Skip to main content

மிருகமொழி – மூன்று கதைகளை வைத்து ஓர் கதையாடல்




முதன்முதலாக ஐந்தறிவு மிருகங்கள் பேசுவதை விலங்குப்பண்ணை என்கின்ற நாவல் வடிவில் தந்தவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆங்கிலேயரான எரிக் ஆர்தர் பிளேயர்(Eric Arthur Blair) என்ற ஜோர்ஜ் ஆர்வெல் (George Orwell) ஆகவே இருக்கமுடியும். அதில் ‘அதிகாரபோதையானது ‘ காலப்போக்கில் நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புரட்சிகளை எப்படியெல்லாம் நீர்த்துப்போகச்செய்கின்றது என்பதை ஓர் பண்ணையில் ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகளை பிரதான கதை சொல்லிகளாகவும் ஏனைய மிருகங்களையும் ஒன்று சேரவைத்துப் பேச வைப்பதன் ஊடாக கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகவும் எப்படி ஓர் விலங்குப்பண்ணை அதிகார போதை கொண்ட பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது என்பதனையும் எல்லாவிதமான அதிகாரங்களையும் நோக்கி நகருகின்ற புரட்சிகள் எப்படியாக முடியும் என்பதனையும் அதில் ஜோர்ஜ் ஆர்வெல் விபரித்திருப்பார்.

இந்த வருடம் விலங்குப்பண்ணையை ஆதர்சமாகக் கொண்டு மூன்றுசிறுகதைகள் பொதுவெளியில் வெளியாகி இருந்தன.

01 ஏறுதழுவல்-கோமகன்

02 ஒரு தனி ஆட்டின் கதை-உமையாழ் பெரிந்தேவி.

03 நல்லாயனின் ஆடு- கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ்.

கோமகன் எழுதிய ‘ஏறுதழுவல்’ கதையானது இந்த வருட ஆரம்பத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஏறுதழுவல் போட்டி மற்றும் பீட்டா சட்டம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு ‘ஏறு சொல்லிய கதை , ‘ ஆ சொல்லிய கதை ‘மற்றும் ‘எழுச்சி’ என்ற பகுப்புகளில் கதை நகர்கின்றது. ஓர் பட்டியில் இருக்கின்ற மாடுகள் மனிதர்கள் தங்களை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தி வைத்து தங்களை கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று தங்களுக்குள் பேசி விவாதித்து தமது எதிர்ப்பை மனிதர்களுக்கு தெரிவிப்பதற்காக ‘கறுப்பன்’ என்ற நாம்பன் மாடு அந்த ஊரில் நடக்கும் ஏறுதழுவல் போட்டியில் கலந்து கொண்டு பட்டியின் முதலாளியான சாமிக்கண்ணுவை முட்டி மோதி கொலை செய்து விட்டு சுதந்திரமான வாழ்க்கையைத்தேடி அருகில் இருக்கும் காட்டிற்குள் ஓடி மறைகின்றது.

உமையாழ் பெரிந்தேவி எழுதிய ‘ஒரு தனி ஆட்டின் கதை ‘ பட்டியில் இருக்கின்ற ஓர் ஆட்டைக் கதைசொல்லியாக வைத்து தமிழ் எழுத்துப்பரப்பில் இருக்கின்ற இலக்கியப்பெருந்தகைகளை நையாண்டி செய்கின்ற விதமாக அங்கத இலக்கியத்தினுடாக நகருகின்றது.தலைக்கனம் மிகுந்த ஆடு தான் எப்படியெல்லாம் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தேடுகின்றது. அப்பொழுது அது தனது இனம் சந்திக்கின்ற அகச்சிக்கல்களை கேள்விக்கு உட்படுத்துகின்றது. இறுதியில் தான் சுதந்திரமாக இருக்க விரும்பி ஒவ்வொரு பட்டியாக மாறிக்கொண்டிருந்தது.நையாண்டி எழுத்துக்களுக்கு இந்த கதையை ஓர் உரைகல்லாக நாம் பார்கமுடியும்.

கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ் ஆல் எழுதப்பட்டு கடந்த கிழமை வெளியாகிய ‘நல்லாயனின் ஆடு ‘ வேறு ஓர் தளத்தில் குறுக்கறுத்துச் செல்கின்றது.தனது இனத்தின் அடிமைத்தனமான வாழ்வையும் எதையுமே கேள்வி கேட்காது அதன்வழி செல்கின்ற ஆடுகளது மந்த புத்தியையும் அது கேள்விக்கு உட்படுத்துகின்றது.தனது இனத்தில் எல்லாவிதத்திலும் அது தனியனாக சுய அடையாளத்தை காட்ட விரும்புகின்ற ‘புரட்சி ஆடாக’ இருக்க விளைகின்றது. அதிகாரங்களுக்கு அடிபணிய விரும்பாத ஆடு சுதந்திரத்தை தேடி ஆயன் மலைஉச்சிக்குத் தப்பிச்செல்கின்றது.ஆயன் மலைக்குச் சென்ற ஆட்டை அங்கு வந்த புதிய இடையராகிய ‘கடவுள்’ மீட்டெடுத்து மீண்டும் பட்டியில் இணைப்பதனுடாக மனித குலத்துக்கு கடவுளார் புதிய செய்தியை சொல்ல முனைவதாக கதை முடிகின்றது. இந்த கதையின் பேசுபொருளானது ,”மனிதர்களுக்கு, ஏன் கடவுளர்களுக்கும் ஆடுகளைப் புரியமுடிவதே இல்லை. அவர்கள் ஆடுகளுக்கும் சேர்த்து தாங்களே யோசிக்கிறார்கள்” என்று ஆட்டை ஓர் குறியீடாக வைத்து மிருகங்களை பொதுமைப்படுத்தி, மிருகங்கள் மனிதர்களுக்கு என்ன செய்தியை சொல்ல விளைகின்றன என்பதை கதை எடுத்துச்சொல்கின்றது. அத்துடன் ஆரம்பத்தில் பட்டியில் உள்ள ஆடுகளினது இழிநிலைகளையும் அவைகளது அருவருக்கத்தக்க செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்திய கதையானது போகப்போக விவிலியத்துடன் இணைத்து மீட்பராகிய கிறிஸ்துவையே விமர்சித்து தான் சொல்ல வந்த சங்கதிக்கு கடவுளும் விதிவிலக்கானவர் இல்லை என்றவோர் புதிய கோணத்துடனும் உத்தியுடனும் கதை நிறைவுக்கு வந்திருப்பது கிஷோகர் ஈழத்து எழுத்துப் பரப்பில் மிக இளம்வயதில் இருக்கின்ற படைப்பாளிகளில் கவனிக்கப்பட வேண்டியவர் என்பதையே சுட்டிநிற்கின்றது.

இறுதியாக இந்த மூன்று கதைகளுமே சுதந்திரத்தை வேண்டி புரட்சி செய்த மிருகங்களின் சுதந்திரமானது இறுதியில் அவைகளுக்கு கிடைத்ததா என்ற கேள்விக்கான விடை என்பது தொங்குபறியிலேயே இருப்பதைக் காண முடிகின்றது.

கோமகன்

தினகரன்- பிரதிபிம்பம் -இலங்கை.

24 புரட்டாசி 2017.

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...