைச்சு கண் எரிய எரிய நல்லாய் தேச்சு மசாஜ் பண்ணிவிடும் . அதோடை இலுப்பை அரப்பை வைச்சு தேச்சு விட்டு எங்களைப் படாதபாடு படுத்தும் . நாங்கள் கண்எரிவிலை கத்தினாலும் மனிசி முன்னுக்கு வைச்சகாலை பின்னுக்கு வைக்காது . பக்கத்திலை அண்டாவிலை சுடுதண்ணி கொதிச்சு கொண்டு இருக்கும் . மனுசி கிணத்து தண்ணியை வாளியாலை கிள்ளி அண்டாவிலை விளாவும் . நல்ல இதமான சுடுதண்ணியாலை குளிப்பாட்ட தொடங்கத்தான் எங்களுக்கு போன உயிர் திரும்பிவரும் . இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டு குளிச்சுமுடிச்சு அம்மா தைச்ச உடுப்புகளை போடுவம் . 

அந்த நேரம் எல்லா வீட்டிலையும் குறைஞ்சது ஐஞ்சு ரிக்கற்றுகளுக்கு மேலை . சிலவீட்டில பன்ரெண்டு ரிக்கற்றுகளும் பாத்திருக்கிறன் . இவ்வளவுபேருக்கும் உடுப்புகள் எடுக்கிறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை . அந்த நேரம் எங்கடை அப்பாமார் சீத்தை துணியள்தான் வண்ணம் வண்ணமாய் வாங்குவினம். அப்ப லக்ஸசல சீத்தையும் , பூகொட சீத்தையும் தான் பேமஸ் . லைற்றான மண்ணெண்ணை வாசம் அடிச்சாலும் , நாங்கள் அதுகளின்ரை டிசைனுகளிலை மருண்டிடுவம் . நாங்கள் எல்லாரும் உடுப்புகளை போட்டுக்கொண்டு விடயப்பறமே கோயிலுக்கு ஓடிப்போவம் . அங்கை எங்களுக்கு வேலை ஆரார் என்ன உடுப்புகள் போட்டு வந்தவை எண்டு பாக்கிறது . கோயில் மணிக்கூட்டு கோபுரத்திலை காண்டாமணியை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறது எண்டு ஏகப்பட்ட சோலியள் . பேந்து கோயிலாலை வந்த எங்களுக்கு அம்மாச்சி எல்லாருக்கும் பலகாரங்கள் பங்கிட்டு தரும். அதோடை சொந்தக்காறர் வீட்டுக்கும் பலகாரம் குடுக்கச்சொல்லி தரும் . 

எனக்கு ஐஞ்சாறு மச்சாளவை இருந்தவை . ஆனால் எல்லாரும் என்னைவிட வயசு கூடினவை. அவைக்கு குட்டிமச்சான் எண்டு என்னிலை செரியான பட்சம் . எல்லாரும் என்னை தங்கடை மடியிலை தூக்கி வைச்சு தாங்கள் சுட்ட பலகாரங்களை தருவினம் . நான் நல்ல புழுகமாய் சாப்பிடுவன் . பேந்து எல்லாரும் விளையாடுவம் . அப்ப கீ அடிக்கிறது , கிட்டி புள்ளு , ஒப்பு , கிளித்தட்டு இப்பிடியான விளையாட்டுகள்தான் பேமஸ் . கிளித்தட்டிலை பெட்டையள் அளாப்புவாளவை . சிலநேரம் அடிபாடுகள் முத்தி முகத்திலை காயங்கள் வந்து ரணகளமாய் போடும் . அம்மாச்சி எங்கடை அசுமாத்தங்களை கேட்டு ஓடியந்து எல்லோருக்கும் முதுகிலை நல்ல போடு போட்டு வீட்டை கூட்டிக் கொண்டு போவா . நாங்கள் அங்கை போனால் நல்ல மரக்கறியோடை ஆட்டுப்பங்கு கறியும் சேத்து , சோத்தை ஒரு பெரிய பாத்திரத்துக்குள்ளை போட்டு குழைச்சு , அம்மாச்சி எல்லாருக்கும் பூவரசம் இலையிலை வைச்சு தருவா . நாங்கள் அப்பவும் விளையாடி விளையாடித்தான் சாப்பிடுவம் . பேந்து கொஞ்ச நேரம் எல்லாரும் நித்திரை கொண்டுபோட்டு , திரும்பவும் கிட்டி புள்ளு விளையாடப் போவம் . இந்தக் கூத்துகள் சின்னவயசிலை .

பேந்து வெடிவால் முளைக்க , நியூமார்கற் நானா ரெயிலரிட்டை தைச்ச பெல்பொட்டமும் , உடம்பை இறுக்கின சேர்ட்டும் போட்டுக்கொண்டு ரவுணுக்கு, தீபாவளியளுக்கு வந்த படங்களை பாக்கப் போவம் . அப்ப வின்ஸர் தியேட்டரும் , ரீகல் தியேட்டரும் தான் எங்கடை முதல் தெரிவு. இதிலை ரிக்கற் கிடைக்காட்டில்தான் ராஜா தியேட்டருக்கும் , ராணி தியேட்டருக்கும் போவம் . இதுக்குள்ளை அவனவன் தங்கடை சரக்குகளையும் விக்னா ரியூட்டரியிலை ஸ்பெசல் கிளாஸ் எண்டு வீட்டிலை டிமிக்கி குடு​த்துப்போட்டு கூட்டியருவாங்கள் . இப்பிடியெல்லாம் எங்கடை தீபாவளி கொண்டாட்டங்கள் அப்ப போச்சுது . ஆனால் இப்ப இந்த தேன் கூடுகள் இல்லை . எல்லாம் திக்குதிக்காய் கலைஞ்சு போச்சுது. என்ரை அம்மாச்சியும் போய்சேந்திட்டா . எந்தக்காலத்திலையும் எங்கடை அனுபவங்களை இப்பத்தையான் குஞ்சுகுருமனுகள் எடுக்கப்போறேலை . கிட்டிபுள்ளு , கிளித்தட்டு எண்டால் இப்பத்தையான் யாழ்ப்பாணத்து பிள்ளையளுக்கு தெரியுதில்லை .......... சிலநேரம் நாங்கள் தான் லூசுகளோ???





November 12, 2012

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...