Skip to main content

வாடாமல்லிகை பாகம் 06



கோட்டே தொடரூந்து  நிலையம் தேன் வதையை மொய்த்துக் கொண்டிருக்கும் தேனீக்களைப்போல  இருந்தது. மக்கள் தொடரூந்து நிலையத்தில் உள்ளே போவதும் வருவதுமாக எனக்கு தேன் கூட்டையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். தனது காரை நிறுத்துவதற்கு எனது மனைவியின் தோழி சிரமப்படுவதை பார்த்து புகையிரத நிலயத்தின் முன்பாகவே நாங்கள் இறங்கிக்கொண்டோம். நாங்கள் சன வெள்ளத்தில் நீந்திக்கொண்டே உள்ளே சென்றோம். உள்ளே காதைப்பிளக்கும் சந்தைக்கடை இரைச்சலாக  தொடரூந்து மேடை இருந்தது. நாங்கள் செல்ல வேண்டிய யாழ் தேவி தொடரூந்து மேடையில் நீண்டு வளைந்து நின்று இருந்தது. தொடரூந்தில்  இடம் பிடிப்பதற்காகப்  பல் முனைதாக்குதல்கள் சனங்களால் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தைப் பிடிப்பதில் எம்மவர்கள் என்றுமே பல விதமான உத்திகளை பிரயோகிப்பதை கண்டு வியந்திருக்கின்றேன். நாங்கள் எமது இருக்கையின் இலக்கத்தை தேடி பிடித்து அமர்ந்து கொண்டோம். எமக்கு முன்பாக இருந்த இருக்கைகள் யாருக்குகாகவோ காத்துகொண்டு இருந்தன. வெளியே தேநீர் வடை விற்பவர்களது குரல்கள் பலவேறு அலைவரிசையில் எனது காதுகளை அடைத்துக்கொண்டு இருந்தன. 

இந்த தொடரூந்துப்  பயணம் என்றாலே அலாதியானதுதான். அதில் பயணம் செய்யும் பயணிகள் எமக்கு சொந்தமாக இல்லாவிட்டாலும். தேவைகள் கருதி எம்முடன் வைக்கும் உறவுகளும், அது தெரிந்தும் நாமும் அவர்களுடன் ஒன்றிப் போவதும், பின்பு இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஆளுக்கு ஒருவராகப் பிரிவதும், அப்பொழுது ஏற்படும் வெறுமை உணர்ச்சி பயணத்தை அனுபவித்தவர்களுக்கே புரியக்கூடியது. சில வேளைகளில் இந்தப்பயணங்கள் கூட வருபவர்களால் நரகமாக மாறுவதும் உண்டு. தொடரூந்துப்பெட்டியின் உள்ளே இருந்த குளிரூட்டியினால் வந்த குளிர்மை அந்த கொடும் வெக்கைக்கு மிகவும் இதமாகவே இருந்தது. எனது கண்களோ சுற்றுச் சூழலை அளவெடுத்தன. அங்கு இருந்த பயணிகளில் தொண்ணூறு வீதமானோரின் கைகளில் கைதொலைபேசி படாதபாடு பட்டுக் கொண்டு இருந்தது. அங்கு ஒரு பொழுது போக்கு சாதனமாக மட்டுமே கைத்தொலைபேசி அதிகளவில் பாவிக்கப்பட்டது. இதற்கு அதிக அளவு புலத்துப் பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். மணியடித்து, கொடி காட்டி, வளையம் பரிமாறி, என்று இம்மியளவும் பாரம்பரியத்தைப் பிசகவிடாது  யாழ் தேவி தனது சடங்குகளை முடித்துக்கொண்டு வவுனியாவை நோக்கி கோட்டே தொடரூந்து நிலயத்தில் இருந்து நகரத் தொடங்கியது.

எங்கள் எதிரே இருந்த இருக்கைகளுக்கு ஒரு வயதான தம்பதிகள் இறுதி நேரத்தில் அல்லாடிக்கொண்டு வந்தார்கள். கணவனுக்கு ஒரு எழுபத்தி ஐந்து வயது இருக்கலாம். மனைவிக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அவர்களை ரெயில்வே கார்ட் தான் அழைத்துவந்து அவர்களது இருக்ககை இலக்கத்தைச் சரி பார்த்து எமக்கு முன்னே இருத்தி விட்டார். கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்த எனக்கு ரெயில் பெட்டியை முற்றுமுழுவதுமாக சுதந்திரமாகவே நோட்டம் விட முடிந்தது. எனது கண்கள் வெளியிலயே அலைபாய்ந்தன.  யாழ்தேவி அழகிய சிறிய சிங்களக் கிராமங்களின் ஊடாக வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. இரு புறமும் அடர்த்தியான தென்னை மரங்களும் கமுக மரங்களும் வரிசை கட்டி எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தன. தென்னை ஓலைகளால் வேயப்படிருந்த ஒலைகுடிசைகளில் ஆண்களும் பெண்களும் வெளியே இருந்து தென்னம் ஓலையினால் கிடுகு பின்னிக் கொண்டு இருந்தார்கள். அங்கு இருந்த சிறுவர்கள் ஓடிய யாழ் தேவிக்கு கை அசைத்தார்கள். அவர்கள் முகத்தில் கள்ளம் கபடம் எதுவும் காணப்படவில்லை. இதே போல் நாங்களும் சிறுவயதில் யாழ் தேவிக்கு வீதி ஓரத்தில் நின்று கைகளைக் காட்டி இருக்கின்றோம். அந்த சிறு வயதிலேயே இரண்டு பக்கமும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எனது மனம் ஏங்கியது.

நகர் புறங்களைக் கடந்து சிறிய கிராமங்கள் ஊடாகவும் பசுமை போர்த்திய வயல் வெளிப் பரப்புகள் ஊடாகவும் யாழ் தேவி வேகமெடுத்தது. நான் இருக்கும் பாதுகாப்பில் எனது மனைவி எனது தோளில் நித்திரையாகி விட்டாள். எனக்கு முன்பு இருந்த வயோதிக தம்பதிகள் இருவரும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருந்தார்கள். மற்றயவர்கள் போல் " விடுப்பு " அறியும் ஆவல் அவர்களிடம் இல்லாமல் இருந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் அடங்கா பசியுடன் உள்ள குழந்தை தன் தாயில் பால் குடிப்பதைப்போல இரண்டு பக்கத்திலும் உள்ள இயற்கை காட்சிகளை அள்ளிப் பருகி கொண்டு வந்தேன். அப்பொழுது வெய்யில் குறைந்து இருள் கவியத் தொடங்கியது. இரண்டு பக்கமும் வெளிச்சப் பொட்டுகள் மின்னின. ஒரு சில இடங்களில் பயிர் செய்கைக்காக எரிக்கப்பட்ட சிறு பற்றைக் காடுகளில் இருந்து விறகு எரிந்த மணம் என் மூக்கைத் துளைத்தது. நீண்டகாலத்துக்குப் பின்பு வந்த மணத்தை ஆசையுடன் நுகர்ந்தேன். இதமான காற்று என் முகத்தில் அடித்தது. இந்த அருமையான பொழுதில் ஒரு தேநீர் குடித்து சிகரட் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனது மனம் நெட்டுரு போடத்தொடங்கியது. அப்பொழுது யாழ் தேவி அனுராத புரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு மணித்தியாலத்தில் வவுனியாவை அடைந்து விடுவேன் என்ற நினைப்பே என்மனதை கிளர்ச்சி அடையப்பண்ணியது.

எனது அம்மாவின் இழப்புக்குப் பின்பு அக்காவே எனக்கு எல்லாம். நான் வரும் தகவலை முதலே நான் சொல்லி இருந்தேன். ஒரு இருள் கவிந்த இரவில் நாங்கள் வந்து கொண்டிருந்த யாழ் தேவி வவுனியா தொடரூந்து நிலையத்தில் கிரீச்சிட்டு நின்றது.

25 சித்திரை 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம