Skip to main content

சந்தியாவிற்கு . …-கவிதை


ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன.

ஊடகவியலாளரும், கேலிச்சித்திரகாரருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன்(24.01.2011) ஒரு வருடமாகிறது. பிரகித் பல ஆண்டுகாலமாக தனது செயற்பாடுகள் மூலம் இலங்கையில் நிலவும் அரசபயங்கரவாதத்திற்கும், மனிதவுரிமை மீறல்களிற்கும் எதிராக குரல் கொடுத்து வந்தவர். இவரது மனைவி சந்தியாவிற்கும், அவரது இரண்டு மகன்மாருக்கும் இவர் பற்றிய எந்தத் தகவலும் இன்றுவரை கிடைக்கவில்லை. இவரது மனைவி சந்தியா, தனது கணவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதேசமயம் யுத்தத்தத்தினால் வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களினதும் உரிமைகளிற்காகவும் யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அவர்களின் உறவுகளுடன் இணைந்து பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


000000000000000000000000

எங்கோ தொலைவில் கேட்கும்
துப்பாக்கிச் சன்னம்,
திடீரென்று ஒலிக்கும் தொலைபேசி
வாசலில் கேட்கும் வாகனச்சத்தம்,
அச்சம் தரும் நிகழ்வுகளாக . .


வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும்
எழுதப்படும் ஒவ்வொரு வரியும்
கீறப்படும் ஒவ்வொரு சித்திரமும்
மௌனிக்கப்படும்
துர்ப்பாக்கிய தேசத்தின்
புதல்வி நீ


உனது கனவுகள் நொருக்கப்பட்டு
உனது சிறு குருவிக்கூட்டின் அழகு சிதைந்தது.
துயரும், கண்ணீரும் கலந்த
வெறுமையும் உன்னை நெருக்க,
அப்பாவைப் பற்றிக் கேட்கும்
உன் குழந்தைகளிற்கு பதில்களைத் தேடும்
உன் பிரயத்தனங்கள்.


உனது கணவனைத் தேடியும்
உன்னைப் போன்ற தோழிகளின்
சுமையையும் சுமந்து
நீ எடுக்கும் எத்தனங்கள்,
சீற்றத்துடனும் நம்பிக்கையுடனும்
எழுந்து வரும் அலையென
அதிகாரப் பாறையிற்பட்டு
நிசப்தமாய் மீளவும் தொடர்கின்றன.


உனது உறுதியும்,
நம்பிக்கையும் கோபமும்
நீதித் தாயின் கண்கட்டைக்
கிழித்தெறிந்து
அசமத்துவ தராசுகளை
உடைத்தெறியும்.
அந்தப் பொழுதில்
உதிக்கும் சூரியனின் கதிர்களின் வெப்பம்
விழிநீர் பொசுக்கி
உனது முகத்தில்
புன்னகையின் சித்திரங்களைக் கீறிச் செல்லும்.


உமா
24.11.2011
நன்றி: http://thoomai.wordp...egory/கவிதைகள்/

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...