Skip to main content

நெருடிய நெருஞ்சி 16.




எல்லோரும் ஒழுங்கையில் இறங்கினார்கள். நான் சிறிது தாமதித்தேன் என்னைப் பாரத்த மனைவி ,

" என்ன " ? என்பது போலப் பார்த்தா .

" நீங்கள் போங்கோ நான் வாறன் "?

" ஏன் " ?

" நீங்கள் போங்கோ எண்டுறன் " .

கலங்கிய கண்களுடன் கடுமையாக எனது வாயில் இருந்து வார்த்தைகள் துப்பின . எனது மனவலிகளுக்காக மனைவியுடன் கடுமையாக நடக்கின்றேனோ ? எனது நிலையைக் குறிப்பால் உணர்ந்த மனைவி ,

" நிண்டு மினைக்கெடாமல் கெதீல வாங்கோ" என்றவாறே , வீட்டை நோக்கித் தங்கைச்சி பிள்ளைகளுன் நடக்கத் தொடங்கினா . தனித்து விடப்பட்ட என்னுள் ஊழிப் பிரளயமே நடந்தது. எனது 25 வருடத்து ஏக்கம் என்னை அறியாமல் கண்ணால் பெருக்கெடுத்து ஓடியது . காலை வேளையாகையால் வீதி ஓரளவு பரபரத்துக் காணப்பட்டது . சிறுவயதில் ஓடி ஆடி பல கதைகள் பேசி, புழுதி மண் தோய நடந்த ஒழுங்கையும் அதன் வாசலும் என்னை அன்னியனாகவே வெறித்துப் பார்த்தன. என்னை யரும் அடையாளம் காணுகின்றார்களா ? என்ற ஏக்கத்துடன் இருபக்கமும் திரும்பிப் பார்த்தேன் . யாருமே என்னை அடையாளம் காணவில்லை நான் உடைந்து நொறுங்கிப்போனேன் ஒரு பாடலில் ஓளவையார் இப்படிப் பாடுவார் " கொடிதிலும் கொடிது அன்பிலாப் பெண்டில் இட்ட உணவு " என்று என்னைக் கேட்டால் , " கொடிதிலும் கொடிது பிறந்து வழர்ந்து தவள்ந்து விளையாடிய இடத்தில் யாரும் அடையாளம் காணாது அன்னியனாகப் பே முழி முழிப்பது தான் ". அம்மாவின் நினைவு வேறு வந்து தொலைத்தது . எப்படி அம்மா இல்லாத வீட்டைப் பார்க்கப் போகின்றேன் ? என்னுடன் தானே அம்மா இட்டமாக இருந்தா . கண்ணால் வந்த வெள்ளத்தால் மனது இலேசாக இருந்தது . தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தேன் . வீட்டு வாசலில் எனது வரவை எதிர்பார்த்து எனது கடைசித் தங்கைச்சி தனது பிள்ளையுடன் நின்றிருந்தாள் . என்னைக் கண்டதும் தங்கைச்சி பெரிதாக அழத்தொடங்கி விட்டாள். குழந்தையோ மலங்க மலங்க முழித்தது. நான் அவளின் முகத்தை நேரடியாகப் பார்க்கத் தையிரியம் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கைகால் முகம் கழுவிக் கொள்ளப் போய்விட்டேன் . மனைவி தங்கைச்சியைத் தேற்ரிக்கொண்டிருந்தா . கைகால் கழுவப் போன நான் கிணத்தைக் கண்டதும் , வந்த புழுகத்தால் வாழியால் அள்ளிக் குளிக்கத் தொடங்கினேன் . குளிர்ந்த நீர் கொதித்த மனதிற்கும் உடலுக்கும் இதமாக இருந்தது . கிணற்றினுள் இரண்டு சோடி தங்கமீன்கள் ஓடித்திரிந்தன . சிறுவனாக இருந்தபொழுது அண்ணைக்குத் தெரியாமல் நண்பனுக்கு கொடுப்பதற்காக மீன்பிடித்தபொழுது வாங்கிய அடி ஞாபகத்துக்கு வந்தது , எனக்குள் சிரித்துக் கொண்டேன் . குளித்து முடிந்தபின் சாமி அறைக்குள் உள்ளட்டேன் . அம்மாவும் அப்பாவும் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள் . அம்மாவை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன் . அம்மா நல்ல வடிவு. சாவித்திரி மாதிரி இருப்பா . நான் படுத்து எழும்பிய பெரிய கட்டில் என்னுடன் பல கதைகள் கதைத்தது . தங்கைச்சி சீனி போடாமல் தேத்தண்ணி கொண்டுவந்து தந்தாள் . அவளுடன் வந்த குழந்தை அவளுக்குப் பின்னால் நின்று எட்டிப் பாத்தது . அவளிற்கும் கலியாணம் நடந்தது எனக்குச் செய்தியாகத் தான் வந்தது . அவளின் கணவர் ஏகத்துக்கம் வெக்கப்பட்டார் . அண்ணை வெளியில் போயிருந்தபடியால் , எங்கள் பிள்ளையார் கோயலடிக்கு தங்கைச்சியின் பிள்ளையுடன் போனேன் . ஒழுங்கையால் மருமகளுடன் நடப்பது மனதிற்கு இதமாக இருந்தது . மருமகள் மழலையில் ஏதேதோ கதைத்துக்கொண்டு என்னுடன் தளிர்நடையில் வந்ததால் எனது நடைவேகம் குறைந்தது . நான் மழைகாலத்தில் நீச்சலடித்து விழையாடிய கோயில் கேணி என்னைப் பாத்துச் சிரித்தது. கேணியடியும் காலத்தின் கோலத்தால் ஓரளவு வயதாகி இருந்தது . கேணியின் அருகே இருந்த சம்புப்புல் தரவை பரந்து விரிந்திருந்தது . தூரத்தே கைதடிப் பாலம் தெரிந்தது. இந்தத் தரவையால் சிறிது தூரம் நடந்து போனால் கோப்பாய்க் கடல் ( உப்பங்களி ) வரும். கோடைகாலத்தில் உப்பு எடுக்கப் போவோம். இதில் மாரிகாலத்தில் இடுப்பளவிற்கு தண்ணி நிக்கும். கைதடிப்பாலம் தான் எங்கட நீச்சல் இடம். இந்தப் பாலத்தடீல கண் சிவக்கச் சிவக்க நீந்திப்போட்டு , அப்படியே கைதடிச் சந்திக்குப் போய் மலையாளத்தான்ரை கடைல போய் மாசால் தோசையும் பிளேன் ரீயும் குடிக்கிறது அப்ப எங்களுக்கு உலகமகா திறில். தூரத்தே மாடுகள் புல்லு மேய்ந்து கொண்டிருந்தன . பக்கத்தே நின்ற இலுப்பை மரத்தில் அணில்களும் , குருவிகளும் , சத்தத்தில் போட்டி போட்டன . கோயிலில் பூசை முடிந்து , கோயில் வளாகம் அமைதியாக இருந்தது . கண்ணை மூடிப் பிள்ளையாரைக் கும்பிட்டேன் . என்னைப் பார்த்து மருமகளும் கும்பிடுவது போல் பாவனை செய்தாள் . எனக்குச் சிரிப்பாக வந்தது . நானும் , தங்கைச்சியும் சிறுவயதில பஞ்சாமிர்தம் வாங்க இதில நிண்டு சண்டைபிடிச்சது ஞாபகம் வந்தது . ஐய்யரும் கூட கும்பிடிற பிள்ளையளுக்குக் கனக்க பஞ்ஞாமிர்தம் குடுப்பர் . தங்கைச்சியும் இதைசாட்டிக் கொஞ்சம் கூடக் கும்பிடுவள் .

கோயிலை விட்டு வெளியேறி வந்து கேணிக் கட்டில் வந்து அமர்ந்தேன் . பொக்கற்றுக்குள் இருந்த சிகரட்பைக்கற்ரினுள் இருந்து ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ர வைத்தேன் . சோழகம் வரவதற்கு அறிகுறியாக காத்து உரப்பாக வீசியது . சிறு வயதில் பட்டம் விடுவதும் எங்கடை பிரதான பொழுது போக்கு . எட்டுமூலை , கொக்கு , வட்டம் , சதுரம் , எண்டு அண்ணை விதம்விமாகக் பட்டம் கட்டுவார். நாங்கள் அவருக்கு உதவியளர்கள் மட்டுமே . மட்டுத்தாள் பேப்பராலைதான் பட்டத்தை ஒட்டுவம் . பின்னேரத்தில விண் பூட்டி , அதின்ர சத்தத்தோட பட்டங்கள் இந்த தரவைவேல அணிவகுக்கும் . இதுக்குள்ள மற்றவ எங்கடை பட்டங்களை அறுக்கவும் வருவினம் . அதில எங்களுக்கை அடிபாடும் வரும் . நாங்கள் அண்ணைக்குப் பின்னால நிண்டு கொண்டு காய்கூய் எண்டு சத்தம் போடுவம் . நேரம் 11 ஐத் தாண்டி இருந்தது . ஒழுங்கையால் ஒரு நடுத்தர வயது பெண்ணும் இரு இழம் பெண்களும் கேணியடியை நோக்கி வந்தார்கள் . கிட்ட வர அவர்களை உற்றுப்பார்த்தேன் . எங்கையோ பாத்தமாதிரி இருக்கே ? அவர்கள் கிட்ட வர எனது பார்வையால் , அவர்களது நடை தயங்கியது . எனக்குப் பொறி தட்டியது அவளேதான் சின்ன வயதில் எனக்கு கடிதம் தந்தவள் . எனது நண்பனின் தங்கைச்சி பாமினி. ஒரு புன்சிரிப்புடன்,

" நீங்கள் குமரன்ர தங்கைச்சி பாமினி தானே ?"

"ஓம் ".

"நீங்கள்.................. "?

எண்டு இழுத்தாள்.

" என்னைத் தெரியேலையோ ? வடிவாய் யோசியுங்கோ . "ஓ.......... லோசினயக்கான்ர மகன் கண்ணன் தானே". "என்ரகடவுளே எப்ப பிரான்ஸ்சால வந்தனிங்கள் " ?

" இண்டைக்கு தான் இங்கை வந்தனான் ".

" எப்பிடி பாமினி சுகங்கள் "?

" ஏதோ இருக்கிறம் ".

" நீங்கள் வன்னீல இருந்ததாய் தங்கைச்சி சொன்னாள் ".

" ஓ........... இப்பதான் அல்லோலகல்லோப்பட்டு இங்கை வந்தம் ".

" இப்ப அம்மம்மான்ர காணிக்குள்ள இருக்கறம்".

அவளின் முகம் மாறி இருந்தது,

" குமரன் என்ன செய்யிறான்"?

" உங்களுக்குத் தெரியாதே ? அவர் மாவீரனா போட்டார் , புதுக்குடியிரப்புச் சண்ண்டைல நடந்தது ".

"என்ன...........?"

அவளின் கண்கள் குளமாகின.

" அப்ப உங்கடை அவர் "?

" இடப்பெயர்வில எங்கை எண்டேதெரியாது , என்ர பிள்ளையழும் நானும் தப்பனது அருந்தப்பு. இதால அம்மா மனம் பேதலிச்சுப் போனா "

" பாமினி அங்கத்தையான் நிலமையை சொல்லேலுமே"?

" இல்லைக் கண்ணன் நான் மறக்கப் பாக்கிறன்". அவளின் குரல் கரகரத்தது,

"நீங்கள போய் சாப்பிடுங்கோ வெய்யிலுக்கை நிக்கவேண்டாம்". கனத்த மனதுடன் வீட்டுக்கு மருமகளுடன் வீட்டை வந்தேன். அண்ணை வேலையால் வந்திருந்தார் . என்னைக் கண்டதும் கண்கலங்கயபடியே கட்டிப்பிடித்தார் .எல்லோரும் சாப்பட மேசையில் இருந்தோம் . தங்கைச்சி சமைத்த சாப்பாட்டைப் பார்த்து அதிர்ந்து விட்டேன் .





தொடரும்

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...