Skip to main content

வாடாமல்லிகை - பாகம் 05



நாங்கள் பதிவு செய்திருந்த மகிழூந்து  எங்கள் அருகில் வந்து நின்றது. வண்டி சாரதி பவ்வியமாக இறங்கி வந்து எமது பயணப் பொதிகளை வாங்கி கார் டிக்கிக்குள் வைத்தான். அவன் சிங்களவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக்கொண்டென். மகிழூந்தில்  குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாவில் இருந்து தொடங்கியது. மகிழூந்து எங்களை ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டி பிளட்ஸ் நோக்கி வழுக்கியது .  மகிழூந்து ஓடத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்கமான பாதையில் செல்லாது அதிவிரைவு பாதையில் செல்லத் தொடங்கியது . அந்த பாதை மகிந்த சிந்தனையில் உதித்து சீனத்தின் உதவியுடன் சமீபத்தில் திறக்கப்பட்ட அதி வேகப்பாதை என்று ரக்சி சாரதியுடன் கதைத்த பொழுது அறியக்கூடியதாக இருந்தது. ஏறத்தாழ இருபது நிமிடங்களை விழுங்கி விட்டு அந்த  மகிழூந்து கொழும்பு நகரினுள் நுழைந்தது. அதிகாலையில் கொழும்பு அரை அவியல் முட்டை நிலையில் இருந்தது. ஆங்காங்கே மக்கள் தங்கள் நாளை தொடங்குவதற்கு ஆயத்தமாக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர். வீதிகளில் சோதனை சாவடிகளோ வீதி தடைகளோ காணப்படவில்லை. எந்த இடத்திலும் விளம்பரத் தட்டிகளில் நாட்டைக் காத்த மகிந்த ஒரு மந்தகாசப் புன்னைகையுடன் காணப்பட்டார். இதுவும் ஒரு மலிவான விளம்பர உத்தி தான் என்றே நினைத்தேன் . ஏனெனில் மக்களால் மறக்கப்படுகின்ற இராஜ்சியங்களின் அரசர்கள் பலர் மக்கள் எப்பொழுதும் தங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று இப்படியான மலிந்த வேலைகளில் இறங்குவதுண்டு.

எங்களை சுமந்த மகிழூந்து ஒருவழியாக காலை நாலு மணியளவில் பம்பலப்பிட்டி பிளட்ஸ்-க்கு வந்து சேர்ந்தது. சாரதி நாங்கள் இறங்க முன்பே காரை விட்டிறங்கி எமது கதவை திறந்து விட்டிருந்தார். வருகின்ற வழியில் எம்மிடம் ஒரு வார்த்தையேனும் அளவுக்கு அதிகமாக அவர் கதைக்கவில்லை. அவரே எமது பயணப்பொதிகளை காரில் இருந்து இறக்கி வைத்தார். நான் ஆரம்பம் முதலே அவரை கவனித்து வந்ததில் வேற்று இனத்தவராக இருந்தாலும் " வாடிக்கையாளர் சேவை " என்ற விடயத்தில் ஒரு பண்பட்ட அணுகுமுறையை அவரிடம் காண முடிந்தது. எம்மவர்களிடம் குறைந்த அளவிலேயே இந்த அணுகு முறையினை அவதானித்து இருக்கின்றேன். நான் மனைவியிடம் வாய் திறக்க முதலே அவா மீற்றரில் இருந்த தொகையை விட இரண்டு சைபருகளை அதிகமாக கொடுத்திருந்தா. அந்த சாரதி மிகுந்த மகிழ்ச்சியுடன் அன்றைய நாளுக்கும் எமக்கும் வாழ்த்துச் சொல்லி எம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.  மனைவியின் தோழி முதலாவது மாடி பல்கணியில் நின்று கொண்டிருந்தா. அந்த வீட்டில் ஒரு சோகசம்பவம் போன வருடம் நிகழ்ந்ததால் அந்த தோழியின் முகத்தில் ஒரு வாட்டம் காணப்பட்டது. தனது தோழியை கண்டவுடன் அந்த சோகம் கண்ணீராக வெளிப்பட்டது. எனக்கு தர்மசங்கடமான நிலையாகப் பொய் விட்டது .

ஒரு நாள் தொடர் பயணத்தால் அழுக்கும் தலை இடியும் உடலில் சேர்ந்து கொண்டன. எனது உடல் குளிப்பதற்கு ஏங்கியது. மனத்தில் எழுந்த திட்டத்தை செயல்படுத்த தயாரானேன். அந்தக்காலை வேளையில் தண்ணீர் ஹீட்டர் இல்லாமலே கதகதப்பாக இருந்தது. தண்ணீர் உடலெங்கும் பாய மனதும் உடலும் புதிய நாளை வரவேற்பதற்காக தயாராகின. குளித்து முடித்து விட்டு வெளியே வர சூடான கோப்பி தயாராக இருந்ததது. நான் கோப்பியை எடுத்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன். வெளியே நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது. அங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடல் பரந்து விரிந்து இருந்ததது. அதன் அலைகள் ,காமம் தலைகேறிய காதலன் தன் காதலியின் உதட்டை மூர்க்கமாக கவ்வுவதைப்போல கரையை முத்தம் இட்டுக்கொண்டிருந்தன. தூரத்தே சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. உள்ளே தோழிகள் குடும்ப கதைகள் கதைத்துகொண்டிருந்தர்கள். கோப்பியில் அதிக அன்பு  கலந்து இருந்திருந்ததால்  கையில் இருந்த  கோப்பி சீனி இல்லாவிட்டாலும் இனிமையாக இருந்தது. கீழே நாகரீக மக்கள் நாகரீகத்தால் வந்த கலோரியை குறைக்க ஓடியும் நடந்தும் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிலர், நைட்டிகள் ட்றெசிங் கவுன்கள் என்று பாரம்பரியத்தை கை விடாது  காலுக்கு மட்டும் சப்பாத்து என்றும் விநோதமான நாகரீக மக்களும் இருந்தார்கள். அந்தக்காலை வேளையில் சூடான கொப்பியும் சிகரட்டும் மனதுக்கு இதமாக இருந்தன. அன்றைய நாளின் சூடு மெது மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது .

இந்த மூன்று வருட இடைவெளியில் கொழும்பில் என்னால் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை. விலை வாசிகள் ஏறத்தாழ ஐரோப்பிய நிலையிலேயே இருந்தன. ஆனால் மக்களது வருமானமோ ரூபாய்களில் இருந்தன. மனைவியின் நண்பி நாங்கள் வவுனியா செல்வதற்கு அன்று மாலை யாழ்தேவியில் பதிவு செய்திருந்தா. நானும் மனைவியும் காலை ஒன்பது மணியளவில் ஒரு சில சாமான்கள் வாங்குவதற்காக வெளியில் சென்றோம். நாங்கள் வெளியே வந்த பொழுது தொடர் மாடியின் முன் உள்ள தேமா மரங்கள் பூக்களை சொரிந்திருந்தன. பாடசாலைக்கு பிள்ளைகள் சென்று கொண்டிருந்தார்கள். கொழும்பு நகரம் பரபரப்பு  வட்டத்தினுள் தன்னை முற்று முழுதாகவே புதைத்துக் கொண்டிருந்தது. நாங்கள் கொண்டுவந்த யூரோக்கள் சிலவற்றை மாற்றி  வாங்கவேண்டிய சாமான்களை வாங்கினோம்.

எல்லா நாணயங்களிலும் புத்தமத சின்னங்களே வியாபித்திருந்தன. ஒரே இராஜ்ஜியம், குடியானவர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற அரசர்களின் சிந்தனைகளில் வேற்று மத சின்னங்களை மருந்துக்கும் காணமுடியவில்லை. நேரம் பன்னிரண்டு மணியை நெருங்கிகொண்டிருந்தது. வெய்யில் அனலாக கொதித்தது . உடலெங்கும் வெப்பம் கூடி வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காலை சாப்பிட்ட உணவு கரைந்து இப்பொழுது வயிறு அடுத்த கட்ட காட்சிக்காக தயாராகி கொண்டிருந்தது. எனது மனமோ குளிர்மைக்கு ஏங்கியது. நாங்கள் வெள்ளவத்தையில் பிரபல்யமான " ரேஸ்ற் ஒப் ஏசியா " க்குள் நுழைந்தோம். எமது முகத்தில் அறைந்த குளிரூட்டி  எமக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது .

" ரேஸ்ற் ஒப் ஏசியா " உணவகம், அதன் சுவையினாலும் வாடிக்கையாளர் சேவையினாலும் தமிழர் மத்தியில் பிரபல்யமானஒரு உணவகமாகும். அந்த உணவகம் அதி நவீன வசதிகளுடன் நாங்களாகவே சுயமாக பரிமாறும் வசதிகளுடன் இருந்தது. நாங்கள் எங்களுக்குத் தேவையான உணவுவகைகளை எடுத்துக்கொண்டு ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டோம். அந்த இடத்தில் இருந்து காலி வீதியை எம்மால் வடிவாக பார்க்க கூடியதாக இருந்தது. மக்களும் வாகனங்களும் விட்டதை தேடும் ஆவலில் பறந்து கொண்டிருந்தார்கள். நேற்றில் இருந்து சரியான உணவுகள் இல்லாததால் எனக்கு அந்த உணவுவகைகள் அமிர்தமாக இருந்தது. வயிறு காய்ந்து பசித்தால் தான் உணவையும் ரசித்துப் புசிக்கலாம் என்ற உண்மை அப்பொழுது தான் எனக்கு விளங்கியது. நாங்கள் ஆறுதலாக எமது மதிய உணவை முடித்து விட்டு வெளியே வந்தோம். மீண்டும் அனல் வெக்கை முகத்தில் அடித்து முகம் எரியத் தொடங்கியது. ஒருநாள் கால மாற்றம் என்னை உடனடியாக இயல்பாக்கம் பெறுவதற்கு முரண்டு பிடித்துக்கொண்டது. அதனால் நான் மிகவும் அவதிப்பட வேண்டி வந்ததது. நாங்கள் மீண்டும் கையில் தூக்க முடியாத சுமைகளுடன் வீட்டை வந்து சேர்ந்தோம். நான் காற்று வேண்டி வீட்டின் பல்கணிக்கு  வந்து நின்றேன். கடல் காற்று குளுமையுடன் முகத்தில் தாக்கியது அந்த வேளைக்கு இதமாக இருந்தது. நேரம் இரண்டு மணியை நெருங்கிகொண்டிருந்தது. நாங்கள் வவுனியா செல்ல வேண்டிய நேரம் நெருங்கியதால் மனைவியின் நண்பியே தனது காரில் எங்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு சென்றா.

 17 சித்திரை 2014

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...