Skip to main content

வேங்கையின் மைந்தன் பாகம் 2 , 4. அகந்தைக்கார அழகி


இராஜேந்திரசோழப் பெரிய உடையார் தமது பரிவாரங்கள் புடைசூழ நாகப்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு, அருகில் இருந்த ஆனைமங்கலம் சோழ மாளிகையில் அன்றிரவுப் பொழுதைக் கழித்தார்.

ஜனத்திரளின் பெரும்பகுதி ஆனைமங்கலத்துக்கு அவரைப் பின்பற்றி வந்தது. ஆனைமங்கலத்தின் வரவேற்பு நாகப்பட்டினத்தின் வரவேற்பையும் மிஞ்சிவிட்டது. தெருக்கள் தோறும் குலை தள்ளிய வாழை மரங்களைக் கட்டியிருந்தார்கள். வீடுகள் தோறும் மாவிலைத் தோரணங்களும், மாவிலைக் குருத்துத் தோரணங்களுமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு நெல் குவித்து, அதன் மேல் முளைக்குடம் வைத்து, சுற்றிலும் தீபச் சுடரொளி பரப்பியிருந்தார்கள்.

பெண்டிரின் கைவண்ணம் அற்புதம் அற்புதமான மாக்கோலங்களாகத் தெருக்களில் மலர்ந்திருந்தன. மல்லிகை நிற மாவினால் புள்ளிக் கோலங்கள் தீட்டி, தாமரை நிறச் செம்மண்ணால் அவற்றுக்குக் கரை கட்டியிருந்தார்கள்.கோலப் புள்ளிகளின் மேலே பறங்கிப் பூக்களும், செவ்வல்லிகளும் சிரித்துக் கொண்டிருந்தன.

ஆடுவோர், பாடுவோர், சிலம்பம் விளையாடுவோர், கும்மியடித்துக் குரல் எழுப்புவோர், இப்படியாக ஆனை மங்கலமே ஆனந்தமங்கலமாக விளங்கியது. வாணவேடிக்கைகளால் ஆகாயமே நந்தவனமாக மாறி வானவில்லின் நிறத்தாலான நெருப்பு மலர்களைச் சொரிந்த வண்ணமாக இருந்தது. மறுநாள் அதிகாலையில் அவர்கள் மறுபடியும் பிரயாணத்தைத் தொடங்கி, பிற்பகலில் திருவாரூரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருகிக் கொண்டே வந்தது. களைத்துப்போய்ப் பின் தங்கியவர்கள் பலர் என்றால், புதிதாகக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டவர்கள் பலப்பலர்.

கூட்டத்தில் இருந்தவர்களுக்கு, பரிவாரங்களுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த ரதத்தில் இருந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மனப்போக்குப்படி நினைத்துக் கொண்டார்கள். ரதத்தை நெருங்கிச் சென்று அதற்குள்ளே இருந்தவர்களை யாராலும் பார்க்க முடியவில்லை. அதைச் சுற்றிலும் கடுமையாக கட்டுக்காவல் இருந்தது.

குதிரை வீரர்களின் வேல்முனைகள் சக்கரவட்டம் போல் ரதத்தை வளைத்துக்கொண்டிருந்தன; காற்றில் எப்போதாவது பட்டுத் திரைத்துணி படபடத்தபோது, கூட்டத்தினரின் விழிகள் அங்கே பாய்ந்து செல்லத் தவறவில்லை. பெண்களின் தலைகள் தெரிந்தன, பெரியவர் ஒருவரின் உடல் தெரிந்தது.

வீரமல்லன் மாத்திரமே ரதத்தின் அருகில் நெருங்கிச் சென்றான். அடிக்கடி அவன் உள்ளேயிருந்தவர்களிடம் ஏதோ பேசுவதுபோல் தோன்றியது. ஒருசமயம், அவன் கூட்டத்தினர் கொண்டு வந்து கொடுத்த இளநீரை ரதத்தில் வந்தவர்களுக்குக் கொடுத்தான். அடுத்தாற்போல், அவர்களுடைய சின்னஞ்சிறு தேவைகளையும் கவனித்து உடனுக்குடன் பூர்த்தி செய்துகொண்டு வந்தான்.

ஒரு தேவையும் இல்லாதபோதுகூட, அவர்களை உபசரிக்கும் சாக்கில் அவர்களுக்கு அன்புத் தொல்லைகள் கொடுத்து வரத் தொடங்கினான் வீரமல்லன்.

வழியில் அந்த ரதம் சில விநாடிகள் நின்றபோது அதை நெருங்கிச் சென்று அதன் திரையை விலக்கித் தலையை உள்ளே நீட்டிக்கொண்டு கூறினான், “தங்களுக்கு ஒரு குறையும் தோன்றாதவாறு கவனித்துக்கொள்ளும்படி சாமந்த நாயகர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். விருந்தோம்பும் பணியில் அணுவளவு நான் என் கடமையில் தவறிவிட்டாலும் அவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும். தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் என் ஆட்களும் எப்போதும் சித்தமாக இருக்கிறோம்! இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?’’

அவனுடைய கண்கள் அப்போது தன் முகத்தை வட்டமிடுவதைக் கண்ட ரோகிணிக்கு எரிச்சல் உண்டாயிற்று.

“சாமந்த நாயகர் கூறியதைவிடப் பன்மடங்கு நீ எங்களை அதிகமாக உபசரிக்கிறாய். உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றி’’ என்றாள் அவள்.

“ஆமாம்; நீ யார்? சோழ சாம்ராஜ்யத்தில் உனக்கு என்ன வேலை?’’

‘நீ’ என்று ஒருமையிலே ரோகிணி தன்னைக் குறிப்பிட்டது வீரமல்லனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் வயதில் சிறியவள், தோற்றுப்போன வேற்றுநாட்டு மன்னரின் மகள். அதற்காக வீரமல்லன் கவலைப்படவும் இல்லை. முதன் முறையாக அவள் தன்னைப் பொருட்படுத்திச் சில வார்த்தைகள் பேசியதே அவன் தலையைச் சுற்ற வைத்தது.

“நான் ஆயிரவர் படைத் தலைவன். என் பெயர் வீரமல்ல முத்தரையன்’’ என்றான் கர்வத்தோடு. “பொறுப்புள்ள கடமையென்பதால் இதற்கென என்னைத் தனியாகப் பொறுக்கி எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். முன்பே நானும் ஈழ நாட்டுக்கு வந்திருக்க வேண்டியவன். வந்திருந்தால் அங்கேயே தங்களைச் சந்தித்து மகிழ்ந்திருப்பேன்.’’

“இந்த மகிழ்ச்சியே உனக்குப் போதும்! இனிமேல் தந்தையாரோ நானோ அழைத்தால் நீ எங்கள் உதவிக்கு வரலாம். இப்போதைக்கு திரைத்துணியை மூடிவிட்டு, நீ சற்று உன் முகத்தை வெளியே இழுத்துக் கொள்கிறாயா?’’ என்றாள் ரோகிணி.

‘என்ன அகந்தை இவளுக்கு!’ என்று நினைத்துக் கொண்டே, அவ்விடத்தை விட்டு விலகிக்கொண்டான் வீரமல்லன். குதிரையில் ஏறிக்கொண்டு கூட்டத்தினரைச் சுற்றிப் பார்த்தான். எல்லோருடைய  கண்களும் அவன் மேல் பதிந்திருந்தன. அவனைச் சேர்ந்த வீரர்கள்கூட அவனைச் சற்றுப் பொறாமையோடு பார்த்தார்கள்.

மற்றவர்களுக்குக் கிடைக்காத பாக்கியம், அவர்களை நெருங்கி உரையாடும் பாக்கியம், தனக்கு மட்டும் கிடைத்தது பற்றி அவனுக்கு ஒரே பூரிப்பு. அந்தக் கர்வம் பிடித்த இளவரசி அவனிடம் என்ன பேசினாள் என்று மற்றவர்களுக்குத் தெரியவா போகிறது! வீரமல்லன் தன் தலையைத் தூக்கிக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலட்சியப் பார்வையால் கூட்டத்தினரின் மனப் புழுக்கத்துக்கு ஆளாகிக் கொண்டு, குதிரையின் கடிவாளத்தைச் சுண்டிவிட்டான்.

கூட்டத்தில் சிலர் இடித்துப் புடைத்துக் கொண்டு அவனைத் தங்களிடம் கூப்பிட்டுப் பார்த்தார்கள். “ரதத்தில் வருபவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்?’’ என்று அவனிடம் வினாக்களை வீசினார்கள். வீரமல்லன் அவர்களைத் திரும்பிப் பார்க்கவுமில்லை, அவர்களுக்கு விடையளிக்கவும் இல்லை.

“யாரோ ஈழநாட்டு விருந்தினர்கள். சக்கரவர்த்திகளுக்கு வேண்டியவர்கள். எங்களுக்கு யார் என்று தெரியாது’’ என்று பதிலளித்தான் முன்னால் சென்ற குதிரைச் சேவகன்.

வீரமல்லனின் குதிரை அவனிடம் விரைந்து சென்றது. “பேசாமல் வாயை மூடிக்கொண்டு போவதைவிட்டு, அவர்களிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது’’ என்று சீறினான்.

“நீங்கள் ரதத்துக்குப் பக்கத்தில் வருகிறீர்கள்; நாங்கள் மக்களிடம் நெருக்கடி பட்டுக்கொண்டு திண்டாடுகிறோம். அவர்கள் கேள்விக்கு ஏதும் மறுமொழி சொல்லாவிட்டால் உற்சாக வெறியில் அவர்கள் ரதத்தையே கூண்டோடு தூக்கிச் சென்று விடுவார்கள் போலிருக்கிறது. நம்முடைய அதிகாரத்துக்கு இது நேரமல்ல. அதோ பாருங்கள்! யானை மீதிருந்து சக்கரவர்த்திகள் அடிக்கடி இந்தப் பக்கமே திரும்பிப்
பார்த்துக்கொண்டு போகிறார்கள்.’’

வீரமல்லன் முன்னால் சென்றுகொண்டிருந்த யானைகளை ஏறிட்டுப் பார்த்தான். முதல் யானையின்மேல் அம்பாரியில் ஈழத்திலிருந்து கொண்டு வந்த மணிமுடி, உடைவாள், இந்திரனாரம் முதலிய அரசுரிமைப் பொருள்கள் இருந்தன. அடுத்தாற்போல் சென்ற யானையில் மாமன்னர் இராஜேந்திரரும் இளங்கோவும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

ஏற்கனவே வீரமல்லன் கண்டு ஆத்திரப்பட்ட காட்சிதான் அது. அந்த ஆத்திரம் இப்போது அவன் நெஞ்சில் நெருப்பாய்ப் பற்றியது. ‘சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியோடு சரிசமமாக அமர்ந்து செல்லும் அளவுக்கு இளங்கோவின் புகழ் உயர்ந்து விட்டதா?’

‘போர்க்களத்தில் எத்தனை எத்தனையோ வீரர்கள் மாண்டு மடிந்திருக்கிறார்கள். எத்தனை எத்தனையோ பேர் அங்க ஈனர்களாக மாறி இருக்கிறார்கள். கேவலம் ஒரு முடியைத் தேடிச் சென்று எடுத்து வந்து விட்டான் என்பதற்காகவா இத்தனை ஏற்றம் இவனுக்கு. என்னை ஈழத்துக்கு அனுப்பியிருந்தால் இந்தக் காரியத்தை நான் செய்திருக்க மாட்டேனா, என்ன? இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தில் இவன் ஒருவன் மட்டும்தானா வீரன்?’

வீரமல்லன் ஒருவனைத் தவிர வேறு யாருமே இப்படி நினைக்கவில்லை. ஈழத்துப் போர்க்களத்திலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய்த் திரும்பி வந்தவர்களும், தங்களது கைகால்களைப் பறிகொடுத்தவர்களும் இளங்கோவுக்குக் கிடைத்த பெருமையைத் தங்களுக்குக் கிடைத்ததாகவே நினைத்துக் கொண்டார்கள்.

நெருங்கிப் பழகிய ஒரே காரணத்தால் வீரமல்லனுக்கு இளங்கோவின் அருமை தெரியவில்லை. மலையின் அருகில் நிற்பவர்களால் அதன் அழகையும் கம்பீரத்தையும் காண முடியாது. தன்னைப்போன்ற ஒருவனைச் சக்கரவர்த்தி வேண்டுமென்றே உயர்த்திவிட்டதாக அசூயைப்பட்டான் வீரமல்லன்.

உயரப் பறந்த பருந்தைக் கண்டு, அதை ஒட்டிப் பறந்த ஊர்க்குருவின் பொறாமை கொள்ளத் தொடங்கியது.

வீரமல்லன் ரதத்தைத் திரும்பிப் பார்த்தான். அதன் பட்டுத் திரை சற்றே விலகியிருந்தது. அதற்குள்ளிருந்து எட்டிப் பார்த்த ரோகிணி, யானைமேல் சென்றுகொண்டிருந்த இளங்கோவின் முதுகுப்புறமாகத் தன் விழிகளை மிதக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...