Skip to main content

திரும்பிப் பார்க்கின்றேன் – நடுவுக்கு வயது 03 – பிறப்பு 10 ஆடி 2016




வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே ! இன்று நடு இணைய சிற்றிதழுக்கு வயது 03. இந்த மூன்று வருட காலப்பகுதியில் நடு தனது இலக்கை அடைந்திருக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் கையில் விட்டு விட்டு நாங்கள் இதுவரையில் எதை விதைத்திருக்கின்றோம் என்பதை மட்டும் பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.

நடு இணைய சிற்றிதழ் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை தனது ஒரு முகத்தை மட்டுமே வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் காட்டி வந்திருக்கின்றது. அதன் மறுபக்கம் சோதனைகளும் வேதனைகளும் எம்மவர் மத்தியில் எழுகின்ற ‘காழ்ப்புணர்வு’ மற்றும் புறங்கூறல்’ போன்றவற்றை எதிர்கொண்டது . ஆரம்பத்தில் தாயகத்தை சேர்ந்த எனதருமைத்தம்பி மதுரன் ரவீந்திரனே இந்த தளத்தை வடிவமைத்து தரவேற்றம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வகித்து வந்த வேலையினால் எம்மைக் கவனிப்பதில் அவருக்குப் பெரும் நேரச்சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அவர் இல்லாது விட்டால் நடு பிறந்திருக்க முடியாது. அவரை இந்த வேளையில் மிகவும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். நடுவை இயக்குவதில் நாம் தொழில் நுட்பரீதியாக தனித்து விடப்பட்டோம். நடுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு யூ ரியூப் துணையுடன் நடுவின் தளத்தை மறுசீரமைத்து வடிவமைப்பதில் மூர்க்கமாக இறங்கினேன். படிப்படியாக அழகான வடிவமைப்புடன் உங்கள் முன் வலம் வருகின்ற தள வடிவமைப்பின் மூல கர்த்தா அடியேன் தான்.

நடு குழுமத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்கள் என்ற விடயமே ஒரு சிலரைக் கிலி கொள்ளச்செய்தது. இவர்களால் ‘நடுகுழுமம்’ என்ற சொல்லாடலே கேலிக்கும் எள்ளலுக்கும் உரியதாக ஆக்கப்பட்டது. நடு இணைய சிற்றிதழ் ஆரம்பிக்கப் பட்ட பொழுது நானும் எனது நண்பர்களும் எடுத்துக் கொண்ட முடிந்த முடிவுகளுக்கமைய அவற்றையெல்லாம் சட்டை செய்யாது மௌனம் காத்து வந்திருக்கின்றோம். அப்படி சொல்பவர்களை நான் முற்றுமுழுதாக புறந்தள்ளுகின்றேன். ஏனெனில் அவர்களது நோக்கம் நடு இணைய சிற்றிதழ் மீது அவதூறு கிளப்புவது ஒன்று மட்டுமே. இந்த இடத்தில், ஆசிரியர் பீடமே வெளியே வராத வகையில் பிரசுரமான சிற்றிதழ்களை என்னால் சுட்டிட முடியும்.

இது வரையில் 19 இதழ்களை பிரசுரம் செய்த நடு இணைய சிற்றிதழ், பரிசோதனை முயற்சிகளாக :

01 சிறப்பிதழ்களை வெளியிடல்

02 பாரிஸில் ‘கதைப்போம்’ என்ற தலைப்பில் இலக்கிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளல்

போன்றவற்றை மேற்கொண்டது.

பரிசோதனைமுயற்சிகளாக :

01 சினிமா சிறப்பிதழ்
02 கிழக்கிலங்கை சிறப்பிதழ்
03 மலையக சிறப்பிதழ்
04 சிறுகதை சிறப்பிதழ்
05 கவிதை சிறப்பிதழ்
06 தமிழக சிறப்பிதழ்

ஆகிய சிறப்பிதழ்களை வெளியிட்டிருந்தோம். அவை அதன் நோக்கில் வெற்றியடைந்ததா என்பதை வாசககர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

பாரிஸ் நகரில் எமது அனுசரணையில் இலக்கிய முன்னெடுப்புகளாக ‘கதைப்போம்’ என்ற தலைப்பில் :


01 காலம் சிற்றிதழின் பொன்விழா இதழ் வெளியீடும் கலந்துரையாடல்.
02 லெ முருகபூபதியின் சொல்ல தவறிய கதைகள் நூல் வெளியீடும் பிரான்ஸ் வந்த அவருடனான கலந்துரையாடல்.
03 கோமகனின் முரண் சிறுகதைத்தொகுதி கையளிப்பும் கலந்துரையாடலும்

என்று மூன்று ‘கதைப்போம்’ நிகழ்வுகளை நடாத்தி இருக்கின்றோம்.

இவைகள் நாங்கள் இந்த மூன்று வருட காலத்தில் செய்தவை. கால நேரங்கள் சரிவருமாகில் நடுவின் ஐந்தாவது வயதில் அதில் வெளியாகிய சிறுகதைகள் சிலவற்றை தொகுப்பாக்கும் எண்ணம் ஒன்று எனக்குண்டு.

இதுவரைகாலமும் நடுவுடன் பயணித்த வாசகர்கள், படைப்பாளிகள், நடுவில் வெளியாகும் சுய ஆக்கங்களை மேலும் உயிர்ப்புறச்செய்த ஓவியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். நடுவின் பலம் பலவீனங்கள் இரண்டையும் எமக்கு எடுத்துச் சொல்லுங்கள். எமது காதுகளை இரவல் தருவதற்கு நாங்கள் என்றுமே தயாராக இருக்கின்றோம். நன்றி .

கோமகன்

பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...