Skip to main content

நிலவு குளிர்சியாக இல்லை -திறனாய்வு நோயல் நடேசன்



கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன் மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.

சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.

நமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.

சமீபத்தில் அமரிக்கா சென்றபோது ஒரு நியூக்கர் சஞ்சிகையை வாங்கிப் வாசித்தபோது அதில் இஸ்ரேலிய ஹிப்ரு மொழியில் வந்த கதை சிறந்த கதை பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் எழுத்தாளர் மாப்பசான் சிறுகதைக்கு தலைமைக் குரு போன்றவர் அவரது புகழ்பெற்ற நெக்கிலஸ் என்ற சிறுகதையில் அழகான இளம் பெண் ஒரு சாதாரமணமான பதவி வகிக்கும் ஒருவரை திருமணம் முடிக்கிறாள் ஆனால் அவளது கனவுகளில் பணம் படாடோபமான விருந்துகள் அழகிய அலங்காரமான வீடு என்பன கனவாக இருக்கிறது. நிஜவாழ்கை, கனவுகளுக்கு எதிர்த் திசையில் அமைகிறது. அந்த தம்பதிகளுக்கு ஒரு பணக்கார விருந்திற்கு அழைப்பு வந்தபோது தனது செல்வந்த சினேகிதியின் விலை உயர்ந்த நெகலஸ்சை இரவல் வாங்கி அணிந்துகொண்டு அந்த விருந்தில் கலந்து கொள்கிறாள். ஆனால் அந்த நெக்லஸ் தொலைந்துவிட்டது. பல இடங்களில் கடன்பட்டு அதைப்போல் புதிதாக நெக்லசை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார்கள் அந்த தம்பதியினர். அந்த நெக்கிலசுக்காக பட்டகடனை அடைப்பதற்காக பத்துவருடங்கள், பல வேலைகள் செய்து கடனை அடைக்கிறார்கள். இந்த பத்துவருடங்களில் அந்த பெண் தனது அழகை, பொலிவை இழந்து போகிறாள். கடனைத் அடைத்த பின்பு எதிர்பாராமல் சந்தித்த பணக்கார சினேகிதியிடம்
உண்மையை சொன்னபோது அந்த சினேகிதி அந்த நெகல்ஸ் விலை குறைந்தது. போலி என்கிறாள். பத்து வருடங்கள் இரவு பகலாக சுகங்களை ஓய்வு நேரங்களை மறந்து கடுமையாக உழைத்தவளுக்கு எப்படி இருக்கும்? இந்த தம்பதியினரது வாழ்வின் தருணங்களை எடுத்துக் காட்டுவதோடு நேர்மை உழைப்பு என்பவற்றை இந்தக் கதை சொல்கிறது. கதைகேட்ட சந்தோசத்திற்கு அப்பால் பலவிடயங்களை இந்தக் கதை சிந்திக்கப் பண்ணுகிறது.

வடகோவை வரதராஜனின் நிலவு குளிர்சியாக இல்லை என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் சில மணியான கதைகள் உள்ளன. பல சிறுகதைப் தொகுப்புகளை வாசிக்கும்போது ஒரு கதையாவது தேறாமல் இருபதைக் கண்டுள்ளேன்.

மிகவும் அழகான ஆனால் ஆடம்பரமற்ற புனைவு மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள். பெரும்பாலானவை கோப்பாய் பிரதேசத்தை சுற்றியவை. நில சூழலை மிகவும் அவதானிப்போடு எழுதப்பட்டடிருக்கிறது.. முக்கியமாக தாவரங்கள் பறவைகளின் உடல் மொழிகளை இந்தளவு விபரிப்பாக நான் எந்தக் தமிழ்க் கதையிலும் பார்க்கவில்லை.அவரது தம்பியோடு பேசியபோது விவசாயத்தில் டிப்பிளோமா செய்தவர் என அறிந்தேன்.

தலையங்கத்திற்கு உரிய கதை- ஒருவிதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்து நனவிடைதோயும் கதை ஆனால் யாழ்ப்பாண கிடுவேலி நாகரிகத்தையும் பாவனைகள் எப்படி பெண்களை வாட்டி வதைத்கிறது என்பதை அழகாக சொல்கிறது.

மனவுரியும் மரவுரியும்- ஒரு வேப்பமரத்தின் கதை அதாவது வைத்த வேப்பமரத்தை அழிக்க சுற்றி பட்டையை எடுத்த பினபும் அது மீண்டும் தழைப்பது கண்டு அதை அழிக்க மறுத்தவரது மனம் பறறிசொல்லும் கதையது. வாடும் பயிரைக் கண்டு வாடும் உள்ளம் எமக்கு வருபோது எம்மை சுற்றி உள்ள மரங்களை பாதுகாத்து எமது உறவினர்போல் அன்பு செலுத்வோம

எனது கிளினிக்கை சுற்றி பெரிய யூகலிக்கப்ரஸ மரங்கள் உள்ளது அவைகள் முன்பகுதியை மறைகின்றன என்பது எனது கவலை. ஆனால் அந்த மரங்களை எனக்குத் தெரிந்த ஒருவர் பாத இரசத்தை செலுத்தி காய்ந்துபோக செய்யவா எனக் கேட்டபோது மறுத்தேன். அப்படி செய்து விட்டு கவுன்சிலிடமிருந்து தப்பினாலும் அந்த மரங்களும் அந்த மரங்களில் வந்து தங்கும் பறவைகள் என்ற சொந்தம் என்னுடன் 18 வருடங்களாக தொடர்கிறது

ஒரு கதை அரேபியநாட்டில் பேச்சுத் துணையற்று இருந்தவன் ஒரு சிற்றெறும்புக் கூட்டத்தை கண்டு ஏதோ இலங்கை எறும்பென அவற்றைப் பார்த்து ஆறுதல் அடைவது தனிமையை விளக்குகிறது.

உப்பு என்பது என்னை மிகவும் கவர்ந்தது. சிறுமி உப்பு அள்ளப்போய் அந்த உப்பு நீருக்குள் உடை நனைந்து அவளது தேகம் எரிவதும் பின்பு உப்பளக் காவலர்களிடம் அடிவாங்கிய பின் வீடு சென்றால் தாய் உப்புக் கொண்டு வந்தாயா என கேட்கும்போது சிறுமி அழுகிறாள். அவள் கண்ணீரில்தான் உப்பு என முடிப்பது மிகவும் கவித்துவமான தருணம்.

கதைகள் எல்லாம் முப்பது வருடத்திற்கு முன்னானவை ஒரு இடத்தில் மட்டும் நண்பன் இறந்த சுவரெட்டி ஆயுதப்போரட்டத்தை நினைவு படுதினாலும் தற்கால கதைகள்போல் இரத்தவாடை இல்லை. 80 முன்னான யாழ்பாண மண்ணின் புழுதிவாசம் பெரும்பாலான கதைகளில் மணக்கிறது.

இந்தக்கதையில் எனக்கு ஏதாவது குறை சொல்ல நினைத்தால் வாசிபவரது ஊகங்களுக்கு இடமில்லை. பெரும்பாலான விடயங்கள் தெளிவாக சொல்லப்படுகிறது. வாசகர்களை குழந்தையாக நினைத்து சத்தான உணவை கரண்டியால் ஊட்டியுள்ளார்.

ஒருவிதத்தில் தமிழர்கள் பலவிடயங்களில் குழந்தைகள் என்பதை அறிந்து எழுதினாரோ என நினைக்கிறேன்

கோப்பாய் வடக்கில் வாழுகின்ற வடகோவை வரதராஜன் யாழ் மத்தியகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் குண்டகசால விவசாயக்கல்லூரியில் விவசாயக்கலையில் டிப்ளோமா பட்டம் பெற்றார் பின்னர் சிறிது காலம் சவூதி அரேபியாவில் லாண்ட் ஸ்கேப் போர்மன் ஆக கடமையாற்றி விட்டு தாயகம் திரும்பி பல இடங்களில் கிராமசேவையாளராக இருந்திருக்கின்றார் இப்பொழுது சிறுப்பிட்டி பகுதிக்கு கிராம சேவையாளராக கடமையாற்றுகின்றார் .மல்லிகை சிரித்திரன் வீரகேசரி கணையாழி அலை என்று பல பத்திரிகைகளில் எழுதிவந்த இவரது பல படைப்புகள் போர் மற்றும் இடப்பெயர்வுகளால் தொலைந்து விட்டன இருந்தவைகளை தொகுத்ததே இந்த சிறுகதை தொகுதி.


நோயல் நடேசன்

December 06, 2015

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...