Skip to main content

சுவைத்தேன் -இறுதிப்பாகம்



01 பொய்யுரையின் காலம்






மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர்.

வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர்

உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது

பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது

உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார்.

நண்பர்கள் பகைவர்களாகிறார்.

பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும்

பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன்

பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று.

நெல்லை விதைப்பதை விடவும்

பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான்

என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன.

இப்படியே

பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று.

இது பொய்களின் யுகம் என்றான் ஞானி

ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து.

பொய்களின் அரசன்,

பொய்களின் நாடு

பொய்களின் ஆட்சி

பொய்களின் விசுவாசிகள்

என்றாயிற்று எல்லாம்.

அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது

உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது.

விலகிய வெள்ளாட்டுக்கு விதியில்லை என்றது நாடு

தனித்தவருக்கும் மறுத்தோடிக்கும் துணையில்லை என்றது ஊர்

எனில்

இது சிதைவின் காலமா?

இல்லை அழிவின் யுகமா?

எனில், உறைந்திருக்கும் காலத்தின் மீதிருந்து

கண்ணீர் சிந்தும் மனிதர்களை

இன்னும் நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கணத்தில் உருகிப் பின் மெழுகாகும் மனிதர்களை

நானெப்படிக் கொண்டாடுவேன்?

இத்தனை கசப்போடும்

இன்னும் இந்தப் பயண வழியில் நடக்கும்

மனிதர்களைக் குறித்து என் சொல்வேன்?

“தோற்றுத்தான் போவோம் எனினும்

அந்தத் தோல்வியின் அடிவாரத்தில்

உறங்குவோ“மென்ற மனிதர்களை வாழ்த்துவதா?

விட்டுச் செல்வதா?

“பாதிவழியில் பயணம் முறித்தோமென்று எம்மைத் திட்டுவார்“ என்றஞ்சிப்

பின்தொடரும் நண்பர்கள்

பொய்யுரைக்க வெட்கப்படவில்லை.

இன்னும் மீட்பர்களுக்காகக் காத்திருக்கும் தந்தையர்கள்,

இன்னும் “வெளியாரைப் பிரார்த்தியுங்கள்“ என்றுரைக்கும் மதகுருக்கள்

“தூரத்து நட்சத்திரங்கள் ஓர் நாளில் சூரியனாகும்“ என்று நம்பிக்கையுட்டும் ஆய்வறிஞர்

சனங்களைப் பலியாடுகளாக்கும் களமொன்றில்

நானொரு சாட்சியாக இன்னும் இருக்கவோ…

பலியாடுகள் மேய்ப்பர்களின் காலைச் சுற்றி வருகின்றன

அறியவில்லை எந்தப் பலியாடும் மேய்ப்பனின் இரக்கம்

பலியாட்டின் இரத்தத்துக்காகவே என்று.

தன்னைத்தானே சுருக்கிட்டுக்கொண்டிருக்கும்

ஒவ்வொருவரையும் கொண்ட ஊரில்

சாவொலியன்றி வேறென்ன கேட்கும்?

மரண ஓலை தோரணமாகித் தெருவெங்கும் ஆடுமே.

வடிந்த ரத்தம் உறைகிறது

உறைந்த நாட்களை உயிர்ப்பிக்க யாரும் இல்லை.

உறைந்த ரத்தத்தை உயிரூட்டவும் எவருமில்லை.

உறைந்த காலம் நீண்டு

மண்ணாகிறது வாழ்க்கை.

இப்படித்தான் எல்லாம் நிகழ்ந்தன

இப்படித்தான் எல்லாமே நிகழ்கின்றன.

நன்றி :கருணாகரன்

0000000000000000000000000


02 ரகசியக் குறிப்பு





பனங்குருவி இன்று வந்து

குளத்தில் நடந்த கதையைச் சொன்னது

திருவிழாப்பொம்மைகள் குளித்துக் கொண்டிருந்தபோது

ரத்தத்தோடு ஒரு கிளி பறந்து சென்றதை

எல்லோரும் பார்த்ததாக.

பிறகு

பார்த்தவர்கள் கோபுர வாசலில்

பெருமாளைச் சந்தித்தபோது இதைப் பற்றிச் சொல்ல,

பெருமாளோ மௌனமாகக் கடந்து சென்று தேவிடம் இதைச் சொன்னார்.

தேவியோ வேர்க்கிளியிடம் அதைச் சொல்ல

வேர்க்கிளி,

அதைக் காற்றுடன் கதைத்துக் கொண்டிருந்த

கடிதத்திடம் சொன்னது.

ஆனால், அந்தக்கிளி எப்படி ரத்தமாகியது

என்று தெரியவில்லை எவருக்கும்.

எல்லோரும் ரத்தக்கிளியைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அது யுத்தகாலமல்ல.

இப்படி ஒரு புதிர்க்காலத்தில் முளைத்த புற்களில்

தாங்கள் நின்று கொண்டிருப்பதாகக் கருதினார்கள் எல்லோரும்

உண்மையும் அதுதான்.

இதை அறிந்த வேர்க்கிளி

பாடக்குறிப்பை எழுதிக் கொண்டிருந்த

வசந்தியிடம் வந்து

ஒரு ரகசியக் குறிப்பைச் சொன்னது.

அந்த ரகசியக் குறிப்பை அறிவதற்காகவே

பதினாறு தலைமுறைகளாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்

எல்லோரும்.


கருணாகரன்

Comments

Popular posts from this blog

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...