Skip to main content

நெருடிய நெருஞ்சி-14






ஒட்டோ நின்ற சத்தத்தைக் கேட்டதும் பெறாமக்கள் துள்ளிக்குதித்து ஓடி வந்தார்கள். அங்கிள் என்று கட்டிப்பிடித்துத் தொங்கினார்கள். அவர்களது "பம்மல்" ஏன் என்று தெரிந்தாலும் அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தேன். ஒழுங்கையின் இரண்டுபக்கமும் எங்கள் வீடு இருந்தது. என்னைக் கண்ட சந்தோசத்தில் மாமாவும் அன்ரியும் கதைகாது இருந்தார்கள். நானும் மாப்பிள்ளை முறுக்கைக் காட்டாது அவர்களுடன் இயல்பாகவே பழகினேன். இவர்கள் இருவரும் என்னை பாதித்த மனிதர்கள். எனது மனைவிக்கு 3 சகோதரிகளும் 1 சகோதரனும் இருந்தர்கள். ஆனால், இவர்கள் இவர்களது சிறுவயதில் தந்தையை இனக்கலவரத்தில் பறிகொடுத்தார்கள். சகோதரன் நாடு காக்கப் போய்விட்டார். தகப்பன் இல்லாத பிள்ளைகளை இன்றுவரை தாங்கள் இருவரும் திருமணம் செய்யாமல் பேணிப்பாதுகாத்தவர்கள் தான், நான் முதலே சொன்ன மாமாவும் அன்ரியும். இப்படியான மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என வியப்பாக இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு அவர்களது வடமராட்சி வட்டாரப் பேச்சு சில சொற்கள் விளங்கவில்லை, மனைவியிடம் தனிய கேட்கவேண்டியிருந்தது. உதாரணமாக நெம்பல், தகடுகுடுத்தல், கசளி குடுத்தல், என்பன சுவாரசியமானவை. பின்பு அவர்களிடம் அவர்களது பாணியிலேயே கதைத்தேன். மாமி எனது அம்மாவின் உயிர்பிரியும் போது தான் அம்மாவிடம் கதைத்தவற்றை சொல்லத் தொடங்கினா. கலங்கிய எனது கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விருட்டென்று கிளம்பி வீட்டு வளவுகளை பார்க்க பெறாமக்களுடன் போனேன். மனைவி எனது அம்மாவைப் பற்றி அவருடன் கதைத்து உள்ள கவலையைக் கூட்டவேண்டாம் என்று தாயிடம் சொல்வது எனது காதுகளில் விழுந்தது. வீட்டு வளவில் தென்னைகளும், கமுகமரங்களும், மாதுளை மரங்களும் நிறைந்து இருந்தன. வெய்யிலின் அகோரத்திற்கு அவற்றின் நிழல் இதமாக இருந்தன. கமுகுவிலும், மாதுளை மரத்திலும் அணில்பிள்ளைகள் துள்ளிளையாடின. வீட்டின் அருகே சமைக்க தென்னை ஓலையால் வேய்ந்து மால் கட்டியிருந்தார்கள். எனக்கு மாலைப் பர்க்கப் புதினமாக இருந்தது. மாலின் உள்ளே மட்டுச்சாணகத்தால் மெழுகியிருந்தார்கள். மூக்கை அரிக்கின்ற அமில நெடி இல்லாத குளர்சியைத் தரும் இயற்கைக் கிரிமிநாசினி. சிறுவயதில் கோண்டாவிலில் அப்பாச்சியிடம் போகும்பொழுது பார்த்ததிற்குப் பிறகு இப்போழுது தான் மாலைப் பார்த்ததால் எனக்குப் பெரிய புழுகமாக இருந்தது. ஆனால் கவலையான விடையம் இந்த மால்களின புழக்கம் இப்பொழுது ஒருசில வீடுகளைத் தவிர இல்லை என்பது மனதை நெருடியது. வீட்டல் இருந்த நாயும் முதல் என்னை எதிரியாகவே பார்தது பின்பு என்னிடம் ஒடி விழையாடியது. வீட்டுக் கிணற்றில் கப்பி கட்டி கயிற்றில் இரண்டு பக்கமும் வாளி கட்டியிருந்தார்கள். கிணற்றில் ஆசை தீர அள்ளி அள்ளிக் குளித்தேன். கப்பியும் ஆரம்பத்தில் எனக்கு இடைஞ்சலையே தந்தது பின்பு பழகிவிட்டது. கிணற்றடியில் துலாக்கால் இருந்ததிற்கான அடையளம் இருந்தது. சாப்பிட்டுவிட்டு மத்தியானம் நல்ல நித்தரை அடித்தேன். மனைவி பருத்தித்துறை வடையும் பிளேன் ரீ யும் தந்தா. ரீயைக் குடித்துவிட்டு தங்கைச்சிக்குப் போன் பண்ண தொலைபேசியை எடுத்தேன். நாளை கோப்பாய்க்கு வருவதாகச் சொல்லி விட்டு போனை வைத்தேன். நானும் மச்சானும் வெளிக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தோம். வெய்யில் குறைந்து காத்து வந்தது.

"எங்கை ரெண்டுபேரும் போறியள்"?

"உதிலை பளைய ரவுனுக்குப்போட்டு வாறம்"

"ஏன்"?

"சும்மா இடம் பாக்க".

நமுட்டுச் சிரிப்புடன் மனைவிக்குச் சொன்னேன்.எனது கள்ளச்சிரிப்பைப் புரிந்தவளாக,

" பேந்து உங்கை வைத்தால அடில கிடவுங்கோ செய்யிறன் வேலை".

"ஏனப்பா இந்த எறிசொறி கதையளை நிப்பாட்ட மாட்டீரே"?

"வெள்ளென வாங்கோ".

சரி என்றவாறே இருவரும் ஒழுங்கையால் நடக்கத்தொடங்கினோம். எனது மச்சான் என்னை விட உள்ள ஊரி சந்து பொந்துகள் எல்லாம் தெரிஞ்சு வைத்திருந்தார். அவருக்கு இது இரண்டாது முறை பயணம். ஒரு சில நட்புகளையும் பிடிச்சு வைத்திருந்தார். அவருக்கு பியர் குடிக்க வேணும். எனக்கு சொட்டைத்தீனும் பிளேன்ரீயும் வேணும், பஸ்ராண்டையும் பாக்கவேணும். இருவரும் பல கதைகளை கதைத்துக் கொண்டு பழைய ரவுணை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். ஒழுங்கையில் ஆடுகள் மேஞ்சு கொண்டு குட்டிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. ஆவோலைப்பிள்ளையார் கோயிலடி தாண்ட ஒரு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பெயர்பலகையுடன் இருந்தது. அதில், "சுப்பர்மடம் சுனாமி மீள்வீடமைப்புத்திட்டம் உதவி யூனிசெப்" என்று எழுதப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து சுப்பர்மடம் கரைக்குக் கிட்ட வருகின்றது. அங்கு தானே, அந்தமக்களுக்கு புனர்நிர்மாணம் செய்யேண்டும்? என்ற இயல்பான கேள்வி எழுந்தது. மாமவிடம் கேக்கவேணும் என்று நினைத்தேன். இரண்டு பக்கமும் வீட்டு மதில்களில் மயில்கொன்றை பூக்களும், தேமா, அலரி, குறோட்ன்களால் நிறைந்திருந்தன. நாங்கள் கல்லூரி சந்தியையும், வீ எம் றோட் சந்தியையும், கடந்து வந்த வீதியில் நடந்தோம். அப்பத் தட்டிகளில் அப்பமும் தோசையும் சுட்டு மணம் வீதி எங்கும் பரவியிருந்தது. நான் நின்று அப்பத்தட்டியை வடிவாகப் பார்த்தேன் .எரியும் நெருப்பையும் தோசைக்கல்லையும் தான் பாக்க முடிந்தது.தோசை சுட்ட "செப்" ஐ பாக்கமுடியவில்லை. எனக்கு அப்பம் சாப்பிடவேணும் போல இருந்தாலும், இன்று றோல்ஸ் உம் பிளேன் ரீ யும் குடிக்க முடிவு செய்தால் மனதை மாற்றிக் கொண்டேன்.

இருவரும் அம்மன் கோயிலடியால் பஸ்ராண்ட் வாசலைத் தொட்டோம்.மாலைவேளையில் பஸ்ராண்டும் கலகலத்தது. மினிபஸ்கள் ஒருபக்கமாகவும், உள்ளூர் இ போ சா பஸ் நடுவாகவும், வெளியூர் செல்லும் பஸ் அருகேயும் நின்றிருந்தன. பயணிகள் வீடு செல்ல அவசரம்காட்டினர் . அந்த இடம் பஸ் கோர்ண் ஒலிகளால் இரைச்சலாக இருந்தது. ராஜன் சைக்கிள் வேக்ஸ் கடை இப்பொழுதும் இருந்தது. பஸ்ராண்டை சுற்றியிருந்த கட்டிடங்களில் சிங்கத்தின் பற்கள் பதிந்திருந்தன. முன்பு இந்த இடங்கள் ஆள்நடமாட்டமற்ற சூனியப் பகுதி. இப்பொழுது தான் திறந்து விட்டுள்ளார்கள். இலங்கை வங்கி கட்டிடத்திற்கு மேல் ராணுவ சிப்பாய் காவல் இருந்தான். பஸ்ராண்டின் முன்பக்கத்து ஒழுங்கை முகப்பில் மச்சானுக்கு தேவையான தவறணை இருந்தது. கடையின் முன்பக்கம் நான் நின்று விடுப்புப் பார்த்தேன். மச்சான் பியர் வாங்க உள்ளே போய் விட்டார். கடையின் முன்னால் குடிமக்களது வேடிக்கை வினோத நிகள்ச்சி நடந்தது . அவர்களின் தூசணம் அனல் பறந்தது. அருகே ஒரு தேநீர் கடை இருந்தது அதற்குள் நான் போக விரும்பவில்லை. மச்சான் வெளியே வந்தார் கையில் இரண்டு கிங்பிக்ஷர் பியர் போத்தலுடன்.

"நல்லாத்தான் உங்கடை ஆக்கள் இங்கை வியாபாரம் செய்யிறாங்கள்" .

சிரித்தவாறே,

"தேத்தண்ணி கடைக்கு போலாமா"?

இருவரும் முனைக்குப் போகும் றோட்டில் மீன்சந்தைக்கு முன்னால் இருந்த ரீ கடைக்குள் உள்ளட்டோம். கடை துப்பரவாக இருந்தது. கண்ணாடி அலுமாரிக்குள் றோல்ஸ், வடை ,கடலை வடை, சூசியம் போண்டா ,என்று வரிசை கட்டி இருந்தன சோட்டைத் தீன்கள். நான் ஒரு பிளேன் ரீயும் ,ரெண்டு றோல்ஸ் உம் எடுத்துக்கொண்டேன். உள்ளே இருக்க வெக்கையாக இருந்ததால் வெளியில் வந்தோம். வெளியே இருட்டத் தொடங்கியது. றோல்ஸ் நல்ல ருசியாக இருந்தது. பாரிஸ் றோல்ஸ்சை நினைத்தேன், இறைச்சியை தேடிப்பிடிக்கவேணும். நேரம் 7 மணியை நெருங்கியது, காசைக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் வெளிச்சம் நன்றாக இருந்தது. கல்லூரி வீதிச்சந்தியைத் தாண்டியதும் ஒழுங்கை ஒரே இருட்டாக இருந்தது. நாங்கள் அதில் குறிப்புப் பர்த்துத் தான் நடக்க வேண்டியிருந்தது. வீட்டு வாசலில் மனைவியும், தங்கைச்சியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். இரவு மனைவி சாப்பாட்டிற்கு சப்பாத்தி சுட்டு வைத்திருந்தா. பலகதைகள் கதைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு படுத்து விட்டோம். மனவி உடனேயே உறங்கி விட்டா, எனக்கு நித்திரை வரமறுத்தது. எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை, சேவல் கோழியின் குரலால் எனது நித்திரை குளம்பியது. நேரம் விடிய 4 மணியைக் காட்டியது. நான் மெதுவாக எழுந்து கேற் வாசலுக்கு வந்து சிகரட் ஒன்றைப் பற்றவைத்தேன். பக்கத்திலிருந்த பண்டாரி அம்மன் கோவில் ஒலிபெரிக்கி சுப்பிரபாதத்தை மெதுவான ஒலியில் தவழவிட்டது, மனதிற்கு இதமாக இருந்தது. மேலே ஆகாயத்தில் நடசத்திரங்கள் கண்சிமிட்டின. நான் விடியவே குளித்து விட்டேன் காலை கோப்பியைக் குடித்து விட்டு விடிய 7 மணிபோல கோப்பாய் போகத்தயாரானோம். நானும் மனைவியும், மனைவியின் தங்கைச்சி குடும்பமும் பஸ் ஸ்ராண்டை நோக்கி ஒழுங்கையால் நடக்கத் தொடங்கினோம்.

பஸ்ஸ்ராண்டில் அந்தக்காலை வேளையில் சனம் அதிகம் சேரத்தொடங்கவில்லை. இ. போ . சா 750 பஸ் ஆட்கள் இல்லாமல் வெறும் பஸ்சாக நின்றது. நான் கொண்டக்ரரிடம் "எத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும்" என்று கேட்டேன் அவர் "7.30 வெளிக்கிடும்" என்று சொன்னார் இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன. சிறிது சிறிதாக பஸ்சில் ஆட்கள் சேரத் தொடங்கினார்கள். நான் டறைவருக்குப் பக்கத்தில் இடங்கள் பார்க்க வசதியாக இருந்து கொண்டேன். எங்களை சுமந்து கொண்டு பஸ் புறபடத் தயாரானது.






August 01, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...