Skip to main content

வாடாமல்லிகை - 08




அதிகாலை வேளை ஆகையால் அந்த பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர். வவுனியா நகரில் மெதுவாக சென்ற பஸ் ஏ 9 பாதையில் நிலை எடுத்து வேகமாக ஓடத் தொடங்கியது. இதே பாதையால் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயணித்த பொழுது இந்தப் பாதை எனக்கு கற்காலத்தையே நினைவு படுத்தியது. இதற்காகவே நான் பல விசேடமான பயிற்சிகளையும் அப்பொழுது எடுக்க வேண்டி இருந்தது. அனால் இன்றோ இந்தப் பாதை யாரோ இட்ட பிச்சையில் "கார்ப்பெட்" என்ற புதுவித நகை அணிந்து தன்னை முத்தமிடும் வாகனச் சில்லுகளுக்கு சேதாரத்தை கொடுக்காது இலகுவாகவே அவைகளை உருளப்பண்ணியது.  பஸ் கிராமங்களின் ஊடாகவும் பரந்த பசுமை போர்த்திய வயல் வெளிகளின் ஊடாகவும் விரைந்து சென்றது . நான் முன்பு பார்த்த பொழுது யுத்தத்தின் கோரமான வடுக்களைச்  சுமந்த எமது விளைநிலங்கள் எல்லாம் இன்று வெட்ட வெட்ட தழைக்கும் எமது ஒர்ம குணத்தினால் பச்சைப்பசேலென என் கண்முன்னே விரிந்து மறைந்து கொண்டிருந்தன. இடையிடையே சின்னஞ் சிறு பற்றை வயல்களை எரித்து விட்டதனால் வந்த வாசம் மூக்கைத் துளைத்தது. உழைப்பினால் வந்த அந்த வாசத்தை நெஞ்சார இழுத்து விட்டேன்.

புலத்தில் பலவருடங்களை தொலைத்த எனக்கு சிறு வயதில் என்னுடன் இறுக்கமான பிணைப்பை கொடுத்த இந்த பஸ்ஸில் பயணம் செய்வது தொலைத்த நாட்களை மீண்டும் எடுப்பது போன்ற மன உணர்வையே ஏற்படுத்தியது. எல்லோருமே ஞாபகவீதியில் பயணம் செய்து மனக்கிளர்ச்சியை கொண்டு வந்து அதில் பலவித உணர்ச்சி நிலைகளுக்கு ஆளாவது பிடித்தமான செயல் .அது போலவே எனக்கும் இந்த இ போ ச பஸ் பயணம் அமைந்தது. 

இப்பொழுது அந்த பஸ்ஸில் ஓரளவு கூட்டம் சேர்ந்திருந்தது. எல்லோரும் அலுவலகத்துக்கு செல்வோரும் பாடசாலை மாணவர்களுமாகவே இருந்தார்கள். முன்பு போல பச்சை மனிதர்களின் அரையண்டங்கள் இல்லாவிட்டாலும், இயங்கியும் இயங்காத பல படை முகாம்களையும் வீதிகளில் செல்லும் பச்சை வாகனங்களையும் என்னால் அவதானிக்க முடிந்தது. வீதிகளில் பச்சைகளுக்கு பதிலாக காக்கிகள் போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். புதிதைக் கண்ட புழுக்கத்தில் புழுதி பறக்க ஓடும் வாகனங்களுக்கு இந்த காக்கிகள் என்ற கடிவாளம் அத்தியாவசியமாகவே எனக்குப் பட்டது. ஏனெனில் வேகமாக போனதில் வாழ்வை வேகமாக போக்கியவர்கள் இந்தப் பாதையில் பல பேர்கள் இருந்திருக்கின்றார்கள். ஒரு சில இடங்களில் பட்டியில் உள்ள மாடுகள் குடும்பசகிதமாக மேச்சலுக்கு சென்று கொண்டிருந்தது மனதை அள்ளியது. அவற்றை ஒழுக்கு படுத்த ஒரு நாயும் சென்று கொண்ருந்தது. ஒரு சில மாடுகள் நடுவீதியினாலும் சென்று கொண்டிருந்தால் நான் சென்ற பஸ் தன வேகத்தை மட்டுப்படுத்தியே ஓடியது. இந்த மாடுகளும் ஒருகாலத்தில் நாட்டின் எதிரிகளாக கணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவைதான். அதனால் என்னவோ இந்தமாடுகள் கண்டுக்கும் மாட்டுக்கும் இடைப்பட்டவையாக இருந்தன.

தூரத்தே ஓமந்தை சோதனை சாவடி வருவதற்கு அறிகுறியாக வீதிக்கு குறுக்கே மறிப்புகள் காணப்பட்டன. எனக்கு அடிவயிற்ரில் அமிலங்கள் சுரந்து உள்ளங்கைகள் வியர்க்கத் தொடங்கின. என்னை இயல்புபடுத்த முனைந்த நான் என்னிடம் தோற்றுக்கொண்டே வந்தேன். ஓமந்தை சோதனை சாவடி எங்களைப் பொறுத்தவரையில் பல சோதனைகளை கொண்டதாகவே இருந்து இருந்திருக்கின்றது. அதன் ஒவ்வரு அங்குலமும் பல கண்ணீர்கதைகளை கொண்டது. அதில் இரத்தவாடைகள் முற்றுமுழுதாக மறையாது மௌனசாட்சியங்களாக இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இராச்சியத்துக்குள் இராச்சியமாக எல்லை போட்ட பூமி அது. மண்ணை ஆண்டவர்களும் ஆளத்துடித்தவர்களும் இராச்சியத்தின் மக்களை பங்கு போட்டு வருத்திய இடம் இது . எங்கள் ஒருவரையும் இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ் சாரதியும் நடத்துனரும் கீழே இறங்கி சோதனை சாவடியை நோக்கி நடந்தார்கள்.அங்கே இருந்த இராணுவ அலுவலகரிடம் தங்கள் அடயாள அட்டையை பதிந்து கொண்டு வந்தார்கள். ஒருவகையில் பார்த்தால் நுட்பமாக பின்னிய வலையில் அவர்களே எமக்கான பலியாடுகள். நான் பஸ்ஸில் இருந்து கொண்டு சுற்றாடல்களை அவதானித்தேன் . 

படைமுகாமில் இராணுவ வீரர்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். போர் முடிந்த பின்பும் மக்களை அச்சத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற நுண்ணிய சிந்தனைகளால் தொடர்ந்தும் முகாம்களில் அடைத்து வளர்க்கப்படுபவர்கள். இவர்கள் எப்பொழுது எஜமானர்களை கடித்து குதறுவார்கள் என்பது எஜமானர்களுக்கே தெரியாதவிடயம். எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு பஸ் பவ்வியமாக ஓமந்தை சோதனை சாவடியில் இருந்து வெளியேறி மீண்டும் எண்பதுகளில் வந்த சினிமா பாடல்களைப் போட்டபடியே ஏ 9 பாதையில் விரையத் தொடங்கியது. பஸ்ஸினுள் பலவிதமான மக்கள் பலவிதமான பிரச்சனைகளுடன் பயணித்தார்கள். அவர்களை நான் வேடிக்கை பார்ப்பதும் ஒரு சுவாரசியமாகத்தான் இருந்தது. இந்தக்காலை வேளையிலேயே வெய்யில் உச்சியில் நின்றது. பஸ் ஜன்னல்களின் ஊடாக காலை வெய்யில் முகத்தில் சுளீரிட்டது. நான் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டேன். விரைந்து சென்ற பஸ் கிளிநொச்சியை கடந்து பரந்தனை தொட்டுக் கொண்டிருந்தது. பரந்தனும் முன்பு போல் இல்லாது அபிவிருத்தி என்ற புயலில் சிக்கி செழுமையாகவே இருந்தது. இந்த அபிவிருத்திகள் வெளிப்பார்வைக்கு அழகான மாளிகைகளாகத்  தெரிந்தாலும், அதன் உள்ளே பச்சை மனிதர்கள் என்ற கறையான்கள் ஊர்ந்து கொண்டுதான் இருந்தன.

காலை எட்டு மணியை நெருங்கியதால் எல்லோரும் சாப்பிடுவதற்காக பஸ் பரந்தனில் தன்னை நிறுத்தியது. எனக்கு அதிகம் பசிக்காததால் முன்னே இருந்த கடையில் ஒரு தேநீரையும் வடை ஒன்றையும் எடுத்துக்கொண்டேன். அந்தக்கடை இப்பொழுது தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதல் அது யுத்தத்தின் கறைபடிந்த சாட்சியமாகவே இருந்தது. இதே இடத்தில் முன்பு நான் தேநீரும் ரோல்சும் சாப்பிடிருக்கிறேன். மன்னர்கள் முக்கியமாக தாங்கள் வேட்டை ஆடியதற்கான எந்த விதமான அடயாளத்தையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மக்கள் மனதை வெல்ல நகர்த்திய காய்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகின. சூடான தேநீரும் வடையும் புகைந்த வயிற்றுக்கு இதமாகவே இருந்தது. பஸ் வெளிக்கிட நேரம் இருந்ததால் சிகரட் ஒன்றின் முனையை லைட்டரால் சிவப்பாக்கி அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன். சோர்ந்த நரம்புகழும் தசைகளும் புத்துணர்ச்சி பெற்றன. பஸ் மீண்டும் தனது பயணத்தை தொடர ஹோர்ண் அடித்து உறுமத் தொடங்கியது. 

08 வைகாசி 2014

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...