Skip to main content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் -பாகம் 14



உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு . 

பனங்களி செய்யிற பக்குவம் :


தேவையான சாமான் :

நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம்.

பக்குவம் : 

நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ.கை கவனம் நார் வெட்டி துலைச்சுப் போடும் வெட்டினாப்பிறகு திருப்பியும் பழத்தை தண்ணீரிலை நல்லாய் கழுவுங்கோ பிறகு பழத்தை பிய்க்க. இரண்டு மூண்டாய் பழம் விதையோடை பிரியும். அதை பிழிஞ்சு அதிலை இருக்கிற களியை ரெண்டு கையாலையும் அமத்தி எடுங்கோ. களி தும்புகளோடை சேந்து வரும் . மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைச்சு களியை வடியுங்கோ. வடிச்ச களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை மணம் போக காச்சி எடுத்து ஆறவையுங்கோ. 

தேவையான சாமானுகள்:

பனங்களி – 1 கப்
சீனி- ¼ கப்
எண்ணெய் – லீட்டர்.
வறுத்த உழுந்துமா – ¼ கப்
உப்பு தேவையான அளவு.

பக்குவம் :

காச்சின பனங்களியோடை உழுத்தம்மா உப்பு சேர்த்து கிளறி விடுங்கோ . தாச்சியிலை எண்ணையை விட்டு நல்லாய் கொதிக்க விடுங்கோ . மாவைக் கையில் எடுத்து சின்னச்சின்ன உருண்டைகளாக எண்ணெயிலை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கோ. 



படிமானம்:
எண்ணை ஒத்தி எடுக்கிற பேப்பரிலை போட்டு எண்ணையை வடியவிட்டு , ஆற வைச்சுப்போட்டு ரெண்டு மூண்டு நாள் கழிய வைச்சி சாப்பிடுங்கோ. சொல்லிவேலையில்லை ஐஞ்சு நிமிசத்திலை பலகாரத்தட்டு உங்களைப் பாத்து சிரிக்கும். 





கோமகன் 

October 17, 2013

Comments