Skip to main content

சுவைத்தேன் -இறுதிப்பாகம்



01 பொய்யுரையின் காலம்






மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர்.

வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர்

உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது

பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது

உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார்.

நண்பர்கள் பகைவர்களாகிறார்.

பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும்

பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன்

பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று.

நெல்லை விதைப்பதை விடவும்

பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான்

என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன.

இப்படியே

பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று.

இது பொய்களின் யுகம் என்றான் ஞானி

ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து.

பொய்களின் அரசன்,

பொய்களின் நாடு

பொய்களின் ஆட்சி

பொய்களின் விசுவாசிகள்

என்றாயிற்று எல்லாம்.

அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது

உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது.

விலகிய வெள்ளாட்டுக்கு விதியில்லை என்றது நாடு

தனித்தவருக்கும் மறுத்தோடிக்கும் துணையில்லை என்றது ஊர்

எனில்

இது சிதைவின் காலமா?

இல்லை அழிவின் யுகமா?

எனில், உறைந்திருக்கும் காலத்தின் மீதிருந்து

கண்ணீர் சிந்தும் மனிதர்களை

இன்னும் நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கணத்தில் உருகிப் பின் மெழுகாகும் மனிதர்களை

நானெப்படிக் கொண்டாடுவேன்?

இத்தனை கசப்போடும்

இன்னும் இந்தப் பயண வழியில் நடக்கும்

மனிதர்களைக் குறித்து என் சொல்வேன்?

“தோற்றுத்தான் போவோம் எனினும்

அந்தத் தோல்வியின் அடிவாரத்தில்

உறங்குவோ“மென்ற மனிதர்களை வாழ்த்துவதா?

விட்டுச் செல்வதா?

“பாதிவழியில் பயணம் முறித்தோமென்று எம்மைத் திட்டுவார்“ என்றஞ்சிப்

பின்தொடரும் நண்பர்கள்

பொய்யுரைக்க வெட்கப்படவில்லை.

இன்னும் மீட்பர்களுக்காகக் காத்திருக்கும் தந்தையர்கள்,

இன்னும் “வெளியாரைப் பிரார்த்தியுங்கள்“ என்றுரைக்கும் மதகுருக்கள்

“தூரத்து நட்சத்திரங்கள் ஓர் நாளில் சூரியனாகும்“ என்று நம்பிக்கையுட்டும் ஆய்வறிஞர்

சனங்களைப் பலியாடுகளாக்கும் களமொன்றில்

நானொரு சாட்சியாக இன்னும் இருக்கவோ…

பலியாடுகள் மேய்ப்பர்களின் காலைச் சுற்றி வருகின்றன

அறியவில்லை எந்தப் பலியாடும் மேய்ப்பனின் இரக்கம்

பலியாட்டின் இரத்தத்துக்காகவே என்று.

தன்னைத்தானே சுருக்கிட்டுக்கொண்டிருக்கும்

ஒவ்வொருவரையும் கொண்ட ஊரில்

சாவொலியன்றி வேறென்ன கேட்கும்?

மரண ஓலை தோரணமாகித் தெருவெங்கும் ஆடுமே.

வடிந்த ரத்தம் உறைகிறது

உறைந்த நாட்களை உயிர்ப்பிக்க யாரும் இல்லை.

உறைந்த ரத்தத்தை உயிரூட்டவும் எவருமில்லை.

உறைந்த காலம் நீண்டு

மண்ணாகிறது வாழ்க்கை.

இப்படித்தான் எல்லாம் நிகழ்ந்தன

இப்படித்தான் எல்லாமே நிகழ்கின்றன.

நன்றி :கருணாகரன்

0000000000000000000000000


02 ரகசியக் குறிப்பு





பனங்குருவி இன்று வந்து

குளத்தில் நடந்த கதையைச் சொன்னது

திருவிழாப்பொம்மைகள் குளித்துக் கொண்டிருந்தபோது

ரத்தத்தோடு ஒரு கிளி பறந்து சென்றதை

எல்லோரும் பார்த்ததாக.

பிறகு

பார்த்தவர்கள் கோபுர வாசலில்

பெருமாளைச் சந்தித்தபோது இதைப் பற்றிச் சொல்ல,

பெருமாளோ மௌனமாகக் கடந்து சென்று தேவிடம் இதைச் சொன்னார்.

தேவியோ வேர்க்கிளியிடம் அதைச் சொல்ல

வேர்க்கிளி,

அதைக் காற்றுடன் கதைத்துக் கொண்டிருந்த

கடிதத்திடம் சொன்னது.

ஆனால், அந்தக்கிளி எப்படி ரத்தமாகியது

என்று தெரியவில்லை எவருக்கும்.

எல்லோரும் ரத்தக்கிளியைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அது யுத்தகாலமல்ல.

இப்படி ஒரு புதிர்க்காலத்தில் முளைத்த புற்களில்

தாங்கள் நின்று கொண்டிருப்பதாகக் கருதினார்கள் எல்லோரும்

உண்மையும் அதுதான்.

இதை அறிந்த வேர்க்கிளி

பாடக்குறிப்பை எழுதிக் கொண்டிருந்த

வசந்தியிடம் வந்து

ஒரு ரகசியக் குறிப்பைச் சொன்னது.

அந்த ரகசியக் குறிப்பை அறிவதற்காகவே

பதினாறு தலைமுறைகளாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்

எல்லோரும்.


கருணாகரன்

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...