Skip to main content

தீரனின் பார்வையில் 'முரண்'




‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கும் கோமகனின் ‘’முரண்’’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் வாசித்த பின் மூன்று நாட்களாக வேறு ஒன்றையும் வாசிக்க முடியாமல் கிடந்தேன்..சமூகத்தில் நிகழும் அல்லது நிகழாத சில அசாத்தியங்களின் பக்கங்களை அடுக்கி புனைவு ‘நூலா’ல் சாமர்த்தியமாக கோர்த்து விட்டு ஏதும் அறியாத அப்பாவி போல தன் படைப்புமுகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இந்த ‘’எழுத்துக் கல்லுளிமங்கனின்’’ படைப்புலகம் ஓர் அலாதியான ஆச்சரியம்தான்...

பதினோரு உள்ளடக்கங்களை கொண்ட இக்கதைகளைப் பற்றி கோமகன் கூறுகையில்-- //இக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றேன்..’’ // என்று கூறுவதன் மூலம் இக்கதைகளின் ஏறிகைகளின் எதிர்வீச்சுக்களிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பலமான ‘பங்கரை’ அமைத்து விட்டார் என்றே கூறுவேன்.. ஆயினும் அந்த ‘பங்கருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து ‘’// கதை சொல்லும் உத்திகளில் சில பரிசோதனைகளை செய்திருக்கிறேன்...பேசாப் பொருளை பேசியிருக்கிறேன்...// என்றெல்லாம் நுகர்ச்சியாளனிடம் ஏன் சொல்ல வேண்டும்...?

ஆனால் உண்மை அதுதான்,,,முரண்-தகனம்-வெள்ளி13 முதலான கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் கோமகன் நுணுக்கமாய் பின்னிஎடுத்திருக்கிறார்....சில கதைகளில் அ..;றினைப் பொருட்களை பேசவிடுவதில் கடும் சிரத்தை காட்டியிருக்கிறார்... இவற்றில் கோமகன் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இக்கதைகளை நகர்த்துவதன் மர்மம் இன்னும் எனக்கு விளங்குவதாயில்லை.. புறாக்களுக்குள் புகுந்து கதை சொல்வதும் திடீரென பட்டிமாடுகளின் ஆன்மாவுக்குள் புகுந்து பேசுவதும் கும்பலாய்க் கிடக்கும் சவங்களுக்குள் புகுந்து தன்னிலை விளக்கம் சொல்வதும் போதாதென்று ..மயானமே தான் வரலாறு சொல்வதுமாக அதகளப்படுத்தியிருக்கிறார் மனுஷன்....இவற்றில் எல்லாம் எவ்வித சிக்கலும் பிக்கல்பிடுங்கலுமின்றி தன் சரளமொழியில் கதை சொல்லிச் செல்லும் நேர்த்தி கோமகனிடத்தில் இயல்பாக இருக்கிறது... இதனால் வாசகனின் புருவங்களை தொடர்ந்தும் உயர்த்தி வைப்பதில் மகா வெற்றிதான் இந்த படைப்பாளிக்கு........

புணர்ச்சி செய்தலுக்கு ‘’முயங்குதல்’’ என்ற சொல்லை தன் பல கதைகளிலும் பயன்படுத்தியிருக்கிறார் கோமகன்.. இந்த சொல்லை நான் இதுவரை அறிந்தேனில்லை....அது எப்படியோ போகட்டும் ஆயின் ‘’டிலீப்டிடியே’’ கதையில் வரும் டிலீப்டிடியே என்பவன் சவமாகிக் கிடக்கும் நிலையில் மதுமிதா அவனோடு (அதனோடு) நிர்வாணமாக முயங்கிக் கொண்டிருந்தாள் .. என்று சொல்வது மிகவும் அபத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது...சவமான பின் எந்த வித விறைப்பும் இல்லாத குறியில் எப்படி...அதுவும் ஒரு பெண் வைத்தியர் முயங்குவாள் என்பதை யோசித்து இதை கோமகனிடமே நேரில் கேட்டுவிட வேண்டுமென்று ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தாலும் ‘’இதில் நானே முரண் பட்டிருக்கிறேன்’’ என்று சொல்லி இலகுவாக கடந்து விடுவாரோ என்றும் யோசிக்கிறேன்...

முஸ்லிம் கதை மாந்தர்களை தன் கதைகளில் வெகு கவனமாகவே கையாண்டிருக்கும் கோமகன் குண்டு வெடிப்புதாரிகள்-கடத்தல்காரர்கள் அனைவரும் முஸ்லிம் மாந்தர்களாகவே சித்தரித்திருப்பதில் ஒரு ‘’கமலஹாஸத்தனம்’’ தெரியாமலில்லை... வெள்ளி13 மற்றும் வெடிப்பு ஆகிய புனைவுகள் அத்தகையன...அதிலும் ‘’வெள்ளி 13’’ கதையில் ஆயிஷா என்ற பெண் பாத்திரம் படு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது என்பேன். ஏனெனில் அப்பாத்திரம் இல்லாமலே அக்கதை தனியாகவே ‘’நிற்கும்’’................

‘’ஏறு தழுவுதல்’’ ஒர் அற்புதமான சிறுகதை...ஜீவநதியில் இக்கதை வந்த போது பலராலும் பேசப்பட்ட ஒரு கதை..கறுப்பன் என்ற ஏறு உண்டுபண்ணும் புரட்சியை ரொம்ப அற்புதமாக சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியதே... அகதி கதையில் புறா சொல்லும் செய்திகள் ஒரு பறவை சொல்லக் கூடியவாறு இல்லை என்பதே என் அபிப்பிராயம்..யூதர்கள் நாசிகளால் கொல்லப்படும் செய்தி—அகதி அந்தஸ்து பற்றிய விபரம்-பாரிஸ் வங்கியில் வீட்டுக்கடன் எடுக்கும் சங்கதிகள்...எல்லாம் அந்தப் புறாவை அதன்பாட்டில் பேசவிடாமல் புறாவுக்குள் படைப்பாளி புகுந்து கொண்டு புறாவுக்கு சம்பந்தமில்லாத செய்திகளை சொல்லும் உணர்வையே தருகின்றன..

.’’முரண்’ கதை கொஞ்சம் சிக்கலான ‘’கரு’’க் கொண்ட கதை.. ஆக்காட்டி ஒரு அற்புதமான கதை.. கதை என்று சொல்லமுடியாத ஒரு சாத்தியமான நிர்மானம் என்றுதான் சொல்லவேண்டும்.. அற்புதமான முறையில் கதையை திகீர் பகீருடன் சொல்லியிருக்கும் கதை நேர்த்தி மெச்சத்தக்கது... படகு மூழ்கி உயிரிழந்த மாதுமையின் உடலம் அகன்று பறந்து விரிந்த அந்நாட்டில் எங்குமே ஒதுங்காமல் சரிசட்டமாக மேரி-ஆனின் காலடியில் ஒதுங்குவது என்பது படு சினிமாத்தனம் என்றே தோன்றுகிறது.. கதையின் அடியில் யாவும் உண்மை கலந்த கற்பனை என்று போட்டுவிட்டு சுகமாக தூங்கப் போய் விடுகிறார் கோமகன்,,,அட..இது கூட ஒரு நவீன உத்திதான்.

.. ‘’பருப்பு’’ கதையின் பருப்பின் வாழ்க்கை நம் எதிரிக்குக் கூட வரக்கூடாது.. மோசமான ஒரு கருவை அற்புதமாக கதையாக்கியிருப்பது கோமகனின் ஒரு தனித் திறமைதான்... இதை வாசித்த பின் அதிலும் குறிப்பாக அந்த இந்தியனும் அந்த பிரஞ்ச் பெடியனும் பருப்பைக் கையாண்ட விதத்தை எண்ணினால் நம் வீட்டில் இனி பருப்புக்கு தடை சொல்லிடலாம் போல இருகிறது... கட்டியம் கூறி ஆரம்பிக்கப்படும் ‘’தகனம்’’’ கதை மங்களம் பாடி முடிகிறது...இது ஒரு ‘காண்டம்’ விட்டுக் ‘காண்டம்’ பாயும் ‘எறிகதை’ எனலாம்.. அது சொல்லப்படும் முறை புதிது...

பொதுவாக முரண் தொகுதில் உள்ள 11 புனைவுகளும் கச்சிதமான சொற் கோர்வையினால் நவீன முறையில் இழைக்கப்பட்டுள்ளன... கதைகள் சொல்லப்பட்ட தளங்களும் அவற்றில் கையாளப்பட்டுள்ள பல சோதனை முயற்சிகளும் நம்மை வியக்க வைப்பன... அதே சமயம் நேர்த்தியான சொல்முறைகளால் இலகுவில் மனத்தைக் கவர்ந்து விடுகின்றன..கோமகனின் இந்த நவீன கதை சொல்-இயல் உண்மையில் மனம் திறந்து மெச்சத்தக்கது..

சில புலம் பெயர் எழுத்தாளர்கள் ஒரு கதையைத் தொடங்கினால் அதற்கென்றே ஒரு பாத்திரத்தை கதையில் உலவ விட்டு தமது புலம் பெயர் அனுபவங்கள்-பட்ட சிரமங்கள்-சாதனைகள்—என்பவற்றை வளவளத்துக் கொண்டிருப்பதிலிருந்து முற்றாக தவிர்ந்து கொண்டிருக்கும் கோமகன் ஒரு கதைக்குத் தக்க அளவில் சொற்சிக்கனமாக கதைக் களத்தைக் காட்சிப்படுத்தியிருக்கின்ற நேர்த்தி வெகுவாகப் பாராட்டத்தக்கது... சிறுகதைகள் என்ற பெயரில் நீளநீளமாக பக்கங்களை வளர்க்காமல் கட்டுத் தறி போல கதைகளை சிறு-கதைகளாகவே சொல்லிச் சட்டுப் புட்டென்று முடித்து விடுகிற இந்தக்கதைசொல்லியை எவ்வளவும் ரசிக்கலாம்.. வாழ்த்துக்கள் கோமகன்..... souhaitant bien

ஆர் எம் தீரன் நௌஷாத்




Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம