Skip to main content

கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமில்லை!-வாசிப்பு அனுபவம்-மதுசுதன் ராஜ்கமல்


புலம்பெயர் வாழ்வின் ஆழ அகலங்களை மிக விரிவாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கும் ஈழ இலக்கிய வரிசையில் முரண் சிறுகதை தொகுப்பு வித்தியாசமானதொரு கூறாக அமைந்திருக்கிறது.வடிவநேர்த்தியிலும் சொல் உத்தியிலும் சில முயற்ச்சிகளை இக்கதைகளில் கோமகன் கையாண்டு பார்த்திருக்கிறார்.அப்படியான முயற்ச்சிகள் எல்லா நேரத்திலும் பலிக்கும் என்று சொல்வதற்கில்லை ஆனால் சில கதைகளில் அது சாத்தியப்பட்டும் இருக்கிறது.நிஜத்தின் புற உருவை புனைவின் வழி பிரதிபலிக்க முயல்வதில்,அகத்தேடல் வாழ்வியல் போராட்டத்தைப் போலவே ஒரு முடிவில்லாத தொடர் போராட்டத்தை போன்றது,அந்த வகையில் சுறுக்கர் இன்னும் கூட பல உத்திகளை கையாளவேண்டும்.பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்வலைச்சலின் கணங்கள் எப்படி ஒவ்வொருவருக்கும் பன்முகப்பட்டதோ அதுபோல எழுத்தும் அதனை வெளிப்படுத்தும் வகைமாதிரிகளும் பன்முகத்தன்மையானது தான்.அந்தவகையில் சுறுக்கர் ஒரு நெகிழ்வான போராளி என்பது நமது அசுவாசமாய் இருக்கிறது.

இத்தொகுப்பின் பதினோரு கதைகளும் புலம்பெயர் வாழ்வை மையமாகக்கொண்டு நகர்பவைதான் எனினும் ஒவ்வொன்றும் அதன் தன்னியல்பில் தன்னிகரான கதைகளாக மிளிர்கிறது.அனேகமாக இத்தொகுப்பின் சில கதைகளை நடு ஆன்லைன் இதழில் அவ்வப்போது படித்திருக்கிற நியாபகங்கள் மீளவந்தாலும்,இத்தொகுப்பின் வழி மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் மேலும் சில புதிய கோணங்களில் சில புதிய தரிசனங்கள் காணக்கிடைப்பதை மறுப்பதற்கில்லை.எழுத்து எல்லா காலத்துக்கும் தன்னைத்தானே செப்பனிட்டுக் கொள்வதில்லை என்றாலும் எழுத்தின் ஆழமும் அவை எழுதப்படும் சூழலும்,காலமுமே கதையை நூற்றாண்டுகள் கடந்தும் புத்துயிர்ப்புடன் இருக்கச்செய்வதாக அமைகிறது.அந்தவகையில் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 'அகதி மற்றும் மாதுமை' ஆகிய மிகப்பிரதானமான இரண்டு கதைகளும் கிளாசிக் என்று சொல்லலாம்.

பெரும்பாலன கதைகள் வல்லினம், மலைகள்,ஜீவநதி,எதுவரை,முகடு ஆகிய ஆன்லைன் இதழ்களிலும் இலக்கிய சஞ்சிகைகளிலும் புலத்திலும் இனைய வெளிகளிலுமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கதைகளின் களங்களும் அவை படரும் வெளிகளும் நுட்பமானவையாக இருப்பதால் தான் முரண்,தகனம்,டிலீப் டிடியே,ஏறுதழுவுதல்,பருப்பு கதைகள் ஒரு புதிய முயற்சிகளாகவும் ஆக்காட்டி,வெடிப்பு,சுந்தரி ஆகியவை வேறுவகை மாதிரிகளாகவும் அமையப்பெற்றிருக்கிறது.ஒரு கதை அதன் வழமையான பாடுகளில் இருந்து முற்றிலுமாக சமன்குலைந்து விதம்விதமான வகைகளில் கோர்க்கப்படுவதுதான் படைப்பாளனுக்கு அழகு.அதுதான் படைப்பு நேர்த்தியும் கூட.

கதைக்களங்கள் அதன் காலங்களை கொண்டு இறந்தகாலத்தின் துயரத்தை,நிகழ்காலத்தில் மீளாய்வதற்கும் அதன்வழி எதிர்காலத்தை கூடுமானவரை குறைந்தபட்ச சுபிட்சத்திற்காகவேனும் தயார் படுத்திக்கொள்வதற்கான சில வழிவகைகளை,காலச்சக்கரம் நிகழ்த்திக்காட்டும் என்றாலும் கூட அதன் நொடிமுட்கள் எல்லாநேரத்திலும் தன்னியல்பு போக்கிலேயும் சுழலுவதில்லை என்பதால்,ஒவ்வொருவரும் அதன் இனம்புரியாத ஏதோவொரு அனுபவத்தை தன்வாசிப்பின் வழி கண்டடைவதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் புனைவுகள் உருவகப்படுத்தி தரும் என்பதால்,கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமல்ல காலத்தை அதன் முன்னும் பின்னுமான இயல்பின் வழியே புரிந்துகொள்வதற்கும் தான் என்பதை முரண் தொகுப்பு மிககச்சிதமாக சாத்தியப்படுத்தி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...