Skip to main content

கோமகனின் 'தனிக்கதை ' - என்னுரை



எனது வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும்
பணிவான வணக்கங்கள். இன்றைய நாள் வரை வலைப்பூவிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும், இணையங்களிலும் எழுதி வந்து கொண்டிருந்த எனது முதலாவது சிறுகதை தொகுதி முயற்சி இது.

இந்த சிறுகதை தொகுதியில் மொத்தம் பதினாறு சிறுகதைகளைக் கதைகளாகத் தொகுத்திருக்கின்றேன் . இந்தக் கதைசொல்லிகள் ஏற்கனவே இலக்கிய சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்து பலவாசகர்களது நெஞ்சை அள்ளிச்சென்றவை. ஒரு அம்மா தன் பிள்ளையைப் பெறும் பொழுது தான்பட்ட வலியையும் கஸ்ரத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பது, தனது பிள்ளை அப்பாவாலும், மற்றயவர்களாலும் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சப்படுகின்ற வேளையிலேயே. 

ஒரு எழுத்தாளனுக்கு மனச்சந்தோசத்தை தருவது வாசகர்களது விமர்சனங்களும், அவர்களது அங்கீகாரங்களுமே ஒழிய பட்டையங்களோ பணமுடிப்புகளோ இல்லை. அந்த வகையில் இந்த முதல் முயற்சியை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த சிறுகதை தொகுதியில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகளும், பின்னர் எழுதிய கதைகளும் அடங்குகின்றன. நான் எழுதிய ஆரம்ப கால சிறுகதைகளை இப்பொழுது பார்க்கும்பொழுது,எழுத்து வசப்பட்டதால் ஏற்பட்ட அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும், ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையை அம்மணமாகப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா? அந்த வகையில் அவற்றை அப்படியே விட்டிருக்கின்றேன்.

இந்த பதினாறு கதைசொல்லிகளும் எதோ ஒருவிதத்தில் எம்மைச்சுற்றி இருக்கும் குறைகளைத் தொட்டுச்செல்கின்றன. என்னைப்பொறுத்த வரையில் ஓர் எழுத்தாளன் என்பவன் வெறும் அழகியல் குறிப்புகளை எழுத்தில் வடிக்காது, எம்மைச்சுற்றியுள்ள கறுப்புப் பக்கங்களைத் தொட்டு வாசகர் மனதில் ஓர் பொறியை ஏற்படுத்துபவனாக இருக்கவேண்டும். அந்தவகையில் இந்தக் கதைகளில் ஓர் கதையாவது வாசகர் மனதில் ஓர் சிறு பொறியைக் கிளப்பியிருந்தால் நான் தொகுத்த இந்த சிறுகதை தொகுதியானது அதனது நோக்கில் வெற்றியடைந்திருக்கின்றது என்று எடுத்துக்கொள்கின்றேன்.

நான் எழுதத்தொடங்கிய காலங்களில் எனது கதைகளைப் பிரசுரித்து அதன் மூலம் பல வாசகர் வட்டங்களை உருவாக்கித்தந்த யாழ் இணையம், நிலாமுற்றம்,தமிழ்நண்பர்கள் இணையம்,"ஒருபேப்பர்"(பெரியபிருத்தானியா), "ஆக்காட்டி" இலக்கிய சஞ்சிகை, (பிரான்ஸ்),"எதுவரை" இலக்கிய சஞ்சிகை (பெரிய பிருத்தானியா) ,"மலைகள்" இலக்கிய சஞ்சிகை (இந்தியா),"அம்ருதா" இலக்கிய சஞ்சிகை (இந்தியா) ஆகியவற்றின் ஆசிரியர் குழுவினரையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவுகூர்கின்றேன். இந்த சிறுகதை தொகுதியை அழகாக வடிவமைத்து வெளியிடும் மகிழ் பதிப்பகத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி...................... வணக்கம் !!!





கோமகன்
மின்னஞ்சல் தொடர்பு : koomagan93@gmail.com


June 14, 2015

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...