Skip to main content

திரும்பிப் பார்க்கின்றேன் – நடுவுக்கு வயது 03 – பிறப்பு 10 ஆடி 2016




வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே ! இன்று நடு இணைய சிற்றிதழுக்கு வயது 03. இந்த மூன்று வருட காலப்பகுதியில் நடு தனது இலக்கை அடைந்திருக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் கையில் விட்டு விட்டு நாங்கள் இதுவரையில் எதை விதைத்திருக்கின்றோம் என்பதை மட்டும் பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.

நடு இணைய சிற்றிதழ் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை தனது ஒரு முகத்தை மட்டுமே வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் காட்டி வந்திருக்கின்றது. அதன் மறுபக்கம் சோதனைகளும் வேதனைகளும் எம்மவர் மத்தியில் எழுகின்ற ‘காழ்ப்புணர்வு’ மற்றும் புறங்கூறல்’ போன்றவற்றை எதிர்கொண்டது . ஆரம்பத்தில் தாயகத்தை சேர்ந்த எனதருமைத்தம்பி மதுரன் ரவீந்திரனே இந்த தளத்தை வடிவமைத்து தரவேற்றம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வகித்து வந்த வேலையினால் எம்மைக் கவனிப்பதில் அவருக்குப் பெரும் நேரச்சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அவர் இல்லாது விட்டால் நடு பிறந்திருக்க முடியாது. அவரை இந்த வேளையில் மிகவும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். நடுவை இயக்குவதில் நாம் தொழில் நுட்பரீதியாக தனித்து விடப்பட்டோம். நடுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு யூ ரியூப் துணையுடன் நடுவின் தளத்தை மறுசீரமைத்து வடிவமைப்பதில் மூர்க்கமாக இறங்கினேன். படிப்படியாக அழகான வடிவமைப்புடன் உங்கள் முன் வலம் வருகின்ற தள வடிவமைப்பின் மூல கர்த்தா அடியேன் தான்.

நடு குழுமத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்கள் என்ற விடயமே ஒரு சிலரைக் கிலி கொள்ளச்செய்தது. இவர்களால் ‘நடுகுழுமம்’ என்ற சொல்லாடலே கேலிக்கும் எள்ளலுக்கும் உரியதாக ஆக்கப்பட்டது. நடு இணைய சிற்றிதழ் ஆரம்பிக்கப் பட்ட பொழுது நானும் எனது நண்பர்களும் எடுத்துக் கொண்ட முடிந்த முடிவுகளுக்கமைய அவற்றையெல்லாம் சட்டை செய்யாது மௌனம் காத்து வந்திருக்கின்றோம். அப்படி சொல்பவர்களை நான் முற்றுமுழுதாக புறந்தள்ளுகின்றேன். ஏனெனில் அவர்களது நோக்கம் நடு இணைய சிற்றிதழ் மீது அவதூறு கிளப்புவது ஒன்று மட்டுமே. இந்த இடத்தில், ஆசிரியர் பீடமே வெளியே வராத வகையில் பிரசுரமான சிற்றிதழ்களை என்னால் சுட்டிட முடியும்.

இது வரையில் 19 இதழ்களை பிரசுரம் செய்த நடு இணைய சிற்றிதழ், பரிசோதனை முயற்சிகளாக :

01 சிறப்பிதழ்களை வெளியிடல்

02 பாரிஸில் ‘கதைப்போம்’ என்ற தலைப்பில் இலக்கிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளல்

போன்றவற்றை மேற்கொண்டது.

பரிசோதனைமுயற்சிகளாக :

01 சினிமா சிறப்பிதழ்
02 கிழக்கிலங்கை சிறப்பிதழ்
03 மலையக சிறப்பிதழ்
04 சிறுகதை சிறப்பிதழ்
05 கவிதை சிறப்பிதழ்
06 தமிழக சிறப்பிதழ்

ஆகிய சிறப்பிதழ்களை வெளியிட்டிருந்தோம். அவை அதன் நோக்கில் வெற்றியடைந்ததா என்பதை வாசககர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

பாரிஸ் நகரில் எமது அனுசரணையில் இலக்கிய முன்னெடுப்புகளாக ‘கதைப்போம்’ என்ற தலைப்பில் :


01 காலம் சிற்றிதழின் பொன்விழா இதழ் வெளியீடும் கலந்துரையாடல்.
02 லெ முருகபூபதியின் சொல்ல தவறிய கதைகள் நூல் வெளியீடும் பிரான்ஸ் வந்த அவருடனான கலந்துரையாடல்.
03 கோமகனின் முரண் சிறுகதைத்தொகுதி கையளிப்பும் கலந்துரையாடலும்

என்று மூன்று ‘கதைப்போம்’ நிகழ்வுகளை நடாத்தி இருக்கின்றோம்.

இவைகள் நாங்கள் இந்த மூன்று வருட காலத்தில் செய்தவை. கால நேரங்கள் சரிவருமாகில் நடுவின் ஐந்தாவது வயதில் அதில் வெளியாகிய சிறுகதைகள் சிலவற்றை தொகுப்பாக்கும் எண்ணம் ஒன்று எனக்குண்டு.

இதுவரைகாலமும் நடுவுடன் பயணித்த வாசகர்கள், படைப்பாளிகள், நடுவில் வெளியாகும் சுய ஆக்கங்களை மேலும் உயிர்ப்புறச்செய்த ஓவியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். நடுவின் பலம் பலவீனங்கள் இரண்டையும் எமக்கு எடுத்துச் சொல்லுங்கள். எமது காதுகளை இரவல் தருவதற்கு நாங்கள் என்றுமே தயாராக இருக்கின்றோம். நன்றி .

கோமகன்

பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...