Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-30


மன்னர் மகிந்தர் தாமாகவே நகரத்துக்குத் திரும்பி விட்டார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி மூலைமுடுக்குகள் தோறும் காற்றெனப் பரவியது. தெருக்களில் அங்கங்கே பலர் கூடி நின்று தாங்களே அந்தக் காட்சியை நேரில் கண்டவர்கள்போல் பேசிக் கொண்டனர். போரினால் ஏற்பட்டிருந்த மனக்கசப்பும், அதையொட்டிய நகரத்தில் நிலவிய அச்சம் கலந்த அமைதியும், இச்செய்தி கிடத்தவுடன் எங்கோ சென்று மறைந்தன.

இராஜேந்திரரே நேரில் வருகை தந்து மன்னர் மகிந்தரைச் சகல மரியாதைகளுடன் வரவேற்றாராம். மாமன்னரும் மன்னரும் ஒருவரையொருவர் அன்போடு தழுவிக் கொண்டார்களாம். அவர்களுடைய சந்திப்பைக் கண்டவர்களுக்கு ‘பகை நாட்டரசர்களா இவர்கள்? என்ற வியப்பு ஏற்பட்டதாம். நெடு நாட்கள் பிரிந்திருந்த நெருங்கிய நண்பர்களென ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டார்களாம்! இன்னும் இவை போன்ற பற்பல நல்ல செய்திகள் நகருக்குள் உலவின. காற்றுவாக்கில் நகரத்துக்குள் பரபரப்பைப் பரப்பிய இந்தச் செய்திகளில் ஒரு பகுதி மட்டிலும் உண்மை. சக்கரவர்த்தி இராஜேந்திரைப் பற்றிய வரையில் அவர்கள் நடந்ததைத்தான் கூறினார்கள். ஆனால் மன்னர் மகிந்தர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது அவர்களில் யாருக்கும் தெரியாது.

“வாருங்கள், மகிந்தரே! உங்கள் அரண்மனை உங்களுக்காகவே காத்திருக்கிறது” என்று சொல்லித் தழுவியபடியே அவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் இராஜேந்திரர்.

மகிந்தர் மாமன்னரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவரது முகத்தில் பீதியும் நடையில் தயக்கமும் காணப்பட்டன! வரவேற்புக்குப் பதிலாக மகிந்தர் வணக்கம் செலுத்திப் புன்னகை செய்தாரென்றாலும், அந்த வணக்கம் வணக்கமாகவும் இல்லை. புன்னகை புன்னகையாகவுமில்லை.

கூப்பிய கரங்களுக்கிடையில் தென்பட்ட ஓலை நறுக்கை மகிந்தர் சட்டென்று தமது மடியில் செருகி மறைத்துக் கொண்டார். இராஜேந்திரரின் கண்கள் இதைக் கவனிக்கத் தவறவில்லை. என்றலும் அவரது தயக்கத்தை மாற்றுவதற்காக அவரோடு கலகலப்பாகப் பேசிக்கொண்டு வந்தார்.

தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அச்சமும் அவரை இப்படிக் கலக்கமுறச் செய்கின்றனவோ என்று தோன்றியது இராஜேந்திரருக்கு. அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருந்தால் அதைப் போக்கிவிட வேண்டுமென்றபதற்காக அவருடன் சரளமாகவே பழக முற்பட்டார். ஆனால்,மகிந்தரால் இராஜேந்திரருடன் சரிசமமாகப் பழக முடியவில்லை. அவருக்கும் சக்கரவர்த்திக்கும் இடையில் ஏதோ ஒன்று குறுக்கே நின்று கொண்டிருந்தது.

அந்த ஓலை நறுக்குத்தான் அப்படிக் குறுக்கே நிற்கிறதா? அரண்மனைக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகள் மகிந்தரையே மலைக்க வைத்தன. பெண்மணிகள் வண்ணமலர் தூவி வாழ்த்துப் பாடினார்கள். இன்னிசைக்கலைஞர்கள் பலவகை வாத்தியங்களுடன் பண்ணிசைத்தார்கள். எங்கு திரும்பினாலும் தீவர்த்திகள் ஒளி சிந்தி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. அப்போது விளக்கு வைக்கும் நேரம்.

தோல்வியுற்றுப் போய் ஓடி ஒளிந்த சிற்றரசருக்கா இவ்வளவு சிறப்பான வரவேற்பு! விருந்தினராக வரும் சக்கரவர்த்தி ஒருவருக்கு அவருக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் கொடுக்கும் சிறப்பைப் போலல்லவா இது இருக்கிறது. மன்னர் மகிந்தர் இதனால் மனம் மகிழவில்லை! அவரது அச்சம் மனத்தின் ஆழத்துக்கே சென்றுவிட்டது.

தாம் வசித்து வந்த பெரிய அரண்மனையில் சக்கரவர்த்தி தங்கியிருக்கக்கூடும் என்று நினைத்த மகிந்தர், அது வெற்றிடமாக இருப்பதைக் கண்டவுடன் திகைத்துப் போனார். “அமைச்சரின் மாளிகைதான் என் இருப்பிடம்; நீங்கள் இங்கு தங்கிச் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்”என்றார் இராஜேந்திரர். “பட்டமகிஷி பிரிவுத் துயரத்தால் வருந்திக் கொண்டிருப்பார். அவரது துயரத்தை முதலில் அகற்றுங்கள். மீண்டும் உணவு கொள்ளும்போது நாம் சந்தித்து உரையாடலாம்.” இப்படிக் கூறி அவரைஅரண்மனைக்குள் அனுப்பி விட்டு விடைபெற்றுக் கொண்டார் மாமன்னர்.

அந்தப்புரத்திலிருந்து அரண்மனைக்கு வந்திருந்த மகிஷி தமது கணவரையும் புதல்வியையும் கண்டவுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். அடுத்தாற்போல் அவரது கண்கள் புதல்வன் காசிபனைத் தேடிப்பார்த்து ஏமாந்தன. மகிந்தர் அவரைத் தேற்றுவதற்காக நடந்த நடப்புக்களைக் கூறலானார்.

சிறிது நேரம் சென்றது. தீராத குழப்பத்துடன் மன்னர் மகிந்தர் தமது இருக்கையில் சாய்ந்தார். அவர் எதை மறந்துவிட விரும்பினாரோ அதை நினைவூட்டி விட்டாள் ரோகிணி.

“ஏன் அப்பா...! நகரத்தின் எல்லைக்கு வரும் வரையில் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தீர்களே. பிறகு திடீரென்று என்ன நேர்ந்துவிட்டது? அந்த ஓலையில் எழுதியிருப்பதை எனக்குச் சொல்லமாட்டீர்களா, அப்பா?”

“ரோகிணி! வீணாக எனக்குக் கோபமூட்டாதே?” என்று அவள் மீது எரிந்து விழுந்தார் மகிந்தர். “குகையில் உன்னிடம் சொன்ன ரகசியம் என்ன ஆனது தெரியுமா?”

இப்படிக் கேட்டவர் நினைவாகத் தனது மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். கரத்தில் அந்த ஓலை நறுக்குத் தட்டுப்படவில்லை; திடுக்கிட்டு எழுந்தார். தரையில் சுற்றிப் பார்த்தார்; ஆடைகளை உதறிக் கொண்டு பதறினார். அந்தச் சிறு ஓலை எங்கோ மாயமாய் மறைந்து போய்விட்டது.

தந்தையாரும் மகளும் தீவர்த்தி வெளிச்சத்தில் அதை எங்கெல்லாமோ தேடினார்கள். துணையாகக் கந்துலனும் ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அரண்மனைக்கு வெளியிலும், நடந்து வந்த பாதையெங்கும் தேடிப்பா ர்த்துவிட்டார்கள். அந்த ஓலைக்குச் சிறகு முளைத்து விட்டது போலும்!

மாமன்னருடன் மகிந்தர் நடந்து வந்தபோது மாமன்னரின் கண்கள் வல்லவரையரின் கண்களை நோக்கியதையும், வல்லவரையரின் இடதுகரம் மெல்ல மகிந்தரின் இடுப்பருகில் சென்றதையும் யாருமே கவனிக்கவில்லை. தந்தையும் மகளும் அப்போது கோலாகலமான வரவேற்பின் ஆர்ப்பாட்டத்தில்
முழுகியிருந்தார்கள்.

மாமன்னர் இராஜேந்திரர் அந்த ஓலையை விளக்கின் அருகில் எடுத்துச் சென்று அப்போது படித்துக் கொண்டிருந்தார். படித்துவிட்டு வல்லவரையரிடம் நீட்டினார்! “மகிந்தர் ஏன் குழம்பித் தவிக்கிறார் என்பதற்கு விடை இதில் இருக்கிறது, மாமா!”

ஓலையின் வாசகம் இதுதான்.

“பகைவருடன் நட்புறவு கொள்ளவேண்டாம். அவர்களுடைய நிபந்தனைகளுக்கு நானும் தங்கள் குமாரன் காசிபனும் கட்டுப்படமாட்டோம். எங்களையும் இந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டாமென்று எச்சரிக்கிறேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள்.

இங்ஙனம்,
கீர்த்தி”

ஓலையை மாமன்னரிடம் திருப்பிக் கொடுத்த வல்லவரையர், “இன்னும் இளங்கோ திரும்பி வரவில்லையே!” என்று கவலையுடன் கூறினார்.

“மகிந்தரின் வரவைக் கூறிய தூதுவன், அவன் ஏற்கனவே திரும்பிவிட்டதாகக் கூறினானே! ஒரு வேளை அது பொய் மொழியாக இருக்குமோ?”

“எதையும் நம்புவதற்கில்லை. ஆட்கள் சிலரை அனுப்பி அவனைத் தேடிப் பார்க்கச் சொல்லட்டுமா? நேற்று நடுப் பகலில் புறப்பட்டவன் இன்னும் வரவில்லை என்றால்...”

“பொறுத்துக் கொள்ளுங்கள்; உணவு கொள்ளும் வேளையில் மகிந்தரிடம் பேசிப் பார்க்கிறேன்” என்று கூறினார் இராஜேந்திரர்.

மகிந்தர் தம்மால் முடிந்த மட்டும் ஓலையைத் தேடிப் பார்த்துவிட்டு, அது கிடைக்காதென்று தெரிந்தவுடன் “போனால் போகட்டும் மிகச் சிறியவிஷயம்” என்று ரோகிணியிடம் மழுப்பிவிட்டார். மகளை ஏமாற்றிய அவரால், தம்மையே ஏமாற்றிக் கொள்ள முடியவில்லை. அந்தச் செய்தியை மறந்துவிடாமல் செய்தி தந்த ஓலையை மறந்துவிடப் பார்த்தார்.

இந்தச் சமயத்தில் கந்துலன் அவரிடம் கொடும்பாளூர் இளவரசன் இன்னும் கப்பகல்லகத்துக்குத் திரும்பி வந்து சேரவில்லை என்பதைத் தெரிவித்தான்.

“அந்த மற்றொரு ஒற்றன் என்ன ஆனான்?” என்று கேட்டார் அவர்.

“அவனைப் பற்றியும் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாருமே இங்கு வரவில்லை என்று தோன்றுகிறது” என்றான் கந்துலன்.

ரோகிணியின் முகம் இதைக் கேட்டவுடன் வெளுத்தது. ‘இங்கே திரும்பிவராமல் இளங்கோ வேறெங்கு போனார்?’

“அப்பா! அந்த ஒற்றர்கள் நேரே முதலைச் சுனைக்குப் போயிருக்கலாமல்லவா? அவர்கள் மணிமுடியை எடுத்துக் கொண்டு வருவதற்காகப் போனாலும் போயிருப்பார்கள்?”

மகிந்தரின் முகத்தில் குழப்பம் மறைந்து தெம்பு பிறந்தது. பரிகாசமாகத் தம்முடைய மகளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “அப்படிப் போயிருந்தால் அது நம்முடைய அதிர்ஷ்டந்தான்!” என்றார். “ஒருவனோ இரண்டு பேர்களோ போய்ச் சாதிக்கக்கூடிய காரியமில்லை அது. போனவர்கள் திரும்பிவரப்போவதில்லை. சாகவேண்டுமென்று அவர்கள் தலையில் எழுதியிருந்தால்,நம்மிடமிருந்து தப்பிவிட்டால் மட்டும் போதுமா? மணிமுடியை அவர்கள் தேடிப் போகவில்லை; மரணத்தைத் தேடிக் கொண்டுதான்
போயிருக்கிறார்கள்?!”

ரோகிணியின் வதனத்தில் இருள் கவிந்ததைக் கண்ணுறாமல் மகிந்தர்தொடர்ந்து கூறினார்:

“ரோகிணி! அந்த ஒற்றர்கள் நேரே சுனைக்குச்சென்றிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால் நாம் இங்குவந்திருக்க வேண்டியதில்லை. இதுவரையில் நடந்தது சரி. இனிமேல்தான் அதிக விழிப்போடிருக்க வேண்டும்; சுனையைப் பற்றி நாம் இவர்களிடம் மறந்துகூட வாய் திறக்கக்கூடாது. அடுத்தாற் போல், எவ்வளவு விரைவில்
நாம் இந்த இடத்தைவிட்டுக் கிளம்ப முடியுமோ அவ்வளவு விரைவில் கிளம்பவேண்டும்.”

“அம்மாவை விட்டுவிட்டா?” என்று கேட்டாள் ரோகிணி.

“இல்லை; அவளையும் அழைத்துக்கொண்டுதான்!”

“நம்மை இவர்கள் இனி எப்படி வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்?”

“அவர்களுடைய அனுமதியை எதிர்பார்த்தால் அது இந்தப் பிறவியில் கிடைக்காது. நாமாக முயற்சி செய்ய வேண்டியதுதான்.”

“தங்கள் சித்தப்படியே செய்யலாம், அப்பா! முதலில் ஒற்றர்கள் திரும்பி வருகிறார்களா இல்லையா என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு முறை அவசரப்பட்டு நாம் இங்கு வந்தது போதும். திரும்பவும் அதே தவறைச் செய்ய வேண்டாம்.”

“உன் யோசனையும் சரிதான்” என்று சொல்லிவிட்டு மௌனத்தில் ஆழ்ந்தார் மன்னர் மகிந்தர்.

ரோகிணியின் யோசனை சரியானதாக இருந்தாலும் அதை அவள் வேறு காரணத்துக்காகச் சொல்லி வைத்தாள். இளங்கோவின் நிலை என்ன ஆயிற்றென்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் உயிருடன் திரும்புவானா மாட்டானா என்ற முடிவு அவளுக்குத் தெரிந்தாக வேண்டும். முடிவு வேறுவிதமாக இருந்தால்கூட அதற்காக அவள் தன்னை வாழ்க்கை முழுவதும் வாட்டி வைத்துக் கொள்ளாமாட்டாள். அனுதாபம் மிகுதியால் அவளுக்குக்கண்ணீர்ப் பெருகலாம். அதைத் துடைத்துக்கொண்டால் துன்பம் பிறகு குறைந்து போகும்.

ஆம்; அவள் இளங்கோவை மரண தண்டனையிலிருந்து முதல் நாளிரவு காப்பாற்றினாள் என்றால், அதற்குக் காரணம் உயிருக்கு உயிரான நேசமென்று கூறிவிடமுடியாது. தன்னால் அவனுக்கு அந்தக் கதி வரக்கூடாதென்று மட்டிலுமே அவள் துடித்தாள். அவளிடம் அவன் கருணை காட்டினான்; அவளும் செய்நன்றி மறக்கவிரும்பவில்லை, அவ்வளவுதான்.

இரண்டுங் கெட்ட நிலையில் கிடந்து அடித்துக் கொள்ளத் தொடங்கியது ரோகிணியின் மனம். அவன் தன் முயற்சியில் வெற்றி பெறுவதும் அவளுக்குப்பிடிக்கவில்லை. உயிர் இழப்பதும் பிடிக்கவில்லை. வெற்றி பெற்றானென்றால் அது அவளுடைய நாட்டின் விருப்பத்திற்கு எதிராகச் செய்த செயலாகும்...விழுந்துவிட்டானென்றால் அவனைப்போல் மற்றொருவனைக் காண்பது அரிதினும் அரிது. எளிதில் மறந்துவிடக்கூடியவனாக அவனும் அவளிடம் நடந்து கொள்ளவில்லையே.

உணவு வேளையில் இராஜேந்திரரும் வல்லவரையரும் மகிந்தரின் அருகிலிருந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டே உணவு கொண்டனர். தாம்பூலம் தரித்துக்கொண்ட பின்னர் மாமன்னர் சுற்றிலும் நின்றுகொண்டிருந்த பணியாட்களை ஒருமுறை பார்த்தார். அவர்கள் அனைவரும் விலகிச் சென்றவுடன் மூவருக்கும் தனிமை கிடைத்தது.

“கொடும்பாளூர் இளவரசன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை...” என்று தொடங்கினார் வல்லவரையர்.

“அந்த இளைஞனை நான் முதலில் ஒற்றனென்று நினைத்துத் துன்புறுத்தியதென்னவோ உண்மைதான். பிறகே அவன் தங்கள் தூதுவனென்றுதெரிந்தது. மரண தண்டனை விதித்த பின்பு அதை மாற்றி அவனை மன்னித்துவிட்டேன்.”

நாடற்ற மன்னருக்குத் தண்டனை விதிக்கும் அதிகாரமா? என்று நினைத்த வல்லவரையர், “மரண தண்டனையா?” என்று பதற்றத்துடன் கேட்டார். இராஜேந்திரரின் விழிகள் மகிந்தரின் முகத்தில் பதிந்திருந்தன.

“மன்னித்து விட்டேன் என்று நான் கூறவில்லையா?”

“இது மெய்தானா?” என்ற மெதுவாகக் கேட்டார் மாமன்னர்.

“ரோகணத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என்னால் அவனுக்கு ஒரு தீங்கும் நேரவில்லை. பொழுது விடிவதற்கு முன்பே என்னை விட்டுக்கிளம்பி வந்தான்.” மகிந்தரின் குரல் அச்சத்தால் நடுங்கியது.

“மாமா!” என்று வல்லவரையரின் பக்கம் திரும்பினார் சக்கரவர்த்தி. “உடனடியாக வீரர்கள் சிலரை அனுப்பி இளங்கோவைத் தேடிப் பார்க்கச்சொல்லுங்கள்.”

பின்னர் மகிந்தரைப் பார்த்து, “இரவில் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்; நாளைக்கு மற்றவற்றைப் பற்றிப் பேசலாம்” என்றார்.

இளங்கோவைத் தேடப் பத்துப் பன்னிரண்டு குதிரை வீரர்கள் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியே கிளம்பினார். மகிந்தர் எந்த வழியாக நகரத்துக்கு வந்தாரோ அதே பாதையில் அந்த வீரர்களுடைய குதிரைகளும் விரைந்து சென்றன.

தொடரும்









 
 
 
 
 
 
 

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...