Skip to main content

மிருகமொழி – மூன்று கதைகளை வைத்து ஓர் கதையாடல்




முதன்முதலாக ஐந்தறிவு மிருகங்கள் பேசுவதை விலங்குப்பண்ணை என்கின்ற நாவல் வடிவில் தந்தவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆங்கிலேயரான எரிக் ஆர்தர் பிளேயர்(Eric Arthur Blair) என்ற ஜோர்ஜ் ஆர்வெல் (George Orwell) ஆகவே இருக்கமுடியும். அதில் ‘அதிகாரபோதையானது ‘ காலப்போக்கில் நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புரட்சிகளை எப்படியெல்லாம் நீர்த்துப்போகச்செய்கின்றது என்பதை ஓர் பண்ணையில் ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகளை பிரதான கதை சொல்லிகளாகவும் ஏனைய மிருகங்களையும் ஒன்று சேரவைத்துப் பேச வைப்பதன் ஊடாக கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகவும் எப்படி ஓர் விலங்குப்பண்ணை அதிகார போதை கொண்ட பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது என்பதனையும் எல்லாவிதமான அதிகாரங்களையும் நோக்கி நகருகின்ற புரட்சிகள் எப்படியாக முடியும் என்பதனையும் அதில் ஜோர்ஜ் ஆர்வெல் விபரித்திருப்பார்.

இந்த வருடம் விலங்குப்பண்ணையை ஆதர்சமாகக் கொண்டு மூன்றுசிறுகதைகள் பொதுவெளியில் வெளியாகி இருந்தன.

01 ஏறுதழுவல்-கோமகன்

02 ஒரு தனி ஆட்டின் கதை-உமையாழ் பெரிந்தேவி.

03 நல்லாயனின் ஆடு- கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ்.

கோமகன் எழுதிய ‘ஏறுதழுவல்’ கதையானது இந்த வருட ஆரம்பத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஏறுதழுவல் போட்டி மற்றும் பீட்டா சட்டம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு ‘ஏறு சொல்லிய கதை , ‘ ஆ சொல்லிய கதை ‘மற்றும் ‘எழுச்சி’ என்ற பகுப்புகளில் கதை நகர்கின்றது. ஓர் பட்டியில் இருக்கின்ற மாடுகள் மனிதர்கள் தங்களை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தி வைத்து தங்களை கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று தங்களுக்குள் பேசி விவாதித்து தமது எதிர்ப்பை மனிதர்களுக்கு தெரிவிப்பதற்காக ‘கறுப்பன்’ என்ற நாம்பன் மாடு அந்த ஊரில் நடக்கும் ஏறுதழுவல் போட்டியில் கலந்து கொண்டு பட்டியின் முதலாளியான சாமிக்கண்ணுவை முட்டி மோதி கொலை செய்து விட்டு சுதந்திரமான வாழ்க்கையைத்தேடி அருகில் இருக்கும் காட்டிற்குள் ஓடி மறைகின்றது.

உமையாழ் பெரிந்தேவி எழுதிய ‘ஒரு தனி ஆட்டின் கதை ‘ பட்டியில் இருக்கின்ற ஓர் ஆட்டைக் கதைசொல்லியாக வைத்து தமிழ் எழுத்துப்பரப்பில் இருக்கின்ற இலக்கியப்பெருந்தகைகளை நையாண்டி செய்கின்ற விதமாக அங்கத இலக்கியத்தினுடாக நகருகின்றது.தலைக்கனம் மிகுந்த ஆடு தான் எப்படியெல்லாம் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தேடுகின்றது. அப்பொழுது அது தனது இனம் சந்திக்கின்ற அகச்சிக்கல்களை கேள்விக்கு உட்படுத்துகின்றது. இறுதியில் தான் சுதந்திரமாக இருக்க விரும்பி ஒவ்வொரு பட்டியாக மாறிக்கொண்டிருந்தது.நையாண்டி எழுத்துக்களுக்கு இந்த கதையை ஓர் உரைகல்லாக நாம் பார்கமுடியும்.

கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ் ஆல் எழுதப்பட்டு கடந்த கிழமை வெளியாகிய ‘நல்லாயனின் ஆடு ‘ வேறு ஓர் தளத்தில் குறுக்கறுத்துச் செல்கின்றது.தனது இனத்தின் அடிமைத்தனமான வாழ்வையும் எதையுமே கேள்வி கேட்காது அதன்வழி செல்கின்ற ஆடுகளது மந்த புத்தியையும் அது கேள்விக்கு உட்படுத்துகின்றது.தனது இனத்தில் எல்லாவிதத்திலும் அது தனியனாக சுய அடையாளத்தை காட்ட விரும்புகின்ற ‘புரட்சி ஆடாக’ இருக்க விளைகின்றது. அதிகாரங்களுக்கு அடிபணிய விரும்பாத ஆடு சுதந்திரத்தை தேடி ஆயன் மலைஉச்சிக்குத் தப்பிச்செல்கின்றது.ஆயன் மலைக்குச் சென்ற ஆட்டை அங்கு வந்த புதிய இடையராகிய ‘கடவுள்’ மீட்டெடுத்து மீண்டும் பட்டியில் இணைப்பதனுடாக மனித குலத்துக்கு கடவுளார் புதிய செய்தியை சொல்ல முனைவதாக கதை முடிகின்றது. இந்த கதையின் பேசுபொருளானது ,”மனிதர்களுக்கு, ஏன் கடவுளர்களுக்கும் ஆடுகளைப் புரியமுடிவதே இல்லை. அவர்கள் ஆடுகளுக்கும் சேர்த்து தாங்களே யோசிக்கிறார்கள்” என்று ஆட்டை ஓர் குறியீடாக வைத்து மிருகங்களை பொதுமைப்படுத்தி, மிருகங்கள் மனிதர்களுக்கு என்ன செய்தியை சொல்ல விளைகின்றன என்பதை கதை எடுத்துச்சொல்கின்றது. அத்துடன் ஆரம்பத்தில் பட்டியில் உள்ள ஆடுகளினது இழிநிலைகளையும் அவைகளது அருவருக்கத்தக்க செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்திய கதையானது போகப்போக விவிலியத்துடன் இணைத்து மீட்பராகிய கிறிஸ்துவையே விமர்சித்து தான் சொல்ல வந்த சங்கதிக்கு கடவுளும் விதிவிலக்கானவர் இல்லை என்றவோர் புதிய கோணத்துடனும் உத்தியுடனும் கதை நிறைவுக்கு வந்திருப்பது கிஷோகர் ஈழத்து எழுத்துப் பரப்பில் மிக இளம்வயதில் இருக்கின்ற படைப்பாளிகளில் கவனிக்கப்பட வேண்டியவர் என்பதையே சுட்டிநிற்கின்றது.

இறுதியாக இந்த மூன்று கதைகளுமே சுதந்திரத்தை வேண்டி புரட்சி செய்த மிருகங்களின் சுதந்திரமானது இறுதியில் அவைகளுக்கு கிடைத்ததா என்ற கேள்விக்கான விடை என்பது தொங்குபறியிலேயே இருப்பதைக் காண முடிகின்றது.

கோமகன்

தினகரன்- பிரதிபிம்பம் -இலங்கை.

24 புரட்டாசி 2017.

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...