Skip to main content

மனமே மலர்க - பாகம் 02.





மிச்சமிருக்கும் ஆயுதம்

ஓர் இளைஞன். காட்டில் தனியே நடந்துகொண்டிருந்தான்.திடீரென்று அவன்முன்னால் ஒரு பிரம்மாண்டமான மிருகம் தோன்றியது. அவனைத் தூக்கிச் சாப்பிட முயன்றது.அந்த இளைஞன் சுதாரித்துக்கொண்டான். தன்னிடம் இருந்த வில், அம்பை எடுத்து மிருகத்தின்மீது எய்தான்.ம்ஹூம். பயன் இல்லை. அந்த மிருகத்தின் தோல் மிகத் தடிமனானது. அதில் அம்புகள் குத்திக் கீழே விழுந்தன. அடுத்து, அவன் வேலைப் பறித்து எறிந்தான். கத்தியால் வெட்டினான். கோடாரியை வீசினான். எதுவும் எடுபடவில்லை. கடைசியாக அந்த மிருகம் அவனைக் கையில் கிள்ளி எடுத்தது. அவன் அப்போதும் விடாமல் திமிறினான். மிருகம் சிரித்தது.

‘ஏன் இப்படி அலட்டிக்கறே? உன்னால என்னை எதுவும் செயமுடியாது. ஒழுங்கா எனக்கு இரையா மாறிடு. அதான் உனக்கு நல்லது!’

‘முடியாது’ என்றான் அவன். ‘என்கிட்ட எல்லா ஆயுதமும் தீர்ந்துட்டதா நினைக்கறியா? இன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கு. அது இருக்கிறமட்டும் என்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது!’ என்றான்.

‘என்ன பெரிய ஆயுதம்? அது என் தோலைத் துளைச்சுடுமா?’ கேலியாகக் கேட்டது அந்த மிருகம்.

’உன் தோல் என்ன? இந்த உலகத்தையே துளைச்சு வரக்கூடிய ஆயுதம் அது’ என்றான் அந்த இளைஞன்.

‘அதோட பேர், உண்மை!’

‘என்னது? உண்மையா?’

‘ஆமா! உண்மை மனசுல இருக்கும்வரை எந்தச் சூழ்நிலையிலும் பயம் தேவையில்லைன்னு என்னோட குருநாதர் எனக்குச் சொல்லியிருக்கார்!’

‘அப்படியா?’ ஆச்சர்யத்துடன் கேட்டது அந்த மிருகம். அவனைக் கீழே வைத்துவிட்டு வணங்கியது. ‘தயவுசெஞ்சு எனக்கும் அந்த உண்மையைச் சொல்லித்தருவியா?’

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் மனத்தைத் தளரவிடக்கூடாது, உண்மையை வழிகாட்டியாகக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகச் சொல்லப்படும் கதை!

00000000000000000000000000000000000

முப்பதுவருட மௌனம்

ஜென் துறவி ஒருவர். தீவிர மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தார்.எப்படிப்பட்ட விரதம் என்றால், அவர் முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் பேசுவார். அதுவும் ஒரு நிமிடம்தான் பேசுவார். அதன்பிறகு மீண்டும் மௌனமாகிவிடுவார்.

இன்றைக்கு, அந்த முப்பது வருடங்கள் முடியப்போகின்றன. துறவி ஒரே ஒரு நிமிடம் பேசப்போகும் நேரம் வந்துவிட்டது.அந்தத் துறவியின் ஆசிரமத்தில் ஏகப்பட்ட பக்தர்கள் வந்து குவிந்திருந்தார்கள். எல்லோரும் அவருடைய ஒரு நிமிடப் பேச்சைக் கேட்டுவிடவேண்டும் என்கிற தவிப்பில் இருந்தார்கள்.மணி நண்பகல் பன்னிரண்டு. துறவி வாயைத் திறந்தார். ‘எல்லோருக்கும் வணக்கம்!’

அவருடைய குரலை அபூர்வமாகக் கேட்ட பக்தர்கள் சிலிர்த்துப்போனார்கள். ஆனால் இப்போது உணர்ச்சிவயப்பட்டுக்கொண்டிருக்கவெல்லாம் நேரம் இல்லை. ஒரே நிமிடத்துக்குள் அவரிடம் கேட்கவேண்டியவை அனைத்தையும் கேட்டுவிடவேண்டும்.

முதல் வரிசை பக்தர் ஒருவர் கேட்டார். ‘ஸ்வாமி, நீங்கள் இப்படி மௌன விரதம் இருக்கவேண்டிய அவசியம் என்ன? எங்களிடம் பேசுவதால், சொற்பொழிவுகள் ஆற்றி உங்களது ஞானத்தைப் பகிர்ந்து கொடுப்பதால் என்ன குறைந்துவிடும்?’

துறவி சிரித்தார். ‘நான் பேசவேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எல்லாம் பேசத் தகுதியற்றவை!’ என்றார். ‘அவற்றைப் பேசிப் பிரயோஜனம் இல்லை.’

’பரவாயில்லை குருவே, நீங்கள் தகுதியுள்ளதாக நினைப்பதை, பிரயோஜனம் உள்ளவற்றைமட்டுமாவது பேசலாமே.’

‘தகுதியுள்ளவற்றை யாரும் பேசவேண்டிய அவசியம் இல்லை’ என்றார் அந்தத் துறவி. அதோடு அவரது ஒரு நிமிடப் பேச்சு முடிந்தது. முப்பது வருட மௌனம் தொடங்கியது.


00000000000000000000000000000000000000000

இதற்கு முன்னால..................

ஜென் மாஸ்டர் ஒருவர். புதிய ஆசிரமம் ஒன்றைத் திறந்துவைப்பதற்காக ரயிலில் புறப்பட்டு வந்திருந்தார். அவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக விழாக் கமிட்டித் தலைவரே நேரில் வந்திருந்தார். மாஸ்டர் காரில் ஏறி உட்கார்ந்தார். ஏஸியை ஆன் செய்துவிட்டு வண்டியை ஓட்டத் தொடங்கினார் டிரைவர்.

இப்போது விழாக் கமிட்டித் தலைவர் பேச ஆரம்பித்தார். ‘நீங்க இங்கே வந்ததும், இந்த ஆசிரமத் தொடக்க விழாவில கலந்துக்கறதும் எங்களுக்கு ரொம்பப் பெரிய பெருமை!’மாஸ்டர் அதற்குப் பதில் சொல்வதற்குள் சாலையில் ஒரு பைக் குறுக்கே வந்தது. சடன் ப்ரேக் அடித்துக் காரை நிறுத்தினார் டிரைவர்.உடனே, விழாக் கமிட்டித் தலைவர் முகத்தில் எரிச்சல்.

‘இவனுங்கல்லாம் ரோட்ல வண்டி ஓட்டலை-ன்னு யார் அழுதாங்க?’ என்று கோபத்தோடு கத்தினார்.

ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘இது உங்களோட சொந்தக் காரா?’ என்றார்.

‘ஆமா சாமி, ஏன் கேட்கறீங்க?’

‘இதுக்கு முன்னாடி நீங்க என்ன வண்டி வெச்சிருந்தீங்க?’

அவர் கொஞ்சம் யோசித்து ஓர் இருசக்கர வாகனத்தின் பெயரைச் சொன்னார். அதைக் கேட்ட ஜென் மாஸ்டர் மீண்டும் சிரித்தார்.

‘மனுஷனோட மனசு ரொம்ப விசித்திரமானதுதான். இல்லையா?’

‘என்ன சாமி சொல்றீங்க? ஒண்ணும் புரியலையே!’

மாஸ்டர் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். ‘எங்க ஊர்ல ஒரு கறுப்பன், அவனுக்குச் செவப்பாகணும்ன்னு ஆசை. ஏதோ ஒரு க்ரீமைப் பூசிகிட்டானாம். செக்கச்செவேல்ன்னு வெளுத்துட்டானாம்!’ ’அவன் நேரா தன் மனைவிகிட்ட ஓடினான். அடியே, நீயும் இந்த க்ரீமைப் பூசிக்கோ, என்னைமாதிரி சிவப்பா மாறிடலாம்-ன்னு சொன்னானாம். ஆனா அவ அதுக்கு ஒப்புக்கலை. நான் கறுப்பாவே இருந்துடறேன், அதுதான் எனக்கு விருப்பம்-ன்னு சொன்னாளாம்!’ ‘அதுக்கு அந்த ஆள் சொன்னானாம். ‘ச்சே, இந்தக் கறுப்பனுங்களே இப்படிதான், எங்களைமாதிரி செவப்பானவங்க சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கும்ன்னு யோசிக்கமாட்டாங்க, இவங்களுக்குப் புத்தியே கிடையாது’ன்னு!’

கதையைச் சொல்லி முடித்த மாஸ்டர் விழாக் கமிட்டித் தலைவரைப் புன்னகையோடு பார்த்தார்.‘அதான் சொன்னேன், மனுஷ மனம் ரொம்ப விசித்திரமானது, ஒரு நிலையிலேர்ந்து இன்னொரு நிலைக்கு ஏறினதுமே, முந்தின நிலை மோசமானதுன்னு நினைக்க ஆரம்பிச்சுடுது, அதுல இருக்கறவங்களையெல்லாம் இழிவாப் பார்க்கத் தொடங்கிடுது, அரை நிமிஷம் முன்னாடி நாமும் அங்கதான் இருந்தோம்-ன்னு நினைக்கறதில்லை!’

0000000000000000000000000000000000000000000

அடியில் இருப்பது

ஓர் ஆறு. அதன் இரு கரைகளிலும் இரண்டு கிராமங்கள்.அந்த ஆற்றில் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் தண்ணீர் அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும். அதைச் சமாளித்து நீந்தி அடுத்த கரைக்குச் செல்வது மிகவும் சிரமம். இதனால் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த ஆபத்தான முயற்சியில் இறங்கவில்லை. அவரவர் தங்களுடைய சொந்தக் கிராமத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். அடுத்த கிராமத்துடன் உறவும் இல்லை, விரோதமும் இல்லை என்கிற நிலைமை.ஒருநாள் வலது கரைக் கிராமத்துக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். அவர் ஆற்றங்கரையில் நின்றபடி இடது கரைக் கிராமத்தைப் பார்த்தார்.

‘நான் அங்கே போகணுமே!’ என்றார்.

'அது சாத்தியமில்லை சாமி’ என்று பதில் வந்தது.

'இந்த ஆத்துல நீச்சலடிக்கறது தற்கொலைக்குச் சமம்!’

அந்த ஜென் துறவி அதனை ஏற்கவில்லை. ‘ஆற்றைக் காரணம் காட்டி நீங்கள் பிரிந்திருப்பது சரியல்ல. நீங்கள் ஏன் ஒரு பாலம் கட்டக்கூடாது?’ என்றார்.

‘அடப் போங்க சாமி, நீச்சலுக்கே வழியில்லை, பாலம் எப்படிக் கட்டமுடியும்?’

‘நிச்சயமா முடியும். நான் உங்களுக்கு உதவறேன்’ என்றார் அவர். அந்தக் கிராமத்திலிருந்த இளைஞர்கள் நூறு பேரைத் திரட்டிக்கொண்டு வேலையைத் தொடங்கினார்.

அடுத்த பல நாள்கள் ராப்பகலாக வேலை நடந்தது. வெயிலிலும் மழையிலும் அவதிப்பட்டு எப்படியோ அவர்கள் பாலத்தைக் கட்டி முடித்துவிட்டார்கள். இப்போது இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கரைக்கும் அந்தக் கரைக்கும் போய்வரமுடிந்தது. கல்வி, வேலை தேடுவது, திருமணத்துக்குப் பெண் எடுப்பது என்பதுபோன்ற நல்ல உறவுகள் ஏற்பட்டன. இதனால் அந்த இரு கிராமங்களின் மக்களும் சேர்ந்து அந்த ஜென் துறவியைச் சந்தித்தார்கள்.

‘நாங்க எல்லாரும் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த முடிவெடுத்திருக்கோம்!’ என்றார்கள்.

‘வேண்டாம்’ என்றார் அந்தத் துறவி. ’இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு இருவகையான கற்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நீங்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது பாலத்தின் சிமென்ட் கற்கள்மட்டும்தான் உங்கள் கண்ணுக்குத் தெரியும். ஆனால் மறைமுகமாக அந்தப் பாலத்தைத் தாங்கி நிற்பது ஆற்றுக்குள் அஸ்திவாரமாகப் போட்டிருக்கும் பாறாங்கற்கள்தான்.’

‘அது சரி சாமி. அதுக்கும் நீங்க பாராட்டு விழா வேணாம்ன்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?’

‘வெளியே தெரியாமல் தங்களுடைய வேலையைச் செய்துகொண்டிருக்கும் அந்தப் பாறாங்கற்களைப்போல்தான் நானும் இருக்க விரும்புகிறேன். எனக்கு எந்த விளம்பரமோ பாராட்டோ தேவையில்லை’ என்றார் துறவி.

0000000000000000000000000000000000000

பசுவா ?? பன்றியா ??

’என் சொத்துகளையெல்லாம் தர்மத்துக்குக் கொடுத்துவிடப்போகிறேன்!’ என்றான் ஒரு பெரிய பணக்காரன்.

‘எப்போது?’ என்று கேட்டார் அவனுடைய குருநாதர்.

‘இதென்ன கேள்வி? என் காலத்துக்குப்பிறகுதான்!’ என்றான் அந்தப் பணக்காரன். ‘ஏற்கெனவே உயிலெல்லாம் எழுதிவைத்துவிட்டேன். எனக்குப்பின் இந்தச் சொத்துகள் எல்லாம் ஏழை எளிய மக்களின் நன்மைக்குப் பயன்படும்.’

‘ஓஹோ! சரி!’

’வெறும் சரிதானா? இவ்வளவு பெரிய தர்மம் செய்கிறேன். என்னை இன்னும் நாலு வார்த்தை பாராட்டக்கூடாதா?’

‘நீ பசுவாக இருந்தால் பாராட்டலாம். பன்றியாக இருக்கிறாயே!’

‘என்னது? பன்றியா? அது எப்படி?’

‘பசு உயிரோடு இருக்கும்போதே நிறையப் பாலை அள்ளித்தருகிறது. ஆனால் பன்றி, இறந்தபிறகுதான் தன்னுடைய மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறது. பசு தரும் பாலின் மதிப்பைவிடப் பன்றி இறைச்சியின் மதிப்பு அதிகமாக இருந்தாலும், உயிரோடு இருக்கும்போதே தருவதற்கு ஒரு மனம் வேண்டுமல்லவா?’

‘உண்மைதான். எனக்கு அந்த மனம் வரவில்லையே. என்ன செய்ய?’

’நமக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை என்று நினைக்கச் சொல்கிறது ஜென். என் வீடு, என் குடும்பம், என் பணம், என் கார், என் கம்ப்யூட்டர், என் புத்தகம் என்று நாம் நினைப்பது எல்லாமே உண்மையில் வேறு யாருடையதோ. நாம் அவற்றுக்கு நிஜமான சொந்தக்காரர்கள் இல்லை, வெறும் வாடகைக்காரர்கள்தான். அவற்றைத் தாற்காலிகமாகச் சொந்தம் கொண்டாடுகிறோம். எந்த விநாடியிலும் அது நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிடலாம் என்பது புரிந்தால், அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கிடக்கமாட்டோம்!’

‘ஏன் இப்படிப் பயமுறுத்தறீங்க?’

‘பயமுறுத்துவது என் நோக்கம் இல்லை. சாதாரணப் பொருள்களின்மீது அளவுக்கு அதிகமான ஒட்டுதல் ஏற்படுத்திக்கொள்ளாமல் மனிதர்களோடு செலவிடும் நேரத்தை மதிக்கப் பழகு. உன்னுடைய வாழ்க்கைக் கண்ணோட்டமே மாறிவிடும்!’

000000000000000000000000000000000000

சுவைத்தல்

ஜென் சிந்தனையாளர் ஒருவருடைய வீடு. அங்கே நான்கைந்து மாணவர்கள் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். தினந்தோறும் ராத்திரிச் சாப்பாடு முடிந்தவுடன் அவர்களுக்கு ஒரு ஸ்பூன் தேன் வழங்கப்படும். அதைக் குடித்துவிட்டுதான் கை கழுவவேண்டும்.அன்றைக்குத் தேன் குடித்த மாணவன் ஒருவன் முகம் அஷ்டகோணலாக மாறியது. ‘த்தூ, த்தூ! ஒரே கசப்பு!’ என்றான் அவன்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு மாணவனுக்குக் கோபம். ‘உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்று கத்தினான். ‘தேன் அற்புதமா இனிக்குது. அதைப்போய்க் கசப்புன்னு சொல்றியே!’

‘இல்லை. இந்தத் தேன் கசக்குது!’

‘இல்லவே இல்லை. இனிக்குது!’

அவர்கள் கைகூடக் கழுவாமல் தங்களுடைய குருநாதரிடம் ஓடினார்கள். ‘ஐயா, எங்களுக்குள்ள ஒரு சின்னச் சண்டை. நீங்கதான் தீர்த்துவைக்கணும்’ என்றார்கள்.

‘என்ன சண்டை?’

’இன்னிக்குச் சாப்பாட்டோட பரிமாறின தேன் இனிக்குதுன்னு நான் சொல்றேன். கசக்குது-ன்னு இவன் சொல்றான். எங்கள்ல யார் சொல்றது சரி?’

’ரெண்டுபேர் சொல்றதும் சரிதான்!’ என்றார் குருநாதர்.

‘அது எப்படி முடியும்? நீங்க தேனைக் குடிச்சுப் பார்க்காமலே தீர்ப்புச் சொல்றீங்களே!’

’அவனுக்குத் தேன் இனிக்கிறது. உனக்கு அது கசக்கிறது. எனக்கு அது புளிக்கலாம், அல்லது காரமாகக்கூட இருக்கலாம். அவரவர் சுவை அவரவர்க்கு’ என்று புன்னகைத்தார் குருநாதர். ‘சுவைப்பதுதான் முக்கியம். உங்கள் சுவை அடுத்தவர்களோடு ஒத்துப்போகிறதா என்பதுபற்றி யோசித்துக் கவலைப்படாதீர்கள்!’

000000000000000000000000000000000000000

வேர்

யோக்கா என்பவர் ஜென் ஞானி. அவரிடம் பல சிஷ்யர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.

ஒருநாள், பெரிய வியாபாரி ஒருவன் யோக்காவைப் பார்க்க வந்தான். ‘நான் உங்களிடம் சீடனாகச் சேரவேண்டும்’ என்றான்.

யோக்கா அவனை மேலும் கீழும் பார்த்தார். ‘நீ பெரிய பகட்டுக்காரனாக இருக்கிறாயே. எங்கள் ஆசிரமத்தின் எளிமையான வாழ்க்கைமுறை உனக்கு ஒத்துவருமா? எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு எளிய துறவியாக வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயம். அது உன்னால் முடியுமா?’ என்றார்.

’நிச்சயமாக’ என்றான் அவன்.

‘நான் இன்றைக்கே இந்தப் பட்டுத் துணிகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் கைத்தறித் துணிகளைக் கட்டிக்கொள்கிறேன். எளிமையாகச் சாப்பிட்டுப் பழகுகிறேன். என்னுடைய சொத்துகளையெல்லாம் தர்மத்துக்கு எழுதிவைத்துவிடுகிறேன். நீங்கள் எதிர்பார்க்கும்படி நடந்துகொள்கிறேன். எனக்கு ஞானம்மட்டும் கிடைத்தால் போதும்!’

அப்போதும் யோக்காவுக்கு முழுத் திருப்தி வரவில்லை. ‘பார்க்கலாம்!’ என்றார். ‘நான் உன்னைச் சில நாள்கள் கவனித்துப் பார்த்து முடிவு செய்கிறேன்!’ அன்று தொடங்கி அந்த வியாபாரி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினான். அவன் சொன்னபடி மிகவும் எளிமையானமுறையில் வாழத் தொடங்கினான். பத்து நாள் கழித்து யோக்கா அவனை அழைத்தார். ‘தம்பி, உனக்கு இந்த ஆசிரம வாழ்க்கை சரிப்படாது. நீ வீட்டுக்குப் போகலாம்!’ என்றார்.

‘என்ன குருவே இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? நான் உங்களுக்காகப் பணத்தைத் துறந்தேன், சொத்துசுகத்தையெல்லாம் துறந்தேன், வசதியான வாழ்க்கையைத் துறந்தேன். இது போதாதா?’

யோக்கா சிரித்தார். ‘நான் வேரை அறுக்கச் சொன்னேன். நீ சில கிளைகளையும் இலைகளையும் கத்தரித்துவிட்டு அதைப்பற்றிப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறாய்!’ என்றார்.

000000000000000000000000000000000000000000

மாவீரனின் கடைசி ஆசைகள்

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

"என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார். அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள். அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

0000000000000000000000000000000000000000

போகுமிடம்

கடைத்தெரு. எதிரெதிரே நடந்துவந்த இரண்டு ஜென் துறவிகள் சந்தித்துக்கொண்டார்கள்.முதல் துறவி கேட்டார்.

‘ஐயா, வணக்கம். நலம்தானே? எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

’இந்தக் காற்று என்னை எங்கே அழைத்துச்செல்கிறதோ, அங்கே செல்கிறேன்’ என்றார் இரண்டாவது துறவி.

அன்றுமுழுவதும் முதல் துறவி இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். அந்த இன்னொரு துறவியை மடக்கும்படி ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.கடைசியாக, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘ஒருவேளை காற்றே இல்லாவிட்டால்? அப்போது என்ன செய்வீர்கள்?’

இந்தக் கேள்வியை மனப்பாடம் செய்துகொண்டு மறுநாள் அதே கடைத்தெருவுக்குச் சென்றார் இவர். அதே துறவியைச் சந்தித்தார். அதே கேள்வியைக் கேட்டார்.

‘எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

‘என்னுடைய கால்கள் என்னை எங்கே அழைத்துச்செல்கின்றனவோ, அங்கே செல்கிறேன்’ என்றார் இரண்டாவது துறவி.

அவ்வளவுதான். முதல் துறவிக்குக் கை காலெல்லாம் உதறிவிட்டது. அவர் நாள்முழுக்கக் கஷ்டப்பட்டு யோசித்துவைத்திருந்த கேள்வி பயன்படாமல் போய்விட்டது. வருத்தத்துடன் தன்னுடைய ஆசிரமத்துக்குத் திரும்பினார். மீண்டும் யோசிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக, அவருக்கு இன்னொரு நல்ல கேள்வி மாட்டியது.

‘ஒருவேளை உங்களுக்குக் காலே இல்லாவிட்டால்? அப்போது எங்கே செல்வீர்கள்?‘

மறுபடியும் இந்தப் புதுக் கேள்வியை மனப்பாடம் செய்துகொண்டு அவர் கடைத்தெருவுக்குச் சென்றார். அதே துறவியைச் சந்தித்தார். அதே கேள்வியைக் கேட்டார்.

‘எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

அவர் அமைதியாக பதில் சொன்னார். ‘நந்தவனத்துக்குப் பூப்பறிக்கச் செல்கிறேன்!’

நாம் எத்தனை யோசித்து நம்மைத் தயார் செய்துகொண்டால் என்ன? அதைவிட அதிவேகத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அந்த நீரோட்டத்துடன் மிதந்து செல்லப் பழகிக்கொள்ளாவிட்டால், தேவையில்லாத முன்தயாரிப்புகளிலேயே நம் வாழ்க்கை வீணாகிவிடும்!

0000000000000000000000000000000000

ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தால்...?

ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.

பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆவாய்" என்றது. அவன் அரசனாகி விட்டான்.

முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான். அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கி விடு" என்றான்.

தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.

அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை.

"தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது. ஆகையால் என்னை மேகமாக்கி விடு"

என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.

பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்தப் பாறையை அசைக்கவே முடியவில்லை.

"தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்தி வாய்ந்தது எனவே என்னை பாறையாக்கி விடு" என்றான்.

தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் பாறையாகி விட்டான்.

கர்வத்தோடு அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்தப் பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது.

"தெய்வமே பாறையை விடக் கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு.” என்றான்.

தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விட்டான்.

கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும். ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி. ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.

0000000000000000000000000000000000000000000000

நூறு சட்டைகள்

அந்தக் காலத்தில் உதயணன் என்று ஓர் அரசன். அவனைச் சந்திப்பதற்காக ஒரு ஜென் துறவி வந்திருந்தார். உதயணன் முறைப்படி முனிவரை வணங்கி உபசரித்தான்.

‘ஐயா, தங்களுக்குச் சேவை செய்யும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்குங்கள்’ என்றான்.

‘உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் கேளுங்கள். உடனே தருகிறேன்!’

அரசன் இப்படிக் கேட்டதும் அந்தத் துறவி ஒரு நிமிடம்கூட யோசிக்கவில்லை. ‘எனக்கு நூறு சட்டைகள் வேண்டும்’ என்றார்.

அரசனுக்கு ஆச்சர்யம். அதை மறைத்துக் கொண்டு’முனிவர் பெருமானே, நீங்கள் கேட்டபடி நூறு சட்டைகளைத் தருவதற்கு உடனே ஏற்பாடு செய்கிறேன்’ என்றான். ’ஆனால், என்னுடைய ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைப்பீர்களா?’

‘என்ன சந்தேகம்? தயங்காமல் சொல்லப்பா!’

‘நீங்களோ துறவி. உங்களுக்கு எதற்கு நூறு சட்டைகள்?’

முனிவர் சிரித்தார். ‘இவையெல்லாம் எனக்கில்லை. என்னுடைய ஆசிரமத்தில் இருக்கும் சீடர்களுக்காக!’

‘அப்படியானால் அவர்களுடைய பழைய சட்டைகளை என்ன செய்வீர்கள்?’

‘அவற்றைக் கிழித்துத் தைத்துப் படுக்கை விரிப்புகளாக மாற்றிவிடுவோம்!’

‘அப்படியானால் அந்தப் பழைய படுக்கை விரிப்புகளை என்ன செய்வீர்கள்?’

‘அவற்றைக் கிழித்துத் தைத்துத் தரை துடைக்கப் பயன்படுத்திக்கொள்வோம்!’

‘அப்படியானால் அந்தப் பழைய தரை துடைக்கும் துணிகளை என்ன செய்வீர்கள்?’

‘அவற்றை அரைத்துச் சேற்றோடு கலந்து சுவற்றில் பூசுவோம். அவை எங்களுடைய ஆசிரமச் சுவர்களுக்குப் பலம் தரும்!’

அரசன் உதயணன் முனிவருடைய கால்களில் விழுந்தான். ‘இந்தப் பூமியில் எதுவுமே வீணாவதில்லை, எல்லாமே பயனுடையதுதான் என்கிற பெரிய தத்துவத்தை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். நன்றி ஐயா’ என்றான்.

ஜென் துறவி மெல்லமாகச் சிரித்தார். ‘நமக்கு உரிமையானது என்று இந்த மண்ணில் எதுவுமே இல்லை அரசனே, எல்லாமே தாற்காலிகமாக நாம் வைத்திருக்க, பயன்படுத்தத் தரப்படுவதுதான். இதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உன்னை எந்தத் துயரமும் பாதிக்காது!’ என்று ஆசி வழங்கினார்.

000000000000000000000000000000000000000000

மனம் நிறைவடையாதது ஏன்?

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை. அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான். இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

ஞானி சொன்னார், ''நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.'' திருடனும் திருந்தினான்.

000000000000000000000000000000000000000000000

குரங்கு

அந்தக் கல்லூரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம். மாணவர்கள் எல்லோருக்காகவும் ‘புதையல் வேட்டை’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

’நம்ம காலேஜ்ல வெவ்வேற இடங்கள்ல நாலு பானைகளைப் புதைச்சுவெச்சிருக்கோம். அந்தப் பானைகள் ஒவ்வொண்ணுக்குள்ளயும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் இருக்கு’ என்று அறிவித்தார் ப்ரின்சிபால். ‘நாங்க கொடுத்திருக்கிற குறிப்புகளை வெச்சு நீங்க அந்தப் பானைகளைக் கண்டுபிடிக்கணும். அப்படிக் கண்டுபிடிச்சுட்டா அந்தப் பரிசுகள் உங்களுக்குதான்!’

மாணவர்கள் உற்சாகமானார்கள். குறிப்புகளைப் படித்துவிட்டுத் திசைக்கு ஒருவராக ஓடினார்கள். எதையெதையோ புரட்டிப் போட்டுத் தேட ஆரம்பித்தார்கள். பத்தரை மணியளவில் ஒரு பையன் முதல் பானையைக் கண்டுபிடித்துவிட்டான். மதியச் சாப்பாட்டு நேரத்தில் இன்னொரு பையன் இரண்டாவது பானையைத் தோண்டி எடுத்தான். மாலை நான்கு மணிக்கு ஒரு பெண் மூன்றாவது பானையைக் கண்டுபிடித்தாள். ஆனால் அந்த நான்காவது பானைதான் யாருக்கும் அகப்படவில்லை. சில நூறு பேர் பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

இப்படி ஒருபக்கம் மாணவர்கள் பானை தேடிக்கொண்டிருந்தபோது, இந்தப் புதையல் வேட்டையில் ஆர்வமே இல்லாத சில ஜந்துக்களும் இருந்தார்கள். அவர்கள் விடுமுறையை வீணடிக்க விரும்பாமல் நன்றாகக் குரட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு கும்பகர்ணன் மாலை மங்கிப் பொழுது இருட்டும்வரை உறங்கினான். அப்புறம் மனமே இல்லாமல் எழுந்தான். முகத்தைக் கழுவிக்கொண்டு கேன்ட்டீனில் டீ சாப்பிடச் சென்றான்.

டீ குடிப்பதற்கு முன்னால் வாயைக் கொப்புளித்துத் துப்புவது அவனுடைய பழக்கம். அப்படித் துப்பச் சென்ற இடத்தில் அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது. இடறிப் பார்த்தால், பானை. குஷியான அவன் முழுப் பானையையும் தோண்டி எடுத்தான். உள்ளே புதையல் பரிசுகள். ஐபாட் ஒன்று, மொபைல் ஃபோன் ஒன்று, ஏழெட்டு சினிமா டிக்கெட்கள்.

இதைப் பார்த்த அவனது நண்பர்கள் துள்ளுக் குதித்தார்கள்.

‘நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான், போட்டியில கலந்துக்காமயே ஜெயிச்சுட்டியே!’

அவன் சலித்துக்கொண்டான். ‘ம்ஹூம், நான் பெரிய துரதிருஷ்டசாலி!’

‘என்னய்யா சொல்றே?’

‘இவ்ளோ நேரம் தூங்காம சீக்கிரமாவே எழுந்திருந்தேன்னா, இதுவரைக்கும் நாலு டீ குடிச்சிருப்பேன், நாலு பானையும் எனக்கே கிடைச்சிருக்கும்!’

கட்டுப்பாடில்லாமல் துள்ளி ஓடுகிற மனத்தைக் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள். பேராசை, கிடைத்ததை எண்ணித் திருப்தி அடையாமை, உழைக்காமல் பலனுக்கு ஆசைப்படுவது போன்ற குணங்கள் அந்தக் குரங்கு மனத்தின் அடையாளம். ஜென் சிந்தனையும் தியானமும்தான் மனக் குரங்கை அமைதிப்படுத்தி ஒழுங்குக்குக் கொண்டுவருகின்றன.

0000000000000000000000000000000

துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்?

பசி தாங்க முடியாத இரண்டு எலிகள் தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அந்தப் பானை உயரமானதாக இருந்ததால் பாலைக் குடிக்க முடியாமல் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது என்றும், அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின. அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது:

"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மேலே இருந்த எலி மிரண்டு போய் பால் பானைக்குள் விழுந்து விட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் இந்தப் பானையிலிருக்கும் பால் அனைத்தும்" என்று நினைத்தது.

பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது. பால் பானைக்குள் விழுந்த எலி மேலே ஏறி வர முடியாமல் உயிரை விட்டது.

இப்படித்தான் துன்பத்திலிருந்து விடுபட ஒருவருக்குப் பிறரின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. ஆனால் அது சரியாக இல்லா விட்டால் இருவருக்குமே ஆபத்தாகி விடுகிறது.

00000000000000000000000000000000000000000000000

பயணிகள் ரசனைக்கு

விவசாயி ஒருவர். அவருடைய நிலத்தில் ஏகப்பட்ட தென்னை மரங்கள் இருந்தன. அவற்றில் விளைந்த தேங்காய்களைப் பறித்து வண்டியில் ஏற்றினார். சற்றுத் தொலைவிலிருந்த சந்தைக்குக் கிளம்பினார். ஊர் எல்லையை நெருங்கியபிறகு திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம். ‘சந்தை எவ்வளவு தொலைவில் இருக்கிறது? அங்கே போய்ச் சேர்வதற்கு எவ்வளவு நேரமாகும்?’ விவசாயி சுற்றிலும் பார்த்தார். மனித நடமாட்டமே இல்லை. கொஞ்சதூரத்தில் ஒரு சுமைதாங்கிக் கல்லின்மீது சம்மணம் போட்டு அமர்ந்திருந்த ஒரு சாமியார்மட்டும்தான் தென்பட்டார்.

வண்டியை விரட்டிய விவசாயி அந்தச் சாமியாரை நெருங்கினார்.

‘ஐயா, இங்கிருந்து சந்தைக்குப் போறதுக்கு எவ்வளவு நேரமாகும்?’

’மெதுவா வண்டியை ஓட்டினா பத்து நிமிஷமாகும்’ என்றார் சாமியார். ‘வேகமா ஓட்டினா ஒரு மணி நேரமாகும்!’

’ஏன் சாமி கிண்டலடிக்கறீங்க?’ என்று சிரித்தார் விவசாயி. ’வண்டியை வேகமா ஓட்டினா ரொம்பச் சீக்கிரமா சந்தைக்குப் போய்ச் சேர்ந்துடலாமே!’

’ம்ஹூம். இல்லை’ என்றார் சாமியார். ‘நீ வண்டியை மெதுவா ஓட்டினாதான் சீக்கிரமாப் போய்ச் சேரமுடியும். அப்புறம் உன் இஷ்டம்.’

விவசாயி யோசித்தார். ‘சாமியார் ஏதோ கேனத்தனமா உளர்றார்’ என்று முடிவெடுத்தார். சாட்டையைச் சொடுக்கி வண்டியை வேகமாக ஓட்டினார். ஆனால் சந்தைக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமானதாக, கரடுமுரடாக இருந்தது. அதில் அவருடைய வண்டி வேகமாகச் சென்றபோது தேங்காய்கள் அடிக்கடி குதித்துக் கீழே விழுந்தன. அவற்றையெல்லாம் எடுத்துப் போட்டுக்கொண்டு சந்தையை நெருங்குவதற்குச் சுத்தமாக ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நொந்து நூலாகி விவசாயி அங்கே சென்று சேர்ந்தபோது, சாமியார் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

‘என்னப்பா? வேகமா வந்தியா? மெதுவா வந்தியா? எது சீக்கிரம்?’ என்று விசாரித்தார்.

’இந்தக் கணத்தை வாழ்தல்’ என்ற ஜென் அடிப்படைக்கு வேகமும் அவசரமும் சரிப்படாது. அடுத்த கட்டம் என்ன, இலக்கு என்ன என்பதையெல்லாம் யோசிக்காமல் இந்த விநாடியில் கவனம் செலுத்தி வாழ்வது ஒரு தனி அனுபவம். அது நம்மால் முடியாவிட்டாலும்கூட, பயண நேரத்தின்போது அவசரப்படாமல், அங்கே சென்றுசேர்ந்தபிறகு என்ன செய்யப்போகிறோம் என்கிற சிந்தனையில் மூழ்காமல் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் நம்மால் பயணத்தை ரசிக்கமுடியாமலே போய்விடும்!

000000000000000000000000000000000000

நம்மால் நாலு பேருக்கு மகிழ்ச்சி.

நாங்கள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு அவரவர் இடத்தில் இருப்போம். எங்களைப் பார்க்க யாரவது வருவார்கள். எங்களில் இருந்து யாரையாவது பிடித்து விட்டால் அவர்களிடம் போய் விடுவார்கள். போகிறவர்கள் எங்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு மௌனமாய் போவார்கள்.

அன்று நான் மிகவும் ஏங்கிய வண்ணம் இருந்தேன். வாசலில் ஆஜானுபாகுவாய் சிவந்த நிறத்துடன் ஒருவர் வந்தார். கண்களை எங்கள் மேல் ஓட விட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகு. வேவ்வேறு திறமை உள்ளவர்கள். யார் யாரைக் கவருவோம் என்பது நேரம் அல்லது வருவோரின் தேவையைப் பொறுத்தது. பொதுவாக நாங்கள் மயக்குவோம். மற்றவர்கள் மயங்குவார்கள்.

இன்று வந்தவர் சாதுர்யமான பேச்சாற்றல் உள்ளவர் போலும். சிரித்த முகம். நெற்றியில் வெண்ணீறு அணிந்து, நடுவில் சந்தனப் பொட்டு. அழகாய் பார்ப்பவர்க்கு அசந்து போகும் ஒரு முகம். அவர் பார்வை என் மீது பட நான் இறைவனை வேண்டினேன். என் முனகல் சத்தம் உங்களுக்கு கேட்க நியாயமில்லை.

என் பிரார்த்தனை வீண் போகவில்லை. அந்த மனிதர் என்னை நோக்கி வந்தார். என்னை ஏற இறங்கப் பார்த்தார். லேசாக விரல் நுனியால் தொட்டார். என் நளின நரம்புகள்; சிலிர்க்க லேசாக வெட்கத்தில் முனகினேன். அதை ரசித்த வண்ணம் எங்கள் போஷகரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பணம் கைமாற அவர் வந்த ஆட்டோவில் அவருடன் பயணமானேன்.

வழியில் தொடாமலே மலரந்தேன். பள்ள மேடுகள் காரணமாக அதிர்வு தாளாமல் நான் சரிய அவர் என்னை லாவகமாய் பிடிக்க என் உள்ளுக்குள் ஓராயிரம் கீதம்.

நான் என் புதிய வாழ்க்கையைப் புதிய இடத்தில் தொடங்கப் போகிறேன்.

அவர் என்னை அணைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றார். அங்கிருந்த ஊஞ்சலில் என்னைக் கிடத்தினார்.

வீட்டீல் பெரியவர் சிறியவர் எல்லோரும் என்னை விசித்திரமாய்ப் பார்த்தார்கள்.

எனக்கோ பயமும் கூச்சமும்.

“அம்மா” என்றார்.

அப்போது அந்த வயதான பெண்மணி எனக்கும் மஞ்சள் குங்குமம் இட்டு.

“ராசகோபாலா ஹம்சத்தொனியில் பிள்ளையார் கீதம் வாசிடா இந்த வீணையில்” என்றார்.

அவ்வளவுதான் அவர் என்னை மடியில் கிடத்திக் கொண்டு ஆனந்தமாய் என்னை வருட நான் இசையாய் மழை பொழியத் தொடங்கினேன். என் இசையில் அந்த வீடு பக்தியுடன் மகிழ்ச்சியில் மூழ்கியது.

கடையில் பார்வைப் பொருளாய் அவ்வப்போது சிலரின் சீண்டலுக்கு உள்ளான எனக்கும் இப்போது மகிழ்ச்சிதான். நம்மாலும் நாலு பேரை மகிழ்ச்சி அடையச் செய்ய முடிகிறது.


February 23, 2013

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம