Skip to main content

நெருடிய நெருஞ்சி-12







பஸ்சின் வேகம் குறைந்ததால் வடிவாக முகமாலை படைமுகாம் கண்முன்னே விரிந்தது. வீதியின் ஆரம்பத்தில் பலமான மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட காவலரண்களுடன் கூடிய மந்திகளும், அதனைத் தொடர்ந்த மேலதிகாரிகளின் குடியிருப்புகளும், பின்பு வந்த படைத்தளத்தின் கம்பீரமும், அடிவயிற்ரை சில்லிடச் செய்தது. இந்தப் படைமுகாம் யாழ்ப்பாணத்திற்கு நுளையும் முதலாவது முன்னரங்கக் காவலரண் பகுதியாகும். இந்தபடைமுகாமை பற்றிப் பல கதைகள் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இதில் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்பியதில்லை அமெரிக்காவின் குவான்ட்தமொனோ ( QUANTAMONO )சித்திரவதைக்கூடத்திற்கு இணையான இந்தப் படைமுகாமில் , இரவில் பலபெண்களின் அலறல் சத்தம் பலரது நித்திரையைக் கலைத்தது. மறுநாள் அடையாளம் காணப்படாத உடலங்கள் படைமுகாமைச் சுற்றிய சுற்றாடலில் கிடைக்கும். பஸ்சினுள் திரும்பி மற்றயவர்களின் முகத்தைப் பார்த்தேன் ஒருவரது முகத்திலும் எந்தவித சலனத்தையும் காணமுடியவில்லை. எல்லோரும் தங்களது அலுவல்களில் இருந்தார்கள். இவர்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டதோ? எனக்குத்தான் இதெல்லாம் புதிதாக இருந்து அலப்பல் பண்ணுகின்றனோ? பஸ் முகாமைக் கடந்து வேகமெடுத்தது. வீதியின் இருமருங்கிலும் கற்பிழந்த தென்னைகளிடையே எமது பாரம்பரிய கல்வீடுகள் வரத்தொடங்கின. பல வீடுகள் குரோட்டன்கள், கமுகு மரங்கள், மயில்க்கொன்றை மரங்கள், அலரி மரங்கள், என்று செளிப்பாகவும், சிலவீடுகள் பாழடைந்த நிலையிலும் காணப்பட்டன. அனேகமாக இந்த வீடுகளில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த முகாமில் வாடுகின்றார்களோ??????? நினைவுகளால் மனது கனத்தது. நேரம் 11 மணியை கடந்து இருந்தது. பஸ் உசன், மிருசுவில் என்று சிறிய ஊர்களைக் கடந்து கொண்டிருந்து. பலர் அதில் ஏறி இறங்கினார்கள். களைத்த மனதிற்கு பஸ்சனுள் ஒலித்த பாடல்கள் இதமாக இருந்தன. நித்திரையின்மையால் கண்கள் கள்ளுக் குடித்த மாதிரி சிவத்து போயிருந்தன. போட்டிருந்த உடுப்பு வியர்வையினால் தோய்ந்து மணக்கத்தொடங்கியது. "என்னம் எவ்வளவு நேரம் ஓட்டம்?" என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன் "இன்னும் ஒரு மணித்தியால ஓட்டத்தில பரித்தித்துறை". எனது முகத்தில் சந்தோசம் குடிகொண்டது. படிக்கின்ற காலத்தில் அங்கு போனதிற்குப் பிறகு எனக்கும் பரித்தித்துறைக்குமான தொடர்புகள் விடுபட்டுபோய்விட்டது. பஸ் கொடிகாமம் பஸ்நிலையத்தில் தன்னை நிலைநிறுத்தியது . கொண்டக்ரர் தேத்தண்ணி குடிக்கப் போனார். எனக்கும் கீழே இறங்கவேண்டும் போல இருந்தது,

மனைவியைக் கள்ளப்பார்வை பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவா என்னை முறைத்துப்பார்த்தா. நான் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐன்னலினூடாக வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.

கொடிகாமம் பஸ்நிலையத்தில் பெரியமாற்ரங்களை காணமுடியவில்லை. கொடிகாமம் சந்தை பரபரப்பாகக் காணப்ட்டது. முதன்முதலாக நீண்டகாலத்திற்குப்பிறகு தட்டிவானை இங்கு கண்டேன். பழமை மாறாது அப்படியே நின்றது அதன்பின் தட்டியில் வாழைக்குலைகளும், பினாட்டு கடகங்ளும் , புழுக்கொடியல் கடகங்களும்,

ஏறிக்கொண்டிருந்தன. நான் மிகவும் ஆவலாகப் பார்த்தேன். வந்த கொண்டக்ரரிடம் அண்ணை இந்ததட்டிவான் எந்தரூட்டிலை இப்பபோகுது என்று குழந்தைத்தனமாகக் கேட்டேன்.என்னை ஒரு பார்வை பார்த்தார் கொண்டக்ரர். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அவரின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது. "இப்ப இதெல்லாம் குறைவு தான் தம்பி, இங்கை இருந்து மருதங்கேணி, ஆளியவளைக்குப் போகும். கேள்வியைப் பார்த்தால் இப்பவே ஏறிப்போகப்போறீர் போல கிடக்கு". நான் சிரித்தேன். மனைவி முறைத்துப் பார்த்தா

"கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு வாறியளே?"

"ஏன் பிள்ளை தெரியாததைத் தானே அவரிட்டைக் கேட்டனான்".

பஸ் கொடிகாம் பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்டு பரித்தித்துறை நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பியது. அந்தப் பாதை மிகவும் ஒடுக்கமாக இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் நின்று தான் விலத்த வேண்டியிருந்தது. நேரம் 11.30 ஆகியிருந்தது. பஸ் வேகமெடுத்தது. இரண்டுபக்கமும் ஏழ்மையும் பணமும் (ஓலைக்குடிசைகளும் கல்வீடுகளும்) மாறிமாறி வந்து கொண்டிருந்தன. பலவீடுகளில் கப்பிக் கிணறுகள் எட்டிப்பார்த்தன. சில வீடுகளில் ஆர்பிக்கோ பிளாஸ்ரிக் தண்ணீர்தொட்டிகளின் கூடிய கிணறுகளும் எட்டிப்பார்த்தன. அனேகமாக அவைகள் யூரோக்கள் அல்லது டொலர்களின் ஆதிக்கம் பெற்றவையாக இருக்கவேண்டும். ஆனால் என்னால் ஆடுகாலும் துலாவுடன் கூடிய கிணறுகளை காணாதது வேதனையாக இருந்தது. சில வேளைகளில் அதுவும் பங்கர்சென்றிக்குப் போய்விட்டதோ? இருந்தால் போல ஒரு வெளி வரத்தொடங்கியது. அதன் ஆரம்பத்தில் கவலரண் போட்டு மந்திகள் குந்தியிருந்தன. இது என்ன என்று மனைவியிடம் கேட்டேன். இது தான் முள்ளிவெளி என்றா. முள்ளிவெளி கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருந்து. முடிவிலும் மந்திகள் குந்தியிருந்தன, இலவு காத்த கிளிகளாக இதுகளின் வாழ்க்கையும் போகின்றது. வீதியின் இரண்டு பக்கமும் பனைகளும் வீடுகளும் தோட்டங்களுமாக மாறிமாறி வந்தன. பஸ் வேகமாக முன்னேறி நெல்லியடி பஸ்நிலையத்தில் வந்து நின்றது. அருகே பரித்தித்துறை வீதி நெளிந்தது. நெல்லியடி ஒரே இரைச்சலாக இருந்தது. இந்த நெல்லியடிக்கும் எமக்கும் ஒரு பெரியகதையே உள்ளது.இதே நெல்லியடியில்தான் சிங்கம் திக்கிமுக்காடி அலறியது, ஒருவனின் காற்றோடு கலப்பால். சிங்கம் மட்டுமாஅலறியது? சுற்றுப்பட்டிகளும் தான். ஆம்....... முதல் கரும்புலியான மில்லர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்த இருந்த கூட்டுப்படை இராணுவ தளத்தை அழிக்க காற்றுடன் கலந்த இடம் நெல்லியடி . நாங்கள் எங்களையும் ஆயுதமாக்குவோம் என்றதும் இந்த இடத்தில் தான். நேரம் 12 மணியாகியிருந்து பஸ் பரித்தித்துறை வீதியில் வேகமெடுத்தது. காதைப்பிளக்கும் மிகையொலிகோர்ண்களால் நான் மிகவும் எரிச்சல் அடைந்தேன். இப்போழுது பஸ்சிற்குள் பத்துப்பேரே இருந்தோம். மனைவியின் முகத்தல் மகிழ்சி. மந்திகைசந்தியைக் கடந்து கொண்டிருந்தது பஸ். ஒடுக்கமாக வந்த வீதி பரித்தித்துறை வருவதை எனக்கு உணர்த்தியது. இரண்டு பக்கமும் இருந்த கட்டிடங்களும் வீடுகள் சிலவும் செல்அடியில் சிதிலமாகக் கிடந்தன. பஸ் முதலாம் கட்டைச்சந்தியை தாண்டியது.

"இதில இருந்தும் எங்கட வீட்டக்குப் போகலாம்" என்று மனைவி எனது பிராக்கைக் கலைத்தா.

"அப்ப இதில இறங்குவம்" என்று எழும்பினேன்.

"இல்லை, பஸ்நிலையத்தில் இறங்குவம்".

"சரி".

வேகமெடுத்த பஸ் பஸ்டிப்போவை கடந்து, சிறிதுதூரம் ஓடி பரித்தித்துறை பஸ்நிலையத்தில் நின்றது.



July 21, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம