Skip to main content

அவன் யார்? –நெடுங்கதை.




1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டாவெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் . நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இருப்பது வேறுவேறானாலும் எங்கள் கூட்டு உடையாது இறுகித்தான் இருந்தது . சிறுவயதில் காதலித்தவனுக்கு தாய் முறுகியபொழுது அவாவைச் சமாதானம் செயது குகனுக்குக் கலியாணம் செய்வித்ததும் நான் தான் . பின்பு 87களில் மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு இங்கு என்னிடம் வந்துவிட்டான் .ஆரம்பத்தில் என்னுடன் இங்கு இருந்தவனுக்கு லியோனில் வேலை ஒன்று கிடைத்தபொழுது வேலையைப் பொறுப்பு எடுக்கவும் , என்னைவிட்டுப் பிரியவும் மனம் இருக்கவில்லை . நானே அவனிற்குப் பலபுத்திமதிகள் சொல்லிக் கட்டாயப்படுத்தி லியோனுக்கு அனுப்பி வைத்தேன் . நான் படுக்கையை விட்டு எழுந்து குசினிக்குள் வந்து தேத்தண்ணி போட வொயிலரில் தண்ணியை விட்டு பட்டினைத் தட்டி விட்டேன் . நான் தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு ஓர் சிகரட்டை எடுத்துக் கொண்டு பல்கணியைத் திறந்து வெளியே வந்தேன் . குளிர் ஊசியாக , போட்டிருந்த சுவற்றரின் ஊடாக ஊடறுத்துப் பாய்த்து எலும்பின் நரம்புகளை கலோ கேட்டதால் உடம்பு நடுங்கியது . அப்பாட்மென்ற் க்கு முன்னால் இருந்த மரங்கள் எல்லாம் பச்சைகளைத் தொலைத்து வறட்சியாக நின்றன , எங்கள் வாழ்வு போல . இரவு பெய்த பனி அவைகளின் மீதும் , நிலமெங்கும் கொட்டி இருட்டும் வெண்மையுமாக வர்ணஜலம் காட்டியது .அந்தக் காலையிலேயே பனிப்புகாரும் ஆள் தெரியாதவாறு மண்டி எனக்குப் பரவச நிலையை ஏற்படுத்தியது . எனக்கு சிகரட் அடிக்காமலே வாய்க்கால் புகை வந்தது .தேத்தண்ணியையும் சிகரட்டையும் பற்ற வைத்துக்கொண்டு ஆண்டவன் எனக்காகப் படைத்த அந்தக் காலை வேளையைத் துளித்துளியாகப் பருகினேன் . எனது மௌனத் தவத்தைக் குலைத்தது கீழே குகனின் "மச்சான் " என்ற குரல் . நான் மேலே வரசொல்லி விட்டு வீட்டின் கதவைத் திறக்கப் போனேன் . குகன் கதவிற்குக் கிட்டே வரவும் நான் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது . குகன் லியோனிற்குப் போனதன் பின்பு இப்பொழுது தான் முதன் முதலாக வந்திருக்கின்றான் . அவன் சற்றுப் பூசியது போலவும் , தோல் சிறிது மாநிறமாகவும் வெளிறி வந்திருந்தான் . " என்ன குளிரடாப்பா எனக்கு ஃகபே போட்டுட்டியே " என்று குசினிக்குள் உள்ளட்டான் குகன் . " போய் பல்லை மினக்கி குளிச்சுப் போட்டு வா ஃகபே பொடிறன் " என்று நான் சொல்லி விட்டு ஃகபே போட ஆயுத்தப்படுத்தினேன் . அவன் பல்லை மினுக்கி குளித்து விட்டு வந்தான் . எனது ஃகபேயை மணந்தவாறே தான் வாங்கி வந்த குறசோன்களை எடுத்து வெளியே வைத்தான் . குறசோன்களின் வாசம் மூக்கைத் துளைத்து எனக்கும் ஃகபே குடிக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது . இருவரும் ஃகபேயை ஊற்றிக்கொண்டு சிகரட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் பல்கணிக்கு வந்தோம் . "என்ன மச்சான் நித்திரையால எழுப்பி போட்டனே " ? " இண்டைக்கு உனக்கு லீவு தானே? மற்றது நான் இங்கை ரெண்டு நாள் நிக்கவேணுமடாப்பா . உன்ரை றூமை நல்ல திறமாய்த் தான் வைச்சிருக்கிறாய் எனக்கு உப்புடியெல்லாம் பொறுமை இல்லை " என்று சொல்லியவாறே எனக்கு சிகரட்டைப் பற்றவைத்தான் குகன் . நான் சிரித்துக் கொண்டேன் . " அதுசரி ஏன்ராப்பா இருந்தாப்போலை இங்கை வந்தனி "? குகன் சொல்லத் தொடங்கினான் .

" மச்சான் என்னை றீ அப்பீலிலை கொமிசனுக்கு கூப்பிட்டிருக்கிறாங்கள் . நாளைக்கு வழக்கு . எனக்கெண்டால் இதில நம்பிக்கை இல்லாமல் கிடக்கு ஒஃபறாவிலை றிஜெக்ற் பண்ணினவங்கள் , இதில கிடைக்குமேயடாப்பா ? " என்று கவலையுடன் சொன்னவனை நான் இடைமறித்தேன் " நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை . கொஞ்சத்தாலை உன்ரை கேஸ் எழுதின பூபாலசிங்கத்தாரிட்டைப் போவம் . மற்றது உன்ரை லோயர் மிஷேல் பஸ்குவாக்கு போன் பண்ணி வழக்கை ஞாபகப்படுத்துவம் . பஸ்க்குவான்ரை வழக்குகள் பெரிசாய் தோக்கிறேலை ".என்று அவனை ஆறுதல் படுத்த முயன்றேன் .

0000000000000000000000000000000

குகனின் நெஞ்சு ஒப்பறேசன் லிபறேசனாலும் அதன் தொடர்சியான அன்னியப் படைகளின் அட்டூளியத்தினாலும் கனன்று கொண்டிருப்பதை அவன் முகம் எனக்குக் காட்டியது . குகன் வீட்டில் மூத்தவன் அவன் பின்பு தம்பி தங்கை என்று அளவான குடும்பம் . தந்தை தமிழ் ஆசிரியர் . தம்பி நாடு காக்கப் போனதால் யுத்தமும் அன்னியப்படையும் அவனது குடும்பத்தை சுனாமியாய் புரட்டிப் போட்டது . ஒரு நாள் வீதிச் சோதனையில் பெண்டருடன் கூனிக்குறுகி , தலையாட்டிகளின் முன்பு வேள்விக் கிடாயாக நின்றபொழுது , இவன் அப்பா கதைக்கப் போனதால் அவன் முன் சிங்களத்தின் கலாக்ஷ்னிக்கோவ் அவரை சல்லடைபோட்டு இரத்தக்குளியலாக்கியது . இதைப் மக்களுன் மக்களாகப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தம்பி அதே சிங்களக் கும்பலை வேறொரு இடத்தில் வைத்துக் கணக்குத் தீர்த்துக் கொண்டான் .

இதேவேளையில் சமாதானம் என்று சொல்லி சமாதனத்தைத் தொலைக்க அன்னியப்படைகள் தாயகத்தில் அப்பம் பிரிக்க அகலக் கலைப் பரப்பன . எங்களுடன் படித்த ரமேஸ் மூலம் மீண்டும் குகன் வீதியில் பெண்டருடன் படுக்கவைக்கப்பட்டான் . ரமேஸ் சித்தாந்தங்களால் இழுபட்டு அவனும் விடுதலயை அவனது வழியில் தேடினான் .

குகனுக்கும் ரமேசுக்கும் குகனது சரக்குப் பிரச்சனையில் றாட்டல் இருந்ததைக் குகன் எனக்கு கடிதம் மூலம் எழுதியிருந்தான் . நான் ரமேசுக்கு கடிதம் மூலம் சொன்ன எதுவுமே ரமேசுக்கு ஏறவில்லை . றமேசுக்கு எங்கள் பள்ளிக்கூட நட்புகள் பெரிதாகத் தெரியவில்லை . யுத்தம் சிறிய மன உணர்வுகளயே கூறபடுத்தி வெற்றி கண்டிருந்தது .

றமேஸ் சந்தர்ப்பத்தை அன்னியப்படைகள் மூலம் சரியாகக் குகனில் தீர்த்துக் கொண்டான் .குகனின் அம்மா குகன் தொலைந்தே விட்டான் என்ற நினப்பில் இருந்தபொழுது , குகன் புலி என்று எதுவுமே சரியாக நிரூபிக்கப்படாததால் படைமுகாமால் மூன்று மாதத் தொடர் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டான் . அப்பொழுது குகனால் சரிவர இயங்க முடியவில்லை . அன்னியப் படைமுகாம் அவனை உடல்ரீதியாக உருட்டிப் போட்டிருந்தது . பல மருத்துவ சிகிச்சைகளின் பின்பு , மனைவி , பிறந்த பிள்ளையை விட்டு விட்டு இங்கு என்னிடம் வந்து விட்டான் . அவனைப் பற்றி எனக்கு வேறு ஒரு திட்டம் இருந்ததால் , அதை அவனுக்கு வெளிக்காட்டது குசினியில் இருவருக்கும் ஃகபே எடுக்கப் போனேன் .

குகன் ரொயிலெற்ருக்குப் போய்விட்டுத் திரும்பவும் பல்கணிக்கு வந்தான் . இப்பொழுது பனிப்புகார் விலகி , நிலத்தில் வெளிச்சத்திற்கும் இருளிற்கும் நடந்த ஊடலில் இருள் வெளிச்சத்தை விட்டுக் கொடுத்தது . காலை 7 மணியாகி இருந்தது . பல்கணிக்கு முன்னே இருந்த நடைபாதையில் ஓரிரு கால் தடங்களுடன் பனி வெண்மையாகப் பரவி இருந்தது . அந்தக் காலை வேளையில் சிறு குழந்தைகள் தங்களுக்குள் பனியை உருட்டி எறிந்து விளையாடிக்கொண்டு , அம்மா அல்லது அப்பாவுடன் பள்ளிக்கூடம் சென்றார்கள் . சில கறுவல் குழந்தைகள் நித்திரைக் கலக்கத்துடன் பள்ளிக்கூடத்திற்கு இழுபட்டன . நாங்கள் ஃகபேயைப் பருகியவாறே அவர்களை விடுப்புப் பார்த்தோம். குகன் எனது மௌனத்தைக் கலைத்தான் " என்னமச்சான் எங்கடை கலட்டி பள்ளிக்கூடப் பக்கம் நிக்கிறாய் போலக் கிடக்கு " ? நான் கெக்கட்டம் விட்டுச் சிரித்தேன் . " எல்லாருக்கும் சின்னவயசுப் பள்ளிக்கூடந்தான்ராப்பா அழியாத நினைவுகள் . நீ அதே குறும்போடை அப்பிடியே இருக்கிறாயடாப்பா . " எனக்கு இந்தப் பகிடிக் குணமும் இல்லாட்டி எப்பவோ செத்திருப்பன் " என்ற குகனின் முகம் இறுகியது .

நாங்கள் இருவரும் பூபலசிங்கத்தார் வீட்டிற்குப் போய் வழக்கு விபரங்களை அவரிடம் கதைக்கும்பொழுது பூபலசிங்கத்தார் , " குகனின் வழக்கு பலகீனமாக இருப்பதாகவும் , புலியாலையும் கூடப் பிரச்னை எண்டு இதில சேர்த்தால் வழக்கை வெல்லலாம் " எண்டு அபிப்பிராயப்பட்டார் . குகனினின் முகமாற்றத்தை அவதானித்த நான் " பூபாலசிங்கத்தார் அப்படியெல்லாம் செய்யவேண்டாம் . புலியாலை குகனுக்கு ஒருபிரச்சனையும் இல்லை . இப்பிடித்தான் வழக்கு இருக்கவேணும் எந்த மாற்றமும் இருக்கபடாது " . என்று முடிவாகவே சொன்னேன் .



நாங்கள் எங்கள் அலுவல்களை விரைவாக முடித்துக் கொண்டு வரும் வழியில் மாலா கடையில் மரக்கறியும் , வெல் வீலில் (Belle ville ) குசனின் இறைச்சிக்கடையில் மாட்டிறச்சியும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம். நான் சமைக்கும் பொழுது குகன் எனக்கு உதவியாக மரக்கறியை வெட்டிக் கொண்டு பழைய கதையள் பம்பலடித்துக் கொண்டிருந்தான் . எனது மண்டையோ வேறு ஒரு திட்டத்தில் பாய்ந்து கொண்டு அவனது பம்பலுக்கு " உம் " கொட்டிக் கொண்டிருந்தது .

எனது முகமாற்றங்களைக் கவனித்த குகன் " என்னடா மச்சான் உனக்குப் பிரச்சனை " என்று என்னை வெட்டினான் . நான் சிரித்தவாறே " இல்லையடாப்பா என்ரை கனடாவில இருக்கிற சகோதரம் தன்னட்டை வரச்சொல்லி ஒரே அரையண்டம் . ஒரு ஏஜென்சியிட்டைக் கதைச்சனான் . அவன் என்னை றோமிலை வைச்சு புத்தகம் மாத்தி அனுப்பி விடுறானாம். நானும் ஓம் சொல்லிப்போட்டன் . உனக்கு தப்பித் தவறி கொமிசனில வழக்குப் பிழைச்சால் , நீ என்ரை றெசிடன்ஸ் மட்டையை வைச்சிரு . நான் றோமில இருந்து உனக்கு அனுப்பி விடுறன் " .என்று எனது திட்டத்தைச் சொன்னேன் .

நான் சொன்னதை வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தவன் ." மச்சான் உதிலை ஏதாவது வில்லங்ம் வராதே " ?என்றான் . " இல்லையடாப்பா நான் கனடாக்குப் போடுவன் . நான் தான் " நீ " பேந்தென்ன ? நீயா வில்லங்கங்களுக்கு போகாதவரைக்கும் , பொலிஸ் உன்ரை மட்டையை செக் பண்ணினாலும் மட்டை ஒறிஜினல் தான் . அதோடை உன்ரை முகமும் என்ரை முகமும் கிட்ட முட்ட ஒண்டு ". குகன் சமாதனமடைந்தவனாக " சரியடாப்பா நீ சொல்லுறதைக் கேக்கிறன் " என்றான் .

நாங்கள் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் நித்திரை அடித்து விட்டு பின்னேரம் கூட்டுகளைச் சந்திக்க மாலா கடையடிக்குப் போனோம் . மாலா கடைக்குப் பக்கத்திலிருந்த பாரில் , எனக்கு கபேயும் குகனுக்கு தெமியும் சொல்லிவிட்டு போளை அடித்தோம் . குகன் போளை அடிப்பதில் விண்ணன் . நான் அவனிடம் கூடத் தோற்றுத் தான் இருக்கிறன் . இரண்டு கைகளாலும் ஸ்ரைக்கரால் பல போளைகளை ஒரே நேரத்தில் விளையாடுவான் . நாங்கள் சுவாரசியமாக போளை அடித்துக் கொண்டிருந்த போது , எனது ஏஜென்சி பெடியன் என்னைச் சந்திக்க வந்தான் . என்னை இரண்டு நாளில் றோமிற்கு போக ஆயுத்தப்படுத்தும்படி சொன்னான் . நானும் குகனும் சிறிது நேரம் மாலா கடையடியில் நின்று பம்பல் அடித்த்து விட்டுக் குகன் மாலாகடையில் எடுத்த றெஸ்லிங் கொப்பியுடன் வீடு திரும்பினோம் .

இரவு பாகைமானி சைபருக்கும் கீழே இறங்கி 7 ஐத் தொட்டது . குகன் குஸ்குஸ் பொட்டுக்கொண்டிருந்தான் . நான் ரீவி யில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன் . செய்தியில் குளிரால் வாடிய பிச்சைக்காறர்களை செஞ்சிலுவைச் சங்கம் மீட்கப் போராடியது . அவர்களது அடிப்படைத் தேவைகள அரசுகள் பூர்த்தி செய்யாது , குளிர் நேரத்தில் மட்டும் இந்தப் பிச்சைக்காறர்கள் ஒரு நாள் ராசாவாக இருப்பார்கள் . அரசுகளும் அவர்களை சுமையாகவும் தங்களுக்கு கௌரவக்குறைச்சலான ஆட்களாகவும் பார்த்தது தான் என்னை உறுத்திய விடையம் .

மறுநாள் அதிகாலையே குகன் நித்திரையால் எழுந்து எனக்கும் சேர்த்துக் ஃகபே போட்டிருந்தான் . இருவரும் ஃகபேயைக் குடித்து விட்டு நான் வேலைக்கும் , குகன் கொமிசனுக்கும் போய்விட்டோம் . மாலை வீடு திரும்பிய குகனின் முகம் குழம்பிய நிலையிலேயே இருந்தது . விசாரித்தளவில் தன்னால் வழக்குப் பற்றி ஒரு முடிவிற்கும் வரமுடியாமல் இருப்பதாகச் சொன்னான் . நான் அவனை ஆறுதல் படுத்தி விட்டு றோமிற்குப் போக வேண்டிய ஆயத்தங்களைச் செய்தேன் . மறு நாள் மதியம் நாம் இருவரும் நெஞ்சு முட்டிய கவலைகளுடன் கார் து லியோனில் றோமிற்கும் , லியோனுக்குமாகப் பிரிந்தோம் .

000000000000000000000000000000000000

அந்த புகையிரதம் இப்போதைய நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத சாதராண புகையிரதம் தான் . யாழ்தேவிபோல தடக் தடக் என்று தாலாட்டியபடியே விரைந்தது . என் மனமோ பலவிதமான உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்தது . குகனுக்கு அந்தரத்தில் உதவி செய்தாலும் நான் அண்ணையின் பேச்சை கேட்டு இடம்தெரியாத இடத்திற்கு , அகரத்தில் இருந்து என்னைப் புதிப்பிக்க வெளிக்கிட்டதில் ஒருவித தடுமாற்றத்தினை உணர்ந்தேன் .என்னை விட்டு பல கிராமங்கள் நீங்கிக்கொண்டிருந்தன . புகையிரதம் சில மணிநேர ஓட்டத்திற்குப்பின்பு றோம் புகையிரதநிலையத்தினுள் நுளைந்து கொண்டிருந்தது . எனது ஏஜன்சியின் கையாள் அங்கை என்னைக் கூட்டிக்கொண்டுபோக வந்திருந்தான் .

றோம் " பிளமிங்கோ " சர்வதேசவிமான நிலையம் அந்த இரவில் தூங்கிவழிந்துகொண்டிருந்தது . நான் அமெரிக்கா செல்லும் அலித்தாலியா விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் . ஏஜன்சி எனது படத்தை திறமாகவே வேறுஒரு புத்தகத்தில் மாற்றியிருந்தான் . அந்தநேரத்தில் இப்போது உள்ள மாதிரி பாதுகாப்புக்கெடுபிடிகள் இல்லை . என்னால் ஒவ்வொரு கட்டத்தையும் சுலபமாகவே கடக்கமுடிந்தது . நான் வெளிக்கிடுவதற்கு முதலே எனது மட்டையை " டி எச் எல் " இல் குகனின் முகவரிக்குப் போட்டுவிட்டே வந்தேன் .

00000000000000000000000000000000

2010 கியுபெக்கில் உள்ள புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு , மைனஸ் 25 குளிரை சூடாக்கப் போராடி சிமினியால் புகையைத் துப்பிக்கொண்டிருந்தது. எனது காரை கறாஜ் சில் விட்டுவிட்டு சோர்வாக வீட்டிறகுள் மெதுவாக நுளைந்தேன் . இரவு ஒரு மணியைத்தாண்டிவிட்டிருந்தது . மனைவி பிள்ளைகள் நித்திரையாகிவிட்டிருந்தார்கள் . ஒரு சிகறட் ஐ எடுத்துக்கொண்டு விசாலமான " பக் யார்ட் " ற்கு கபேயும் ஜக்கற்றுடன் வந்தேன் . எனக்கு அந்த அமைதியும் வெண்பனியும் நன்றாகவே பிடித்திருந்தது . சூடான கபே தொண்டைக்குள் எரித்துக்கொண்டுபோய் தசைகளை சூடாக்கியது . எனது வாய்ப்புகையுடன் சிகரட் புகையும் எனது அன்றைய வேலைக்களைப்பைப் பஞ்சாக்கின .

ஒரு சிலநாட்களாகவே குகனின் நினைவுகள் என்னை வாட்டி எடுத்தன . நான் வந்த புதிதில் ஓரிருமுறை குகன் என்னுடன் தொடர்பு கொண்டான் . எனதுமட்டை கிடைத்ததைப்பற்றி சொல்லியிருந்தான் . பின்பு அவனது தொடர்புகள் முற்றாகவே விடுபட்டது . எனக்கு அவனின் திடீர் மாற்றங்கள் பெரும்மன உளைச்சலைக் கொடுத்தன .

ஆரம்பத்தில் அண்ணையுடன் இருந்த நான் ஒருசில மாதங்களிலேயே கனடாவின் நெளிவுசுளிவுகளைப் பிடித்துக்கொண்டேன் . மெதுவாக அண்ணையிடம் எனது திட்டங்களைச் சொன்னேன் . என்னைப் படிப்பிற்க கியுபெக்கிற்கு அனுப்பினார் . அங்கு எனது திறமைகள் மீண்டும் உயிர்பெற்றன . பல்கலைக்கழகத்திலேயே அதிக சம்பளத்துடன் எனது திறமையை அங்கீகரித்து வேலைதந்தார்கள் . எனது கலியாண விடையத்தில்கூட எனது முடிவுகளே வென்றது . வறுமையான குடும்பத்தில் பிறந்த மாதுமை எனக்கு மனைவியானாள் .

சிகரட்டின் அடிக்கட்டை சுட்டு எனது சிந்தனைகளைக் கலைத்தது. நான் வீட்டினுள் போய் மனைவி எடுத்து வைத்திருந்த சாப்பாடுகளைச் சூடாக்கி சாப்பிட்டு விட்டு படுக்கையறையினுள் வந்தேன் . மாதுமை எனது இடத்தில் கையைவைத்தபடியே நித்திரையாகிப் போயிருந்தாள் . நான் அவளது கையை மெதுவாக எடுத்துவிட்டு அவளருகே படுத்துக்கொண்டேன். அவளது கை மீண்டும் சூடு தேடி என்னை அணைத்துக்கொண்டது .

லீவு நாட்களிலேயே மாதுமையுடன் முகம் பார்த்து கதைக்கும் இந்த வாழ்க்கை முறை எனக்கு அருவருப்பாகவே இருந்தது . பிள்ளைகள் பிறந்தவுடன் வழமையான உடன்பாடுகளால் என்னால் உடன்பாடுகளில் இருந்து வெளியேறமுடியாது போய்விட்டது . குகனை நான் பிரிந்து பல வருடங்கள் போனாலும் , அவனது பழயநினைவுகள் மட்டும் பசுமயாக எனது நடைமுறை மனவெக்கைகளுக்கு மருந்தாக இருந்தன . மாதுமையும் பாவம் வேலையுடன் பிள்ளைகளைப் பராமரிப்பதில் மிகவும் சோரந்து போயிருந்தாள் . எங்கள் எல்லோருக்குமே ஒரு இடமாற்றம் தேவைப்பட்டிருந்தது . மாதுமையுடன் கதைத்து அவளது விடுமுறையையும் சரியாக்கி , நீண்டகாலத்திற்குப் பிறகு குகனை சந்திக்கும் ஆவலில் பிரான்ஸ் போகத்தயாரானேன் .

நான் வெளிக்கிடமுதல் முகநூலில் எனது பழைய கூட்டான சிறியால் குகனின் ரெலிபோன் நம்பர் எடுத்துக் குகனுக்கு போன் பண்ணினேன் ரிங் போய்க்கொண்டிருந்தது சிறிது நேரத்தின் பின்பு குகன் லைனில் "கலோ" என்றான் .

"மச்சான் நான் உங்கை வாறன் . என்னம் ரெண்டு நாளில பாரிஸ் இல வந்தாப்பிறகு உனக்கு திருப்பி போன் பண்ணிறன் " என்றேன் . அவனது குரல் எனது வருகையின் சந்தோசத்தை எனக்குக் காட்டியது .



இரண்டு நாட்ளுக்குப் பின்பு ஒரு காலையில் எங்களைச் சுமந்து கொண்டு ஏயார் கனடா வானத்திலே எம்பிப் பாய்ந்தது . எனது நினைவுகள் பாரிசின் பழைய நினைவுகளுலேயே அலை பாய்ந்தன . மாதுமை இயல்பாக எனது தோளில் சாய்ந்து கொண்டு , கீழே தெரியும் வெண்பஞ்சு மேகக்குவியல்களை சிறு பிள்ளை போல வேடிகை பார்த்தாள் . பத்து மணித்தியால பறப்பின் பின்னால் எயார் கனடா சால்ஸ்துக்கோல் சர்வதேச விமான நிலையத்தில் தனது கால்களை அகலப் பரத்தியது .

எல்லோரும் இறங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள் . நாங்கள் இருக்கையில் இருந்து ஆறுதலாக வெளிக்கிட்டோம் . எனக்கு ஏதோ எனது சொந்த நாட்டிற்கே வந்தது போன்று ஒரு இனம்புரியாத உணர்வு உடலெங்கும் பரவி ஓடியது . விமான நிலையம் பலவிதங்களில் முன்னேறி இருந்தது.நாங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்பொழுது காலை ஏழுமணியாகியிருந்தது . இருள் முற்றுமுழுதாக விலகவில்லை . மிதமான குளிர் உடலைத் தழுவியது. கியூபெக் குளிருக்கு இதந்தக் காலநிலை எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது . அருகே விமானங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக கடமையில் கண்ணுங்கருத்துமாக இருந்தன . நான் ஏற்கனவே தீர்மானித்தபடி பாரிஸ் போவதற்கு புகையிரதநிலையம் நோக்கிச் செல்லும் நவற்றில் ஏறிஅமர்ந்தோம் . அந்த நவற் இரண்டு பெட்டிகளைக் கொண்ட பல விமான முனையங்களையும் , புகையிரத நிலையத்தையும் இணைக்கும் ஒரு தொடரூந்து . அது மிகவும் விரைவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது . நாங்கள் பத்து நிமிட இடைவெளியில் விமானநிலையப் புகையிரத நிலையத்தை அடைந்தோம் .

எனக்கு ஒரு கபே குடிக்கவேண்டும் போல் இருந்தது .மாதுமையையும் ,பிள்ளைகளையும் ஓரத்தில் விட்டு விட்டு அருகே இருந்த பாரில் கபேயிற்கு ஓடர் பண்ணினேன் . சுத்தமான கொலம்பியன் காப்பிக் கொட்டைகளை அரைத்த பாரிஸ் எக்ஸ்பிறாசோ கபே கமகமத்தது . மாதுமையின் பார்வை பிழையாகத் தெரிந்ததால் அவசரமாகக் கபேயைக் குடித்துவிட்டு பாரிஸ் செல்ல புகையிரத மேடை நோக்கிச் சென்றேன் .

ஆர் இ ஆர் ஃபி (RER B ) மெதுவாக இரயில் நிலையத்தில் இருந்து நகரத்தொடங்கி வேகமெடுத்தது .ஆர் இ ஆர் ஃபி எதுவிதமாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது . நான் சிறுபிள்ளைகள் போல் மாதுமைக்கு எல்லா இடங்களையும் சொல்லிக் கொண்டு வந்தேன். புகையிரதம் கார் து நோர்ட்ல் உள்ளே இறங்க ஆயத்தமாகியது . புகையியரதத்தினுள் அனேகமானோர் கறுப்பர்களாகவும் அரபுக்களாகவுமே இருந்தார்கள் . எனது பிள்ளைகள் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள் . தூய பிறென்ஜ் காறரை சல்லடை போட்டுத்தேட வேண்டியிருந்தது . பிறான்ஸ் முன்பு இருந்ததை விடப் பல்லின சமூகங்களை உள்வாங்கியிருந்ததை என்னால் நன்கு உணரக்கூடியதாகவே இருந்தது . இதனால்தானோ பிரான்ஸ் மக்கள் கூடிய சகிப்புத் தன்மையுடன் இருக்கிறார்கள் . ஆனால் வெளிநாட்டவர்களால் பிரான்சுக்கு வருமானம் வந்தாலும் சமூகரீதியில் பல நேரெதிர் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன.

நாங்கள் வந்த புகையிரதம் சத்தலே லே ஹால் ல் நின்றது . நாங்கள் புகையிரதநிலையத்தை விட்டு வெளியே வந்து நாங்கள் நிற்க வேண்டிய தங்கு விடுதிக்குச் சென்றோம் . அங்கு எமது அறையை எடுத்துக்கொண்டு பயணக்களை தீர நன்றாகக் குளித்து காலை உணவை அருந்தினோம் . ஆனாலும் எங்களுக்கு நேரவித்தியாசத்தால் நித்திரை தூக்கியடித்தது . எனக்கு வெளியே போக முதல் சிறிது நித்திரை கண்டால் நல்லது போல் இருந்தது . சிறிது நேரத்தில் எல்லோருமே நித்திரையாகி விட்டோம் .

எனக்கு மாலைவேளையிலேயே விழிப்பு வந்தது .மத்தியானம் சாப்பிடாததின் வினை தெரிந்தது . நான் மெதுவாக மாதுமையை எழுப்பினேன் . பிள்ளைகளை எழுப்பி கீழே சாப்பிட வரும்படி சொல்லிவிட்டு உடுப்பை மாற்றிக்கொண்டு தங்கு விடுதி பாரிற்குச் சென்றேன் . நான் ஒரு எக்ஸ்பிறாசோவை ஓர்டர் பண்ணி எடுத்துக்கொண்டு குகனின் போன் நம்பரை எனது கைத்தொலைபேசியில் ஒற்றி எடுத்தேன் . குகனின் குரல் சிறிது நேர இடைவெளியில் கிடைத்தது.

"மச்சான் நாளைக்கு உங்கை வர கோச்சி எடுக்கிறன் . கோச்சி மத்தியானம் லியோனுக்கு வரும்" .

என்று சொன்னேன் . தான் லியோன் புகையிரத நிலையத்தில் நிற்பதாகவும் இரண்டு கிழமை லீவு நான் வருவதால் எடுத்திருப்பதாகச் சொன்னான் . நான் அவனைப் பேசியபொழுது தான் என்னுடன் கனவிசையம் கதைக்கப் போவதாகச் சொன்னான் . எனக்கு கவலையாக இருந்தது

"என்னடாப்பா ஏதாவது பிரைச்சனயே ? இல்லை மச்சான். நீயும் நானும் தனிய கதைச்சு எவ்வளவு காலம் நீ வா நேரை கதைப்பம் என்றான்.



எனக்கு மனம் என்னவோ போல் இருந்தது . ஏன் குகன் ஒருமாதிரியா கதைக்கிறான் .குடும்பத்துக்குள்ளை ஏதும் பிரைச்சனையோ ? ரூபிணியை எவ்வளவு கஸ்ரப்பட்டு சேத்து வைச்சன் . இவன் ஏன் இப்பிடி கதைக்கிறான் என்று . என் மனம் பலவாறு அலைபாய்ந்தது . அப்பொழுது எனக்கு ஒரு சிகரட் அத்தியாவசியமாக இருந்தது . நான் சிகரட்டை எடுத்துப் பற்றவைத்தவாறு மனதை மாற்ற சுற்றுப்புறத்தைப் பார்த்தேன் . பாரிஸ் நன்றாகவே மாறியிருந்தது . பழைய அமைதியைத் தொலைத்திருந்தது . ஒரே வாகன இரைச்சலாக இருந்தது . ஒருவேளை கியுபெக்கில் அமைதியான இடத்தில் இருந்தால் என்னவோ தெரியவில்லை எனக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது . ஆனாலும் நான் பசியால் வாடியபொழுது தூக்கி அணைத்த நகரமல்லவா ?

என்னை இழந்திருந்த நிலையில் பின்னாலிருந்து எனது மகளின் தொடுகை நிஜத்திற்கு கொண்டுவந்தது . மாதுமையும் மகனும் நித்திரையால் தெளிவாக இருந்தார்கள் . அவர்களிடம் பாரிஸ் ஐ பார்க்கும் ஆவல் இருந்தது .நான் நடைபயின்ற இடங்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு சுற்றிக்காட்டி நான்பட்ட கஸ்ரங்களையும் இடிக்கிடை சொன்னேன் . அன்று இரவு ஒரு நல்ல உணவகத்தில் இரவுச்சாப்பாட்டை முடித்து விட்டு தங்கும் விடுதிக்கு வந்தோம் . நாளை காலை புகையிரதம் என்பதால் வேளைக்கே படுத்து விட்டோம் . நான் மாதுமையிடம் குகனைப்பற்றி எல்லாவற்றையும் சொன்னேன் .எனது மனம் சிறிது லேசானதாக இருந்தது.

கார் து லியோன் (Gare de lyon ) புகையிரத நிலையம் காலையின் அமைதியை இழந்து காணப்பட்டது . புகையிரத நிலையம் நவீன வடிவமைப்புடன் முற்றுமுழுதாகவே மாறியிருந்தது . நான் 89களில் பார்த்த தகரக்கொட்டகை போலில்லாமல் முற்றுமுழுதாகவே கார் து லியோன் அசுர வளர்சியடைந்திருந்தது . நாங்கள் புகையிரத மேடை 6 ஐ நோக்கி மக்கள் வெள்ளத்தில் மிதந்தோம் . அங்கு பிறான்சின் வெளியிடங்களுக்குச் செல்ல ரீ ஜி வி ( T g v ) க்கள் அணிவகுத்து நின்றன . நான் ரீ ஜி வி யைப் பற்றிக் கேள்விப் பட்டாலும் இதுவே எனக்கும் குடும்பத்திற்கும் முதல் பயணம் . பிள்ளைகள் ரீ ஜி வி யைப் புதினமகப் பார்தார்கள் . நான் எங்களுக்கான பெட்டியை தேடுவதில் மும்மரமாக இருந்தேன் .



நாங்கள் ஒருவாறாகப் பலமீற்றர்கள் தூரம் நடந்து எமக்கான பெட்டியில் ஏறி அமர்ந்தோம் . உள்ளே சிறிய ரகவிமானத்திற்கான அனைத்து வசதிகளுடனும் அந்த ரெயில் இருந்தது . சிறிது நேரத்தில் எங்களைச் சுமந்து கொண்டு புகையிரதம் லியோனை நோக்கி நகரத்தொடங்கியது . கார் து லியோன் எனது பார்வையிலிருந்து சிறிது நேரத்திலேயே விடைபெற்றது . உடனடியாகவே மணிக்கு 250 கிலோமீற்றருக்கு மேல் எம்பிப் பாய்ந்த ரீ ஜி வியில் எங்களால் வெளியே ஒன்றுமே பார்க்க முடியவில்லை . எல்லாமே கோடு போட்டு இழுத்தால் போல இருந்தது .

எனக்கு குகனைப் பார்க்கப்போகின்ற எண்ணமே ஒருவித கை கால் வியர்ப்பைக் கொடுத்தது . குகனை என்னிடமிருந்து பிரித்த காலத்தின் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது . இரண்டு மணித்தியால ஓட்டத்தின் பின்பு எங்கள் புகையிரதம் லியோன் பார்தூ புகையிரதிலயத்தில் நுளைந்து கொண்டிருந்தது . புகையிரத மேடையில் ரீ ஜி வி தன்னை நிலை நிறுத்தியதும் , மக்கள் முண்டியடித்து விட்டதைப் பிடிக்க இறங்கினார்கள் . நாங்கள் எல்லோரும் இறங்க இடம் விட்டு மெதுவாகவே இறங்கி வெளியேறும் வாயிலை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

தூரத்தே எங்களைக் கண்டவுடன் குகன் ஓடிவருவது தெரிந்தது .குகன் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டான் . அவன் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் முட்டி மோதின . நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன் ,எனது கண்ணீரை மறைக்க . அவனது முகத்தில் ஒரு இனம்புரியாத சோகம் இழையோடுவதை அவதானித்தேன். நான் அதை வெளிக்காட்டாது அவன் பின்னால் சென்றேன்.

0000000000000000000000000000000

லியோன் பாரிஸ்சை விட அமைதியாக இருந்தது . நாங்கள் போகின்ற வழியில் பொதுவான கதைகளையே கதைத்துகொண்டோம் . குகன் மிக லாவகமாக தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தான் . ஊரிலேயே குகன் ஒரு வாகனப்பிரியன் . நாங்கள் சிறிது நேரத்தில் குகன் வீட்டை அடைந்தோம் . குகனின் பவியோன் விலாசமாக முன்னும் பின்னுமாகத் தோட்டத்துடன் காணப்பட்டது. குகனின் மனைவி ரூபிணி இயல்பாகவே என்னுடன் அடிக்கொருதரம் "அண்ணை " என்று உரிமையுடன் கதைத்தாள் . குகனுக்கு ஒரு மகனும் மகளுமாக இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் . மகள் குகனை உரித்து வைத்தால் போல இருந்தாள் . மகனுக்கு தனது தம்பியின் பெயரையே குகன் வைத்திருந்தான் . என்னைக் கண்டது குகனுக்கு வார்த்தையில் வடிக்க முடியாத சந்தோசமாக இருந்தது.

அன்று மாலை மாதுமை பிள்ளைகள் ரூபிணி தோட்டத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் . நான் அப்பொழுது தான் நித்திரையால் எழுந்திருந்தேன் . ரூபிணியின் பிளேன் ரீயும் ,பருத்தித்துறை வடையும் எனக்கு தூக்கக் கலக்கத்தை விரட்டியடித்தது . குகன் என்னிடம் வந்து ,

" வாவன் மச்சான் வெளீல போட்டு வருவம் "

என்றான். நான் உடுப்பை மாற்றிக்கொண்டு அவனுடன் வெளியே வந்தேன். நாங்கள் இருவரும் ஒழுங்கையால் நடந்து பிராதான வீதியிலுள்ள " பப் " க்கு வந்தோம் . எனக்கு குகனின் மௌனம் மிகவும் கவலையாகவே இருந்தது . குகன் தனக்கு தெமி ஓடர் பண்ணினான் . நான் எகஸ்பிறாசோ ஓடர் பண்ணினேன் .நான் பொறுக்கமுடியாமல் குகனிடம் கேட்டேன் ,

"என்னடாப்பா நான் என்ன உனக்கு பிறத்தியானோ ? கனடாக்கு போனப்பிறகு நீ என்னோடை சரியாய் கதைக்கிறேல .இங்கையும் நீ ஒருமாதிரி இருக்கிறாய். உனக்கு என்ன பிரச்சனை "?

என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினேன்.

குகன் தெமியை ஒரு இழுவையில் இழுக்க தெமி அரைவாசிக்கு வந்தது . குகன் தனது சேட் பொக்கற்றுக்குள் இருந்த சிகரட்டை எடுத்துப்பற்ற வைத்து புகையை ஆழ இழுத்து விட்டான் . அந்தப் புகையில் அவனது மனவெக்கை வெளிக்கிட்டதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது .

"மச்சான் எனக்கு நன்தான்ரா பிரச்சனை "

என்றான் குகன் . நான் அவனை நளினத்துடன் பார்த்தபடி,

"என்னடாப்பா இப்பத்தானே ஒரு கிளாஸ் பாய்ஞ்சது சொல்லுறதை விளப்பமாய் சொல்லு".என்றேன்.

" டேய் மச்சான் நீ என்னை விட்டிட்டு கனடா போட்டாய் . நீ இல்லாதால என்ரை வாழ்கையே தலைகீழாப் போச்சுது . நீ எனக்கு பக்கத்தில இருந்திருந்தால் சிலநேரம் எனக்கு இப்பிடியெல்லாம் நடந்திருக்குமோ தெரியாது "?

என்று சொன்ன குகனின் கண்கள் குளமாயின . குகன் இரண்டாவது தெமியை நிரப்பிக்கொண்டு வந்தான் .

"என்னமச்சான் ஏன்ராப்பா இப்பிடி கதைக்கிறாய் ?என்னெண்டாலும் எனக்குச் சொல்லு ".

"நீ போய் ஆறுமாசத்தால ரூபிணி என்னட்டை வந்திட்டா . அவாவின்ரை தமையன் ஆக்கள் இங்கை துளூசில இருக்கிறாங்கள் , உனக்கு தெரியுந்தானே ?அவங்கள் தான் ரூபிணியை கூப்பிட்டவங்கள் . அப்ப உன்ரை மட்டையோடதான் திரிஞ்சனான் . ரூபிணியின்ரை தமையன் ஆக்கள்தான் பூபலசிங்கத்தாரை பிடிச்சு வழக்கு எழுதினாங்கள் . நானும் தங்கைச்சீன்ரை பாசத்தில செய்யிறாங்கள் எண்டு ஒண்டுஞ் சொல்லைலை. ஆனால் மச்சான் அதுதான் எனக்கு வினையாப் போச்சிது . ரூபிணி எனக்கும் சொல்லாமல் தமையனாக்களோடை சேந்து என்னை " ஊரிலை காணாமல் போட்டன் " எண்டு வழக்கை பூபலசிங்கத்தாரைக் கொண்டு எழுதி ஒஃப்றாவுக்கு அனுப்பி போட்டாள் . அனுப்பி மூண்டாம் மாசமே அவளுக்கு காட் குடுத்திட்டாங்களடாப்பா . இதால எனக்கும் ரூபிணிக்கும் பிரச்சனை . என்ரை நிம்மதியெல்லாம் போட்டுது . அந்தநேரம் உன்னைத்தான் நினைப்பன் . ஆனால் உன்னோடை கதைக்க என்னவோ தெரியேல மனம்வரேலை .

நான் உண்மையில இந்தியன் ஆமியால பிரச்சனைப்பட்டு இங்க வந்து உள்ளதை சொல்லி கேட்டேன் . எனக்கு கார்ட் இல்லை .ஆனால் " புருசன் துலைஞ்சு போனார் " எண்டு பொய் சொன்னவளுக்கு கூப்பிட்டு வைச்சு காட்டை குடுத்தாங்கள் . எனக்கு மனம் விட்டுப் போச்சுடா மச்சான் . எனக்கும் கொமிசனில வழக்கு இழுபட்டு கொண்டு இருந்திது .பிள்ளையளும் வளரத் தொடங்கீட்டுதுகள் . எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல . அப்பதான் எங்கடை துளூஸ் பாலா ஒரு ஐடியா தந்தான் . தன்ரை வீட்டு அட்ரஸ்சில இன்னுமொரு விசா போடச்சொன்னான் . எனக்கும் வழிதெரியேல . நானும் என்னுமொரு விசாவை கங்காதரன் எண்ட பேரில கொஞ்சம் பொய்யும் கலந்து போட்டன். சொல்லி நாலுமாசத்தில ஒஃப்றாவில கூப்பிட்டு காட் தந்தாங்கள் மச்சான். இது எப்பெடியிருக்கு? "

என்று அழுகையுடன் சொன்னான் குகன் . நான் அவனது கதையை கேட்டுக்கொண்டே நான்காவது சிகரட்டை முடித்திருந்தேன் . குகன் மீண்டும் இருவருக்கும் தெமியும், எக்ஸபிறாசோவும் ஓடர் பண்ணினான்.

"சரியடாப்பா உனக்கு விசாப்பிரச்சனை முடிஞ்சிட்டுது தானே ? ஏன் சும்மா மண்டையை உடைக்கிறாய் ?"

என்றேன் . குகன் இருந்தால் போல் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"நீ மொன்றியல்லை நல்லா படிச்சு விரவுரையாளராய் வேலை செய்யிறாய் . என்ரை கேள்விக்கு மறுமொழி சொல்லு மச்சான் . நான் என்ரை ரூபிணிக்கும் பிள்ளைகளுக்கு ஆரடாப்பா ? சட்டப்படி ரூபிணி மனுசனை தொலைச்ச விதவை . என்ரை பிள்ளையளுக்கு அப்பா இல்லை . ஆனால் நான் கங்காதரன் எண்டபேரில என்ரை குடும்பத்தோட இருக்கிறன் . உண்மையில நான் ஆரடாப்பா ???????"

என்று ஆவேசத்துடன் தெமி கிளாசை மேசையில் அடித்து வைத்தான் குகன் . குகன் வைத்த வேகத்தில் தெமிக்கிளால் சுக்குநூறாகி உடைந்து சிதறியது , எனது மனதைப் போலவே!!!!!!!!







May 27, 2012

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம