Skip to main content

தீரனின் பார்வையில் 'முரண்'




‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கும் கோமகனின் ‘’முரண்’’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் வாசித்த பின் மூன்று நாட்களாக வேறு ஒன்றையும் வாசிக்க முடியாமல் கிடந்தேன்..சமூகத்தில் நிகழும் அல்லது நிகழாத சில அசாத்தியங்களின் பக்கங்களை அடுக்கி புனைவு ‘நூலா’ல் சாமர்த்தியமாக கோர்த்து விட்டு ஏதும் அறியாத அப்பாவி போல தன் படைப்புமுகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இந்த ‘’எழுத்துக் கல்லுளிமங்கனின்’’ படைப்புலகம் ஓர் அலாதியான ஆச்சரியம்தான்...

பதினோரு உள்ளடக்கங்களை கொண்ட இக்கதைகளைப் பற்றி கோமகன் கூறுகையில்-- //இக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றேன்..’’ // என்று கூறுவதன் மூலம் இக்கதைகளின் ஏறிகைகளின் எதிர்வீச்சுக்களிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பலமான ‘பங்கரை’ அமைத்து விட்டார் என்றே கூறுவேன்.. ஆயினும் அந்த ‘பங்கருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து ‘’// கதை சொல்லும் உத்திகளில் சில பரிசோதனைகளை செய்திருக்கிறேன்...பேசாப் பொருளை பேசியிருக்கிறேன்...// என்றெல்லாம் நுகர்ச்சியாளனிடம் ஏன் சொல்ல வேண்டும்...?

ஆனால் உண்மை அதுதான்,,,முரண்-தகனம்-வெள்ளி13 முதலான கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் கோமகன் நுணுக்கமாய் பின்னிஎடுத்திருக்கிறார்....சில கதைகளில் அ..;றினைப் பொருட்களை பேசவிடுவதில் கடும் சிரத்தை காட்டியிருக்கிறார்... இவற்றில் கோமகன் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இக்கதைகளை நகர்த்துவதன் மர்மம் இன்னும் எனக்கு விளங்குவதாயில்லை.. புறாக்களுக்குள் புகுந்து கதை சொல்வதும் திடீரென பட்டிமாடுகளின் ஆன்மாவுக்குள் புகுந்து பேசுவதும் கும்பலாய்க் கிடக்கும் சவங்களுக்குள் புகுந்து தன்னிலை விளக்கம் சொல்வதும் போதாதென்று ..மயானமே தான் வரலாறு சொல்வதுமாக அதகளப்படுத்தியிருக்கிறார் மனுஷன்....இவற்றில் எல்லாம் எவ்வித சிக்கலும் பிக்கல்பிடுங்கலுமின்றி தன் சரளமொழியில் கதை சொல்லிச் செல்லும் நேர்த்தி கோமகனிடத்தில் இயல்பாக இருக்கிறது... இதனால் வாசகனின் புருவங்களை தொடர்ந்தும் உயர்த்தி வைப்பதில் மகா வெற்றிதான் இந்த படைப்பாளிக்கு........

புணர்ச்சி செய்தலுக்கு ‘’முயங்குதல்’’ என்ற சொல்லை தன் பல கதைகளிலும் பயன்படுத்தியிருக்கிறார் கோமகன்.. இந்த சொல்லை நான் இதுவரை அறிந்தேனில்லை....அது எப்படியோ போகட்டும் ஆயின் ‘’டிலீப்டிடியே’’ கதையில் வரும் டிலீப்டிடியே என்பவன் சவமாகிக் கிடக்கும் நிலையில் மதுமிதா அவனோடு (அதனோடு) நிர்வாணமாக முயங்கிக் கொண்டிருந்தாள் .. என்று சொல்வது மிகவும் அபத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது...சவமான பின் எந்த வித விறைப்பும் இல்லாத குறியில் எப்படி...அதுவும் ஒரு பெண் வைத்தியர் முயங்குவாள் என்பதை யோசித்து இதை கோமகனிடமே நேரில் கேட்டுவிட வேண்டுமென்று ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தாலும் ‘’இதில் நானே முரண் பட்டிருக்கிறேன்’’ என்று சொல்லி இலகுவாக கடந்து விடுவாரோ என்றும் யோசிக்கிறேன்...

முஸ்லிம் கதை மாந்தர்களை தன் கதைகளில் வெகு கவனமாகவே கையாண்டிருக்கும் கோமகன் குண்டு வெடிப்புதாரிகள்-கடத்தல்காரர்கள் அனைவரும் முஸ்லிம் மாந்தர்களாகவே சித்தரித்திருப்பதில் ஒரு ‘’கமலஹாஸத்தனம்’’ தெரியாமலில்லை... வெள்ளி13 மற்றும் வெடிப்பு ஆகிய புனைவுகள் அத்தகையன...அதிலும் ‘’வெள்ளி 13’’ கதையில் ஆயிஷா என்ற பெண் பாத்திரம் படு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது என்பேன். ஏனெனில் அப்பாத்திரம் இல்லாமலே அக்கதை தனியாகவே ‘’நிற்கும்’’................

‘’ஏறு தழுவுதல்’’ ஒர் அற்புதமான சிறுகதை...ஜீவநதியில் இக்கதை வந்த போது பலராலும் பேசப்பட்ட ஒரு கதை..கறுப்பன் என்ற ஏறு உண்டுபண்ணும் புரட்சியை ரொம்ப அற்புதமாக சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியதே... அகதி கதையில் புறா சொல்லும் செய்திகள் ஒரு பறவை சொல்லக் கூடியவாறு இல்லை என்பதே என் அபிப்பிராயம்..யூதர்கள் நாசிகளால் கொல்லப்படும் செய்தி—அகதி அந்தஸ்து பற்றிய விபரம்-பாரிஸ் வங்கியில் வீட்டுக்கடன் எடுக்கும் சங்கதிகள்...எல்லாம் அந்தப் புறாவை அதன்பாட்டில் பேசவிடாமல் புறாவுக்குள் படைப்பாளி புகுந்து கொண்டு புறாவுக்கு சம்பந்தமில்லாத செய்திகளை சொல்லும் உணர்வையே தருகின்றன..

.’’முரண்’ கதை கொஞ்சம் சிக்கலான ‘’கரு’’க் கொண்ட கதை.. ஆக்காட்டி ஒரு அற்புதமான கதை.. கதை என்று சொல்லமுடியாத ஒரு சாத்தியமான நிர்மானம் என்றுதான் சொல்லவேண்டும்.. அற்புதமான முறையில் கதையை திகீர் பகீருடன் சொல்லியிருக்கும் கதை நேர்த்தி மெச்சத்தக்கது... படகு மூழ்கி உயிரிழந்த மாதுமையின் உடலம் அகன்று பறந்து விரிந்த அந்நாட்டில் எங்குமே ஒதுங்காமல் சரிசட்டமாக மேரி-ஆனின் காலடியில் ஒதுங்குவது என்பது படு சினிமாத்தனம் என்றே தோன்றுகிறது.. கதையின் அடியில் யாவும் உண்மை கலந்த கற்பனை என்று போட்டுவிட்டு சுகமாக தூங்கப் போய் விடுகிறார் கோமகன்,,,அட..இது கூட ஒரு நவீன உத்திதான்.

.. ‘’பருப்பு’’ கதையின் பருப்பின் வாழ்க்கை நம் எதிரிக்குக் கூட வரக்கூடாது.. மோசமான ஒரு கருவை அற்புதமாக கதையாக்கியிருப்பது கோமகனின் ஒரு தனித் திறமைதான்... இதை வாசித்த பின் அதிலும் குறிப்பாக அந்த இந்தியனும் அந்த பிரஞ்ச் பெடியனும் பருப்பைக் கையாண்ட விதத்தை எண்ணினால் நம் வீட்டில் இனி பருப்புக்கு தடை சொல்லிடலாம் போல இருகிறது... கட்டியம் கூறி ஆரம்பிக்கப்படும் ‘’தகனம்’’’ கதை மங்களம் பாடி முடிகிறது...இது ஒரு ‘காண்டம்’ விட்டுக் ‘காண்டம்’ பாயும் ‘எறிகதை’ எனலாம்.. அது சொல்லப்படும் முறை புதிது...

பொதுவாக முரண் தொகுதில் உள்ள 11 புனைவுகளும் கச்சிதமான சொற் கோர்வையினால் நவீன முறையில் இழைக்கப்பட்டுள்ளன... கதைகள் சொல்லப்பட்ட தளங்களும் அவற்றில் கையாளப்பட்டுள்ள பல சோதனை முயற்சிகளும் நம்மை வியக்க வைப்பன... அதே சமயம் நேர்த்தியான சொல்முறைகளால் இலகுவில் மனத்தைக் கவர்ந்து விடுகின்றன..கோமகனின் இந்த நவீன கதை சொல்-இயல் உண்மையில் மனம் திறந்து மெச்சத்தக்கது..

சில புலம் பெயர் எழுத்தாளர்கள் ஒரு கதையைத் தொடங்கினால் அதற்கென்றே ஒரு பாத்திரத்தை கதையில் உலவ விட்டு தமது புலம் பெயர் அனுபவங்கள்-பட்ட சிரமங்கள்-சாதனைகள்—என்பவற்றை வளவளத்துக் கொண்டிருப்பதிலிருந்து முற்றாக தவிர்ந்து கொண்டிருக்கும் கோமகன் ஒரு கதைக்குத் தக்க அளவில் சொற்சிக்கனமாக கதைக் களத்தைக் காட்சிப்படுத்தியிருக்கின்ற நேர்த்தி வெகுவாகப் பாராட்டத்தக்கது... சிறுகதைகள் என்ற பெயரில் நீளநீளமாக பக்கங்களை வளர்க்காமல் கட்டுத் தறி போல கதைகளை சிறு-கதைகளாகவே சொல்லிச் சட்டுப் புட்டென்று முடித்து விடுகிற இந்தக்கதைசொல்லியை எவ்வளவும் ரசிக்கலாம்.. வாழ்த்துக்கள் கோமகன்..... souhaitant bien

ஆர் எம் தீரன் நௌஷாத்




Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...