Skip to main content

சமகாலத்து விமர்சனப்போக்கில் எனது பார்வை-கட்டுரை





மாசி மாதத்து ‘தமிழினி’ இணைய சிற்றிதழ் படிக்க கூடியதாக இருந்தது. அதில் ஏக காலத்தில் 03 ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. நொயல் நடேசனின் “கானல் தேசம்” குறித்து ப தெய்வீகனும், தீபச்செல்வனின் “நடுகல்” குறித்து தருமு பிரசாத்தும், இறுதியாக உமாஜியின்” காக்கா கொத்திய காயம்” அனோஜனாலும் விமர்சனத்துக்கு உள்வாங்கப்பட்டிருந்தன.

கானல் தேசத்திற்கான தெய்வீகனது பார்வையில் தர்க்க ரீதியிலான போக்கையும் குறைந்த மொழியாடலில் செறிவான விமர்சன பண்பையும் அவதானிக்க முடிந்தது. கானல் தேசத்தின் ஊடாக ஒரு வரலாற்று செய்தி ‘புனைவு’ என்ற ஜன்னலின் ஊடாக எவ்வளவு தூரத்திற்கு திரிபு படுத்தப்படுவதுடன் அதுவே ‘வரலாறு’ என்று இளையவர்களை நம்பச் செய்யும் வல்லபங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது. குறிப்பாக ‘புலிகள் பெண் போராளிகளை கர்ப்பணிகளாக்கி தற்கொலை போராளிகளாக அனுப்பினார்கள்’ என்ற வரலாற்று அபத்தத்தை தரவுகளுடன் உடைத்தெறிந்த பாணி குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனத்தை படிக்கும்பொழுது “வரலாற்றில் மலங்களிப்பது தடை செய்யப்பட வேண்டும்” என்ற உணர்வை எனக்கு ஏற்பத்தியது. ஒன்றாக இருந்து குடித்த குடிக்காகவும் ஒன்றாக சாப்பிட்ட கடனுக்காகவும் பரஸ்பரம் முதுகு சொறிந்து “அரோகரா” போடாது அருகில் இருந்து நெருங்கிப் பழகினாலும் பொது வெளியென்று வரும்பொழுது அதில் தமது தனித்தன்மையைக் காட்டும் இத்தகைய விமர்சன போக்குகள் சிறிது நம்பிக்கையை தரக்கூடியவையாக இருக்கின்றன.

தீபச்செல்வனின் “நடுகல்” நாவலுக்கான விமர்சனப் போக்கு குறித்துப் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. கொடுந்தமிழில் எழுதுவதுடன் வாசகர்களுக்கு எதுவுமே விளங்கக்கூடாது என்பதில் கவனமாக இருத்தல் தான் இலக்கியத்தரமான விமர்சனம் என்ற மாயை இளைய தம்பிகளுக்கு ஊட்டப்படுவது வருத்தத்திற்கு உரியதும் கண்டனத்துக்குரியதுமாகும். நடுகல் நாவலுக்கான விமர்சனத்தைப் படிக்கும் பொழுது ஒரு வாசகனாக கொம்யூனிஸ்ட் கட்சியின் மொஸ்கோ பத்திரிகை படித்த உணர்வே எனக்கு ஏற்பட்டது.

அனோஜன் எழுதிய உமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூலின் விமர்சனம் பாராட்டத்தக்கது. கடந்த வருடம் இந்த நூல் வெளியாகி அது குறித்து உடனடியாக ஏதும் சொல்லாது, நீண்ட கயிற்றில் விட்டு ஒரு இளைய படைப்பாளிக்கு அதுவும் அவரது முதலாவது நூலிற்கு விமர்சனம் எழுதுவது உண்மையில் வரவேற்க்கப்பட வேண்டிய விடயமேயானாலும் ஒரு பிரதியை இன்னொரு எழுத்தாளரின் பிரதியின் கண்ணாடிகளின் ஊடாக “விமர்சனம்” என்ற போர்வையில் முன்னெடுப்பது சீரிய விமர்சனப் பண்பல்ல. அதுவும் உமாஜி போன்றோருக்கு இவ்வாறான விமர்சனம் செய்வது அவர்களது எழுத்து முயற்சிகளுக்கு காயடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.

இந்த நிலைகுறிப்பில் எனக்கு யாருடனும் தனிப்பட்ட முரண்கள் கிடையாது. இந்த மூன்று விமர்சனங்களை ஒரு வாசகனாக எப்படிப் பார்த்தேன் என்பதையே எழுதியிருக்கின்றேன். நன்றி .

கோமகன்

17 மாசி 2019

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...