Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 - 31



பெரும்பிடுகு முத்தரையரின் வரவைக் கண்டு திகிலடைந்த வீரமல்லன்,அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே முத்தரையரின் வலது கரம் தன் தோளை வளைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். கீழே நழுவி விழுந்துவிட்ட துணி மூட்டையைக் குனிந்து எடுத்துக்கொண்டு அவரைப் பார்த்து ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“நீங்கள் வீட்டிலில்லை. அதனால்...”

“அதனாலென்ன! திலகவதியைக் கண்டு பயந்தோடி வருகிறாயா?”அவனை அணைத்தபடியே கூடத்துக்குள் அழைத்துச் சென்றார் முத்தரையர்.“வீரனாகிய நீ ஒரு பெண்ணைக் கண்டவுடன் கோழையாகி விடலாமா?”

“அப்பா, கையில் வாளெடுத்தால்தான் இவர் வீரர். துணிமூட்டையைத்தோளில் தூக்கினாரோ இவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள்ளிருந்து கூடத்துக்கு வந்தாள் திலகவதி.

“நீங்கள் வீட்டிலில்லை என்று தெரிந்தவுடன் அவிழ்த்த மூட்டையை அவசரம் அவசரமாகக் கட்டிக் கொண்டு திரும்பிவிட்டார் அப்பா!”

திலகவதி சிறு குழந்தையல்ல, வயது வந்த குழந்தை என்பதைக் கண்டுகொண்டான் வீரமல்லன். சிறு குழந்தைகள் பெற்றோரிடம் ஏமாறுவார்கள்.வயது வந்த குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றித் தாங்கள் யாரைக்காதலிக்கிறார்களோ அவர்களிடம் ஏமாறுவார்கள்.

தன் மகளின் பேச்சைக் கேட்டுக் கலகலவென்று சிரித்தார் முத்தரையர்,“வீரமல்லா! உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னுடைய தொழில் உன்னை இப்படி மாற்றி வருகிறது. பேசாமல் நான் சொல்வதைக் கேள்! இந்தத் துணி மூட்டைக்குரிய பொன்னை இப்போதே உன்னிடம் தருகிறேன். கொண்டு போய் மெய்யப்பரிடம் வீசி எறிந்து விட்டு இங்கே வந்து விடு.”

புரிந்து கொள்ளாதவனைப்போல் அவரைப் பார்த்து விழித்தான் வீரமல்லன். அவனுடைய வெகுளித்தனமாக பார்வை அவருக்குப்பிடித்திருந்தது.

“இன்னும் உனக்கு விளங்கவில்லையா?” என்று கேட்டார் முத்தரையர்.

“வீசி எறிந்துவிட்டு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

“வா, தனிமையில் பேசுவோம்” என்று அவனைத் தோட்டத்து மரநிழலுக்கு அழைத்துக்கொண்டு போனார். இருவரும் மரத்தடி மேடையில் உட்கார்ந்தார்கள். வீரமல்லனின் கண்களைத் தமது கோழி முட்டை விழிகளால் உற்றுப் பார்த்துக் கொண்டே, “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்” என்றார் முத்தரையர்.

வீரமல்லனின் அடிவயிற்றை என்னவோ செய்தது. எதிலிருந்து அவன் தப்பிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தானோ, அது வேறு உருவத்தில் அவனை வளைத்துக் கொள்ளப் பார்த்தது. அவருடைய பகையையும் அவன் விரும்பவில்லை; உறவையும் எதிர்பார்க்கவில்லை.

“எந்த வாளால் நீ என் சொந்த வாளைத் தட்டி விட்டாயோ, அதையே உனக்கு வெகுமதியாகத் தருகிறேன். மெய்யப்பர் உனக்கு எவ்வளவு பொன்கொடுக்கிறாரோ, அதுபோல் இருமடங்கு நான் தருகிறேன்.”

மறுமொழி கூறாமல் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு யோசனை செய்தான் வீரமல்லன்.

“என்ன யோசிக்கிறாய்?”

“மெய்யப்பரிடம் ஊழியம் செய்வதாக நான் வாக்களித்திருக்கிறேன். உற்ற சமயத்தில் அவர் எனக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறார்.”

“நானும் உனக்கு உன் உயிரையே கொடுத்திருக்கிறேன். முதல் நாள் உன் முதுகில் வைத்த வாளை உள்ளே செலுத்தியிருந்தால் நீ என்ன ஆகியிருப்பாய்? இப்போது நினைத்தால்கூட நான் உன்னை எதுவும் செய்யமுடியும்.”

“அது வேறு விஷயம்; நீங்கள் என்னைப் பயமுறுத்துவதனால் பலனில்லை.”

அவனுடைய முதுகில் தட்டிக்கொடுத்தார் முத்தரையர். “உண்மையான முத்தரையனைப்போல் நீ பேசுகிறாய். உன்னுடைய வாள் வீச்சுத் திறமையால் மட்டும் நான் உன்னிடம் பற்றுதல் வைக்கவில்லை. நீயும் என்னைப்போல் ஒருமுத்தரையன். அதிலும் வெறுப்புக் கொண்டு சோழர்கள் படையிலிருந்து வெளியில் வந்தவன்.”

“அதற்காக?”

“என்னைச் சேர்ந்தவன் மூட்டை சுமந்து நாடோடியாய்த் திரிவது எனக்குப் பிடிக்கவில்லை.”

“எனக்குப் பிடித்திருக்கிறது!”

“பொய் சொல்லாதே. சுத்த வீரன் பேசுகிற பேச்சில்லை இது. இதோபார். உன்னைத் துரும்புக்குச் சமமாக மதித்த சோழர்களுக்கு எதிராக நீ போய்த் தூணைப் போல் நிற்கும் காலம் வரப்போகிறது. அப்போது நீ அவர்களை உன் விருப்பப்படியெல்லாம் பழிவாங்கிக் கொள்ளலாம்.”

வீரமல்லன் திடுக்குற்றான். “சோழர்களுக்கெதிராகவே என்னை வாள் எடுக்கச் சொல்கிறீர்களா?”

“அவசியம் நேர்ந்தால் அது உன் அதிர்ஷ்டம்தானே? உன்னை மதிக்காதவர்களை மிதித்தெறியும் வாய்ப்புக் கிடைத்தால் நீ அதை விட்டுவிடுவாயா? ஈழத்துக்கு ஏன் அவர்கள் உன்னை அனுப்பவில்லை?உன்னுடைய வீரத்தில், வாள் வீசும் திறமையில், அவர்கள் என்ன குறைகண்டு விட்டார்கள்?”

வீரமல்லனின் நெற்றி சுருங்கியது.

“நீ ஒரு முத்தரையன். அவர்களுடைய பழங்காலப் பகைவன். அதை நம்மவர்கள் மறந்தாலும் அவர்கள்ம றந்துவிடுவார்களா?”

“எனக்கென்னவோ சோழர்களுக்கெதிராக வாள் எடுக்கப் பிடிக்கவில்லை” என்றான் வீரமல்லன்.

“இப்போது ஒன்றும் அவசியமில்லை. யோசித்து மெதுவாக மறுமொழிசொல், போதும்!”

“யோசிப்பதற்கு ஒன்றுமில்லை.”

வீரமல்லன் இப்படிப் பிடிவாதமாக மறுத்துப் பேசவே அவன் மீது பெரும்பிடுகு முத்தரையருக்கு நம்பிக்கை வளர்ந்து கொண்டே போயிற்று. அவனிடம் தமக்குச் சுந்தர பாண்டியரிடமுள்ள செல்வாக்கையும், அதனால்

அவனுக்குக் கிடைக்கப் போகும் நன்மைகளையும், விவரித்தார். வருங்கால வாய்ப்புகள், பதவி உயர்வுகள், வீரத்துக்கான வெகுமதிகள் இவற்றையெல்லாம் விளக்கினார்.

அவன் மனம் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாகக் குழம்பத்தொடங்கியது. அதை அவன் கண்களின் வாயிலாக அளவெடுத்த முத்தரையர் தமக்குள் நகைத்துக் கொண்டார்.

“நீ இன்றைக்கு என்னுடைய விருந்தினன். வா, என்னோடு ஒன்றாகஉணவு கொள்” என்று அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். “பகல் முழுவதும் என்னோடு இருந்து விட்டு மாலையில் அங்காடிக்குத் திரும்பலாமல்லவா?”

வீரமல்லனால் அவரது உபசரிப்பை மறுக்க முடியவில்லை. அவர்தன்னை முற்றிலும் நம்பிவிட்டார் என்று தெரிந்தபிறது, அவரிடமிருந்து மேலும் சில செய்திகள் கிடைக்குமென்று எதிர்பார்த்தான் அவன்.

செய்திகளுக்குப் பதிலாக அங்கே அறுசுவை உணவு திலகவதியால் கிடைத்தது. திலகவதியே தன் கரத்தால் அவனுக்கு பரிமாறினாள். தந்தையும் மகளும் சேர்ந்து கொண்டு வற்புறுத்திச் செய்த விருந்தோம்பல் அவனைத் திணற வைத்துவிட்டது.

அவன் கொண்டு வந்திருந்த கச்சைகள் அனைத்துமே தனக்குப் பிடித்திருப்பதாகத் திலகவதி கூறினாள். அவற்றுக்குரிய பொற்காசுகளை முத்தரையரிடமிருந்து வாங்கிப் பத்திரமாக முடிந்து கொண்டான் வீரமல்லன்.

உண்ட களைப்பு உற்சாகப் பேச்சில் கழிந்தவுடன், “என்னோடு புறப்பட்டு வருகிறாயா, ஓரிடத்துக்குப் போய் விட்டு வருவோம்!” என்று கூறிக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கினார் முத்தரையர்.

“எங்க போக வேண்டும்?”

“என் பின்னால் வா, சொல்கிறேன்.”

குதிரைகள் இரண்டு பெரும்பிடுகு முத்தரையரின் மாளிகையிலிருந்து கிளம்பின. முத்தரையருக்குப் பின்னால் வீரமல்லன் சென்றான். நேரே அவர்கள் சுந்தரபாண்டியரின் அரண்மனை வாயிலுக்குச் சென்று தங்கள் குதிரைகளை நிறுத்தி இறங்கினார்கள்.

குதிரைச் சேவகர்கள் ஓடோடியும் வந்து குதிரைகளை பிடித்துக்கொண்டு அவர்கள் இறங்குவதற்கு உதவி செய்தார்கள். வழியில் நின்ற வீரர்கள் அனைவருமே தலைவணங்கி வணக்கம் செலுத்த முத்தரையர் நிமிர்ந்த

நடைபோட்டு உள்ளே சென்றார். அவருடன் சென்ற வீரமல்லனுக்கும் அவருக்குக் கிடைத்த மரியாதையில் பங்கு உண்டென்று தெரிந்தது!

வெளி வாயிலைக் கடந்து அவர்கள் உள்மண்டபத்துக்குள் நுழையுமுன்னரே சுந்தர பாண்டியருக்குச் செய்தி எட்டியிருக்க வேண்டும். தாமாக முன் வந்து முத்தரையரின் கரங்களைப் பற்றிக்கொண்டார்.அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வீரமல்லனைக் கண்டவுடன் பாண்டியரின் சிவந்த கண்கள் முத்தரையரிடம் சந்தேகத்துடன் வினாஎழுப்பின.

‘ஐயமுற வேண்டாம். நம்மைச் சேர்ந்தவன்தான்’ என்று தமது விழிகளாலேயே விடையளித்தார் பெரும்பிடுகு முத்தரையர். இதற்குள் வீரமல்லன் அளவுக்கு அதிகமான பணிவுடன் பாண்டிய மன்னருக்குத் தன் வணக்கத்தைச் செலுத்திக் கொண்டான்.

“நேற்று முன்தினம் என்னிடம் கூறியிருந்தீர்களே?” என்று சுந்தரபாண்டியர் ரகசியமாக முத்தரையரிடம் கேட்டதை அவர் இடைமறித்து “ஆமாம், ஆமாம், அதே இளைஞன்தான்” என்று பதிலளித்தார்.

சுந்தரபாண்டியரின் செவ்விழிகள் ஒருமுறை வீரமல்லனின் உச்சியிலிருந்து கணுக்கால் வரை ஊடுருவித் திரும்பின. செருக்கும் மிடுக்கும் குடிகொண்டிருந்த அவர் முகத்திலிருந்து வீரமல்லனால் எதையும் ஊகித்தறிய முடியவில்லை.

“சோழர்கள் படையிலிருந்து நீயாக விலகிக் கொண்டாயா? அல்லது அவர்களாகவே..

“நானாக விலகிக் கொண்டேன்.”

“அப்படியென்றால் அங்கிருந்து ஓடிவந்து விட்டாயென்று சொல்!”கணீரென்று வெண்கலக் குரலில் கேட்டார் சுந்தர பாண்டியர்.

“ஆமாம்” என்று பரிதாபமாகத் தலையாட்டினான் வீரமல்லன்.

அவனை ஓர் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, இருவரும் சிறிது நேரம் தனித்திருந்து பேசிவிட்டுத் திரும்பினார்கள். சுந்தர பாண்டியரின் முகத்திலிருந்த கடுகடுப்பு இப்போது ஓரளவு குறைந்திருந்தது.

“உன்னுடைய உணர்ச்சியை முத்தரையர் மதிக்கிறார். உன் வாள்பயிற்சியைப் பாராட்டுகிறார். வீரர்களிடம் எப்போதுமே பாண்டிய நாட்டுக்குத் தனிப் பரிவு உண்டு. முத்தரையர் கூறுவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.”

வீரமல்லனுக்குப் பாண்டியர் என்ன பேசுகிறார் என்று விளங்கவில்லை.

“ஓரிரண்டு வாரங்கள் செல்லட்டும். பொறுத்திரு, உன் திறமைக்கேற்ற வாய்ப்பு இங்கே கிடைக்கும்” என்றார் சுந்தர பாண்டியர்.

‘எந்த வாய்ப்பையும் தேடி நான் தங்களிடம் வரவில்லையே?’ என்று சொல்லவேண்டும்போல் தோன்றியது வீரமல்லனுக்கு. மெதுவாக முத்தரையரைத் திரும்பிப் பார்த்தான். அவர் அவனை மௌனமாக இருக்கும்படி சைகை செய்தார்.

மூவரும் பின்னர் மேல் மாடத்துக்குச் சென்றார்கள். மாடத்தின் பின் பகுதிக்கு அப்பால் வைகை நதி சோம்பலுடன் தவழ்வது தெரிந்தது.கூட்டங்கூட்டமாக வானத்தில் செங்கால் நாரைகள் பறந்து சென்றன.

“உனக்கு நன்றாக வளை எறி வீசத் தெரியுமென்று முத்தரையர் சொல்கிறாரே, இந்த நாரைகளில் ஒன்றை வீசி வீழ்த்துவாயா?” என்றார் பாண்டியர்.

முத்தரையர் விரைந்து சென்று, ஒரு வளை எறியைக் கொண்டு வந்து வீரமல்லனிடம் நீட்டினார். வளை எறியை கையில் பிடித்தவுடன் வீரமல்லன் வேறு மனிதனாகி விட்டான்.

“முதல் நாரையா! இடையில் உள்ளவற்றில் ஒன்றா! கடைசியில் பறப்பதா?”

சுந்தரபாண்டியர் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினார். வீரமல்லன் தன் விழிகளை இடுக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டே, “சொல்லுங்கள் அரசே?” என்று துடித்தான்.

“முதல் நாரை!” என்றார் பாண்டியர். பத்துப் பதினைந்து பறவைகளில் ஏதாவதொன்றை வீழ்த்துவதென்றாலே எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்.

வீரமல்லன் சுழற்றிவிட்ட சின்னஞ்சிறு வளை எறி விர்ரென்று மேலே வட்டமிட்டுச் சென்றது. அது புறப்பட்டது ஒரு திசை, திரும்பியது மற்றொருதிசை. மூன்றாவது திசையில் பறந்துகொண்டிருந்த முதல் நாரை தலைகுப்புறக் கீழே விழுந் கொண்டிருந்தது.

சுந்தரபாண்டியர் தமது செருக்கையும் மறந்து, “முத்தரையரே! இளைஞன் வல்லவன்தான்” என்று வாய்விட்டுக் கூறினார். “வல்லவன்தான். நல்லவன்தானா என்பதை மெல்லமெல்லதான் பார்க்கவேண்டும்” என்று அவர் காதோடு சொல்லி வைத்தார்.

பெரும்பிடுகு முத்தரையரும் வீரமல்லனும் சுந்தரபாண்டியரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். சுந்தரபாண்டியர்மு த்தரையரைத் தனியே அழைத்து, “இந்த இளைஞனின் கூற்று மெய்தானா என்பதை நம் ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்ள முயல்கிறேன்; மெய்யாக இருந்தால் இவன் நம்மிடம் பணியாற்றுவதில் தடையில்லை” என்றார். “இவனும் உங்கள் குலத்தைச்சேர்ந்தவன் என்பதால் நீங்கள் இவனை எளிதில் நம்பிவிட்டீர்கள் போலிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.”

சுந்தரபாண்டியர் இப்படிக் கூறிய பிறகுதான் முத்தரையருக்கே தாம் வீரமல்லன் விஷயத்தில் சிறிது அவசரப்பட்டு விட்டதாகத் தோன்றியது.

முத்தரையரோடு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டு விளக்கேற்றும் நேரத்தில் அங்காடியை நோக்கி நடந்தான்
வீரமல்லன். உடனடியாக சேனாபதி கிருஷ்ணன் ராமனிடம் சென்று, நேரில் தெரிவிக்க வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. முழுவதையும் சொல்லிவிடலாமா, ஒரு பாதியை மட்டும் சொல்லலாமா, அல்லது முழுவதையும் மறைத்து விடலாமா என்ற மனப் போராட்டத்தில் வீரமல்லன்
ஈடுபட்டிருந்தான்.

முழுவதையும் சொல்லிவிட அவனுக்கு விருப்பமில்லை. முழுவதையும் மறைப்பதற்கு அவன் மனம் இடம் தரவில்லை. திலகவதியின் வாயிலாகத் தெரிந்து கொண்டவற்றை மட்டும் கூறிவிட்டு, மற்ற விவரங்களை மறைப்பதென்ற முடிவுக்கு வந்தான். சோழர்களைப் பகைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் விரோதமில்லை.

மெய்யப்பரிடம் கச்சைகளுக்குரிய பொன்னைக் கொடுத்து விட்டு, சேனாபதியிடம் சென்று பாண்டியர்களும் ஈழத்தவர்களும் சேர்ந்து செய்திருக்கும் திட்டங்களைக் கூறினான். ஏற்கனவே மற்ற ஒற்றர்கள் வாயிலாக அவருக்கு அதே செய்திகள் கிடைத்திருந்தன. என்றாலும் வீரமல்லன் கூறியதை முற்றிலும் கேட்டுவிட்டு, “நாளைக்குப் பிற்பகல் தஞ்சைக்குப் புறப்படுவதற்குச் சித்தமாக இரு” என்றார்கிருஷ்ணன் ராமன்.

“தஞ்சைக்கா?”

“ஆமாம், போய்ப் படைத்தலைமையை ஏற்றுக் கொள். ஓலை
தருகிறேன். உன்னோடு இன்னும் சிலரும் வருவார்கள்!”

இந்தச் செய்தி வீரமல்லனுக்கு மகிழ்ச்சியளித்ததா, கவலையளித்ததா என்று அவனுக்கே தெரியவில்லை. தஞ்சைக்குப் போகுமுன்பு எப்படியாவது ஒரு முறை திலகவதியைப் பார்த்துவிட்டுப் போக நினைத்தான்.

தொடரும்

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...