Skip to main content

Posts

Showing posts from July, 2020

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-30

மன்னர் மகிந்தர் தாமாகவே நகரத்துக்குத் திரும்பி விட்டார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி மூலைமுடுக்குகள் தோறும் காற்றெனப் பரவியது. தெருக்களில் அங்கங்கே பலர் கூடி நின்று தாங்களே அந்தக் காட்சியை நேரில் கண்டவர்கள்போல் பேசிக் கொண்டனர். போரினால் ஏற்பட்டிருந்த மனக்கசப்பும், அதையொட்டிய நகரத்தில் நிலவிய அச்சம் கலந்த அமைதியும், இச்செய்தி கிடத்தவுடன் எங்கோ சென்று மறைந்தன. இராஜேந்திரரே நேரில் வருகை தந்து மன்னர் மகிந்தரைச் சகல மரியாதைகளுடன் வரவேற்றாராம். மாமன்னரும் மன்னரும் ஒருவரையொருவர் அன்போடு தழுவிக் கொண்டார்களாம். அவர்களுடைய சந்திப்பைக் கண்டவர்களுக்கு ‘பகை நாட்டரசர்களா இவர்கள்? என்ற வியப்பு ஏற்பட்டதாம். நெடு நாட்கள் பிரிந்திருந்த நெருங்கிய நண்பர்களென ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டார்களாம்! இன்னும் இவை போன்ற பற்பல நல்ல செய்திகள் நகருக்குள் உலவின. காற்றுவாக்கில் நகரத்துக்குள் பரபரப்பைப் பரப்பிய இந்தச் செய்திகளில் ஒரு பகுதி மட்டிலும் உண்மை. சக்கரவர்த்தி இராஜேந்திரைப் பற்றிய வரையில் அவர்கள் நடந்ததைத்தான் கூறினார்கள். ஆனால் மன்னர் மகிந்தர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது அவர்களில் யாருக்கும் தெரியாது

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-29

மதுரை மாநகரத்தில் வைகைக் கரைக்கடுத்து நின்ற பெரும்பிடுகு முத்தரையரின் சிறிய மாளிகையும் அதைச் சூழ்ந்தருந்த பூங்காவும் காலைக் கதிரொளியில் தனியானதொரு புத்தெழில் பெற்று விளங்கின. மேல் மாடத்தில் நின்று சோம்பல் முறித்தபடியே பூங்காவின் மேற்பரப்பைக் கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் திலகவதி. அதிகாலையில் எழுந்து குளித்து முழுகி மாற்றுடை தரித்து தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்ட பின்னரும் அவளுடைய சோம்பல் தீரவில்லை.நாடோடி வணிகனை அவள் சந்தித்த பிறகு இரண்டு மூன்று தினங்களே ஆகியிருந்தன. என்றாலும் ஒவ்வொரு தினமும் ஒரு யுகமெனக் கழிந்தது அவளுக்கு. முதல் நாள் இரவில் சரியான உறக்கமில்லை. ஒருவேளை, அந்த மனிதன் வணிகனாக மட்டும் இருந்திருந்தால் அவள் அவனை மறந்திருப்பாளோ என்னவோ? அவன் தனது வாள் வீச்சால் திலகவதியின் உள்ளத்தையே கொள்ளை கொண்டு போய் விட்டான். புத்தம் புதிய கச்சைகளைக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றவன் இன்னும் வரக்காணோமே! பெரும்பிடுகு முத்தரையரின் குதிரை உள்வாயில் முகப்பில் சேணம் கட்டி நின்றது. குதிரையின் மீது ஏறிக்கொண்ட முத்தரையர் மாடத்தில் நிற்கும் தமது மகளைத் திரும்பிப் பார்த்து, “திலகவதி! உன் அத்தைய

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-28

உண்மையில் வல்லவரையர் வந்தியத்தேவரோ அல்லது வேறெந்தச் சோழநாட்டு ஒற்றனோ அங்கு வரவில்லை. ரோகணத்து இளவரசி தானாக ஒரு கற்பனை ஒற்றனை உருவாக்கி அவனை அந்தப் பயங்கரமான பிரதேசத்தில் உலவ விட்டிருந்தாள். அவளுடைய ஒற்றனுக்கு உருவமும் இல்லை, உயிரும் இல்லை. மகிந்தரின் காவலர்கள் அவனை அந்த இரவு முழுவதும் தேடினாலும் அவன் அவர்களின் கண்களுக்குத் தென்படவா போகிறான்? தான் செய்த தந்திரம் பலித்துவிடும் என்ற நம்பிக்கை ரோகிணிக்கு இல்லை. ஆனால் அது எப்படியோ பலித்து விட்டது; அதை நினைத்து நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். இளங்கோ ஒன்றும் புரியாதவனாகத் தன்னுடைய நிலையை எண்ணி மகிழ்ச்சியும் துயரமும் மாறிமாறி அடைந்து கொண்டிருந்தான். வல்லவரையர் வந்திருந்தால் மணிமுடியின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டிருப்பார் என்பதை எண்ணி மகிழ்ந்தான். பொறிக்குள் அகப்பட்ட புலிபோல் தான் ரோகிணிக்கு முன்னால் செயலற்றிருப்பதை நினைத்து வருந்தினான். இறுக்கமாகக் கட்டப்பெற்றிருந்த கயிறு அவன் தசைகளை மென்று கொண்டிருந்தது. அந்த வலியை அவன் தாங்கிக் கொண்டாலும், அவமானத்தை அவனால் தாங்க முடியவில்லை. ‘ரோகிணி என்னைப்பார்த்துத் தான் தனக்குள் ஏள

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-27

இளங்கோவுக்கு இப்போது மரணதண்டனை. வீரன் கோழையிடம் அகப்பட்டுக் கொண்டான். மறைந்து வாழும் மன்னர் மகிந்தரின் ஆணை அவன் உயிரை ஊசலாடச் செய்தது. மயங்கி விழுந்த ரோகிணி சில விநாடிகளில் சுய உணர்வு பெற்று, இளங்கோவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இளங்கோ அவளைப் பார்க்காமல் குகைக்கு வெளியே நிலவில் முழுகியிருந்த மலைச்சாரலை ஊடுருவிக் கொண்டு நின்றான். மன்னரின் காவலர்கள்   அவனைக் கயிற்றால் இறுக்கிப் பிணைப்பதில் சுறுசுறுப்பாக முனைந்து நின்றனர். காவலர்களின் தலைவனான விஜயபாகு அவன் கரங்களை உடலோடு சேர்த்துவைத்துக் கட்டினான். மலை மீதிலிருந்து உருட்டிவிட்ட பிறகு, கீழே விழும்போது கரத்தால் எதையாவது எட்டிப் பிடித்துப் பற்றிக்கொண்டு அவன் உயிர் பிழைத்துவிடக் கூடாதல்லவா!   ஒரு முறையேனும் தன் பக்கம் முகத்தைத் திருப்பித் தன் கண்களைச் சந்திக்கமாட்டானா என்று ஏங்கினாள் ரோகிணி. விநாடிக்கு விநாடி அந்த ஏக்கம் அதிகரித்துத் துடிப்பாக மாறியது. வாய் திறந்து அவள் பேசாவிட்டாலும், அவள் கண்கள் பேசின.   ‘கொடும்பாளூர் இளவரசே! இருந்திருந்தும் நான்தானா உங்கள்   உயிருக்கு எமனாக வந்து வாய்க்க வேண்டும்? நீங்கள் தாம் அந்த ஒற்றர

வேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 -26

உணவு முடிந்த பிறகு ரோகிணியும் கந்துலனும் தனியே விலகிச் சென்று, அந்தப் புதிய மனிதனைப் பற்றி அந்தரங்கமாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். தாங்கள் யார் என்பதை இன்னும் அவனிடம்வெளியிடவில்லை. அவனும் அவர்களை அந்த விஷயத்தில் வற்புறுத்தாமல்விட்டுவிட்டான். ஆனால் மற்றொரு விஷயத்தில் அவன் பிடிவாதமாக இருந்தான். இரவில் அவர்கள் தனிவழி செல்வது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். அதை அவன் அனுமதிக்க மாட்டானாம்! அங்கேயே தங்கிவிட்டுப் பொழுது புலர்ந்தவுடன் போகலாம் என்றான். அப்படி இல்லாமல் உடனே கிளம்ப வேண்டுமென்றால் தன் துணை அவர்களுக்கு மிகவும் அவசியமென்று கட்டாயப்படுத்தினான். அமைச்சரின் ஆணைப்படி அவன் தன் கடமையை நிறவேற்றாவிட்டால் அதனால் அவன் தலையே போய்விடுமாம். “என்ன சொல்கிறீர்கள் இளவரசி? நம்மைத் துரத்துகிறவர்களிடமிருந்து தப்பினாலும் நம்மைக் காப்பாற்றுகிறவர்களிடமிருந்து தப்பமுடியாது போல்இருக்கிறதே! பகலில் போவதென்றால் இவன் தொல்லை இருக்காது. ஆனால்பகைவர்கள் அதற்குள் நம்மைப் பிடித்து விடுவார்கள்.” “நாம் இப்போதே போக வேண்டும்; ஆனால் இவனை அழைத்துக்கொண்டும் போகக்கூடாது” என்றாள் ரோகிணி. “நம்மைச்சேர்ந்தவனாக இருந்தாலும்

வேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1- 25

இ ளைஞன் வேடத்திலிருந்த ரோகிணியையும் அவளுடைய பணிப்பெண்ணின் தகப்பன் கந்துலனையும் சுமந்து கொண்டு, கிழக்கேகாட்டுக்குள் குறுகலான பாதையில் இறங்கியது ஒரு குதிரை. காட்டுக்குள்செல்லச் செல்ல பாதை விசாலமாகிக் கொண்டு வந்தது. நகரத்தைக் கடக்கும்வரையிலும் குதிரை மேலிருந்தவர்கள் இருவரும் மௌனமாகவே சென்றனர். அச்சமும் தவிப்பும் குடிகொண்டிருந்தன அவர்கள் மனத்தில். அடர்ந்த மரங்களுக்குப் பின்னால், ரோகணத்தின் தலைநகரம் மறைந்தபிறகே அவர்களால் தாராளமாக மூச்சுவிட முடிந்தது. ஒரு திருப்பு முனையில் குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே குதித்தான்கந்துலன். ரோகிணியும் இறங்கினாள். கந்துலன் தனியாக வலதுகைப்புறமிருந்த புதருக்குள் நுழைந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் மிடுக்கானதோற்றமுடைய மற்றொரு இளங்குதிரையுடன் வெளியே வந்தான். “இளவரசி! கிழவனுக்கு அந்தக் கிழட்டுக் குதிரையைக் கொடுத்துவிட்டுநீங்கள் இதில் ஏறிக்கொள்ளுங்கள்; நகரத்துக்குள் இந்தக் குதிரையைக்கொண்டு வந்திருந்தால், இது நம்முடைய அரண்மனைக் குதிரை என்றுபகைவர்கள் சந்தேகப்பட்டிருப்பார்கள். நாமோ நெடுவழி போக வேண்டும். ஒரு குதிரை நமக்குப் போதாது.” வெயிலும் நிழலும் கலந்து உறவாடிய அந

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-24

அ மாவாசைக்குப் பிறகு பத்துத் தினங்கள் சென்றன. இதற்குள் ரோகணத்தின் பல பகுதிகளுக்கும் சோழநாட்டு வீரர்கள், மன்னரையும் அமைச்சரையும் தேடுவதற்காக அனுப்பப்பட்டனர். ரோகணம் அவர்களுக்குப் புதிய இடம். சரியான சாலைகளும், புரவிகள் செல்லக்கூடிய பாட்டைகளும் அந்தப் பிரதேசத்தில் அருகியிருந்தன. தேடிச் சென்றவர்களில் பலர் சோர்ந்து திரும்பினர்! இன்னும் பலர் திரும்பவே இல்லை. அமைச்சர் கீர்த்தியின் முன்னேற்பாட்டால் மறைந்திருந்து தாக்கும் சிறு கூட்டத்தினர் அங்கங்கே தொல்லைகள் விளைவித்த வண்ணம் இருந்தனர். காடுகள், மலைகள், மடுக்கள், குகைகள், வனவிலங்குகளின் மறைவிடங்கள் முதலியன நிறைந்த அந்தக் காட்டில் அவர்கள் தேடிச் சென்ற மனிதர்களும் அகப்படவில்லை; மணிமுடியும் அகப்படவில்லை. இந்தப் பத்து நாட்களில் ஒரே ஒரு முறை ரோகிணி அரண்மனையைவிட்டு நகரத்துக்குள் சென்று வந்தாள். அவளுடைய பணிப்பெண்ணின் தகப்பனார் வீட்டிற்குச் சென்று வந்ததாக, இளங்கோவின் மூலம் வல்லவரையருக்குச் செய்தி கிடைத்தது. ரோகிணியின் நடவடிக்கைகளை அவளுக்குத் தெரியாமல் கண்காணித்த இளங்கோ, அவள் சென்று வந்த வீட்டைச் சுற்றிலும் ஒற்றர் சிலரை நிறுத்தி வைத்தான். அந்தப்புரத்

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-23

பெ ரும்பிடுகு முத்தரையரின் பரட்டைத் தலை, கோழி முட்டைக் கண்கள்,மண்டையோடு முகம் இவற்றைச் சாதாரண நிலையில் பார்த்தாலே, பார்ப்பவர்களின் மனம் நடுங்கும். இப்போதோ அவர் சிறுத்தையெனச்சீறிக்கொண்டு நின்றார். அவர் நிலையில் அவரைப் பார்த்த இளம் வணிகனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. முத்தரையர் தமது மகள் திலகவதி கொண்டு வந்து கொடுத்த வாளை வணிகனிடம் நீட்டிவிட்டுத் தமது வாளை உயர்த்தப் போனார். “ஐயா! தயவுசெய்து சற்றுப் பொறுத்து நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு உங்கள் சித்தப்படி செய்யுங்கள். நான் உங்கள் வீடுதேடிக் கொள்ளையிட வரவில்லை. கன்னம் வைக்க வரவில்லை. தெருவழியே பொருள் கூவி விற்றுக்கொண்டிருந்த என்னை இந்த அம்மணிதனை கூப்பிட்டார்கள்” என்றான் வணிகன். “ஆமாம் அப்பா! அத்தையாரும் நானும்தான் இவனை அழைத்தோம்” என்றாள் திலகவதி. அவளுடைய அத்தையார் தம் தம்பதியின் சினத்தைக்கண்டவுடனேயே வீட்டின் பின்கட்டுக்குச் சென்று பதுங்கி விட்டார். திலகவதி இப்படிச் சொல்லிவிட்டு அந்த வணிகன் கொண்டு வந்த பட்டாடைகளில் தன் மனத்தைப் பறிகொடுக்கலானாள். ஒவ்வொரு சேலையாக எடுத்துத் தன் வண்ண மேனியுடன் இணைத்து வைத்து, முதலில் உதட்டைப்பிதுக்குவதும்,