Skip to main content

மலர்ந்தும் மலராத….





அதிகாலைவேளை இருளும் வெளிச்சமும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. பனிப்புகாரும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அந்த விசாலமான வீட்டில் அமைதியின் ஆட்சி அட்டகாசமாக இருந்தது .அந்த விசாலமான படுக்கையிலே நிவேதிதா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் . அவளது உருள்கின்ற கண்கள அவள் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதைத் தெளிவாகவே காட்டியது . அவளது அறையின் பரந்த ஜன்னல்களின் அருகே நான்கைந்து சிட்டுக்குருவிகளின் கிலுகிலுப்பு அவளை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தது . கண்ணை மூடிக்கொண்டு அவளையறியாது அவளது கைகள் நரேனைத் தேடிப் படுக்கையில் துளாவியது. நித்திரையில் இருந்தவளை எழுப்பாது இதமான முத்தத்தை கொடுத்து விட்டு அதிகாலை வேளையிலேயே நரேன் வேலைக்குப்போனது நினைவு வரவே விலுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள் நிவேதிதா . ஆனாலும் அவளை ஓர் இனம்புரியாத அசதி ஆட்டிப்படைத்தது . தன்னால் நரேனுக்கு ஒரு கோப்பி போட்டுக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவளை வருத்தியது .

000000000000000000000000000000000000000

நிவேதிதா பிரான்சின் எவியோன் லே வான் நகரில் 7 பனிக்காலங்களை முடித்திருந்தாள் . இயற்கையிலேயே அமைதியை நாடிய நிவேதிதாவுக்கு நரேனும் , எவியோன் லே வான் நகரும் அவளது வாழ்வில் உயிர்பாகவே இருந்தது . குடும்பத்தில் ஒரே மகளான நிவேதிதா நரேன் எப்படியிருப்பானோ என்ற தயக்கத்துடனேயே நரேனைக் கைப்பிடித்தாள் . நரேனது அதிர்ந்து பேசாத ஆழ்கடல் அமைதி அவளை அவனிடம் இயல்பாகவே இறுக்கியது . ஆரம்பகாலங்களில் நிவேதிதாவிற்கு அகண்டு விரிந்த லுமென் வாவியும் தூரத்தே , தெரியும் கோடையிலும் பனி உருகாத எவியோன் மலைச் சிகரமுமே லயிக்கும் இடங்கள் . நேரம் போவது தெரியாமல் லுமென் வாவிக் கரையில் வேரோடிப்போயிருப்பாள் நிவேதிதா . நரேன் , நிவேதிதாவிற்கு கேட்காமலேயே குறிப்பறிந்து எல்லாவற்றையும் செய்து கொடுப்பான் .

பல்கலைகழக மாணவியான நிவேதிதா பிறென்ஞ் மொழியைப் படிப்பதில் அவளுக்குப் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லை . அவள் இலகுவாகவே ஓர் தொழில்சார் துறையொன்றைத் தெரிவு செய்து தனது பிறான்ஸ் வாழ்கையை உறுதியாக்கினாள் . அவளின் முன்னேற்றம் நரேனுக்கு மிகவும் மகிழ்சியைக் கொடுத்தது . தெளிந்த நீரோடைபோல் அவர்களது வாழ்க்கை அளவிலாச் சந்தோசத்துடன் ஓடிக் கொண்டிருந்தாலும் , அவர்கள் வாழ்வில் ஒருவித சோகம் என்னவோ ஓரமாக இழையோடிக்கொண்டுதான் இருந்தது.

அந்த அதிகாலையில் சுடச்சுட கோப்பியை போட்டுக்கொண்டு பல்கணி கதவைத் திறந்து தூரத்தே தெரிந்த லுமென் வாவியையையும் எவியோன் மலைச் சிகரத்தையும் கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள் நிவேதிதா . பனிக்குளிர் அவள் போட்டிருந்த ஸ்வெற்றரினுள் ஊடறுத்து மூசிப்பாய்ந்தது . நிவேதிதா குளிருக்கு இணைவாக கோப்பி கோப்பையை அணைத்துப் பிடித்தபொழுது , சூடான கோப்பியின் ஆவி அவளை ஒருவித மோனநிலைக்குத் தள்ளியது . ஏதோ ஓர் நெருடல் அவளை உந்தி தள்ள , உள்ளே சென்று தனது டயறியை அவசரமாகப் புரட்டினாள் . அதில் அவளது மாதாந்த சுற்றுகை போனமாதம் பதியப்படாமல் இருந்தது . இந்த முறையும் பீரியட் தள்ளிப் போச்சுதே என்று மனதில் எண்ணியவாறு , இன்று பின்னேரம் வேலையால் வரும் பொழுது டொக்ரர் அந்துவானைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேலைக்குப் போகத் தயாராகினாள் நிவேதிதா.

மாலைவேளை டொக்ரர் அந்துவானின் கிளினிக் ஓரளவு பரபரப்பு நிறைந்ததாகவே காணப்பட்டது . அந்துவான் அந்தநகரிலயே பிரபல்யமான டொக்ரர் . அந்துவான் திருமணம் தனது தொழிலுக்குத் தடையாக இருக்கும் என்று திருமணத்தைத் தனது தொழிலுக்காகத் தியாகம் செய்த இலட்சியவாதி . தனது முறை வந்தபொழுது மந்தகாசமான சிரிப்புடன் வரவேற்றார் அந்துவான் . நிவேதிதா தனது மாற்றங்களை மறைக்காது டொக்ரரிடம் சொன்னாள் . அந்துவான் பொறுமையாக் அவள் கூறியதைக் கேட்டுவிட்டு அவளது யூரினை பரிசோதித்து சிறிது நேரத்தில் சந்திக்கும்படி கூறினார் . அவள் தனது யூறினைக் கொடுத்து விட்டு ஒன்றும் புரியாதவளாகப் பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தாள் . அவளின் யூறின் ரெஸ்ற் அறிக்கை வந்தவுடன் அந்துவான் அவளைக் கூப்பிட்டார் . அந்துவான் சிறு சிரிப்புடன் அவள் கர்ப்பமாகியுள்ள விடையத்தை உறுதி செய்தார் . நிவேதிதாவிற்கு மகிழ்ச்சியில் என்னசெய்வதென்று தெரியவில்லை . அவள் சிறுபிள்ளைபோல் டொக்ரர் மேல் ஓ ஃபீமேல் ஓ என்று கேட்டாள் . அவர் சிரிப்புடன் நன்றாக சாப்பிடுங்கள் என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தார்.

நிவேதிதா இந்த விடையத்தை நரேனுக்கு றொமான்ரிக் ஆகவே சொல்ல ஆசைப்பட்டாள் . தன்னுடைய அம்மாவிற்கு சொல்ல கைகள் துறுதுறுத்தாலும் அவளிற்கு மனமெங்கும் நரேனே வியாபித்திருந்தாள் . பிள்ளை இல்லாத குறை நரேனில் இருந்தாலும் அவளிடம் அதை அவன் காட்டியதே இல்லை . அவள் ஏதாவது கதைத்தால் கூட இப்ப என்ன அவசரம் என்று புன்னகையுடன் கூறுவான். ஆனாலும் அவளால் அவனது மனவோட்டத்தை நன்றாக உணரக்கூடியதாக இருந்தது . அவன்மேல் வைத்திருந்த அன்பு அவளிற்குக் கூடியதே ஒழியக் குறையவில்லை . நிவேதிதா அவனுக்குப்பிடித்த கோதுமை மா புட்டும் ,கத்தரிக்காய் குளம்பும், முட்டைப்பொரியலும் பொரித்தாள் . வீட்டு லைற்றுகளை எல்லாம் அணைத்து விட்டு மெழுகுதிரிகளை ஏற்றினாள் . நிவேதிதா வெளியில் போய்வந்த களைப்புத் தீர நன்றாக முழுகினாள் . உடைமாற்றும்பொழுது அவளையறியாமலே அவளது கைகள் அவளது வயிற்றைத் தடவிப் பார்த்தன . உலகில் உள்ள எல்லாப் பெண்களும் இப்படித்தான் செய்வார்களோ ? தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில் அன்று உதித்த பூரணை நிலவு போல நன்றாகவே தெரிந்தது . நிவேதிதா உடையை மாற்றிக்கொண்டு நரேனின் வருகைக்காகக் காத்திருந்தாள் .

நிவேதிதா ஷம்பூ போட்டுக் குளித்திருந்தால் , அவளது நீண்ட தலைமுடி அவள் தோளெங்கும் விரிந்து பரவி அவளது அழகை மேலும் கூட்டியிருந்தது . அன்றுபார்த்து நரேன் வரத்தாமதமாகியது. நிவேதிதா பொறுமையிழந்து அவளது மடிக்கணணியை நோண்டத் தொடங்கினாள். அன்றய அலைச்சலினால் அவளையறியாமலே தூக்கம் அவளைத் தன்பிடியில் கொண்டு வந்தது . நரேனினது சூடான முத்தம் அவளை எழுப்பியது . நரேன் அவளையும் அந்த அறையினது மாற்றத்தையும் பார்த்து வியந்தவனாக,

" நல்லாத்தானே இருந்தனீர் ? "

என்று குறும்புடன் கேட்டான் . நிவேதிதா இடைமறித்து ,

"முகத்தைக் கழுவிக்கொண்டு வாங்கோ சாப்பிட " என்றாள் கள்ளச்சிரிப்புடன் .

"என்ன…. என்ன விசையம் ஒரு ரைப்பாய் இண்டைக்கு இருக்கிறீர் ? " என்று வினாவிய நரேனை இழுத்து அணைத்தவாறே ,

"கள்ளா என்னை அம்மாவாக்கிப் போட்டியேடா நல்லா இருப்பியா ? " என்று அவன் காதோரம் கிசுகிசுத்தாள் .

" என்னாது…… நீர் அம்மாவோ ? கிழிஞ்சுது போ....... . என்று நிவேதிதாவை ஆதரவுடன் அணைத்து முத்தமிட்டான் நரேன் . நரேன் இரண்டுபக்கத்து அம்மாமாருக்கும் செய்தியைச் சொல்லி வைத்தான் .

இரண்டுபக்க குடும்பமுமே நீண்டகாலத்திற்குப்பின்பு மலரப்போகும் அந்த புதியமலருக்காக ஆவலுடன் காத்திருந்தனர் . நீவேதிதா இப்பொழுது நிறையவே மாற்றங்களை உணர்ந்து கொண்டாள் . அவளால் முன்புபோல் இயல்பாக நடக்கமுடியவில்லை . அவளது புதியமலர் அவள் வயிற்றின் உள்ளே அங்கும் இங்கும் ஓடிவிளையாடி அவ்வப்பொழுது அவளை இடித்துக் கொண்டிருந்தது . நரேன் தனது பதியத்திற்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தான் .

நான்கு மாதங்களைக் கடந்த நிலையில் நரேன் ஒருநாள் மாலை நிவேதிதாவை வழமையான ஸ்கேன் செய்வதற்கு டொக்ரர் அந்துவானிடம் கூட்டிச்சென்றான் . அந்துவான் நிவேதிதாவை பரிசோதித்து விட்டு அவர்கள் இருவரையும் இருக்கச்சொன்னார் . வழமையாக சிரிப்புடனேயே காணப்படும் அந்துவானினது முகம் அன்று இறுகியிருந்ததை நிவேதிதா கவனிக்கத் தவறவில்லை . அவளது மனம் துணுக்குற்றது . அந்துவான் தனது குரலைச் செருமியவாறு அவர்களைப்பார்த்துச் சொல்லத்தொடங்கினார் .

"உங்கள் குழந்தைக்கு முள்ளந்தண்டு வடம் வளரவில்லை. மூளை வளர்ச்சியும் போதுமானதாக இல்லை . ஏறத்தாள 97 வீதம் ஹண்டிக்கப் ஆக உள்ளது . லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு ஏற்படும் . குழந்தை பிறந்தாலும் இந்தக்குழந்தையால் எழுந்திருக்கமுடியாது , நடக்க முடியாது . இதன் மூளை சீராக இயங்காது . இப்படியான குழந்தைகளை நாங்கள் ஆரம்பத்திலேயே பெற்றோர்களது சம்மதத்துடன் அழித்துவிடுவோம் . ஆனால் அதற்கான பிறப்புச் சான்றிதழும் , மரணச்சான்றிதழும் கொடுப்போம் . இதை இப்பொழுதே சத்திரசிகிச்சை மூலம் அழித்துவிடுவது நல்லது". 

என்று அந்துவான் அவர்களிடம் கூறி முடித்தார் .

நிவேதிதா அழுகையை அடக்கமாட்டாதவளாய் அழத்தொடங்கினாள் . நரேன் மனதில் எரிமலை குமுறிக் கொண்டிருந்தது .

"அதை அழித்துவிடுவோம் டொக்ரர் . நீங்கள் திகதியை குறியுங்கள் " . என்றான் . அந்துவான் ஒருகிழமை கழித்து தான் வேலை செய்யும் ஹொஸ்பிற்றலில் அந்தமலரைக் கசக்க நாளைக் குறித்தார் . நிவேதிதா முதலில் முரண்டு பிடித்தாலும் , நரேனின் யதார்த்தபூர்வமான ஆலோசனைகளும் , அரவணைப்பும் அவளை ஒரு நிலைக்கு கொண்டுவந்தன . சத்திரசிகிச்சையன்று இருவரும் கையொப்பம் இடவேண்டிய அனைத்துப்பத்திரங்களிலும் கையொப்பமிட்டனர் .


நரேனது முகம் இறுகிப்போயிருந்தது . சில மணித்துளிகள் நரேனைக் கடுமையாகச் சித்திரவதை செய்தன . அவனது பாழும்மனம் வேதனையில் அலைபாய்ந்து துவண்டது . அவனுக்குப் பின்னாலிருந்து அப்பா….. என்று கூப்பிடுவதுபோல் ஓர் உள்ளுணர்வு அவனைத் தாக்கியது . அங்கே அந்துவான் அவனது தோளை ஆதரவுடன் பற்றியவாறே மறுகையில் ஒரு குடுவையுடன் நின்றிருந்தார் . அவன் திரும்பியபோழுது அவனது இரத்தம் உயிரற்று இரசாயனக்கலவையில் மிதந்து கொண்டிருந்தது . நிவேதிதாவுக்குக் கொழுகொம்பாக நின்ற நரேனோ , தனது அழுகையைக் கட்டுப்படுத்தமுடியாதவனாக அந்தக் கசக்கிய மலரைப் பார்த்து வீரிட்டு அழுது கொண்டிருந்தான் .




March 04, 2013

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...