Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 - 31



பெரும்பிடுகு முத்தரையரின் வரவைக் கண்டு திகிலடைந்த வீரமல்லன்,அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே முத்தரையரின் வலது கரம் தன் தோளை வளைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். கீழே நழுவி விழுந்துவிட்ட துணி மூட்டையைக் குனிந்து எடுத்துக்கொண்டு அவரைப் பார்த்து ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“நீங்கள் வீட்டிலில்லை. அதனால்...”

“அதனாலென்ன! திலகவதியைக் கண்டு பயந்தோடி வருகிறாயா?”அவனை அணைத்தபடியே கூடத்துக்குள் அழைத்துச் சென்றார் முத்தரையர்.“வீரனாகிய நீ ஒரு பெண்ணைக் கண்டவுடன் கோழையாகி விடலாமா?”

“அப்பா, கையில் வாளெடுத்தால்தான் இவர் வீரர். துணிமூட்டையைத்தோளில் தூக்கினாரோ இவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள்ளிருந்து கூடத்துக்கு வந்தாள் திலகவதி.

“நீங்கள் வீட்டிலில்லை என்று தெரிந்தவுடன் அவிழ்த்த மூட்டையை அவசரம் அவசரமாகக் கட்டிக் கொண்டு திரும்பிவிட்டார் அப்பா!”

திலகவதி சிறு குழந்தையல்ல, வயது வந்த குழந்தை என்பதைக் கண்டுகொண்டான் வீரமல்லன். சிறு குழந்தைகள் பெற்றோரிடம் ஏமாறுவார்கள்.வயது வந்த குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றித் தாங்கள் யாரைக்காதலிக்கிறார்களோ அவர்களிடம் ஏமாறுவார்கள்.

தன் மகளின் பேச்சைக் கேட்டுக் கலகலவென்று சிரித்தார் முத்தரையர்,“வீரமல்லா! உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னுடைய தொழில் உன்னை இப்படி மாற்றி வருகிறது. பேசாமல் நான் சொல்வதைக் கேள்! இந்தத் துணி மூட்டைக்குரிய பொன்னை இப்போதே உன்னிடம் தருகிறேன். கொண்டு போய் மெய்யப்பரிடம் வீசி எறிந்து விட்டு இங்கே வந்து விடு.”

புரிந்து கொள்ளாதவனைப்போல் அவரைப் பார்த்து விழித்தான் வீரமல்லன். அவனுடைய வெகுளித்தனமாக பார்வை அவருக்குப்பிடித்திருந்தது.

“இன்னும் உனக்கு விளங்கவில்லையா?” என்று கேட்டார் முத்தரையர்.

“வீசி எறிந்துவிட்டு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

“வா, தனிமையில் பேசுவோம்” என்று அவனைத் தோட்டத்து மரநிழலுக்கு அழைத்துக்கொண்டு போனார். இருவரும் மரத்தடி மேடையில் உட்கார்ந்தார்கள். வீரமல்லனின் கண்களைத் தமது கோழி முட்டை விழிகளால் உற்றுப் பார்த்துக் கொண்டே, “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்” என்றார் முத்தரையர்.

வீரமல்லனின் அடிவயிற்றை என்னவோ செய்தது. எதிலிருந்து அவன் தப்பிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தானோ, அது வேறு உருவத்தில் அவனை வளைத்துக் கொள்ளப் பார்த்தது. அவருடைய பகையையும் அவன் விரும்பவில்லை; உறவையும் எதிர்பார்க்கவில்லை.

“எந்த வாளால் நீ என் சொந்த வாளைத் தட்டி விட்டாயோ, அதையே உனக்கு வெகுமதியாகத் தருகிறேன். மெய்யப்பர் உனக்கு எவ்வளவு பொன்கொடுக்கிறாரோ, அதுபோல் இருமடங்கு நான் தருகிறேன்.”

மறுமொழி கூறாமல் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு யோசனை செய்தான் வீரமல்லன்.

“என்ன யோசிக்கிறாய்?”

“மெய்யப்பரிடம் ஊழியம் செய்வதாக நான் வாக்களித்திருக்கிறேன். உற்ற சமயத்தில் அவர் எனக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறார்.”

“நானும் உனக்கு உன் உயிரையே கொடுத்திருக்கிறேன். முதல் நாள் உன் முதுகில் வைத்த வாளை உள்ளே செலுத்தியிருந்தால் நீ என்ன ஆகியிருப்பாய்? இப்போது நினைத்தால்கூட நான் உன்னை எதுவும் செய்யமுடியும்.”

“அது வேறு விஷயம்; நீங்கள் என்னைப் பயமுறுத்துவதனால் பலனில்லை.”

அவனுடைய முதுகில் தட்டிக்கொடுத்தார் முத்தரையர். “உண்மையான முத்தரையனைப்போல் நீ பேசுகிறாய். உன்னுடைய வாள் வீச்சுத் திறமையால் மட்டும் நான் உன்னிடம் பற்றுதல் வைக்கவில்லை. நீயும் என்னைப்போல் ஒருமுத்தரையன். அதிலும் வெறுப்புக் கொண்டு சோழர்கள் படையிலிருந்து வெளியில் வந்தவன்.”

“அதற்காக?”

“என்னைச் சேர்ந்தவன் மூட்டை சுமந்து நாடோடியாய்த் திரிவது எனக்குப் பிடிக்கவில்லை.”

“எனக்குப் பிடித்திருக்கிறது!”

“பொய் சொல்லாதே. சுத்த வீரன் பேசுகிற பேச்சில்லை இது. இதோபார். உன்னைத் துரும்புக்குச் சமமாக மதித்த சோழர்களுக்கு எதிராக நீ போய்த் தூணைப் போல் நிற்கும் காலம் வரப்போகிறது. அப்போது நீ அவர்களை உன் விருப்பப்படியெல்லாம் பழிவாங்கிக் கொள்ளலாம்.”

வீரமல்லன் திடுக்குற்றான். “சோழர்களுக்கெதிராகவே என்னை வாள் எடுக்கச் சொல்கிறீர்களா?”

“அவசியம் நேர்ந்தால் அது உன் அதிர்ஷ்டம்தானே? உன்னை மதிக்காதவர்களை மிதித்தெறியும் வாய்ப்புக் கிடைத்தால் நீ அதை விட்டுவிடுவாயா? ஈழத்துக்கு ஏன் அவர்கள் உன்னை அனுப்பவில்லை?உன்னுடைய வீரத்தில், வாள் வீசும் திறமையில், அவர்கள் என்ன குறைகண்டு விட்டார்கள்?”

வீரமல்லனின் நெற்றி சுருங்கியது.

“நீ ஒரு முத்தரையன். அவர்களுடைய பழங்காலப் பகைவன். அதை நம்மவர்கள் மறந்தாலும் அவர்கள்ம றந்துவிடுவார்களா?”

“எனக்கென்னவோ சோழர்களுக்கெதிராக வாள் எடுக்கப் பிடிக்கவில்லை” என்றான் வீரமல்லன்.

“இப்போது ஒன்றும் அவசியமில்லை. யோசித்து மெதுவாக மறுமொழிசொல், போதும்!”

“யோசிப்பதற்கு ஒன்றுமில்லை.”

வீரமல்லன் இப்படிப் பிடிவாதமாக மறுத்துப் பேசவே அவன் மீது பெரும்பிடுகு முத்தரையருக்கு நம்பிக்கை வளர்ந்து கொண்டே போயிற்று. அவனிடம் தமக்குச் சுந்தர பாண்டியரிடமுள்ள செல்வாக்கையும், அதனால்

அவனுக்குக் கிடைக்கப் போகும் நன்மைகளையும், விவரித்தார். வருங்கால வாய்ப்புகள், பதவி உயர்வுகள், வீரத்துக்கான வெகுமதிகள் இவற்றையெல்லாம் விளக்கினார்.

அவன் மனம் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாகக் குழம்பத்தொடங்கியது. அதை அவன் கண்களின் வாயிலாக அளவெடுத்த முத்தரையர் தமக்குள் நகைத்துக் கொண்டார்.

“நீ இன்றைக்கு என்னுடைய விருந்தினன். வா, என்னோடு ஒன்றாகஉணவு கொள்” என்று அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். “பகல் முழுவதும் என்னோடு இருந்து விட்டு மாலையில் அங்காடிக்குத் திரும்பலாமல்லவா?”

வீரமல்லனால் அவரது உபசரிப்பை மறுக்க முடியவில்லை. அவர்தன்னை முற்றிலும் நம்பிவிட்டார் என்று தெரிந்தபிறது, அவரிடமிருந்து மேலும் சில செய்திகள் கிடைக்குமென்று எதிர்பார்த்தான் அவன்.

செய்திகளுக்குப் பதிலாக அங்கே அறுசுவை உணவு திலகவதியால் கிடைத்தது. திலகவதியே தன் கரத்தால் அவனுக்கு பரிமாறினாள். தந்தையும் மகளும் சேர்ந்து கொண்டு வற்புறுத்திச் செய்த விருந்தோம்பல் அவனைத் திணற வைத்துவிட்டது.

அவன் கொண்டு வந்திருந்த கச்சைகள் அனைத்துமே தனக்குப் பிடித்திருப்பதாகத் திலகவதி கூறினாள். அவற்றுக்குரிய பொற்காசுகளை முத்தரையரிடமிருந்து வாங்கிப் பத்திரமாக முடிந்து கொண்டான் வீரமல்லன்.

உண்ட களைப்பு உற்சாகப் பேச்சில் கழிந்தவுடன், “என்னோடு புறப்பட்டு வருகிறாயா, ஓரிடத்துக்குப் போய் விட்டு வருவோம்!” என்று கூறிக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கினார் முத்தரையர்.

“எங்க போக வேண்டும்?”

“என் பின்னால் வா, சொல்கிறேன்.”

குதிரைகள் இரண்டு பெரும்பிடுகு முத்தரையரின் மாளிகையிலிருந்து கிளம்பின. முத்தரையருக்குப் பின்னால் வீரமல்லன் சென்றான். நேரே அவர்கள் சுந்தரபாண்டியரின் அரண்மனை வாயிலுக்குச் சென்று தங்கள் குதிரைகளை நிறுத்தி இறங்கினார்கள்.

குதிரைச் சேவகர்கள் ஓடோடியும் வந்து குதிரைகளை பிடித்துக்கொண்டு அவர்கள் இறங்குவதற்கு உதவி செய்தார்கள். வழியில் நின்ற வீரர்கள் அனைவருமே தலைவணங்கி வணக்கம் செலுத்த முத்தரையர் நிமிர்ந்த

நடைபோட்டு உள்ளே சென்றார். அவருடன் சென்ற வீரமல்லனுக்கும் அவருக்குக் கிடைத்த மரியாதையில் பங்கு உண்டென்று தெரிந்தது!

வெளி வாயிலைக் கடந்து அவர்கள் உள்மண்டபத்துக்குள் நுழையுமுன்னரே சுந்தர பாண்டியருக்குச் செய்தி எட்டியிருக்க வேண்டும். தாமாக முன் வந்து முத்தரையரின் கரங்களைப் பற்றிக்கொண்டார்.அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வீரமல்லனைக் கண்டவுடன் பாண்டியரின் சிவந்த கண்கள் முத்தரையரிடம் சந்தேகத்துடன் வினாஎழுப்பின.

‘ஐயமுற வேண்டாம். நம்மைச் சேர்ந்தவன்தான்’ என்று தமது விழிகளாலேயே விடையளித்தார் பெரும்பிடுகு முத்தரையர். இதற்குள் வீரமல்லன் அளவுக்கு அதிகமான பணிவுடன் பாண்டிய மன்னருக்குத் தன் வணக்கத்தைச் செலுத்திக் கொண்டான்.

“நேற்று முன்தினம் என்னிடம் கூறியிருந்தீர்களே?” என்று சுந்தரபாண்டியர் ரகசியமாக முத்தரையரிடம் கேட்டதை அவர் இடைமறித்து “ஆமாம், ஆமாம், அதே இளைஞன்தான்” என்று பதிலளித்தார்.

சுந்தரபாண்டியரின் செவ்விழிகள் ஒருமுறை வீரமல்லனின் உச்சியிலிருந்து கணுக்கால் வரை ஊடுருவித் திரும்பின. செருக்கும் மிடுக்கும் குடிகொண்டிருந்த அவர் முகத்திலிருந்து வீரமல்லனால் எதையும் ஊகித்தறிய முடியவில்லை.

“சோழர்கள் படையிலிருந்து நீயாக விலகிக் கொண்டாயா? அல்லது அவர்களாகவே..

“நானாக விலகிக் கொண்டேன்.”

“அப்படியென்றால் அங்கிருந்து ஓடிவந்து விட்டாயென்று சொல்!”கணீரென்று வெண்கலக் குரலில் கேட்டார் சுந்தர பாண்டியர்.

“ஆமாம்” என்று பரிதாபமாகத் தலையாட்டினான் வீரமல்லன்.

அவனை ஓர் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, இருவரும் சிறிது நேரம் தனித்திருந்து பேசிவிட்டுத் திரும்பினார்கள். சுந்தர பாண்டியரின் முகத்திலிருந்த கடுகடுப்பு இப்போது ஓரளவு குறைந்திருந்தது.

“உன்னுடைய உணர்ச்சியை முத்தரையர் மதிக்கிறார். உன் வாள்பயிற்சியைப் பாராட்டுகிறார். வீரர்களிடம் எப்போதுமே பாண்டிய நாட்டுக்குத் தனிப் பரிவு உண்டு. முத்தரையர் கூறுவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.”

வீரமல்லனுக்குப் பாண்டியர் என்ன பேசுகிறார் என்று விளங்கவில்லை.

“ஓரிரண்டு வாரங்கள் செல்லட்டும். பொறுத்திரு, உன் திறமைக்கேற்ற வாய்ப்பு இங்கே கிடைக்கும்” என்றார் சுந்தர பாண்டியர்.

‘எந்த வாய்ப்பையும் தேடி நான் தங்களிடம் வரவில்லையே?’ என்று சொல்லவேண்டும்போல் தோன்றியது வீரமல்லனுக்கு. மெதுவாக முத்தரையரைத் திரும்பிப் பார்த்தான். அவர் அவனை மௌனமாக இருக்கும்படி சைகை செய்தார்.

மூவரும் பின்னர் மேல் மாடத்துக்குச் சென்றார்கள். மாடத்தின் பின் பகுதிக்கு அப்பால் வைகை நதி சோம்பலுடன் தவழ்வது தெரிந்தது.கூட்டங்கூட்டமாக வானத்தில் செங்கால் நாரைகள் பறந்து சென்றன.

“உனக்கு நன்றாக வளை எறி வீசத் தெரியுமென்று முத்தரையர் சொல்கிறாரே, இந்த நாரைகளில் ஒன்றை வீசி வீழ்த்துவாயா?” என்றார் பாண்டியர்.

முத்தரையர் விரைந்து சென்று, ஒரு வளை எறியைக் கொண்டு வந்து வீரமல்லனிடம் நீட்டினார். வளை எறியை கையில் பிடித்தவுடன் வீரமல்லன் வேறு மனிதனாகி விட்டான்.

“முதல் நாரையா! இடையில் உள்ளவற்றில் ஒன்றா! கடைசியில் பறப்பதா?”

சுந்தரபாண்டியர் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினார். வீரமல்லன் தன் விழிகளை இடுக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டே, “சொல்லுங்கள் அரசே?” என்று துடித்தான்.

“முதல் நாரை!” என்றார் பாண்டியர். பத்துப் பதினைந்து பறவைகளில் ஏதாவதொன்றை வீழ்த்துவதென்றாலே எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்.

வீரமல்லன் சுழற்றிவிட்ட சின்னஞ்சிறு வளை எறி விர்ரென்று மேலே வட்டமிட்டுச் சென்றது. அது புறப்பட்டது ஒரு திசை, திரும்பியது மற்றொருதிசை. மூன்றாவது திசையில் பறந்துகொண்டிருந்த முதல் நாரை தலைகுப்புறக் கீழே விழுந் கொண்டிருந்தது.

சுந்தரபாண்டியர் தமது செருக்கையும் மறந்து, “முத்தரையரே! இளைஞன் வல்லவன்தான்” என்று வாய்விட்டுக் கூறினார். “வல்லவன்தான். நல்லவன்தானா என்பதை மெல்லமெல்லதான் பார்க்கவேண்டும்” என்று அவர் காதோடு சொல்லி வைத்தார்.

பெரும்பிடுகு முத்தரையரும் வீரமல்லனும் சுந்தரபாண்டியரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். சுந்தரபாண்டியர்மு த்தரையரைத் தனியே அழைத்து, “இந்த இளைஞனின் கூற்று மெய்தானா என்பதை நம் ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்ள முயல்கிறேன்; மெய்யாக இருந்தால் இவன் நம்மிடம் பணியாற்றுவதில் தடையில்லை” என்றார். “இவனும் உங்கள் குலத்தைச்சேர்ந்தவன் என்பதால் நீங்கள் இவனை எளிதில் நம்பிவிட்டீர்கள் போலிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.”

சுந்தரபாண்டியர் இப்படிக் கூறிய பிறகுதான் முத்தரையருக்கே தாம் வீரமல்லன் விஷயத்தில் சிறிது அவசரப்பட்டு விட்டதாகத் தோன்றியது.

முத்தரையரோடு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டு விளக்கேற்றும் நேரத்தில் அங்காடியை நோக்கி நடந்தான்
வீரமல்லன். உடனடியாக சேனாபதி கிருஷ்ணன் ராமனிடம் சென்று, நேரில் தெரிவிக்க வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. முழுவதையும் சொல்லிவிடலாமா, ஒரு பாதியை மட்டும் சொல்லலாமா, அல்லது முழுவதையும் மறைத்து விடலாமா என்ற மனப் போராட்டத்தில் வீரமல்லன்
ஈடுபட்டிருந்தான்.

முழுவதையும் சொல்லிவிட அவனுக்கு விருப்பமில்லை. முழுவதையும் மறைப்பதற்கு அவன் மனம் இடம் தரவில்லை. திலகவதியின் வாயிலாகத் தெரிந்து கொண்டவற்றை மட்டும் கூறிவிட்டு, மற்ற விவரங்களை மறைப்பதென்ற முடிவுக்கு வந்தான். சோழர்களைப் பகைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் விரோதமில்லை.

மெய்யப்பரிடம் கச்சைகளுக்குரிய பொன்னைக் கொடுத்து விட்டு, சேனாபதியிடம் சென்று பாண்டியர்களும் ஈழத்தவர்களும் சேர்ந்து செய்திருக்கும் திட்டங்களைக் கூறினான். ஏற்கனவே மற்ற ஒற்றர்கள் வாயிலாக அவருக்கு அதே செய்திகள் கிடைத்திருந்தன. என்றாலும் வீரமல்லன் கூறியதை முற்றிலும் கேட்டுவிட்டு, “நாளைக்குப் பிற்பகல் தஞ்சைக்குப் புறப்படுவதற்குச் சித்தமாக இரு” என்றார்கிருஷ்ணன் ராமன்.

“தஞ்சைக்கா?”

“ஆமாம், போய்ப் படைத்தலைமையை ஏற்றுக் கொள். ஓலை
தருகிறேன். உன்னோடு இன்னும் சிலரும் வருவார்கள்!”

இந்தச் செய்தி வீரமல்லனுக்கு மகிழ்ச்சியளித்ததா, கவலையளித்ததா என்று அவனுக்கே தெரியவில்லை. தஞ்சைக்குப் போகுமுன்பு எப்படியாவது ஒரு முறை திலகவதியைப் பார்த்துவிட்டுப் போக நினைத்தான்.

தொடரும்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம