Skip to main content

வாடாமல்லிகை - 10



தாரே இல்லாத ஒழுங்கையில் புழுதி தோய நடப்பது புதுவிதமான அனுபவமாகவே இருந்தது. இருளும் வெளிச்சமும் கலவையில் மாறுபட்டு மொக்கவிழ்க்கும் வேளையில் ஒழுங்கையின் இருபுறமும் இருந்த வீடுகளின் மதில்களால் எட்டிப்பார்த்த செம்பரத்தை, அலரி, மயிற் கொன்றை பூக்கழும் வெளிச்சம் என்ற சூடு பட்டு நெட்டி முறித்துக்கொன்டிருந்தன. அங்கிருந்து வந்த  பூக்களின்  வாசம்  மூக்கை துளைத்தது. ஒரு சில பூக்களில் வண்டுகள் மொய்க்கத் தொடங்கின. இவையாவுமே என்மனதில் ஒருவகை கிளர்ச்சியை  ஏற்படுத்தின. எனது கால்கள் ஒருவித தாள கதியில் புழுதி தோயத் தோய நடந்து கொண்டிருந்தன.  காலை வேளையிலேயே பாடசாலை மாணவர்களது லுமாலாக்கள் டியூசன் சென்டர்களை நோக்கி படை எடுத்துக்கொண்டு இருந்தன. எனது இளமைக்கால நினைவுகளும் அப்பொழுது முட்டி மோதி நின்றன. வாழ்க்கையில் எல்லோருமே இளமைக்காலத்தில் அதை வகைவகையாக அனுபவிப்போம். ஆனால் நாங்கள் பக்குவப்படும் பொழுது எங்கள் முன் இளையவர்கள் அதே குசும்புகளை செய்யும்பொழுது எங்கள் மனம் ஏனோ ஏற்க மறுக்கின்றது. நான் இப்பொழுது முதலாம் கட்டை சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தேன் .

எனது உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்து இருந்ததது. அந்தக்காலை வேளையில் கடைக்காரர்கள் கடைகளைத் திறப்பதற்கு கடைவாசலிலின் முன்பாக தண்ணி தெளித்து கூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த புழுதி வாசம்  மூக்கைத் துளைத்தது. பருத்தித்துறை வீதியில் விரைவாக நடக்கத் தொடங்கிய பொழுது அது  அதிகாலை சோம்பலை மெதுமெதுவாக முறித்துக் கொண்டிருந்தது. நான் முன்பு பார்த்த காவல் அரண்களும் அதில் குந்தியிருப்பவர்களும் இப்பொழுது இல்லை. ஆனால் அதன் மறுவடிவமாக காலை உடல் பயிற்சி செய்கின்றோம் என்று அவர்கள் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தார்கள். 

அதிகாலை வேளையில் மந்திகை பால் கூட்டுறவு சங்கம் பால் கொடுக்க வந்தவர்களாலும் எடுக்க வந்தவர்களாலும் கலகலத்துக் காணப்பட்டது. புலத்தில் செக்குமாடு போன்று உழன்று கொண்டிருந்த எனக்கு அந்த அதிகாலை வேளையும், பால் வாங்கும் இடத்தில் மக்களது வஞ்சகமற்ற கதைகளும் வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்றன. நான் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் அன்று நான் செய்ய வேண்டியவைகளை மனதில் உருப்போட்டு கொண்டு நடந்தேன். இதனால் களைப்பு என்னிடம் ஒட்ட மறுத்து உடலெங்கும் புத்துணர்ச்சி பொங்கிப் பரவியது. நான் கிராமக்கோட்டு அடியில் வந்த பொழுது எனது கால்கள் என்னை அறியாமல் ஒரு கடைவாசலில் நின்றன. கடையின் முன்பக்கமாக அன்றைய பத்திரிகைகளும் ஒரமாக கதலி வாழைக் குலைகழும் தொங்கிக்  கொண்டிருந்தன. அந்த கடையை வைத்திருப்பவர் ஓரளவு எனக்கு அறிமுகமானவர். என்னைக் கண்டதும் அன்பாக நலம் விசாரித்தார். நான் கேட்காமலேயே உதயன் பேப்பரும் கோல்ட் லீப் சிகரட் பெட்டியும் எடுத்து வைத்தார். குடும்பத்தை போரில் கொடுத்தாலும் வாழவேண்டும் என்ற இவரின் மனவைராக்கியம் எனக்கு பல நேரங்களில் முன் உதராணமாக இருந்திருக்கின்றது. அவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு மீண்டும் வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன். இப்பொழுது வீதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டதால் நான் சிறிது அவதானமாகவே நடக்க வேண்டியிருந்தது. 

நான் வீட்டிற்கு வரும் பொழுது காலை ஏழு மணியாகி இருந்தது. மனைவி விளக்கு மாற்றால் தனது தாயின் வீட்டு முற்றம் கூட்டிக்கொண்டிருந்தா. நான் பால் போத்தலை மாமியிடம் கொடுத்து விட்டு அருகே இருந்த இன்னுமொரு விளக்கு மாற்றை எடுத்துக்கொண்டு எங்கள் வீடிற்கு வந்தேன். நிலம் பூராக பூவரசம் இலை சருகுகளும், இப்பிலிப்பில் இலைகளும் பரவி இருந்தன. மதிலுடன் ஓட்டியிருந்த குரோட்டன்களும், வாடாமல்லிகைகளும், செம்பரத்தைகளும் தண்ணீர் கண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டு இருந்ததை மண்ணின் வறட்சி காட்டியது. நான் விளக்கு மாற்றால் கூட்ட கூட்ட முற்றமும் அதன் சுற்றாடாலும் புதுப்பொலிவு பெற்றன. முற்றம் எங்கும் புழுதி நிரம்பி இருந்தது. வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் நீரை அள்ளி முற்றத்தில் தெளித்தேன். அப்பொழுது எழும்பிய புழுதி, புழுதி வாசத்துடன் அடங்கியது. நான் ஊற்றிய தண்ணீரில் பூக்கண்டுகள் யாவும் புத்துயிர் பெற்றன. தண்ணீரை ஊற்றி விட்டு பூக்கண்டுகளை ஆசை தீரப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது மாமி சுடச் சுட பால் கோப்பியுடன் நின்றிருந்தா.  காலையில் புகைந்த வயிற்றுக்கு சூடான பால் கோப்பி இதமாகவே இருந்ததது. 

வீட்டுக்கு முன்பாக இருந்த ஒழுங்கையின் மீது நான் தெளித்த தண்ணீரால் எழும்பிய புழுதி வாசமும், கையில் வைத்திருந்த கபே வாசமும் என்னை அற்புதமான உலகத்தினுள் இழுத்துச் சென்றன. இதற்கு துணையாக ஒரு சிகரட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று என்னுள்ளிருந்த மனம் நெகிழ்வாக கேட்டது. அதன் ஆசையை   நிறைவேற்ருவது எனது கடமையாயிற்று. இதுவரை நேரமும் அமைதியாக இருந்த ஒழுங்கை பள்ளிக்கூடம் செல்பவர்களாலும், அலுவலத்துக்கு செல்லும் ஒரு சிலராலும் அமைதியிழந்தது. எனக்கு அதுவும் ஒருவகையில் அன்றைய பொழுதை ஓட்டுவதற்கு உதவியாகத்தான் இருந்தது. 

நான் பாரிஸில் இருந்து வெளிக்கிடும் பொழுது இரண்டு இலக்கிய நண்பர்களை சந்திப்பதற்கு அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தேன். அவர்களுடனான தொடர்பு இலக்கியரீதியாக ஓரளவு இருந்தாலும்,அவர்களை நான் சந்திக்கபோவது இதுவே முதல் தடவை. அவர்களில் ஒருவரை தொடர்பு கொள்ள எனது கைத்தொலைபேசியில் எண்களை ஒற்றினேன். சிறிது நேர இடைவேளையின் பின்பு மறுமுனையில் யோ கர்ணனின் குரல் கேட்டது. இறுதிப்போரில் மரணத்தின் எல்லை வரை சென்று இன்றும் உயிருடன் வாழும் இளைஞர்தான் யோ கர்ணன் . இவரது சொல்லாடலிலும் கதை சொல்லும் விதத்திலும் மயங்கிய நான் இவரை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தேன். எனது மனங்கவர் எழுத்தாளர் சுஜாதாவின் இளமைத் தோற்றமே இவரையிட்ட கற்பனை உருவமாக என்மனதில் தோன்றியிருந்ததது .இருவரும் பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்குப் பின்பு நாங்கள் சந்திக்க வேண்டிய நாளை குறித்துக் கொண்டோம். 

மாலை வேளை எனது கால்கள் முனைப்பகுதியை நோக்கி கல்லூரி வீதியில் நடந்து கொண்டிருந்தன போன முறை நான் இங்கு வந்த பொழுது யுத்த சாட்சியங்களாக பல கட்டிடங்களும் வீடுகளும் என்கண் முன்னே விரிந்திருந்தன. இப்பொழுதும் அவற்றில் ஒரு சில என் கண் முன்னே துருத்திக் கொண்டிருந்தன. ஹாட்லிக்கல்லூரியின் முன்பாக இருந்த கொன்றை மரம் பூக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நான் ஹாட்லிக்கல்லூரியை கடந்து முன்னேறிய பொழுது என்கண் முன்னே கருநீல வண்ணத்தில் முனைக் கடல் பரந்து விரிந்து இருந்ததது. தூரத்தே ஒரு சில கட்டுமரங்களும் விசைப்படகுகளும் கடலில் மிதந்து கொண்டிருந்தன. மெதடிஸ் கல்லூரியின் முன்னால் இருந்த குந்து ஒன்றில் நான் அமர்ந்து கொண்டேன்.

தூரத்தே தங்கத்தாம்பாளமாய் தகதகத்த சூரியனின் செம்மையினால் கடலெங்கும் நிறக்கலவையால் வர்ணம் காட்டியது. கூழைக்கடாகள் கூட்டமொன்று ஆரை வடிவில் தென்கிழக்காக வலசை போய்க்கொண்டிருந்தன. எல்லாமே முடிந்து விட்டது இனி நீ என்னிடம் பேச எதுவுமே இல்லை என்பது போல கடல் என்னிடம் மௌனமொழி பேசிக்கொண்டிருந்தது. ஒருகாலத்தில் எங்களைத் தாங்கி உயர்த்திய அதே கடல், இன்று தனது அலைகளால் மட்டும் என் கால்களை வருடி நலம் விசாரித்தது எனக்கு ஒருவித எரிச்சலையே ஏற்படுத்தியது. எங்கள் மனதில் கோளாறுகளை வைத்துக்கொண்டு கடலுடன் முரண்டு பிடிப்பதில் அர்த்தமே இல்லை என்று மறுபக்க மனது என்னுடன் தத்துவ விசாரணை செய்தது. எனது கண்கள் இமைவெட்டாது கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. பொங்கி வரும் கடலலையில் சுழியோடிய நண்டு ஒன்றின் செல்லக்கடியால் சுயநினைவுக்கு வந்த நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். சுற்றுப்புறச் சுழல் நன்றாக இருட்டிவிட்டிருந்ததது. 

நான் பருத்தித்துறை ரவுணை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கடற்கரையில் அங்காங்கே இருந்த வாடிவீடுகளில் காட்டா விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நான் ரவுணை அடைந்தபொழுது ரவுண் அந்த நாளின் இறுதிப்பரபரப்பில் இருந்ததது. நான் எனது வழக்கமான தேநீர்கடையினுள் நுழைந்தேன். என்னைக் கண்ட சந்தோசத்தில் கடைப் பெடியன் என்னிடம் அன்பாக நலம் விசாரித்தான். நான் றோட்டைப் பார்த்துக்கொண்டு மேசைக்கு முன்பாக அமர்ந்து இருந்தேன். கடைப் பெடியன் எனக்கு பிளெயின் ரீயும் றோல்சும் கொண்டு வந்து தந்தான். றோல்சின் மெதுவான உறைப்பு பிளெயின் ரீக்கு வித்தியாசமான சுவையைக் கொடுத்தது. கடையின் உள்ளே கொத்து றொட்டி ஒருவித தாளகதியில் கொத்தும் சத்தம் கேட்டது. கடையின் வெளியே இருந்த பாட்டுப்பெட்டியில் சிங்கள பைலாப் பாட்டுக்கள் போய் கொண்டிருந்தன. இது எனக்கு மனதில் உறுத்த தொடங்கியதால் கடை பெடியனிடம் ,

"ஏன் தமிழ் பாட்டுக்கள் கிடையாதா "? என்று கேட்டேன். 
"அண்ணை உங்களுக்கு பிஸ்னஸ் ட்ரிக் தெரியாது".
என்று அவன் பதில் தந்தான். இதுதான் தக்கன பிழைக்கும் என்று சொல்வார்களோ ?? என்று என் மனம் என்னிடம் சொல்லியது. மேலும் அங்கு இருக்கப் பிடியாமல் தேநீர் கடையை விட்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். நாளை கோப்பாய் செல்ல வேண்டும் என்று என் மனது சொல்லிக்கொண்டது . 

11 ஆனி 2014

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...