Skip to main content

வாடாமல்லிகை - 08




அதிகாலை வேளை ஆகையால் அந்த பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர். வவுனியா நகரில் மெதுவாக சென்ற பஸ் ஏ 9 பாதையில் நிலை எடுத்து வேகமாக ஓடத் தொடங்கியது. இதே பாதையால் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயணித்த பொழுது இந்தப் பாதை எனக்கு கற்காலத்தையே நினைவு படுத்தியது. இதற்காகவே நான் பல விசேடமான பயிற்சிகளையும் அப்பொழுது எடுக்க வேண்டி இருந்தது. அனால் இன்றோ இந்தப் பாதை யாரோ இட்ட பிச்சையில் "கார்ப்பெட்" என்ற புதுவித நகை அணிந்து தன்னை முத்தமிடும் வாகனச் சில்லுகளுக்கு சேதாரத்தை கொடுக்காது இலகுவாகவே அவைகளை உருளப்பண்ணியது.  பஸ் கிராமங்களின் ஊடாகவும் பரந்த பசுமை போர்த்திய வயல் வெளிகளின் ஊடாகவும் விரைந்து சென்றது . நான் முன்பு பார்த்த பொழுது யுத்தத்தின் கோரமான வடுக்களைச்  சுமந்த எமது விளைநிலங்கள் எல்லாம் இன்று வெட்ட வெட்ட தழைக்கும் எமது ஒர்ம குணத்தினால் பச்சைப்பசேலென என் கண்முன்னே விரிந்து மறைந்து கொண்டிருந்தன. இடையிடையே சின்னஞ் சிறு பற்றை வயல்களை எரித்து விட்டதனால் வந்த வாசம் மூக்கைத் துளைத்தது. உழைப்பினால் வந்த அந்த வாசத்தை நெஞ்சார இழுத்து விட்டேன்.

புலத்தில் பலவருடங்களை தொலைத்த எனக்கு சிறு வயதில் என்னுடன் இறுக்கமான பிணைப்பை கொடுத்த இந்த பஸ்ஸில் பயணம் செய்வது தொலைத்த நாட்களை மீண்டும் எடுப்பது போன்ற மன உணர்வையே ஏற்படுத்தியது. எல்லோருமே ஞாபகவீதியில் பயணம் செய்து மனக்கிளர்ச்சியை கொண்டு வந்து அதில் பலவித உணர்ச்சி நிலைகளுக்கு ஆளாவது பிடித்தமான செயல் .அது போலவே எனக்கும் இந்த இ போ ச பஸ் பயணம் அமைந்தது. 

இப்பொழுது அந்த பஸ்ஸில் ஓரளவு கூட்டம் சேர்ந்திருந்தது. எல்லோரும் அலுவலகத்துக்கு செல்வோரும் பாடசாலை மாணவர்களுமாகவே இருந்தார்கள். முன்பு போல பச்சை மனிதர்களின் அரையண்டங்கள் இல்லாவிட்டாலும், இயங்கியும் இயங்காத பல படை முகாம்களையும் வீதிகளில் செல்லும் பச்சை வாகனங்களையும் என்னால் அவதானிக்க முடிந்தது. வீதிகளில் பச்சைகளுக்கு பதிலாக காக்கிகள் போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். புதிதைக் கண்ட புழுக்கத்தில் புழுதி பறக்க ஓடும் வாகனங்களுக்கு இந்த காக்கிகள் என்ற கடிவாளம் அத்தியாவசியமாகவே எனக்குப் பட்டது. ஏனெனில் வேகமாக போனதில் வாழ்வை வேகமாக போக்கியவர்கள் இந்தப் பாதையில் பல பேர்கள் இருந்திருக்கின்றார்கள். ஒரு சில இடங்களில் பட்டியில் உள்ள மாடுகள் குடும்பசகிதமாக மேச்சலுக்கு சென்று கொண்டிருந்தது மனதை அள்ளியது. அவற்றை ஒழுக்கு படுத்த ஒரு நாயும் சென்று கொண்ருந்தது. ஒரு சில மாடுகள் நடுவீதியினாலும் சென்று கொண்டிருந்தால் நான் சென்ற பஸ் தன வேகத்தை மட்டுப்படுத்தியே ஓடியது. இந்த மாடுகளும் ஒருகாலத்தில் நாட்டின் எதிரிகளாக கணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவைதான். அதனால் என்னவோ இந்தமாடுகள் கண்டுக்கும் மாட்டுக்கும் இடைப்பட்டவையாக இருந்தன.

தூரத்தே ஓமந்தை சோதனை சாவடி வருவதற்கு அறிகுறியாக வீதிக்கு குறுக்கே மறிப்புகள் காணப்பட்டன. எனக்கு அடிவயிற்ரில் அமிலங்கள் சுரந்து உள்ளங்கைகள் வியர்க்கத் தொடங்கின. என்னை இயல்புபடுத்த முனைந்த நான் என்னிடம் தோற்றுக்கொண்டே வந்தேன். ஓமந்தை சோதனை சாவடி எங்களைப் பொறுத்தவரையில் பல சோதனைகளை கொண்டதாகவே இருந்து இருந்திருக்கின்றது. அதன் ஒவ்வரு அங்குலமும் பல கண்ணீர்கதைகளை கொண்டது. அதில் இரத்தவாடைகள் முற்றுமுழுதாக மறையாது மௌனசாட்சியங்களாக இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இராச்சியத்துக்குள் இராச்சியமாக எல்லை போட்ட பூமி அது. மண்ணை ஆண்டவர்களும் ஆளத்துடித்தவர்களும் இராச்சியத்தின் மக்களை பங்கு போட்டு வருத்திய இடம் இது . எங்கள் ஒருவரையும் இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ் சாரதியும் நடத்துனரும் கீழே இறங்கி சோதனை சாவடியை நோக்கி நடந்தார்கள்.அங்கே இருந்த இராணுவ அலுவலகரிடம் தங்கள் அடயாள அட்டையை பதிந்து கொண்டு வந்தார்கள். ஒருவகையில் பார்த்தால் நுட்பமாக பின்னிய வலையில் அவர்களே எமக்கான பலியாடுகள். நான் பஸ்ஸில் இருந்து கொண்டு சுற்றாடல்களை அவதானித்தேன் . 

படைமுகாமில் இராணுவ வீரர்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். போர் முடிந்த பின்பும் மக்களை அச்சத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற நுண்ணிய சிந்தனைகளால் தொடர்ந்தும் முகாம்களில் அடைத்து வளர்க்கப்படுபவர்கள். இவர்கள் எப்பொழுது எஜமானர்களை கடித்து குதறுவார்கள் என்பது எஜமானர்களுக்கே தெரியாதவிடயம். எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு பஸ் பவ்வியமாக ஓமந்தை சோதனை சாவடியில் இருந்து வெளியேறி மீண்டும் எண்பதுகளில் வந்த சினிமா பாடல்களைப் போட்டபடியே ஏ 9 பாதையில் விரையத் தொடங்கியது. பஸ்ஸினுள் பலவிதமான மக்கள் பலவிதமான பிரச்சனைகளுடன் பயணித்தார்கள். அவர்களை நான் வேடிக்கை பார்ப்பதும் ஒரு சுவாரசியமாகத்தான் இருந்தது. இந்தக்காலை வேளையிலேயே வெய்யில் உச்சியில் நின்றது. பஸ் ஜன்னல்களின் ஊடாக காலை வெய்யில் முகத்தில் சுளீரிட்டது. நான் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டேன். விரைந்து சென்ற பஸ் கிளிநொச்சியை கடந்து பரந்தனை தொட்டுக் கொண்டிருந்தது. பரந்தனும் முன்பு போல் இல்லாது அபிவிருத்தி என்ற புயலில் சிக்கி செழுமையாகவே இருந்தது. இந்த அபிவிருத்திகள் வெளிப்பார்வைக்கு அழகான மாளிகைகளாகத்  தெரிந்தாலும், அதன் உள்ளே பச்சை மனிதர்கள் என்ற கறையான்கள் ஊர்ந்து கொண்டுதான் இருந்தன.

காலை எட்டு மணியை நெருங்கியதால் எல்லோரும் சாப்பிடுவதற்காக பஸ் பரந்தனில் தன்னை நிறுத்தியது. எனக்கு அதிகம் பசிக்காததால் முன்னே இருந்த கடையில் ஒரு தேநீரையும் வடை ஒன்றையும் எடுத்துக்கொண்டேன். அந்தக்கடை இப்பொழுது தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதல் அது யுத்தத்தின் கறைபடிந்த சாட்சியமாகவே இருந்தது. இதே இடத்தில் முன்பு நான் தேநீரும் ரோல்சும் சாப்பிடிருக்கிறேன். மன்னர்கள் முக்கியமாக தாங்கள் வேட்டை ஆடியதற்கான எந்த விதமான அடயாளத்தையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மக்கள் மனதை வெல்ல நகர்த்திய காய்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகின. சூடான தேநீரும் வடையும் புகைந்த வயிற்றுக்கு இதமாகவே இருந்தது. பஸ் வெளிக்கிட நேரம் இருந்ததால் சிகரட் ஒன்றின் முனையை லைட்டரால் சிவப்பாக்கி அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன். சோர்ந்த நரம்புகழும் தசைகளும் புத்துணர்ச்சி பெற்றன. பஸ் மீண்டும் தனது பயணத்தை தொடர ஹோர்ண் அடித்து உறுமத் தொடங்கியது. 

08 வைகாசி 2014

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...