Skip to main content

குணா கவியழகனின் விடமேறிய கனவு - வாசிப்பு அனுபவம்



அண்மையில் பாரிஸில் வெளியிடப்பட்ட குணா கவியழகனின் "விடமேறிய கனவு" நாவல் வாசித்தேன் .நாவல் சொல்ல வந்த செய்தி , "இறுதி யுத்தத்தில் ஓர் போராளி சரணடைந்து அதன் தொடராக ஓமந்தை, செயின் ஜோசெப் படைத்தளம், மெனிக் பார்ம் முகாம்களில் நடைபெற்ற சித்திரவதைகளையும் ,அங்கிருந்த அவனைப் போன்ற சிறைக்கைதிகளின் வாழ்வு நிலை பற்றியும் நாவல் விபரிக்கின்றது. சிறுவயதில் தமிழகத்தைச் சேர்ந்த ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்த்த "பட்டாம் பூச்சி" (Papillon ) என்ற பிரெஞ் நாவல் இரண்டு முறை படித்திருக்கின்றேன். இது பிரெஞ் நாவலாசிரியரான ஹென்றி ஷாறியே (Henri Charrière) என்பவரால் 1969 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சுயசரிதை நாவலாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியம், மானுடத்தின் கௌரவம் என்ற கருவை பட்டாம் பூச்சி அதிகம் பேசியது. மனிதனின் தாக்கு பிடிக்கும் ஆற்றலுக்கும், விடா முயற்சிக்கும், சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்து காட்டாக இந்தக் கதையை அப்பொழுது வாசித்து உணர்ந்தேன். பின்னர் இந்த "பட்டாம்பூச்சி" நாவல், அமெரிக்காவை சேர்ந்த பிறாங்கிளின் ஜே .ஷஃபைனர் ( Franklin J. Schaffner ) இயக்கி "பப்பியோன்" (Papillon) என்ற ஆங்கிலத் திரைப்படமாக 1973 ஆண்டு வெளி வந்தது. அதில், "ஸ்டீவ் மக்வீனும், ஹாஃப்மெனும்" அற்புதமாக நடித்திருப்பார்கள். 


1931 -ம் ஆண்டு கொலையொன்றை செய்ததாக கதையின் நாயகன் மீது குற்றம் சாட்டப் பட்டு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டது . கொலை செய்யவில்லை என்பது நாவலின் நாயகனின் வாதம். ஒன்றல்ல இரண்டல்ல பதின் மூன்று தடவைகள் சிறை சிறையாக கதையின் நாயகன் தப்பி கொண்டிருந்தான் . இறுதியில் பிரெஞ் கயானவை சேர்ந்த "இல் து டியாபிள்" ( l'île du Diable ) என்ற மனித சஞ்சாரமற்ற தீவில் கதையின் நாயகன் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு மரணமாகின்றான். "பப்பியோன்" நாவலில் ஓர் சிறை வாழ்க்கையும் அதன் கொடூரங்களும் எப்படி இருக்கும் என்று மிகவும் தத்துரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். நான் "விடமேறிய கனவு" நாவலைவாசிக்கும் பொழுது எனது வாசிப்பு மனநிலையில் "பட்டாம் பூச்சி ( பப்பியோன் )" நாவலின் அரைப்பக்கத்தை தான் நூலாசிரியர் எட்ட முயற்சி செய்திருக்கின்றார் என்பது தெளிவாகியது .நாவலில் தத்துவ மழைகளைக் குறைத்து, சிறை வாழ்வின் அல்லது சித்தரவதை முகாமின் கொடூரங்களை நூலாசிரியர் இன்னும் அதிகமாக விபரித்திருப்பாரேயானால், ஈழத்து போர் இலக்கிய சூழலில் "பப்பியோனை" விட ஓர் படி மேல் சென்று காத்திரமானதோர் இடத்தைப் நூலாசிரியர் பிடித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. 


"எணைப்பிறை ( நஞ்சுண்ட காட்டில்)" இருந்த சொல்லாடலில் நெகிழ்வுத்தன்மையை நான் "விடமேறிய கனவு" வாசிக்கும் பொழுது என்னால் உணர முடியவில்லை. விடமேறிய கனவின் சொல்லாடல்களில் ஒருவிதமான வறட்சித்தன்மைகளே அதிகமாகக் காணப்பட்டன . நாவலின் தொடக்கத்தில் இருந்து நாவலின் நடுப்பகுதி வரை ஒரே தத்துவ மழையாக இருந்தது . அதாவது ஜெயகோவாவின் நூல்களான "காவல் கோபுரம் " மற்றும் "நம்பிக்கை ஒளி " போன்று இருந்தது. ஓர் படைப்பாளி தனது படைப்பில் அளவுக்கு அதிகமாக தத்துவங்கள் அல்லது போதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை .அதற்கு "மதபோதகர்கள்" இருக்கின்றார்கள். இப்படியான அதிக தத்துவ மழைகள் அல்லது போதனைகள் வாசகரின் மனதில் ஒருவிதமான சலிப்புத்தன்மையை உருவாக்குமே ஒழிய வாசகரை நாவலுடன் ஒன்றிணைய விடாது தடுத்து விடும் என்பது எனது அவதானிப்பு ஆகும் .


நூலாசிரியர் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்த படியால், நாவலின் புலி எதிர்ப்பு கருத்தியலை மிகவும் நுணுக்கமாக நாவலில் நகர்த்தி இருக்கின்றார் என்றே எண்ண இடமளிக்கின்றது .அதாவது தீவிர தேசியவாதிகளால் தன்னில் "துரோகிப்பட்டம்" விழாமலும், அதே வேளையில் மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் "புலி ஆதரவாளர்" என்ற கருத்து விழாமலும் தனது கருத்துக்களை நுணுக்கமாக நாவலினூடாக நகர்த்தி இருக்கின்றார். என்னைப்பொறுத்த வரையில் தற்போதுள்ள "குழுமவாதப் போர் இலக்கிய சூழலில்" இத்தகைய நகர்வு பாராட்டப்பட வேண்டியதொன்று என்றாலும் , மறுதலையாக இந்த வகையான நகர்வு நூலாசிரியரின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான் பார்த்த அல்லது எனது வாசிப்பு மனநிலையில், ஈழத்துப் போரியல் இலக்கியத் துறையில் இருக்கும் எழுத்தாளர்கள் எல்லோருமே தங்கள் தளங்களை நேர்மையாக வெளிக்காட்டியே தங்கள் படைப்புகளை வாசகர்களுக்குத் தந்தார்கள். அதில் ஆயிரம் விமர்சனங்கள் வாசகர்களுக்கு இருக்கலாம் . அனால் அதில் அவர்களது தளங்களை தெட்டத் தெளிவாக வாசகர்களுக்கு உணர்த்தியிருந்தார்கள் . ஆனால் விடமேறிய கனவு நாவலைப் பொறுத்த வரையில் நூலாசிரியர் "நடுவில் வாய்க்கால் வெட்டுவதாகவே" எண்ண இடமளிக்கின்றது. 


ஒரு நாவலுக்கு காலதேசவர்த்தமானங்கள் முக்கியமானது. அதன் அடிப்படியில் இந்த நாவலைப் பார்த்தால் .நாவலின் ஒருசில இடங்களில் நூலாசிரியர் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையில் கதையை கொண்டு சென்று இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. உதாரணமாகக் கதையின் நாயகன் தனது வாயில் உள்ள கொடுப்புப் பற்களின் அடியிலும், ஆசன வாயிலிலும் சயனைட் குப்பியை தொடர்சியாக மறைத்து வைத்திருந்ததைக் குறிப்பாகச் சொல்லலாம் . சாதரணமாக சயனைட் குப்பி 2 சென்ரி மீற்ரர் நீளமுள்ளது. உடலின் இந்த இரண்டு பாகத்திலும் ஏற்படுகின்ற உடல் வெப்ப மாற்றங்களினால் இவை இலகுவில் உடையக்கூடிய வாய்புகளே அதிகம் இருக்கின்றன. உதராணமாக போதைவஸ்துக் கடத்துபவர்கள் தங்கள் ஆசனவாயிலில் வைத்துக் கடத்தும் பொழுது உள்ளே ஏற்பட்ட உடல் சூட்டினால் போதைவஸ்து ஆசனவாயிலின் உள்ளே வெடித்து பல மரணங்கள் ஏற்பட்டதை நாங்கள் செய்திகளில் படித்திருக்கின்றோம் . அத்துடன் ஆசனவாயிலில் ஓர் பொருளை அடையும் பொழுது குடலின் சுற்றுச் சுருங்கல் முறைகளினாலும், மனிதன் உட்கொண்ட உணவினாலும் அந்தப் பொருள் இருக்கும் இடத்தை விட்டு கீழ் நோக்கி வரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆசனவாயில் ஓர் பொருளை மறைத்து வைத்திருப்பது என்பது ஒருசில மணிநேரங்களுக்கே சாத்தியமானது. ஆனால் நூலாசிரியர் தொடர்ச்சியாக வாயின் பல்லுக்கு அடியிலும், ஆசனவாயிலிலும் சயனைட் குப்பியை வைத்திருப்பதாக சொல்வது உணர்ச்சி பூர்வமாக வாசகரைக் வசப்படுத்துமே ஒழிய உணர்வு பூர்வமாக ஒருபோதுமே அவர்களை வசப்படுத்தாது .அத்துடன் இந்த சயனைட் குப்பி விடயமாக என் மனதிலே தோன்றியது என்னவென்றால் , சமாதான காலங்களின் பின்னர் சர்வதேசத்தின் பூரண ஆசியுடன் தனது பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்தி ஆசியாவிலேயே அதிஉயர் பாதுகாப்புகளைக் கொண்ட இலங்கை அரசின் இராணுவ சித்திரவதை முகாம்களின் பாதுகாப்பு நிலைகள் பற்றிய பெரிய கேள்வி ஒன்று இங்கே தொக்கி நிற்கின்றது. இன்றைய காலகட்டங்களில் எந்த இடத்திலுமே , ஒருவர் தனது உடலின் எந்தப்பகுதியிலும் ஓர் பொருளை மறைத்து வைத்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கத்தக்க தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து விட்டன. நூலாசிரியர் "தான் சித்திரவதை முகாம்களில் சயனைட் குப்பியை மறைத்து வைத்திருந்தேன்" என்று சொல்வது வாசகர்களை முட்டாள்களாக்குவதுடன் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயமாகும் .


இந்த நாவலின் ஊடாக நாவலாசிரியர் இலங்கைக்கு வெளியே இருந்த மக்களின் பார்வையில் இருந்த "இலங்கை அரசின் நலன்புரி முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள் " என்ற விம்பத்தை உடைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமே . குணா கவியழகன் விடமேறிய கனவின் மூலம் தனது இரண்டாவது படைப்பை வாசகர்களாகிய எங்களுக்குத் தந்திருக்கின்றார். அவர் மேலும் தனது வாசிப்பு மனநிலையை விசாலப்படுத்தி பல இலக்கிய நயமுள்ள காத்திரமான படைப்புகளைக் கொண்டுவருவார் என்பதே என்போன்ற வாசகர்களது வேணவாவும் நம்பிக்கையும் ஆகும். இறுதியாக நான் இந்த நாவலை வாசித்து முடித்தபொழுது ஓர் தினக்குறிப்பு படிக்கின்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தியது.







மலைகள் இலக்கிய சஞ்சிகைக்காக 
கோமகன் 
15 ஆடி 2015

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...