Skip to main content

கறுப்பி .






அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டார் . அமைதியாக இருந்த அவர் வாழ்வில் இப்பொழுதுதான் புயல் ஒன்று வீசி ஓய்ந்திருந்தது. அந்தக் கிராமத்தின் இறுதியில் இருந்த கந்தப்புவின் கொட்டிலில் இருந்து தூரத்தே தெரிந்த கைதடியில் அங்காங்கே ஒளிப் பொட்டுகள் மின்னி முழித்தது அந்த அமாவாசை இருட்டில் நன்றாகவே கந்தப்புவுக்கு தெரிந்தது . கடந்த மூன்று வருடங்ளுக்கு முன்பு நடந்த செல்லடியில் மனைவி பறுவதத்தைப் பறி கொடுத்த கந்தப்புவுக்கு சொல்லிக்கொள்ள பெரிதாக உறவுகள் ஒன்றும் இல்லை. ஊரின் கடைசியில் இருந்த கந்தப்புவுக்கு அந்தக் கொட்டிலும் அருகே இருந்த பிள்ளையார் கோவிலும் போதுமானதாகவே இருந்தது . கந்தப்பு வாழ்க்கையில் பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று விட்டேந்தியாக இருந்த கந்தப்புவின் வாழ்கையில் சீலன் கறுப்பியின் வருகை , வாரிசுகளே இல்லாத கந்தப்புவுக்கு பாலைவனத்துப் பொட்டல் வெளியில் தோன்றிய ஈச்சை மரமும் அதனுடன் இணைந்த கிணறும் போல ஓர் புது வசந்ததையே கொண்டு வந்தது . ஒரு நாள் காலைப்பொழுதில் கந்தப்பு தனது தோட்டத்தில் மிளகாய் கண்டுக்கு களை புடுங்கி கொண்டிருந்த பொழுது சீலன் கறுப்பியினது அறிமுகம் அவருக்கு கிடைத்தது. தாங்கள் விசுவமடுவில் இருந்து வருவதாகவும் அண்மையில்தான் கலியாணம் செய்தவர்கள் என்றும் தங்களுக்கு இருப்பதற்கு இடம் தரமுடியுமா என்ற கோரிக்கையில் , கந்தப்புவுக்கும் அவர்களுக்குமான உறவு துளிர்விடத் தொடங்கியது . கறுப்பியின் பெயர்தான் கறுப்பியே தவிர பிரம்மன் அவளில் எதுவித கஞ்சத்தனத்தையும் காட்டவில்லை . கனங்கரேலென்ற முழங்காலைத் தொடும் நீண்ட தலை முடியும் , வட்ட வடிவ முகத்தில் செதுக்கி எடுத்த அழவான மூக்கும் , வில்லாக வளைந்த கண் இமைகளும் , தொய்வே இல்லாத எடுப்பான மார்பகங்களும் , அகன்ற பின்புறமும் , திரட்சியான கெண்டைகால்களும் கறுப்பியை பேரழகியாகவே காட்டின .சீலன் அவளைவிட சிறிது நிறம் குறைந்தாலும் வன்னியின் கடுமையான உடல் உழைப்பு அவனை ஓர் குத்துச்சண்டை வீரனைப் போலவே வைத்திருந்திருந்தது . பறுவதத்தை தொலைத்த கந்தப்புவின் வாழ்வில் மீண்டும் வசந்தத்தின் மொக்கு மெதுமெதுவாக அரும்பத் தொடங்கியது. சீலன் அவரின் வீட்டுக்கு முதுகெலும்பாகவும் கறுப்பி வீட்டைத் தாங்குபவளாகவும் இருந்தாள். பொதுவாகவே நல்ல உள்ளங்களின் வாழ்வு காலம் என்ற கடவுளுக்குப் பிடிப்பதில்லைப் போலும். அது கந்தப்புவின் வாழ்விலும் விளையாடத் தொடங்கியது.

0000000000000000000000

இலங்கை என்ற மாம்பழத் தீவில் காலத்தின் குரூரம் சிறிது சிறிதாக முளைவிடத் தொடங்கிய காலகட்டம் அது . அது பௌத்த இனவாதம் என்ற பேயை சிங்களத்தில் ஏவி விட்டு தமிழர் வாழ்வில் மெதுமெதுவாக ஒரு ஊழித்தாண்டவத்துக்கான ஒத்திகையை ஆரம்பிபதற்காக தனது கால்களை அகலப் பரத்தியது. பௌத்த இனவாதப் பேயை ஓட்ட பல பூசாரிகள் வந்து போனார்கள். சிங்களத்தின் அரசியல், இனவாதப் பேயால் உண்டு கொழுத்தது. தமிழர்களும் இந்தப் பேயை ஓட்ட பல ஏற்பாடுகளை செய்து கொண்டுதான் இருந்தார்கள். தமிழர்களின் முன்னெடுப்புகளைப் பார்த்து அனைத்து நாடுகளுமே பீதி அடையத் தொடங்கின. ஒரு கட்டத்தில் ஒரு தீவினுள் இரண்டு நாடுகள் என்ற நிலையில் தமிழர் முன்னெடுப்புகள் இருந்தன.பௌத்த இனவாதப் பேயும் ஓவ்வரு சிங்கள இரத்தத்திலும் அணு அணுவாக ஊறி மூர்க்கமாக தமிழர் மேல் பாய்ந்தது. போதாக்குறைக்கு தன்னையொத்த கூட்டாளிப் பேய்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டது பௌத்த இனவாதப் பேய் . ஒரு சிறு குழந்தையின் பாலுக்காக அழுத அழுகுரலை , காலம் என்கின்ற கடவுள் மனித உருவில் வந்து போக்கியதாக தமிழர் வாழ்வில் வரலாறு என்கின்ற வடிவில் பதிந்தது . ஆனால் , அதே காலம் என்கின்ற கடவுள் மிலேனியத்தில் தமிழர்கள் பெருங்குரலெடுத்து கதறி அழுத பொழுது அவர்களை திரும்பியும் பார்க்கவில்லை என்கின்ற காலப் பிறழ்வும் தமிழர் வாழ்வில் நடந்து தான் இருந்தது. ஒரு நாள் அதிகாலை கந்தப்புவின் அழகிய கிராமம் இந்தப் பேய்களால் சிதைக்கப்படபோவது தெரியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது . ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள் தங்கள் எஜமானர்களைக் காப்பதற்காக அரை உறக்கத்தில்தான் எப்பொழுதும் இருப்பவை . அதில் நாய்களின் பங்கு அளப்பரியது. தூரத்தே கைதடிப் பக்கமாகவும் செம்மணிப் பக்கவாகவும் கந்தப்புவின் கிராமம் நோக்கி நகரத் தொடங்கிய பேய்களின் அசுமாத்தத்தினை , இந்த நாய்கள் தங்கள் நுண்ணிய புலன் உணர்வால் உணர்ந்து “குரைப்பு” என்கின்ற எச்சரிக்கை மணி மூலம் அந்தக் கிராம மக்களை தட்டி எழுப்பிய பொழுது பேய்கள் அந்தக் கிராமத்தை நெருங்கியிருந்தன. எச்சரிக்கை மணி அடித்த நாய்களின் குரல்கள் துப்பாக்கிக் குண்டுகளின் கைங்கரியத்தால் பரலோக சமாதி அடைந்து கொண்டிருந்தன. தூரத்தில் இருந்தே எண்ணையின் துர்வாசத்தை அந்தக் கிராமத்து மக்கள் உணரத் தொடக்கி விட்டனர். அவர்கள் கண் மூடி முழிப்பதற்குள் தடதடத்த சப்பாத்துக் கால்கள் அந்த கிராமத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தன. எங்கும் தாடிகளும் தலைப்பாகைகளுமே நிரம்பி இருந்தன. அந்தக் கிராமத்தின் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக அனேகமாக எல்லோருமே முழங்காலில் இருத்தி வைக்கப்படிருந்தனர். தனது தோட்டத்தில் மிளகாய் கண்டுகளுக்கு தண்ணி மாறிக் கொண்டிருந்த கந்தப்புவும் நிறுத்தப்பட்டிருந்தார். ஒருபகுதி இவர்களை மேய்த்துக்கொண்டிருக்க மறுபகுதியோ தனது வேட்டையை ஆரம்பித்தது. பருத்தித்துறை வீதியில் இருந்து கேணியடிப்பக்கமாக நகர்ந்த பேய்கள் ,ஒவ்வரு வீட்டின் வேலிகள் பொட்டுகள் என்று பிரித்து வெளியாக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. அந்தப் பேய்களின் அந்த வேலி பிரிப்பிலும் பொட்டுப்பிரிப்பிலும் தங்கள் வாகனத் தொடரணியின் கண்ணிவெடித் தாக்குதலின் வெறியே மேலோங்கி இருந்தது . அவர்கள் தேடிவந்தவர்கள் அந்த இடத்தில் இல்லாததும் அவர்கள் வெறியை மேலும் அதிகப்படுத்தியது. அவைகள் கறுப்பியின் கொட்டிலை நெருங்கிய பொழுது சீலன் கொட்டிலின் பின்பக்கமாக தனது ஆடுகளுக்கு இப்பிலிப்பில் குழைகளைப் பறித்துக் கொண்டிருந்தான். கறுப்பியோ தோட்டத்துக்குப் போன கந்தப்புவுக்கும் ,சீலனுக்கும் சமைத்துக்கொண்டிருந்தாள். பின்புறமாக நுழைந்து கொண்டவர்களுக்கு சீலனே முதலில் கண்ணில் பட்டான். சீலனின் உடல்வாகு தங்கள் தொடரணியை தகர்த்த ஆட்களில் ஒருவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளறி விட, சீலனை அருகே இருந்த தென்னை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கத் தொடங்கின அந்தப் பேய்கள். சீலனது அலறலில் கொட்டிலுக்குள் இருந்து கலவரப்பட்டு ஓடிவந்த கறுப்பியைக் கண்ட அந்தப் பேய்கள் கள்ளுக் குடித்த குரங்குகளாயின. இருவரை சீலனுக்கு காவல் காக்க விட்டு விட்டு கறுப்பியை சுற்றிவளைத்தன அந்தப் பேய்கள். அங்கே தனது சொந்த மண்ணில் அன்னியப் பேய்களினால் கறுப்பியின் கற்பு மூர்க்கத்தனமாக கரைந்துகொண்டிருந்தது. கறுப்பி …………..என்று குளறிக்கொண்டிருந்த சீலனது தொண்டையை நோக்கி ஒரு குண்டு சீறித் துளைத்தது. ஆள் மாறி ஆள் மாறிக் கறுப்பி மீது படர்ந்த இறுதிப் பேய் ஒன்று, அவளது பிறப்புறுபினுள் தன் கையில் இருந்த கிறனைட்டின் கிளிப்பை விலத்திக் கிறனைட்டை நுழைத்து வீட்டு ஓடியது. சீலன் ……… என்ற அலறலுடன் கறுப்பி சிதறினாள் . அதன் பின்பு சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அந்தக் கிராமத்து சம்பு புல்லுத் தரவைப் பக்கம் நடுநிசியில் கறுப்பீ…………… என்ற சீலனின் அலறலும் , சீலன்…………. சீலன்…………… என்ற கறுப்பியின் தீனமான அலறலும் அவ்வப்பொழுது நடு நிசியை குலைத்து, கந்தப்புவையும் அந்தக் கிராம மக்களினது நித்திரைக்கு வேட்டு வைத்துக்கொண்டிருந்தது.





March 23, 2014

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...