Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-24

மாவாசைக்குப் பிறகு பத்துத் தினங்கள் சென்றன. இதற்குள் ரோகணத்தின் பல பகுதிகளுக்கும் சோழநாட்டு வீரர்கள், மன்னரையும் அமைச்சரையும் தேடுவதற்காக அனுப்பப்பட்டனர். ரோகணம் அவர்களுக்குப் புதிய இடம். சரியான சாலைகளும், புரவிகள் செல்லக்கூடிய பாட்டைகளும் அந்தப் பிரதேசத்தில் அருகியிருந்தன. தேடிச் சென்றவர்களில் பலர் சோர்ந்து திரும்பினர்! இன்னும் பலர் திரும்பவே இல்லை. அமைச்சர் கீர்த்தியின் முன்னேற்பாட்டால் மறைந்திருந்து தாக்கும் சிறு கூட்டத்தினர் அங்கங்கே தொல்லைகள் விளைவித்த வண்ணம் இருந்தனர்.

காடுகள், மலைகள், மடுக்கள், குகைகள், வனவிலங்குகளின்

மறைவிடங்கள் முதலியன நிறைந்த அந்தக் காட்டில் அவர்கள் தேடிச் சென்ற மனிதர்களும் அகப்படவில்லை; மணிமுடியும் அகப்படவில்லை.

இந்தப் பத்து நாட்களில் ஒரே ஒரு முறை ரோகிணி அரண்மனையைவிட்டு நகரத்துக்குள் சென்று வந்தாள். அவளுடைய பணிப்பெண்ணின் தகப்பனார் வீட்டிற்குச் சென்று வந்ததாக, இளங்கோவின் மூலம் வல்லவரையருக்குச் செய்தி கிடைத்தது. ரோகிணியின் நடவடிக்கைகளை

அவளுக்குத் தெரியாமல் கண்காணித்த இளங்கோ, அவள் சென்று வந்த வீட்டைச் சுற்றிலும் ஒற்றர் சிலரை நிறுத்தி வைத்தான். அந்தப்புரத்தின் வடக்குவாயில் மதிலில் ரோகிணி ஏற்படுத்தியிருந்த பாதையைப் பார்த்தபிறகு, அதைப் போன்ற மற்ற ரகசிய வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அரண்மனையைவிடச் சக்கரவர்த்தி தங்கியிருந்த

பெரிய மாளிகையே மிகவும் விசித்திர வழிகள் நிறைந்ததாக இருந்தது. அமைச்சர் கீர்த்தியின் உறைவிடமாக இருந்ததாம் அது. அந்த மாளிகையின் சுவர்களுக்குள்ளிருந்து சில பேழைகள்அகப்பட்டன. அவற்றில் எதற்குள்ளும் மணிமுடி இருக்கவில்லை. ஆனால் மணிமுடியைக் காட்டிலும் மிகவும் பொறுப்புள்ள பொருள்கள் கிடைத்தன.அமைச்சர் கீர்த்தியின் எதிர்காலத் திட்டமே அங்கிருந்த சில ஓலைச்சுவடிகளில் மறைந்திருந்தது.

ஓலைச்சுவடிகளைக் கைப்பற்றிய மாமன்னர் அவற்றைத் தமது அறைக்கு எடுத்துச் சென்று ஆராயலானார். படிக்கப் படிக்க அவரை வியப்பும்,திகைப்பும், பரபரப்பும் ஆட்கொள்ளத் தொடங்கின. அமைச்சர் கீர்த்தி கைதேர்ந்த ராஜதந்திரி என்பதும், துணிச்சலும் பேரார்வமும் கொண்ட வீரர் என்பதும் அவரது வழிகள் பயங்கரமானவை என்பதும் விளங்கலாயின.

வல்லவரையரையும் இளங்கோவையும் வரவழைத்து அவர்களுடன் அந்தஓலைச்சுவடிகள் தெரிவித்த செய்திகளைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.‘மணிமுடியைக் கைப்பற்றுவதோடு போராட்டம் ஓய்ந்துவிடப்போவதில்லை.

தொடர்ந்து போராட்டம் நடைபெற வேண்டிய நாடு ரோகணம்’ என்ற எண்ணம் மாமன்னரிடம் நன்கு பதிந்துவிட்டது.

இரவெல்லாம் தனித்திருந்து சுவடிகளைப் புரட்டியதால் இராஜேந்திரரின் கண்கள் கோவைப் பழங்களெனச் சிவந்திருந்தன. சிந்தனை செய்ததால் ஏற்பட்ட வெம்மை அவருடைய முகத்தில் படர்ந்திருந்தது.

வல்லவரையரைப் பார்த்து, “மாமா, நம்மில் யாருக்காவது அமைச்சர் கீர்த்தியும், சுந்தர பாண்டியரும் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியுமா?”என்று கேட்டார்.

“என்ன!”

“ஆமாம், அவர்கள் இருவரும் மைத்துனர்கள்.”

“சுந்தரபாண்டியரின் தங்கையைக் கீர்த்தி மணந்திருக்கிறாரா?” என்று வியப்புடன் கேட்டார் வல்லவரையர்.

“இல்லை. கீர்த்தியின் தங்கை, சுந்தர பாண்டியரின் மனைவி. இந்த உறவு இன்று நேற்று ஏற்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.”

“தமிழர்களை அடியோடு வெறுக்கும் கீர்த்தியா தம் தங்கையை

சுந்தரபாண்டியருக்குக் கொடுத்திருப்பார்? என்னால் அதை நம்பவே முடியவில்லையே!”

சுந்தரபாண்டியர் கீர்த்திக்கு எழுதியிருந்த ஓலைகளை வல்லவரையரிடம் கொடுத்து, “இவற்றைப் பாருங்கள்: பகையிடத்தே உறவு கொள்வதென்பது நம்முடைய ராஜகுலப் பழக்கந்தான். அதையொட்டியே கீர்த்தியும் இப்படிச்

செய்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் இராஜேந்திரர்.

‘பகையிடத்தே உறவு கொள்வது பழக்கந்தான்’ என்ற மாமன்னரின் சொற்கள், தேன் துளிகளாகச் சுவை தந்தன இளங்கோவுக்கு. அப்படியென்றால் அவனுடைய சொந்த விஷயத்துக்கும் அது பொருந்துமல்லவா?

சுவடிகளைப் பர்த்த வல்லவரையர், “நம்பத்தான் வேண்டியிருக்கிறது, இந்த உறவை!’’ என்றார். “பாண்டியர்களின் உறவால் முதலில் நம்முடைய

வலிமையைச் சிதைத்துவிட்டு, அடுத்தாற்போல் அவர்களுக்குக் குழி பறிக்கவும்

வகை செய்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தி.”

“பாண்டியர்களுக்குரிய முடியை அவர்களிடம் கொடுக்கவில்லை. பெண்ணைக் கொடுத்திருக்கிறார்கள்! எல்லாம் விந்தையாயிருக்கிறது!” என்றான் இளங்கோ.

“விந்தையொன்றுமில்லை; இது ராஜதந்திரம்!” என்றார் இராஜேந்திரர்.“உரிமையைக் கொடுப்பது வேறு! பெண் கொடுப்பது வேறு. பார்க்கப்போனால் பெண் கொடுப்பது ஒரு வகையில் உரிமையைப் பறிப்பதாகும். ஏன்,வேங்கி நாட்டுக்கு நாம் கொடுக்கவில்லையா?”

வேங்கி நாட்டுப் பேச்சை மாமன்னர் எடுத்தவுடன் இளங்கோவுக்கு என்னவோ போலிருந்தது. அவன் முகம் சுருங்கியது. இராஜேந்திரரின் தங்கை சிறிய குந்தவையாரின் மகன் நரேந்திரன் இப்போது வேங்கி நாட்டு இளவரசன், அருள்மொழி நங்கைக்கு அத்தை மகன்!

‘கொடும்பாளூர் உறவு பரம்பரை பரம்பரையாக வந்த பழைய உறவு; இவர்களுக்கென்னவோ புதிய உறவின் நினைவுதான் அடிக்கடி வருகிறது!’என்று எண்ணிப் புழுங்கினான் இளங்கோ.

அப்போது வாயிற்கதவருகே பரபரப்போடு ஒரு வீரன் வந்து நிற்கவே அவனை அருகில் வரச் சொல்லி சைகை செய்தார் சக்கரவர்த்தி. ரோகிணியின் நடவடிக்கைகளைக் கவனிக்க இளங்கோவிடம் ஏவல் செய்த ஒற்றன் அவன்.

இரண்டு நாழிகைப் பொழுதுக்கு முன்னால் ரோகிணி நகரத்துக்குள் சென்ற செய்தி அவர்கள் அனைவருக்கும் தெரியும். முன்பு திரும்பியதைப்போல் இப்போதும் திரும்பி விடுவாள் என்றே இளங்கோஎண்ணியிருந்தான்.

“என்ன செய்தி?” என்றான் இளங்கோ.

“பணிப்பெண்ணின் வீட்டுக்குள்ளேதான் இன்றைக்கும் நுழைந்தார்கள். அவர்கள் சென்ற அரை நாழிகைக்கெல்லாம் பணிப்பெண்ணின் தகப்பனாரும் ஓர் இளைஞனும் ஒரே குதிரையின் வெளியில் கிளம்பினார்கள். குதிரைமேல்

சென்ற இளைஞனைப் பார்த்தால்-”

“இளவரசியைப்போல் தோன்றுகிறது. அவ்வளவுதானே?”

“ஆமாம்.”

நகரத்தைவிட்டுக் கிழக்கே செல்லும் ஓர் ஒற்றையடிப் பாதையில் அவர்கள் குதிரை திரும்பியதாகவும், அந்தப் பாதையைப் பற்றி அவன் விவரம் விசாரித்துக்கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தான்!

“புறப்படு; இளங்கோ!” என்று கட்டளையிட்டார் சக்கரவர்த்தி.

“இளங்கோவை அனுப்பிவிட்டு வாருங்கள்” என்று வல்லவரையருக்கும் விடைகொடுத்து அனுப்பினார்.

தொடரும்

















 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...