Skip to main content

என்ரை தீபாவளி.





சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் நல்லாய் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசணத்தாலை பேசும் . எங்களுக்கு அந்த நேரத்திலை உதெல்லாம் காதிக்கை ஏறாது . 

அடுத்தநாள் விடியப்பறமே அம்மா எங்களை எழுப்பாமல் எழும்பீடுவம் . நல்லபிள்ளையளாய் உமிக்கரி எடுத்துக் கொண்டுபோய் , அண்டைக்கெண்டு பாத்து தேய் தேய் எண்டு தேய்ப்பம் . அம்மாச்சி அண்டைக்கெண்டு எங்களுக்கு வில்லியாய் நிக்கும் . சுடவைச்ச நல்லெண்ணையை தலையிலை வைச்சு கண் எரிய எரிய நல்லாய் தேச்சு மசாஜ் பண்ணிவிடும் . அதோடை இலுப்பை அரப்பை வைச்சு தேச்சு விட்டு எங்களைப் படாதபாடு படுத்தும் . நாங்கள் கண்எரிவிலை கத்தினாலும் மனிசி முன்னுக்கு வைச்சகாலை பின்னுக்கு வைக்காது . பக்கத்திலை அண்டாவிலை சுடுதண்ணி கொதிச்சு கொண்டு இருக்கும் . மனுசி கிணத்து தண்ணியை வாளியாலை கிள்ளி அண்டாவிலை விளாவும் . நல்ல இதமான சுடுதண்ணியாலை குளிப்பாட்ட தொடங்கத்தான் எங்களுக்கு போன உயிர் திரும்பிவரும் . இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டு குளிச்சுமுடிச்சு அம்மா தைச்ச உடுப்புகளை போடுவம் . 

அந்த நேரம் எல்லா வீட்டிலையும் குறைஞ்சது ஐஞ்சு ரிக்கற்றுகளுக்கு மேலை . சிலவீட்டில பன்ரெண்டு ரிக்கற்றுகளும் பாத்திருக்கிறன் . இவ்வளவுபேருக்கும் உடுப்புகள் எடுக்கிறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை . அந்த நேரம் எங்கடை அப்பாமார் சீத்தை துணியள்தான் வண்ணம் வண்ணமாய் வாங்குவினம். அப்ப லக்ஸசல சீத்தையும் , பூகொட சீத்தையும் தான் பேமஸ் . லைற்றான மண்ணெண்ணை வாசம் அடிச்சாலும் , நாங்கள் அதுகளின்ரை டிசைனுகளிலை மருண்டிடுவம் . நாங்கள் எல்லாரும் உடுப்புகளை போட்டுக்கொண்டு விடயப்பறமே கோயிலுக்கு ஓடிப்போவம் . அங்கை எங்களுக்கு வேலை ஆரார் என்ன உடுப்புகள் போட்டு வந்தவை எண்டு பாக்கிறது . கோயில் மணிக்கூட்டு கோபுரத்திலை காண்டாமணியை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறது எண்டு ஏகப்பட்ட சோலியள் . பேந்து கோயிலாலை வந்த எங்களுக்கு அம்மாச்சி எல்லாருக்கும் பலகாரங்கள் பங்கிட்டு தரும். அதோடை சொந்தக்காறர் வீட்டுக்கும் பலகாரம் குடுக்கச்சொல்லி தரும் . 

எனக்கு ஐஞ்சாறு மச்சாளவை இருந்தவை . ஆனால் எல்லாரும் என்னைவிட வயசு கூடினவை. அவைக்கு குட்டிமச்சான் எண்டு என்னிலை செரியான பட்சம் . எல்லாரும் என்னை தங்கடை மடியிலை தூக்கி வைச்சு தாங்கள் சுட்ட பலகாரங்களை தருவினம் . நான் நல்ல புழுகமாய் சாப்பிடுவன் . பேந்து எல்லாரும் விளையாடுவம் . அப்ப கீ அடிக்கிறது , கிட்டி புள்ளு , ஒப்பு , கிளித்தட்டு இப்பிடியான விளையாட்டுகள்தான் பேமஸ் . கிளித்தட்டிலை பெட்டையள் அளாப்புவாளவை . சிலநேரம் அடிபாடுகள் முத்தி முகத்திலை காயங்கள் வந்து ரணகளமாய் போடும் . அம்மாச்சி எங்கடை அசுமாத்தங்களை கேட்டு ஓடியந்து எல்லோருக்கும் முதுகிலை நல்ல போடு போட்டு வீட்டை கூட்டிக் கொண்டு போவா . நாங்கள் அங்கை போனால் நல்ல மரக்கறியோடை ஆட்டுப்பங்கு கறியும் சேத்து , சோத்தை ஒரு பெரிய பாத்திரத்துக்குள்ளை போட்டு குழைச்சு , அம்மாச்சி எல்லாருக்கும் பூவரசம் இலையிலை வைச்சு தருவா . நாங்கள் அப்பவும் விளையாடி விளையாடித்தான் சாப்பிடுவம் . பேந்து கொஞ்ச நேரம் எல்லாரும் நித்திரை கொண்டுபோட்டு , திரும்பவும் கிட்டி புள்ளு விளையாடப் போவம் . இந்தக் கூத்துகள் சின்னவயசிலை .

பேந்து வெடிவால் முளைக்க , நியூமார்கற் நானா ரெயிலரிட்டை தைச்ச பெல்பொட்டமும் , உடம்பை இறுக்கின சேர்ட்டும் போட்டுக்கொண்டு ரவுணுக்கு, தீபாவளியளுக்கு வந்த படங்களை பாக்கப் போவம் . அப்ப வின்ஸர் தியேட்டரும் , ரீகல் தியேட்டரும் தான் எங்கடை முதல் தெரிவு. இதிலை ரிக்கற் கிடைக்காட்டில்தான் ராஜா தியேட்டருக்கும் , ராணி தியேட்டருக்கும் போவம் . இதுக்குள்ளை அவனவன் தங்கடை சரக்குகளையும் விக்னா ரியூட்டரியிலை ஸ்பெசல் கிளாஸ் எண்டு வீட்டிலை டிமிக்கி குடு​த்துப்போட்டு கூட்டியருவாங்கள் . இப்பிடியெல்லாம் எங்கடை தீபாவளி கொண்டாட்டங்கள் அப்ப போச்சுது . ஆனால் இப்ப இந்த தேன் கூடுகள் இல்லை . எல்லாம் திக்குதிக்காய் கலைஞ்சு போச்சுது. என்ரை அம்மாச்சியும் போய்சேந்திட்டா . எந்தக்காலத்திலையும் எங்கடை அனுபவங்களை இப்பத்தையான் குஞ்சுகுருமனுகள் எடுக்கப்போறேலை . கிட்டிபுள்ளு , கிளித்தட்டு எண்டால் இப்பத்தையான் யாழ்ப்பாணத்து பிள்ளையளுக்கு தெரியுதில்லை .......... சிலநேரம் நாங்கள் தான் லூசுகளோ???





November 12, 2012

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...