Skip to main content

பதினொரு பேய்கள் கடந்து வந்த பாதை




ஈழத்தின் முடிசூடா மன்னன் பேராசிரியர் கைலாசபதியினால் இலக்கிய உலகுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் அ.முத்துலிங்கம் ஐயா என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை .பல சிறுகதை தொகுதிகளையையும், கட்டுரைதொகுப்புகளையும் வாசகருக்கு வழங்கிய  முத்துலிங்கம் ஐயாவின் எழுத்துக்களில் மயங்கியவர்களில் அடியேனும் ஒருவன். அண்மையில் அ.முத்துலிங்கம் ஐயாவின் "பதினொரு பேய்கள்" சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. அந்தக்கதையில் இருந்து நான் என்ன கிரகித்துக்கொண்டேன் என்பதனை பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

அ.முத்துலிங்கம் ஐயா ஈழத்துக்கதை சொல்லிகளில் ஓர் உன்னதமான இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.அதே வேளையில் அவரின் எழுத்துக்கள் ஓர் தவறான புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துமாயின், அதை சுட்டிக்காட்டுவதும் எனது கடமையாகின்றது. ஓர் படைப்பானது பொது வெளியில் வரமுன்பு அதன் எழுத்தும், படைப்பும் ஆக்கியவருக்கே சொந்தமாகின்றது. அனால் அந்தப் படைப்பு பொதுவெளியில் வந்த பின்னர் அது வாசகர்களின் சொந்தமாகின்றது. அப்பொழுது எழுகின்ற சர்ச்சைகள் ஓர் எல்லைக்கு மேல் போகும் பொழுது, படைப்பாளி அதுசார்ந்த தன்னிலை விளக்கம் வாசகர்களுக்கு கொடுப்பது அறமாகின்றது. ஆனால் இந்தக்கதையின் விடயத்தில் அது நடைபெறவில்லை என்பது வருத்தத்துக்குரியது . அதாவது படைப்பாளிகளாகிய நான் எதையும் தருவேன் வாசகர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு சமனானது .

"பதினொரு பேய்கள்" சிறு கதையானது ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றையும், புனைவையும் ஒன்று சேர்த்து கதை சொல்லியாக வாசகர் முன்னே வைக்கின்றது. பொதுவாகவே  வரலாறு என்பதே புனைவுதான் என்றும் , அது எழுதுபவன் பார்வையிலான புனைவே என்று சொல்வோரும் உண்டு . அப்படியானால் வரலாறு என்பது என்ன என்ற ஓர் கேள்வியும் இங்கே இயல்பாக எழுகின்றது? "பதினொரு பேய்கள்" கதை சொல்லியாக அலன் தம்பதிகள் கடத்தல் விவகாரத்தையும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு எது சார்ந்து நிற்கின்றது?? என்றும் விபரிக்கின்றது. இங்குதான் சர்ச்சைகளின் மையம் ஆரம்பமாகின்றது. குறிப்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெண்கள் அமைப்பின் தோற்றுவாய் பற்றி கதை சாடிநிற்கின்றது. இந்தப் பார்வையானது யாழ்ப்பாணியத்தின் பார்வையாகவே எண்ண இடமளிக்கின்றது. ஏனெனில் தமிழர் தேசிய விடுதலையும் அது சார் ஈழ விடுதலைப்போராட்டமும்  பல போராளிகளின் இரத்தத்தாலும், சதையினாலும், ஈடு செய்ய முடியாத இழப்புகளினாலும் கட்டியெழுப்ப பட்ட வரலாறாக எமது கண்முன்னே நடந்தேறியது. இதற்கு நேரடி சாட்சிகளாக ஏறத்தாழ மூன்று தலைமுறையினர் எம்முன்னே இருக்கின்றனர். வரலாறு இப்படியிருக்க வெறும் பாலியல் வேட்கையினால் தான் பெண்கள் தமிழர் தேசிய விடுதலையிலும் அதுசார் ஈழ விடுதலை போராட்டத்திலும்  இணைந்து கொண்டார்கள் என்று "பதினொரு பேய்கள்" கதை சொல்லியாக சொல்வதை எந்த ஒரு வாசகனும் பொது வெளியில் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

அதே வேளையில் இந்த சர்ச்சைகளுக்கு அ.முத்துலிங்கம் ஐயா மட்டும்தான் பொறுப்பா ? என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்லவேண்டியிருக்கின்றது. பொதுவாக வரலாற்றுப் புனைவுகளை எழுதும் பொழுது படைப்பாளிகள், வாசகர் மட்டத்தில் எழும் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக வரலாற்றுத்தகவல்களை செம்மைப்படுத்த அதுசார் நிபுணர்களை அணுகுவது வழமை. இந்தக்கதையிலும் அ.முத்துலிங்கம் ஐயா வரலாற்று தகவல்களை சரிபார்த்து செம்மைப்படுத்த,கதை நிகழ்வு நடைபெற்ற அன்றைய காலகட்டத்தில் பொறுப்பாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பொறுப்பில் இருந்த முக்கியஸ்தர் ஓருவரை நாடியிருக்கின்றார். அந்த முக்கியஸ்தரும் வரலாற்றுத்தகவல் சரியே என்றும், அதை செம்மைப்படுத்த தேவையில்லை என்றும் கூறியதாக ஓர் இடைத்தகவல் உண்டு. அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பொறுப்பற்ற விதமாக வரலாற்றை திரிபு படுத்திய குற்றம், அன்றைய காலகட்டத்தில் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பொறுப்பில் இருந்த அந்த முக்கியஸ்தரையே சாருகின்றது. அந்த முக்கியஸ்தர் தனது அமைப்பு சார்ந்த பெண்கள் அமைப்பை இவ்வாறு கேவலப்படுத்துவார் என்று அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில், அ.முத்துலிங்கம் ஐயா அந்த முக்கியஸ்தரின் வார்த்தைகளை நம்பி வாசகர்களுக்கு நல்ல கதை தருகின்றேன் பேர்வழி என்று பிள்ளையார் பிடிக்க வெளிக்கிட்டு குரங்காகி போயிருக்கிறார். இந்த சர்ச்சைகளினால்  இனி வருங்காலங்களில் அ.முத்துலிங்கம் ஐயா புனைவுகளை எழுதும் பொழுது மற்றயவர்களை நம்பமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இப்படியாக  குற்றவாளிகள் பொதுவெளியில் சுதந்திரமாகத் திரியும்பொழுது, எல்லோரும் கதை எழுதிய அ.முத்துலிங்கம் ஐயாவில் மட்டும் சேற்றை வாரி இறைப்பது என்னைப் பொறுத்தவரையில் அறமாகத் தெரியவில்லை. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தரும், பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளாகவேண்டும். ஆனால் இது நடைபெறவில்லை. இது எந்தவகையான நுண் அரசியலைச் சார்ந்தது ? என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்தக்கதையினூடாக வெளிவந்த சர்ச்சைகளுக்கு புலம் பெயர்ந்த பெரும் இலக்கியச்செம்மல்கள் கள்ள மௌனம் சாதிப்பது பெரும் ஆச்சரியங்களையும் சந்தர்ப்பவாத இலக்கிய அரசியல்களையும் பொதுவெளிகளில் எடுத்துக்காட்டுகின்றன.

அத்துடன் புலம் பெயர் நாடுகளில் சின்னஞ்சிறு விடயங்களுக்காக எல்லாம் போர்கொடி தூக்குகின்ற பெண்ணிய வாதிகள் இந்த விடயத்தில் கள்ளமௌனமே சாதிக்கின்றனர்.  பதினொரு பேய்களில் சொல்லப்பட்ட சொப்னா பாத்திரமும், அதனால் புனையப்பட்ட  பாலியல் காட்சிகளினால் ஓர் போராட்ட அமைப்பின் பெண்கள் அமைப்பும், அதனூடாகவே  ஒட்டுமொத்த விடுதலை அமைப்புகளினது பெண்போராளிகளும் அவமானப்படுத்தப்பட்டது தெட்டத்தெளிவாக   தெரிந்திருந்தும், இந்தப் பெண்ணியவாதிகள் கள்ளமௌனம் சாதிப்பதன் நுண் அரசியலும் எனக்குப் புரியவில்லை. இவர்கள் எல்லோருமே பேசவேண்டிய இடங்களில் பேசாது அற்ப விடயங்களுக்காக தங்கள் நேரங்களை செலவிடுகின்றார்களோ என்று எண்ணவும் தோன்றுகின்றது.

இந்தக்கதையானது சோபாசக்தியின் "கண்டிவீரனின்" தழுவல் என்று சொல்வோரும் உண்டு.என்னைப் பொறுத்தவரையில் இரண்டுக்குமே அடிப்படையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. சோபாசக்தியின் கதை சொல்லியான "கண்டிவீரனில்" எள்ளல்கள் நக்கல்கள் தூக்கலாக இருந்து, இறுதியில் "கண்டிவீரன்" வரலாற்றில் வீரனாகவே போராளிகளை தமிழகத்துக்குப் படகில் கொண்டு செல்கின்றான். அங்கு வரலாறானது வாசகர்களுக்கு சோபாசக்தியினால் திரிக்கப்பட்டு இருக்கவில்லை. மாறாக எதிரிகளாயினும் தன்னை போட்டுத்தள்ள முடிவெடுத்தவர்களை இக்கட்டான வேளையில் பாதுகாக்கும் மனிதநேயம் கண்டிவீரனில் மேலோங்கி நின்றது.ஆனால் "பதினொரு பேய்களில்", அலன் தம்பதிகள் கடத்தல் விவகாரம் உண்மைநிலைக்கு மாறாக எழுதப்பட்டு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெண்கள் அமைப்பும் இன்ன பிற அமைப்புகளின் பெண் போராளிகளும் வெறும் பாலியல் வேட்கைக்காகவே இணைந்தார்கள் என்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறே "பதினொரு பேய்கள்" கதையால் திசை திரும்பி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த திசை திருப்பலானது வாசகர்கள் மனதிலே பெரும் தாக்கங்களை உருவாக்கவல்லது. ஏனெனில் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வரு குடும்பத்திலும் நேரிடையாகவோ அல்லது  மறைமுகமாகவோ பெண்களின் பங்களிப்பு இருந்து வந்திருக்கின்றது.

மேலும் எந்த ஒரு பொருள்களுக்கும் தேய்மானங்கள் என்ற ஒன்று உண்டு. அதுபோலவே படைப்பாளிகளின் ஆக்குதிறனும் அமைகின்றது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பன்முக ஆழுமையுள்ள படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள் .பொதுவாக படைப்பாளிகளில் ஆக்குதிறன்கள் வற்றிக்கொண்டு போகும் பொழுது, பொது வெளிகளில் இழந்துவரும் தங்கள் பெயரைத் தக்கவைக்க ஒருசில படைப்பாளிகள் இப்படியான சித்து விளையாட்டுகளைக் காட்டுவதுண்டு. இந்தப் "பதினொரு பேய்கள்" கதையினூடாக அ.முத்துலிங்கம் ஐயா அந்த வகையில் சேர்ந்துவிட்டாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படியோ இந்தக்கதையில் பெரிய குற்றவாளிகள் தப்பியிருக்க படைப்பாளியை  மட்டும் பொதுவெளியில் விமர்சிப்பது அறமாக எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரையில் அ.முத்துலிங்கம் ஐயா ஓர் அம்பு ,அவ்வளவே."பதினொரு பேய்கள்" கிளப்பிய இலக்கிய சர்ச்சைகளில் எய்தவர்களே முதல் குற்றவாளிகளாகின்றனர். ஆனால் அவர்கள் இதில் இருந்து சாமர்த்தியமாக தப்பிச் சென்றுள்ளனர் என்றே எண்ணத்தோன்றுகின்றது.வெறும் அம்பை மட்டும் பொதுவெளியில் களங்கப்படுத்துவது ஒருபோதுமே விமர்சன அறமாகாது . அதே வேளையில் வரலாறுகள் திரிக்கப்படும் பொழுது அதன் தாக்கம் வாசகர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இப்படியான புனைவுகளை எழுதும் படைப்பாளிகள் கவனத்தில் எடுக்கவேண்டும்.






கோமகன் 

13 மாசி 2015

Comments

Popular posts from this blog

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...