Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1-16




இளங்கோவின் குதிரை கோட்டை வாயிலை நெருங்குவதற்கு முன்பே அதை நன்றாக இழுத்து மூடிவிட்டார்கள். வல்லவரையர் வந்தியத்தேவர் நெருப்புப் பொறி பறக்கும் கண்களோடு அங்கு நின்றுகொண்டே வீரர்களுக்குப் பற்பல விதமான கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

“ஓடுங்கள்! அரண்மனையின் எல்லா வாயில்களையும் மூடச்சொல்லுங்கள்!” என்றார் சிலரிடம். “எதிரிகள் எங்கு தென்பட்டாலும் அவர்களை வளைத்துக் கொண்டு காவலில் வையுங்கள்!” என்றார். இன்னும்சிலரிடம், “நிலவறைப் பாதைகள், ரகசிய வழிகள், தப்பிச் செல்வதற்கான

மார்க்கங்கள் எங்கேயாவது தென்படுகின்றனவா என்று தேடிப் பாருங்கள்!”என்றார் மேலும் சிலரிடம்.
வல்லவரையரிடம் நெருங்கிப் பேசுவதற்கே அச்சமாக இருந்தது இளங்கோவுக்கு. நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் வாயில் கதவுகளைத் திறக்கச் செய்வாரா அவர்? வீரர்களின் மத்தியில் புகுந்து தயங்கிக்கொணடேபோய் அவர் முன்னால் குதிரையிலிருந்து கீழே இறங்கினான் இளங்கோ.

“நீ எங்கு இங்கே வந்தாய்?” என்று வியப்புடன் கேட்டார் வல்லவரையர்.

“மகிந்தரின் மகனை யாரோ குதிரைமேல் தூக்கி வைத்துக் கொண்டு இந்த வழியாகச் சென்றார்கள். நம்முடைய வீரன் என்று நம்பி ஏமாந்து போய்விட்டேன். வாயிலைத் திறந்து விடச் சொல்கிறீர்களா?” என்றான் இளங்கோ.

“இதற்காக இந்த வேளையில் நீ அரண்மனையைவிட்டு வெளியே கிளம்பலாமா? உடனே திரும்பிப்போ! அரண்மனை அந்தப்புரம், அரசமாளிகைகள் எல்லாவற்றையும் நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும்.”

தயங்கிய வண்ணம் அங்கேயே நின்று கொண்டிருந்தான் இளங்கோ.

“எதற்காக நிற்கிறாய்? அரண்மனைக்குப்போ; இதோ நானும் வந்து விடுகிறேன்” என்றார் வல்லவரையர்.

“தாத்தா! என் கண்ணெதிரில் அவன் தப்பிவிட்டான், தாத்தா! அவனை எப்படியாவது பிடித்துக் கொண்டு திரும்புகிறேன். வாயிலைத் திறக்கச் சொல்லுங்கள்” என்று கெஞ்சினான் இளங்கோ.

“மன்னரே தப்பி ஓடிவிட்டாரென்று செய்தி வந்திருக்கிறது. அவருடைய மகனுக்காகக் கவலைப்படுகிறாயே” என்று வருத்தத்துடன் சிரித்தார் வந்தியத்தேவர். “இதோ பார், இந்த ரோகணமே ஒரு பெரிய எலி வளை.ஒளிந்து கொள்வதும் மறைந்து கொள்வதும் இந்த நாட்டுக்குப் புதிதல்ல. மெதுவாக அவர்களையெல்லாம் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். வா, நாம் போய் மற்றவர்களும் மறைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வோம்.”

இளங்கோவால் வல்லவரையர் சொல்லை மீற முடியவில்லை. இருவரும் ஒன்றாய்த் திரும்பினார்கள்.

அரண்மனைக்குள் நூற்றுக்கணக்கான வீரர்கள் நுழைந்து எங்கெல்லாம் சோதனையிட்டுப் பார்க்க முடியுமோ, அங்கெல்லாம் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு இடமாகச் சென்று எதையோ தேடிப் பார்ப்பதில் முனைந்திருந்தனர்.

“தாத்தா! இப்போது எதைத் தேடுகிறார்கள் இவர்கள்?”

“நாம் எதற்காக இங்கே படையெடுத்து வந்தோமோ, அதைத்தான் தேடுகிறார்கள்.”

“மணிமுடி தேடும் படலமா?” என்று கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்தான் இளங்கோ. “ஏன் தாத்தா ஓடி ஒளிந்து கொண்ட மகிந்தர் அதை எப்படி இங்கே வைத்து விட்டுப் போயிருப்பார்? மனிதர்களை ஒளித்துவைக்கவே மலைக் குகைகள் நிறைந்த நாட்டில், மணி முடிக்குத்தானா சிறுஇடம் கிடைக்காது!- தாங்கள் முன்பு என்னிடம் அப்படிக் கூறியிருக்கிறீர்கள்.”

“தேடிப் பார்த்துவிட வேண்டியது நம்முடைய கடமை” என்றார் வந்தியத் தேவர். “எங்கேதான் அதை வைத்திருக்கிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. கோட்டைக்கு வெளியில் இருப்பதைவிட அரண்மனைக்குள்வைத்திருந்தால், அதுவே அதிகப் பாதுகாப்பாகும் என்று அவர் நினைத்திருக்கவும் இடம் உண்டு அல்லவா?”

“எனக்கு என்னவோ அது இங்கே இருக்குமென்று தோன்றவில்லை.”

“தேடிப் பார்ப்பதிலும் தவறில்லை” என்று கூறிய வல்லவரையர் “வா, இவர்கள் இங்கே தேடிக் கொண்டிருக்கட்டும். நாம் அதற்குள் அந்தப்புரத்தில் போய்த் தேடி பார்த்து விட்டு வருவோம்” என்று அவனை அழைத்தார்.

அந்தப்புரம் என்ற சொல் இளங்கோவின் செவிகளில் விழுந்தவுடன் ஆயிரம் தேள்கள் அவனை ஒன்றாகக் கொட்டின! அந்தப்புரத்துக்குள் எந்தமுகத்தை வைத்துக் கொண்டு நுழைவது? அந்தப் பெண்ணின் முகத்தில் இனி எப்படிப் போய் விழிப்பது? கையும் களவுமாகக் கள்வனைப் பிடிப்பதுபோல் அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தால், அவள் முன் தன்வீரத்தை நிலை நாட்டியிருக்கலாம்! வெறும் கையுடன் அங்கே போய் நின்றால் அவள் புருவங்கள் நெரிய, வேல் விழிகளால் ஏளனமாகப் பார்ப்பாள்.பார்த்துக்கொண்டே கேலிச் சிரிப்புச் சிரிப்பாள். அந்தக் கண்களின் ஏளனத்தையும், முத்துப் பல் வரிசையின் கேலிச் சிரிப்பையும் எப்படிப் பொறுத்துக் கொள்வது?”

வேகமாக முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவர்,இளங்கோ தன்னுடன் வராததைக் கண்டு தயங்கி நின்று திரும்பினார். அவன் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்பதைக் கண்டார்.

“என்ன இளங்கோ இது?”

“தாங்கள் மாத்திரம் போய் வாருங்கள் தாத்தா. எனக்கு அங்கே வருவதற்குப் பிடிக்கவில்லை.”

“உன்னை யாரும் அங்கே பிடித்துக் கொள்ள மாட்டார்கள், வா!”

பரபரவென்று அவனுடைய கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு போனார் வல்லவரையர். அவன் தயங்கித் தயங்கிச் சென்றது அவருக்கு வியப்பைத் தந்தது. “காரணத்தைச் சொல், விட்டு விடுகிறேன்” என்றார்.

மென்று விழுங்கிக் கொண்டு, மேலும் கீழும் விழித்துக் கொண்டு,நடந்தவற்றை விவரமாகக் கூறினான் இளங்கோ. தன்னுடைய கரத்தைப்பற்றித் தடுத்து விட்ட பெண்ணின் மேல் அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

“தாத்தா! எனக்கு இருக்கும் கோபத்தில், இப்போது நான் அவளைப்பார்த்தால், இரண்டு துண்டாக வெட்டிப் போட்டு விடுவேன். வேண்டாம்,நீங்கள் மட்டும் போய் வாருங்கள்.”

கிழவருடைய கடைக்கண்கள் குமரனின் முகத்தில் பதிந்து கேலிச்சிரிப்புச் சிரித்தன. “பெண்ணைக் கண்டு அஞ்சும் அளவுக்குக் கோழையா நீ?நமக்கு வேண்டியது மணிமுடி! வா, போகலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு போனார். அந்தப்புரத்தில் ஒரு கூடத்தைச் சுற்றிலும் ஐம்பது வீரர்களுக்குமேல் காவல் நிற்பதைக் கண்டவுடன் அவருக்குத் திகைப்பு ஏற்பட்டது.

“இதென்ன இளங்கோ! பாவம், பெண்களை வீணாகப் பயமுறுத்துவதற்கா இப்படிச் செய்திருக்கிறாய்?”

“பெண்களுக்கிடையில் ஒரு பேயும் இருக்கிறது தாத்தா; நான் உங்களிடம் கூறினேனே, அவள் பெண்ணேயல்ல, மாய மோகினி!”

தாழிடப்பட்டிருந்த கதவைத் திறந்து கொண்டு இருவரும் கூடக்குக்குள் நுழைந்தார்கள். சுற்று முற்றும் பார்த்துவிட்டு இளங்கோ, “தாத்தா!” என்று அலறினான். அலறிவிட்டு, அங்குமிங்கும் ஓடினான். மூலை முடுக்குகளெல்லாம் சென்று ஆராய்ந்தான்.

அவனுடைய பதற்றத்தின் காரணம் விளங்கவில்லை. அறைக்குள்ளே மூன்று பெண்கள் இருந்தார்கள். அவர்களுடைய முகங்களை நன்றாக உற்றுப்பார்த்தான் இளங்கோவேள். பிறகு வெளியே ஓடி போர்க்காவல் காத்து நின்று கொண்டிருந்தவர்களிடம் கேட்டான்,

“அறைக்குள்ளிருந்த பெண்ணொருத்தியைக் காணவில்லையே, எங்கே அவள்?”

“கண்ணிமைக்காமல் காத்து நிற்கிறோம், இளவரசே. யாரும் இந்தக்கூடத்தை விட்டு வெளியில் வரவில்லை.”

“அந்த மாய மோகினி மாயமாய் மறைந்து விட்டாள் தாத்தா!”

இளங்கோவின் தலை ஏற்கனவே சுற்றத் தொடங்கிவிட்டது. இப்போது அத்துடன் வந்தியத் தேவரின் தலையும் சேர்ந்து கொண்டது. வாளிருக்க, வீரர்படை விழித்து நிற்க, அந்த வேல் விழியாள் எங்கே போனாள்?

தொடரும்

November 21, 2012

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...