Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 01





வணக்கம் பிள்ளையள் ,

நான் சுருக்கு சுறுகர் வந்திருக்கிறன் . உங்களிலை கனபேருக்கு என்னைப் பிடிக்காது . ஏனெண்டால் பரியாரியாரை ஆருக்குத்தான் பிடிக்கும் பாருங்கோ ?? நான் தரவாறது படு கைச்சலான குடிநீரும் சூரணமும் தான் . வருத்தம் தீரவேணுமெண்டால் குடிநீரை மிண்டித்தான் குடிக்க வேணும் . அப்ப பிள்ளையள் நாங்கள் விசையத்துக்கு வருவம் .......

தம்பி செத்து கிடக்கேக்கை ஆமி படம் எடுத்து வெளியாலை போட்டிது . சனம் எல்லாம் உது கடைஞ்செடுத்த பொய் எண்டு குளறீச்சுதுகள். இப்ப என்னடா எண்டால் , தம்பியின்ரை பெடியனின்ரை படத்தையும் ஆமிதான் எடுத்து வெளியிலை போட்டிது . எங்கடை சனம் என்னடாவெண்டால் இதையும் உண்மை எண்டெல்லோ சொல்லுகினம். ஆனால் இந்தமுறை மாறி மகிந்து குறூப் இதை வடிகட்டின பொய் எண்டு குளறுறாங்கள் . இது உண்மை எண்டால் அதுவும் உண்மை. இது பொய் எண்டால் அதுவும் பொய் எல்லோ

எனக்கு இன்னும் ஒரு விசையம் விளங்கேலை. தம்பியின்ரை மகன் கொலைசெய்யப்பட்டு கிட்டத்தட்ட நாலுவரியம் ஆகுது . இவ்வளவுகாலமும் இந்தவிசயம் சனத்தின்ரை கண்ணுக்குள்ளை எத்துப்படேலை . சனத்துக்கு வேறை சோலியள் கூட . இப்ப இருந்தாப்போலை இண்டிப்பெண்டன்ற் விசயத்தை ஏதோ இல்லாததை கண்டுபிடிச்சமாதிரி வெளியில விட , சனம் எல்லாம் சன்னதம் ஆடுதுகள் . 

என்ரை கேள்வி என்னண்டால் இவ்வளவு காலமும் சனங்களே எங்கை போனியள் ?? வெள்ளை வெளியிட்டால் தான் செய்தியோ ?? உங்கடை சன்னதங்கள் ஆரின்ரை நிகள்ச்சி நிரலை நடக்குது ?? இந்த சன்னதங்களை கொலை நடந்த உடனையே நீங்கள் செய்திருக்கவேணும் . ஏன் இப்ப செய்யிறியள் ?? இதுவும் உங்கடை சந்தர்ப்பவாதம் தானே ?? நீங்கள் அப்பப்ப உரு ஆடிறதும் பேந்து உங்கடை சோலியளை பாக்கிறதையும் பாத்து சர்வதேசம் காறித்துப்பாதோ ?? உங்களுக்கு ஆரும்தான் எல்லாம் செய்யவேணுமோ ?? உங்களுக்கெண்டு சொந்தமாய் யோசிக்கத் தெரியாதோ ?? ஒருக்காலும் என்னை துரோகி எண்டு சொல்லிபோடாதையுங்கோ . இனியாவது ஒரு கூரையிலை ஒண்டாய் வந்து பிரச்சனையளை சர்வதேசத்திட்டை சொன்னால் வழி பிறக்கும் . 

அதோடை இன்னுமொரு விசயம் சொல்லுறன் பிள்ளையள் . எங்கடை இணையப் போராளிகளுக்கு அந்த பிள்ளையின்ரை படம் கிடைச்சு போட்டுது . இனி நிண்டவன் போனவன் கண்டவன் எல்லாம் இனி ஈழம் பிடிப்பான் பாருங்கோ சொல்லிவேலையில்லை . அதோடை கலைஏறினமாதிரி கீபோட்டை அடிஅடியெண்டு அடிச்சு எழுதி கிழிப்பாங்கள் எங்கடை இணைய போராளியள் . நீங்கள் இருந்து பாருங்கோ நாளைக்கே சிங்கள தேசத்துக்கு மேலை , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருத்தபடி மல்றிபரல் அற்றாக் நடத்திற வாய்ச்சொல் வீரவானுகள் லைன்கட்டி நிப்பினம் . எவையோ எடுத்த ஆதாரத்துக்கு தாங்கள் கொப்பிறைற் கேப்பினம் . படை திரட்டி பாய்வோம் எண்டு வீடியோ கிளிப்பிலை முக்குவினம் . ரெண்டு நாள் போட்டுது எண்டால் பழையமாதிரி பெட்டிசமும் மொக்கையும் கவிதையும் போட்டு இணையத்தாலை நடக்கிற எங்கடை சனத்தின்ரை சீவியம் காய்ச்சல் தடிமனோடை தொடரும் . பேந்து திருப்பியும் எங்கையாவது லெக்சனுகள் வரேக்கை , எங்கடை பிரைச்சனைக்கு ஆதரவாய் ஆராவது தலைவர்கள் வருவினம் . 

அதாலை பிள்ளையளே முதலிலை இந்த புலத்திலை இருக்கிற அமைப்புகளை ஒரு குடையுக்குள்ளை வரவேணும் எண்டு நெருக்குவாரத்தை குடுங்கோ . அபப்ப இந்த சுருக்கு சுறுக்கன் வந்து கொண்டுதான் இருப்பான் .





February 20, 2013

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...