Skip to main content

சுவைத்(தேன்) - பாகம் 05

01 ஆராதனை

உனது ரசனைகள்
எவை என்பது
எனக்குத்
தெரியாமலே போய்விட்டது.

பறவைகளின் வீரக ஒலி,
வெளிறிய
வானில்
சுடரும்  ஒற்றை நட்சத்திரம்
காற்றின் சிறு சலசலப்பு:
சில சமயம்
அதன் சங்கீதம்,
தூரத்தில்… வெகுதூரத்தில்
தெளிவற்றுக் கேட்கும்
மழலைச் சொல்.
பிரியமான
உனது விழிமலரின்
மருட்சி.
கழுத்தோரம் தெரியும்
சிறுமச்சம்
என்று இவை எல்லாம்
எனக்கு….
எனக்கானவை
உனக்கு…..?

கால தாமதமாய்தான்
அந்த செய்தி
எனக்குத் தெரியவந்தது.
நீ என்னை விரும்பினாயாம்!

மரணப்படுக்கையில்
நீ
கிடந்தபோது
உனது மஞ்சள் பாரித்த உடம்பின்
அணுக்கள் தோறும்
உனது காதல்
நிரம்பி வழிந்தது.
உனது மூச்சின் வாசனையில்
அது இருந்தது.
கால தாமதமானாலும்
உனது காதலை
கண்ணீருடன்
நான் ஆராதிக்கிறேன்.

000000000000000000000000000

02 படிமம்


புழுதி படிந்த
வெளித் திண்ணையில்தான்
நீ
படுத்துக்கிடந்தாய்.
உனது உடலில்
எல்லாமே
உலர்ந்து போய்க் கிடந்தன.
விரல்கள் ஓலை நெட்டியாய்….
கழுத்து நரம்புகள் புடைத்து,
பட்ட வேரின் பழுப்பு நிறத்தில்.
கண் உறையுள்,
சோர்ந்து கிடக்கும் விழிகள்.
கிழிந்த
புள்ளிச்சட்டையின்கீழாகக்
குருக்குத்திக் குட்டிவாழையின்
சவளல் தண்டாயக்
கால்கள்.
உன்னில்,
உயிர் ஒட்டிக் கொண்டிருப்பது
லேசாய்ப் படரும் மூச்சில் தெரிகிறது.
‘எங்களூர் பிள்ளைதான்….
அம்மன் கேயிலடி….’
ஆரோ சொன்னது கேட்டுத்
திரும்பிப்பார்த்தேன்.
லேசாய்க் கால்பதித்து
அசைந்து வருகிறாய்.
வரட்சியால்
கோலங் கெட்டுக் கிடக்கும்
நீ
எங்கள் ஊரின்
அசல்
படிமம்.

நன்றி : க சட்டநாதன் 

0000000000000000000000000000000

03 இரவு வனம்


இலையுதிர்காலத்தின் ஈரித்த நகரம்
கைவிடப்பட்ட புகையிரதநிலையம்.

நாசிகள் யூதர்களை ஏற்றிச்சென்ற, இரயிற் தண்டவாளங்கள்
இறுக அடித்துப் பூட்டிட்ட பெட்டிகளின் அதிர்வில் இன்னமும் நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

வெறுமனே திரும்பி,
கிடந்து துருப்பிடித்த புகையிரதப்பெட்டிகளுள்
மூச்சுக்காற்றுகள் இன்னமும் விலக விரும்பாது மிக மிக நெருங்கி
உழன்றுகொண்டிருக்கின்றன.

இப்பெட்டிகள் இன்று,
மனதில் உறைந்தநிலமிசை வாழா
நியமங்கள் ஒழுகா மனிதர்களின் கிராமமாயின.

கஞ்சாப்புகை வளையங்களில் தொங்கி மிதக்கும் குர்திஸ்காரனின் சொற்களை
ஆர்மெனியக்காரன் தன் கிளாரினெற்றுக்குள் இழுத்துக்கொள்கிறான்.

நான்கு அரக்கர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பழம் பெரும்
நாகரீகத்தின் செருக்குக் கொண்ட சொற்கள்
உருச்சுருங்காதுள்ளம் விரிந்து நடனமிட
பல்கெரியன் தனது வயலின் நரம்புகளால் அவற்றை வருடுகிறான்.

அவன் காதலி கைகள்விரித்து இடுப்பை நெளித்து மோகம் செய்கிறாள்
கள்ளுண்டதென நிலவு நிமிர்கிறது.

வைன் கிண்ணங்கள் சிணுங்காத
வாசனைத்திரவியங்கள் மணக்காத
நகரக் கோடியிற்
கேசத்தைக் கோதியும்
காது மடல்களை நீவியும்
மலைகளைக் கட்டியணக்கும்
காற்றும் காதலும் பெருகும் இரவு
ஆழங்களின் வனமாகிறது.

நான் அள்ளி வந்த நதியோ இதயத்தில் இருந்து பல்கிப் பெருகி
வெந்த புனத்து வாசமடக்கும் விழிநீரானது.

நன்றி : தேவ அபிரா 

000000000000000000000000000

04 பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி!


இந்தக்கதையை
பெரியப்பு
சுருட்டுக்கொட்டிலிலை
சொல்லக்கேட்டு
அறுபது வருசமிருக்கும்
ஆனால் இது
அவர்காலத்துக்கும்
ஒரு தலைமுறை முந்திய கதை

யாழ்ப்பாணத்தை
வெள்ளையரான ஏசண்டுத்துரை
ஆண்டகாலம்
‘செம்மூக்கன்’ என்பது
அவரது பட்டப்பேர்
நீதிவான் (அவரும்வெள்ளையர்)
தீர்க்கமுடியாத வழக்குகள்
செம்மூக்கனெட்டைப் போகும்
தையலம்மை கைம்பெண்
தனியே வாழ்ந்து வந்தவள்
சீவியத்துக்கு
ஆடு, கோழி வளர்த்து வந்தாள்
பக்கத்துக்காணி
சொந்த மச்சானுடையது
அவன் ஒரு மிண்டன்
இவை இரண்டு பேருக்கையும்
காணிப்பிணக்கு
தலைமக்காரனால்
தீர்க்க முடியாது போகவே
நீதிவானிடம் போனது
கையுறையோடு
நீதிவானை
போய்க்கண்டாள் தையல்
தனக்குத் தெரிஞ்ச தமிழிலை
‘கவனிக்கிறன்’ என்றார் அவர்

ஒரு மாதம் ஆச்சு
மாரிகாலம்
பிரச்சினை கூடிப்போச்சு
தையலம்மை
நீதிவான் வீட்டுக்குப் போனாள்
குறுக்குக் கட்டு
வெத்திலை குதப்பிய வாய்
காதிலை
கல்வைத்த, கனத்த காதோலை
நீதிகேட்டு நின்றாள்
தையலம்மை

“சோனாசாரி மழை
அவற்றை (காணி) மேலை!
என்ரை கீழை!
வெள்ளமெல்லாம்
என்ரை வளவுக்கை!
ஏலுமெண்டா
தீர்ப்புச் சொல்லும்!
இல்லாட்டி
செம்மூக்கனெட்டை விடும்!
பட்டை என் முட்டை
பதினாறையும் தாரும்!”

சோ பத்மநாதன் 

000000000000000000000000000000

05 காசியர் பேசிய கவிதை


காசியர் கமக்காரன்
தானுண்டு
தன் ஓறனை மாடுண்டு
வயலுண்டு
என வாழ்கிறவர்
அவருக்கு ஒரேயொரு
ஆம்பிளைப்பிள்ளை
‘கணேசு’ என்றழைக்கப்படும்
கணேசபிள்ளை!

தன்மகன்
தன்னைப்போல் மண்ணோடு மாயாமல்
படிச்சு
உத்தியோகம் பார்க்கவேணும்
என்ற கனவு
காசியருக்கு1
ஒருமைலுக்கப்பால் உள்ள
‘குளங்கரைப்பள்ளிக்கூடம்’
என்று ஊரார் குறிப்பிடும்
மிசன் பாடசாலையில்
பொடியனைச் சேர்த்தார்

கணேசு அப்பொழுது
மூன்றாம் வகுப்பில்
காலை பத்துமணி
பக்கத்து ஊரிலை
ஒருகுடிபுகுதலுக்கு
கால்நடையில் புறப்பட்டார்
காசியர்
வெள்ளை வேட்டி
தலைப்பா (கை)
நெற்றியில் திருநீறு
சந்தனப்பொட்டு!

ஐயனார் கோயிலைத்
தாண்டும் போது பார்த்தால்
கணேசு
தன்னை மறந்து
கிளித்தட்டு
மறித்துக்கொண்டிருக்கிறான்!

பிறகென்ன?
குடிபுகுதலை விட்டார்
குலக்கொழுந்தைச்
‘சாய்த்துக்’ கொண்டு
வீடு போனார்
செல்லமுத்து துடித்துப் போனாள்
காசியர் சொன்னார்:

“பல்லுவிளக்கி குளிக்க வா(ர்)த்து
கச்சை பிழிந்து
பழையது கொடுத்து
பழந்தண்ணி பருக்கி
வெள்ளை உடுத்து
ஏடுகொடுத்து
பள்ளிக்குப் போகவிட்டா(ல்)
தொண்டியான் காசிமகன்
யந்திரமாடுகிறான்காண்!”

சோ பத்மநாதன் 

00000000000000000000000000

06 கதையின் கதை


கடவுளின் கூடையில்
தின்பண்டங்கள் தீர்ந்து போயிருந்தன
நீண்ட வரிசையில்
அவர்முன் நின்ற குழந்தைகள்
அவரையும் கூடையையும்
மாறி மாறிப் பார்த்தபடி
காத்திருந்தனர்
தரையில் சிந்திப்போயிருந்த
தின் பண்டத் துணிக்கைகளை
காவியபடி
வேறொரு திசையில் போய்க்கொண்டிருந்தன
எறும்புகள்
தமது முறைவந்து வெகுநேரமாகியும்
கடவுள் எதுவும் தராதது கண்டு
ஏமாற்றம் பரவலாயிற்று
குழந்தைகளின் முகங்களில்
அவர்களின் பார்வைகளைத்
தவிர்க்க விரும்பி
கூடைக்குள் பார்வை செலுத்தியபடி
தகைத்துப் போயிருந்தார் கடவுள்
ஆரம்பிக்கும்போது
அட்சயபாத்திரமென நம்பித்தான்
அள்ளியள்ளிக் கொடுத்தார்
எப்போது அது சாதாரண கூடையாய் மாறிற்று

என்பது புரியாமல்
கண்களை இறுகமூடிக்கொண்டார்

நன்றி : சோ பத்மநாதன் 

000000000000000000000000000000

07 திரவியம்


நேசத்தின் திளைப்பையும்
முடிவில் அதன் துரோகத்தையும்
அனுபவத்தில் கற்றறிந்து
சொந்த முகத்தின் விம்பம் இழந்தவளின் இசையிது

அநேகம் பேரின் கைகளில் நாணயமாய்
புழங்கிப் புகழடைந்தவள் அவள்
இரகசியக் குகைகளின் திறவுகோலாயும்
மந்திரச் சாவியாயும்
தன்னை உருமாற்றிக் கொண்டவள்

இனிமை முலாம் பூசிய நிலாக்கிண்ணங்களில்
அமாவாசைகளை நிரப்பி பருகுபவள்
முலைப்பால் போல வெளுத்ததும்
தீர்த்தம்போல குளிர்ந்ததுமான மனதையுடையாள்

துளசி இலைகளுக்குள் பத்திரப்படுத்தியுள்ள
தன் காதலை
கிண்ணங்களில் வார்த்து
மிகக் கவனமாகவே பகிர்ந்தளிக்கிறாள்
எத்தனை பங்கிட்டாலும் தீராமால் சுரக்கிறது
காதல் திரவியம்

பூட்டிப் பாதுகாக்க
காதல்
புராதன புதையலோ பொக்கிஷமோ
அல்லவென நம்புகிறாள்
திரி மாறித் திரி மாறி எரிந்தாலும்
அணையாத தீபத்துடன்
பிரகாசமாய் ஒளிர்கிறதவளின் காதல் சுடர்.

000000000000000000000000000000

08 நான் மழை


காணாமல்போனோரின் பட்டியலில் என் பெயர் கிடையா
இனி சேர்க்கவும் இயலா
இனந்தெரியாதோர், வெள்ளை வான்
எல்லாம் ஒன்றே எனக்கு

அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கோ
எதிர்கட்சிகளின் அறிக்கைகளுக்கோ
அச்சமில்லை, அடங்கிப்போகவும் மாட்டேன்
கைது செய்தென்னைக் கட்டுப்படுத்தவோ
தேசதுரோக குற்றப்பெயரில் என்னை
நீதிமன்றில் நிறுத்தி தண்டனையளிக்கவோ முடியா

விசாரணைக்கழைத்தென்னை
பூட்சுகளால் மிதிப்பது, நகங்களைப் பிடிங்கி
நாடியுடைய அடிப்பதெலாம் என்னிடம் நடக்கா
தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டென்னை
இடித்தும் இடிக்காததுமான மிளகாய் சாக்கினுள்
முகத்தை புதைப்பது,
ஆண்குறியின் முன்தோலை சீவிப் பிதுக்கி சிரிப்பது
இது எதையும் நிகழ்த்த முடியாதென்னிடம்

பதின்மூன்றாம் திருத்தமாகட்டும்
நிறைவேற்று அதிகாரமும் ஆகட்டும்
என்னிடம் பிடுங்க முடியாதெதுவும்
நான் மழை
ஆட்டுத்தொழுவத்திலும் விழுவேன்
அரச மாளிகையிலும் விழுவேன்
என்னைக் கண்டு ஒதுங்கியே ஆகணும்.
ஆளுநர், அரசாங்க தலைவர் அனைவரும்
குடைபிடித்தாகணும் எனக்கு
நான் மழை
வேறுபாடின்றி நனைப்பேன்.

00000000000000000000000000000

09 கடலின் காதலி


என் மென் பாதங்களை
ஈரக் கரங்கள் தளுவுகையில்
நானதை உணர்ந்தேன்
கடல் ஆண்

தீமூட்டலும் குளுமை மயக்கமும்
திருப்தியாய் நிகழ்ந்ததன்
அடையாள அணுக்களை
மோதிக் கொப்பளிக்கும் அதன்
நுரையில் கண்டேன்

தீராத காதலை குளிர் தென்றலிடம்
எனக்கு தூதனுப்பிற்று
என் காதுமடல்களை இதமாய் தடவி
கிளர்ந்து ஆசை மூட்டியது
கடலின் ஈர விரல்கள்

கரையில் எனைக் கண்டதுமே
வா வந்தென்னை அணை
எனக்கூவிற்று

உலர்வறிய இன்முகத்தோடும்
தாழிடமுடியா காதலோடும்
எனை தழுவி இறைந்து மகிழ்ந்தது
கூவிக் கூவி மீண்டும் மீண்டும்
அணைத்து என்னை ஆறுதலூட்டியது
என் தாகங்களின் சிற்றிடத்தையும்
ஈரத்தால் நிரப்பியது
என் தூய்மையில் அது தன்னை
கழுவி திருப்தி கண்டது

அலைக் கரங்களால் என்னையது
வாரியணைக்கும் ஒவ்வொரு கணமும்
எல்லையற்ற இன்பத்தைக் கொப்பளிக்கிறேன்
தொலைவறியா அண்டமொன்றை
எனக்குள் சுமந்துகொண்டு
பிரசவிக்கவோர் இடம்தேடிக் காத்திருக்கிறேன்.

நன்றி : சர்மிளா செய்யத் 
( http://eathuvarai.net/?p=436)

00000000000000000000000000000000

10 பின்னோக்கிப் பாயும் நதி


பாதை ஒன்று
ஓராயிரம் பயணங்கள்

பாதையிடம்
காலடிகளை ஒப்படைத்துக்
கடந்து செல்கின்றன கால்கள்

ஒவ்வொரு காலடிகளுக்குள்ளும் மரிக்கிறது
நிகழ் காலத்தின் ஆயுள்

நதியின் பாதையாகிப் பெருக்கெடுத்தோம்
பின்னோக்கிப் பாய்கிறது ஒரு நதி

அவரவர் பாதையில்
அவரவர் பயணங்கள்

000000000000000000000000000

11 வெற்றிடங்களின் தொடுகை


எமது கரங்களறியும்
வெற்றிடங்களின் தொடுகையை

செவிமறுத்து நிகழுவன
நீண்ட உரையாடல்கள்
உள்ளே மெனங்களின் பேரோசை

இப்போதெல்லாம்
நாட்டப்பட்டுப்போனோம் நாம்

உனக்குமெனக்கும்
பதிலீடுகள் தரப்பார்க்கிறது காலம்
வெற்றிடங்களால்
அலைக்கழிக்கப்படுகிறது நட்பு

மீண்டும்,
எப்போது வெளிக்கொணர்வோம்
நம்மிலிருந்து மிகப்பெறுமதியானதை

தொலைந்து மீள்தலில்
மீளத்தொலைகிறேன் நான்
உன்னிடமிருந்தும் என்னிடமிருந்தும்
என்னை

நன்றி : யோகி 

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...