Skip to main content

சுவைத்தேன்-கவிதைகள்-பாகம் 08


பொன்னையருக்கு வேலை போனது



ரியூற்றறிகள் இல்லாத
காலத்தில்
வீடுகளுக்குப்போய்
ரியூசன் கொடுத்தவர்தான்
பொன்னையா வாத்தியார்
கால் நடையில் தான் வருவார்
குதிக்கால் நிலத்தில் பாவாது
கற்பித்த பாடங்கள்
கணக்கும் ஆங்கிலமும்
அரைமணி நேரத்தில்
கற்பித்தல் நடந்ததோ இல்லையோ
எங்கள் செவியில்
அவர் தொங்குவது தவறாது
பொன்னையர் தொங்கியதால்
என் காதுப் பொருத்து
புண்ணாகியிருந்தது.
அவர் செய்யும் கொடுமையை
வெளியில் சொல்ல முடியாது
‘படிப்பு வரட்டும் என்றுதானே
வாத்தியார் அடிக்கிறார்’
… இது மாமாவின் சித்தாந்தம்.
எனக்காக
அத்தை உருகினாலும்
தலையிடும் அளவுக்கு
துணிச்சலில்லை அவவுக்கு
பொன்னையரை மனசாரத் திட்டினேன்
என் திட்டுப் பலிப்பதாயில்லை
காதுப்புண்ணும் ஆறுதில்லை
கடைசியாக
கடவுள் கண் திறந்தார்
ஒருநாள்
பொன்னையருக்குச் சீட்டுக்கிழிந்தது
வேறொன்றுமில்லை
என்னிலை விட்ட சேட்டையை
அருள் அண்ணாவிலை விட்டிருக்கிறார்
பெரியம்மா கண்டிட்டா
வாத்தியார்
படிக்காட்டி என்ர பிள்ளை
என்னோடை இருக்கட்டும்
நீங்கள் வாருங்கோ’

0000000000000000000000000000

என்ன மரம்



கிராமங்களில்
ஒவ்வொருவருக்கும்
ஒரு பட்டமிருக்கும்
அது பொருத்தமாகவுமிருக்கும்
கதிரவேலுவுக்கு அமைந்த
‘காகம்’ என்ற அடையும் அப்படித்தான்

கதிரவேலு தனிக்கட்டை
தமக்கை செல்லாச்சியோடு
வாழ்ந்து வந்தார்
நல்ல மனிசன்
மரியாதையான பேச்சு
மாலையில்
கொஞ்சம் கள் அருந்துவார்
அது போதும்
தளம்பாட .

அன்று
இரவு எட்டு மணி
செல்லாச்சி திண்ணைக் குந்திலை
கதிரவேலு தட்டுத்தடவி
இருப்புக்கு வருகிறார்
முற்றத்து தென்னை முன் நின்று
அண்ணாந்து பார்க்கிறார்
அக்கா அக்கக்கா
இது என்ன மரம்
காத்திருந்து அலுத்துப்போன
செல்லாச்சி சொன்னா
இதுதானடா தம்பி
வண்ணார்பண்ணைத் தென்னைமரம்!

000000000000000000

உண்ணாச்சொத்து



வேலுப்பிள்ளை வாத்தியார்
வேகமாய்ச் சைக்கிள் ஓடார்
மூப்பால் வந்த நிதானம்
சைக்கிளை நிறுத்தி
அவர் இறங்கும் பாணி
வித்தியாசமானது
கால் ஊன்றும் உத்தி
அந்தத் தலைமுறைலில் இல்லை.
அந்தரப்பட்டுக் குதிப்பார்.
மரியாதை கருதிப் பொறுத்திருந்தது
அலுத்துப்போய்
ஒருநாள் கேட்டே விட்டேன்
‘பிறேக் றிம்மைத் தேய்ச்சா
கனகாலம் பாவிக்காது பாரும்’

தனிக்கட்டை
ராசம்மாக்கிழவி
சுறுசுறுப்பான மனுஷி
வயசு தெரியாத தோற்றம்
சந்தைக்குப்போய்
காய்கறிகள் வாங்கி
ஊர்மனைக்குள்
வியாபாரம் செய்வாள்
தலையில் கடகம்
கடகத்துக்கு மேலே
காற்செருப்பு
‘ஏன் ஆச்சி செருப்பைப் போடேல்லை’
என் சின்ன மகள் கேட்டாள்
‘வெயில் கடுமையெண்டால் போடலாம்
நெடூகப்போட்டுத்திரிஞ்சா
கெதியில தேஞ்சுபோம், பிள்ளை’

புதுவவருசம் பிறந்தால்
சந்திரகுமார் சுறுசுறுப்பாகி விடுவான்
தொண்டு நிறுவனங்கள்
வங்கிகள்
கடைப்படிகள்
எல்லாம் ஏறிஇறங்கி
கலண்டர், டயறி சேகரிப்பான்.

அவனுக்குத் தேவை
ஒரு கலண்டரும் டயறியுமே.
ஆனால்
அவனிடம்
ஜனவரி முடிவில்
இருபது முப்பது சேர்ந்து விடும்.
சந்திரகுமார்
ஒரு பக்கமேனும்
டயறி எழுதி அறியான்

றிம் தேயாது சைக்கிளோடிய
வேலுப்பிள்ளை வாத்தியார்
விபத்துக்குள்ளாகி
மருத்துவமனையில் கிடந்தார்
செருப்பைப்பாதுகாத்த ராசம்மா
ஆணிகுத்தி
ஏற்புவலி வந்து செத்துப்போனாள்
சந்திரகுமாரின் டயறி
சலவைக்கணக்கு எழுதப்பயன் படுகிறது.

00000000000000000000000000

நன்றி : சோ பத்மநாதன்



(தொகுப்பில் இருந்து கொய்தவர் கருணாகரன்)

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...