Skip to main content

முகநூலின் "ஓசை .........."-பத்தி



இன்று மதியம் ஒரு அலுவலாக லா பேட்டைக்கு (லாச்சப்பல்) செல்ல வேண்டியிருந்தது. காரியத்தை எனது நண்பர் மனோவின் அச்சத்திலேயே செய்ய வேண்டியிருந்தது. காரியம் முடிந்த பின்னர் எனக்கும் மனோவிற்கும் இடையில் தேநீர் குந்திக்கொள்ள, உரையாடல் தேநீரின் ஆவியுடன் கலந்து மேலெழுந்தது. நீண்டநாட்கள் இருவரும் சந்திக்காதபடியால் உரையாடலும் தேநீர் ஆவியைப் போல் சுற்றிச்சுழன்றது. எமது பேச்சுக்கள் சமகால இலக்கிய செல்நெறிகள், புதிய வருகைகள் என்று பலதையும் பிரித்து மேய்ந்து முகநூலில் வந்து நின்றது.

நான் மனோவினது முகநூற்செயற்பாடுகள் குறித்த எனது ஆதங்கத்தை முன் வைத்தேன். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. முன்னர் மனோ ஒரு பெரிய இலக்கியத்தளத்தின் செயற்பாட்டாளர். ஒன்றிற்கு இரண்டு இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். இன்று அவர் பொதுவெளியில் மௌனமாக இருப்பது எனக்கு உடன்பாடான விடயமல்ல. அப்பொழுது அவர் சொன்னார் ,

"கோமகன் நீங்கள் தவறாக புரிகின்றீர்கள். எனக்கு முகநூல் ஒரு பெரிய நாவலை வாசிக்கின்ற உணர்வை தினமும் ஏற்படுத்துகின்றது. நீங்கள் ஒரு நாவலை எழுதும்பொழுது அதற்கு வேண்டிய கதைமாந்தர்களை உங்கள் பார்வையிலேயே வடிப்பீர்கள். ஆனால் முகநூல் என்ற நாவல் அப்படியல்ல. அது பல கதைமாந்தர்களையும் பல கதைக்களங்களையும் கொண்டது. கதைசொல்லி ஒற்றைக்கதாபாத்திரமாகவும் பல்முனைப்பாத்திரமாகவும் தோன்றுவார். அதில் மஹாராஜா, கட்டியக்காரன், மந்திரி, சேனைத்தளபதி, மஹாராணி, தோழி, விதூஷகன், என்று பல பாத்திரங்கள் இருக்கும். மனிதனின் பல்வகை உணர்ச்சிச்சுழிப்புகளும் இந்த நாவலில் இருக்கும். அதை ஒரு வாசகனாக இருந்து வாசிப்பது எவ்வளவு அற்புதமானது தெரியுமா? இந்த உணர்வை தான் வாசித்த எந்தவொரு இலக்கிய பனுவலும் தரவில்லை" என்கிறார்.

அத்துடன் நில்லாது தனக்கு வாழ்க்கையில் எதை செய்யக்கூடாது எதை செய்யலாம் என்பதை இந்த முகநூல் தான் ஆசானாக இருந்து வழிகாட்டுகின்றது. ஒவ்வொருவரின் நிர்வாண தரிசனங்களையும் இந்த முகநூல் விகற்பமில்லாது காட்டுகின்றது. ஆகவே எழுதுவதை விட இந்த நாவலை வாசிப்பதே சிறந்தது" என்றார்.

என்முகத்தில் ஓர் புன்னகை சுழித்தோடியது. மனோவினது பேச்சு "இடி ஓசையாக" இருந்தாலும் எதுவானாலும் கண்டபடி ஓரிடத்தில் எழுதமுடியாது என்ற அவரது உட்கிடங்கையையும் சொல்லாது சொல்லியது.
கோமகன்

December 27, 2018

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்...